Tuesday, December 19, 2006

ஹேப்பி பர்த்டே டியர் ஆஞ்சேனேயா!




டிசம்பர் 20 - மார்கழி மாதம் - மூல நக்ஷத்திரம் வாயு குமாரன், அஞ்சனா மைந்தன், ஷ்ரிராம தூதன், அடக்கமே வடிவானவன், சொல்லின் செல்வன், கூப்பிட்ட குரலுக்கு மனோ வேகத்தில் ஓடி வருபவன், என் நெஞ்சில் என்றும் குடி கொண்டு இருக்கும் ஆஞ்சேனேய ஸ்வாமி அவதரித்த திரு நாள்.

இவரை பற்றி எழுத இந்த ஒரு பதிவு போதாது! தன்னடக்கம் என்றால் அது ஆஞ்சேனேயர் தான்!

அயோத்தி மா நகரம் திருவிழா கோலம் பூண்டு இருந்தது. ஆம்! 14 வருடங்கள் கழித்து அவர்கள் உள்ளம் கவர் ரகு வம்சத்தில் உதித்த ஷ்ரிராமன் மரவுரி களைந்து ராஜாராமனாக வெண் பட்டுடை அணிந்து, நெற்றியில் சூரிய திலகம் இட்டு, மார்பில் முத்து மாலைகள் அசைய, பரந்து விரிந்த தோளில் சிவப்பு நிற அங்கவஸ்தரம் புரள, ஒரு கையில் கோதண்ட வில்லும், மறு கையில் ஒர் அம்புமாக சீதா தேவி இடப்புறம் அமர சிம்மாசனத்தில் அமர்ந்து வசிஷ்டர் தலமையில் வேத மந்த்ரங்கள் முழங்க பஞ்ச வாத்தியங்கள் முழங்க, ரகுகுலத்தின் நவரத்ன கீரீடத்தை தன் திருமுடியில் சூட்டிக் கொள்ளும் திருநாள்.


ஒரு புறம் உருவிய வாளுடன் லக்ஷ்மணனும் சத்ருகனனும் மெய்காப்பாளர்களாக நிற்க, மறு புறம் கூப்பிய கைகளுடன் பரதன், விபீஷணன், சுக்ரீவன், அங்கதன், ஜாம்பவான் ஆகியோர் நிற்க, எல்லார் கண்ணும் தேடுகிறதே யாரை..? எங்கே ஷ்ரிராமனின் தாசன் அனுமான்..?

இதோ,ஷ்ரிராமனின் திருவடிகளில் கண்ணீர் மள்க கூப்பிய கரங்களுடன், மண்டியிட்டு "இந்த காண கிடைக்காத காட்சியை காண தானே பிரபு, இந்த அடியவன் காத்திருந்தேன்! என்று என் தலைவன் பவ்யமாக அமர்ந்து இருக்கிறான்.

சூரிய பகவானிடம் 4 வேதங்களையும் கற்க அவருடன் சரிசமமாக பயணம் செய்து குருகுலம் பயின்ற அந்த தீக்கொழுந்தா இவன்..?

விஸ்வரூபம் எடுத்து கடலை சர்வ சாதாரணமாக தாண்டிய அந்த உருவமா இது..?

ராவணன் முன்னால் கம்பீரமாக வாலினால் சிம்மாசனம் போட்டு அமர்ந்த அந்த அனுமனா?

இலங்கைக்கு தீ வைத்து விட்டு சற்றும் தளர்வடையாமல் பறந்து வந்து, "கண்டேன் கற்பின் கொழுந்தை!" என சொன்ன அந்த சொல்லின் செல்வனா இவன்..?

பட்டாபிஷேகம் முடிந்ததும், அவரவர்க்கு பரிசுகளை வாரி வழங்கிய ஷ்ரிராமனை பார்த்து சீதா தேவி, ஸ்வாமி! அனுமனை மறந்து விட்டீர்களே?என்று கேட்க, ராமனும் இல்லை ப்ரியே! அவனுக்கு குடுக்க என்னிடம் ஒன்றுமே இல்லையே! என்று தான் யோஜனை, இருந்தாலும் நமது கல்யாணத்தில் அணிந்த முத்து மாலையை அளிப்போம்! என்று அனுமனுக்கு அளிக்கிறார்.

அதோடு, சிரஞ்சீவி(எலேய் ஷ்யாம்! தெலுங்கு நடிகர் இல்லை) பட்டத்தையும் அளித்து, எங்கேல்லாம் ராம நாமம் சொல்லபடுகிறதோ அங்கெல்லாம் அனுமன் இருந்து அதை காது குளிர கேட்க்கும் வரத்தையும் அளிக்கிறார்.

இந்த பதிவையும் எனது தலைவன் அனுமன் கண்டிப்பாக படித்து பூரிப்பான்! ஹிஹி, கமெண்ட்டும் போடுவான். :)
அதனால் தான் ராமர் பட்டாபிஷேகத்தை பற்றி விரிவாக எழுதி உள்ளேன். ஹேப்பி பர்த்டே தல!

1) முதன் முதலாக Open heart surgery பண்ணி தனது நெஞ்சில் ராமரை காட்டியது எனது தங்க தலைவன் தான்!

2) முதன் முதலாக கூரியர் சர்வீஸை அறிமுகபடுத்தி ராமரின் கணையாழி, சீதையின் சூடாமணியை பத்ரமாக அவரவரிடம் சேர்த்தவன் என் தல தான்!



3) முதன் முதலாக பறக்கும் ஆம்புலன்ஸை(சஞ்சீவி மலை) அறிமுகப்படுத்தியது நீங்க தானே தல!

4) முதன் முதலாக பாஸ்போர்ட், விசா இல்லாமல் இமிக்ரேஷனில் மாட்டிக்காமல் பயணம் செய்தது என்னுடைய தல தான்!

5) அவர் பிரம்மசரிய விரததில் இருந்தாலும், தனது வாலில் பொட்டு வைக்கும் பெண்களுக்கு(பிகர்களுக்கு!னு வாசிக்கப்படாது ஷ்யாம்!) திருமணம் நடத்தி வைக்கிற அவரது பெருந்தண்மை தான் என்னே!

இந்த நாள் வரை அனுமனை வழிபடாமல் எந்த காரியமும் செய்த்ததில்லை, அவரும் என்னை கைவிட்டதில்லை. இதோ இந்த வருடம், அவரது அருள் எனக்கு பரிபூரணமாக கிடைத்து உள்ளது! சென்னையில் மழை பெஞ்சு இருக்கா?னு பார்க்க போன நான் சனிகிழமை நங்க நல்லூர் ஆஞ்சேனேயர் கோவிலுக்கும் சென்று பிரார்த்தனை நிறைவேற்றி வந்தேன்!

45 நாட்கள் சுந்தர காண்டம் படித்தால் நமது நியாயமான விருப்பங்கள் கண்டிப்பாக நிறைவேறும்! என்று என் அம்மா சொல்லி இருக்கிறார்கள். இந்த சுந்தர காண்டத்தின் சிறப்பை பற்றி தனியாக ஒரு பதிவு போடலாம்! என்று ஆசை. அனுமார் கருணையினால் நடக்கும் என்று நம்புகிறேன்.

எத்தகைய உயர்ந்த பதவியில் இருந்தாலும், லட்சம் கோடி சம்பாதித்தாலும், தன்னடக்கத்தையும் பவ்யத்தையும் அந்த அனுமன் நமக்கும் தரட்டும்! என்று வேண்டிக் கொள்கிறேன். ஜெய் ஷ்ரிராம்! ஜெய் ஆஞ்சேனேயா!


பி.கு:    விரைவில் வெளிவருகிறது "ஆதலால் பிளாக் எழுதுவீர்" உலகமெங்கும்!

Wednesday, December 13, 2006

நன்றி ஹை!



இந்த குழந்தையின் பிறந்த நாளை கரக்ட்டா நினைவில வெச்சுண்டு வாழ்த்தின அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி ஹை!

வெறும்ன நன்றி சொன்னா நன்னாவா இருக்கும்? அதுனால எல்லாருக்கும் கேக்.


வழக்கமா அல்வா தான் குடுக்கனும்!னு கூகிளில் தேடினேன். இன்னும் கிண்டலையாம். அதுனால இத வெச்சு அட்ஜ்ஸ்ட் பண்ணிக்கோங்க.

எனக்கு நைட் 12 மணிக்கு கமேண்ட் போட்ட G3 அக்காவுக்கு ஸ்பெஷலா ஒரு கேக்.



கைப்புள்ள அங்கிள்! உங்களை மறப்பேனா? அதுனால உங்களுக்கு ஒன்னு!


இன்னும் ஆபிஸ்ல, வேலை எல்லாம் செய்ய சொல்றா! பிளாக் எழுதலைனா நமக்கு கையும் காலும் எதோ Beer கண்ட பெங்களுர் குடிமகன் போல என்னவோ பண்றது. சீக்ரமே திரும்பி வரேன்.

உங்கள் அபிமான பிரவுஸர்களில் விரைவில் எதிர்பாருங்கள்! "ஆதலால் பிளாக் எழுதுவீர்!"

Wednesday, November 29, 2006

அக்கடானு நாங்க பிளாக் படிச்சா....





ஆபிச்ல எக்கசக்க வேலை. 3 வாரத்துல Beta product ரிலீஸ்!னு குண்டை தூக்கி போட்டுட்டார் மேனேஜர்.


குழந்தை(me only) ஆடி போயி இருக்கு.

வெந்த புண்னுல வேல பாச்சற மாதிரி நான் இந்த பிளாக் படிக்கறதை எப்படியோ மோப்பம் புடிச்ச நெட்வொர்க் அட்மின், ஆப்பு அடிச்சுட்டான். இதுக்கேல்லாம் அஞ்சுவானா இந்த அம்பி?

ப்ராக்ஸி(proxy) போட்டு டகால்டி பண்ணி சமாளிச்சுண்டு இருக்கேன். பிளாக்கர் - பீட்டா வெர்ஷனுக்கு மாறின புண்ணியவான்கள் சைட்டில்(பிளாக் சைட்டை சொன்னேன்) கமெண்ட் போட முடியலை. தப்ப எடுத்துக்க வேண்டாம்.

இதுக்கு நடுவுல, திடீர்னு சென்னைக்கு வேற இந்த வார கடைசில போக வேண்டி இருக்கு. சென்னைல மழை எல்லாம் எப்படி பெஞ்சு இருக்கு?னு சும்மா பார்த்துட்டு வரலாம்!னு தான். வேற ஒன்னும் இல்லை. ஹிஹி.

வழக்கம் போல TRC சார் வீட்டுல தான் டேரா. இல்லைனா பாவம், அவர் வருத்தபடுவார் இல்ல? ஹிஹி.

நான் ஏதோ அவர் வீட்டுல போயி 3 வேலை மூக்கு முட்ட அமுக்க போறதா எதிர் கட்சிகள் அவதூறு பரப்பலாம்! அவர்களுக்கு இந்த தருணத்தில் நான் ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன்!
"எங்கள் உறவை யாராலும் பிரிக்க முடியாது! ஆட்ட முடியாது! அசைக்க முடியாது! (TRC சார்! கவுத்திராதீங்க, இந்த தடவை பஜ்ஜி உண்டா?)

முடிந்த வரை உங்கள் பதிவுகளை நேரம் கிடைக்கும் போது படிக்கிறேன். நிலைமை கொஞ்சம் சரியாகட்டும், பீனிக்ஸ் பறவையாய் மீண்டும் வருவேன்.

Friday, November 17, 2006

குட் மார்னிங்க் மிஸ்ஸ்!






பக்கத்து கம்பெனியில் இருந்து வந்த இந்த மெயிலை பாத்துட்டு எங்க டீம்ல ஒரே அமளியாயிடுத்து. சே! நாமளும் Children's Day கொண்டாடி இருக்கலாம்!னு ஒரே ஆதங்கம்.




டீம்ல இருக்கற ஒரு வானரம் சொல்றது, நாம எல்லாம் ஸ்கூல் போற அளவுக்கு இன்னும் வளரல! அதனால கிண்டர் கார்டன் ரேஞ்சுக்கு தான் டிரஸ் பண்ண முடியும். 4.5 ஆரோக்யா பாலை பீடிங்க் பாட்டிலில் விட்டு இந்த அம்பி கையில குடுத்து நாமளும் ஒரு போட்டோ எடுத்து அந்த ஆபிஸ்க்கு பதில் மெயில் அனுப்பினா தான் என் மனசு ஆறும்!

அதுக்கு நான் சொன்னேன், அப்படி மட்டும் நடந்தா உலகம் அழிஞ்சிடும்!

என்னை ஓட்டறது!னா எங்க டீம்ல எல்லோருக்கும் செம குஷி. நாம மட்டும் என்ன ஒழுங்கா என்ன? சான்ஸ் கிடச்சா மேனஜேரையே ஓட்டிடுவோம் இல்ல? :)

சரி, இந்த வாரம் இவ்வளவு தான்! வர்ட்டா? :)

Saturday, November 11, 2006

ரெடி! ஷ்டார்ட்! ஒன்..டூ..த்ரி...!



கதை, கவிதை!னு பட்டய கிளப்பும் பவித்ரா சிஸ்டர் நம்மை எழுத சொன்ன பதிவு இது!

3 Smells I love:

என்ன தான் நாம் ஏலக்காய், கிராம்பு எல்லாம் போட்டு சர்க்கரை பொங்கல் செய்தாலும், அது கோவிலில் நைவேத்யம் ஆகி, சுட சுட நம் கையில் வரும் போது வித்யாசமாக ஒரு நறுமணம் வீசுமே! அந்த தெய்வீக நறுமணம்.

சிறு குழந்தைகளை குளிப்பாடி, அதன் மேல் ஜான்ஸன் பவுடர் எல்லாம் போட்டாலும், அந்த பவுடரை மீறி ஒரு வாசனை வருமே! அது சூப்பர்.

முல்லைப்பூ அல்லது பிச்சிப்பூ (இரண்டும் ஒன்று தானா?) வாசனை. அதுவும் இந்த பூச்சரங்கள் இருக்க வேண்டிய தலையில் இருந்தால், டாப்பு டக்கர். (ஹிஹி)



3 Smells I hate:

பீடி சிகரெட் வாடை. சே! குமட்டிக்கொண்டு வரும். இந்த கருமத்தை எப்படி தான் ஊதறாங்களோ?

பான் பராக் வாடை - இந்த ஜிலேபி தேசத்தில் எல்லார் வாயிலும் பான் பராக் தான். கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாமல் கண்ட இடத்தில் புளிச்!னு துப்பும் அந்த ஜந்துக்களை பார்க்கும் போது நான் மெய்யாலுமே சில வினாடிகளுக்கு அன்னியனாக மாறி விடுகிறேன்.

கொய்யா/பலாப்பழ வாசனை - அது என்னவோ சின்ன வயசுல இருந்தே இந்த ரெண்டு பழங்களோட வாசனைனா அலர்ஜி.

3 Jobs that I have had in my life:

முதலில் ஒரு வருடம் பார்த்த லெக்சரர் வேலை. மிகவும் போர் அடிக்கும் சப்ஜக்ட்ஸை கூட பையன்களுக்கு எப்படி சுவாரசியமாக எடுக்கலாம்?னு தினமும் யோசிச்சு புதுசு புதுசா பல டெக்னிக்குகளை(டகால்டிகளை) பயன்படுத்திய காலங்கள்.

சென்னையில் பார்த்த சாப்ட்வேர் வேலை.

இப்போ பாக்ற வேலை. (நான் ஆபிஸ்ல நிஜமாலுமே வேலை எல்லாம் செய்றேன்!னு என் தம்பி கூட நம்ப மாட்டேங்கறான்.)

3 Movies that I could watch over and over:

தில்லுமுல்லு - தேங்காய் சீனிவாசன் ரஜினியை இன்டர்வியூ பண்ணூம் சீன், எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காது.

தில்லானா மோஹனாம்பாள் - "அடேங்கப்பா! ஆட்டம் ரொம்ப ஜாஸ்த்தியா இருக்கே!"னு பாலையா நக்கல் விடுவாரே! அப்படி ஒரு படம் இப்ப எல்லாம் சான்ஸே இல்லை.

காதலிக்க நேரமில்லை(படம் பெயரை தான் சொன்னேன்) - இங்கேயும் பாலையா தான் பட்டய கிளப்புவார்.

3 Fond memories:
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எனது முதல் நாள். நெல்லையில் படித்த எனக்கு அந்த கல்லூரியின் பிரமாண்டம், பழமை, மக்கள் எல்லாரையும் பார்த்து ஒரு வித மலைப்பு, பிரமிப்பு, படபடப்பு. பட்டிகாட்டான் யானையை பார்த்த மாதிரி. ரெண்டே நாள் தான், அப்புறம் நம்ப வால்தனத்தை ஸ்டார்ட் பண்ணிட்டோம் இல்ல?

என் முதல் கம்பெனியின் கடைசி நாள். நான் கிளம்பும் போது அங்கே இருந்த ஆபிஸ் பாய் கண்களில் துளிர்த்த கண்ணீர் துளிகள். "இனிமே எங்கிட்ட எல்லாம் யார் சார் பேசுவாங்க?"னு சொன்ன அவரின் வார்த்தைகள். ஒரே பீலீங்க்ஸ் ஆப் இந்தியாவா போச்சு!

ஒரு மாதம் முன்னாடி எங்க மேனேஜர், "தமிழ்ச் சங்கம் தீர்த்து வைக்க முடியாத ஒரு சந்தேகததை, இந்த அம்பி தீர்த்து வெச்சுபுட்டான்!"னு சொல்லி டீம் மீடிங்க்ல ஒரு பெரிய காட்பரீஸ் சாக்லேட் குடுத்தாங்க. ரூமை விட்டு வெளியே வந்ததும் வழக்கம் போல பஞ்சாபி தட்டி பறிச்சுடுச்சு! :(

3 Jobs I would love to have:
மறுபடி கல்லூரி வேலை. நம்மால முடிஞ்ச அளவு சமூகத்தில நாலு நல்லது செய்யனும்.அவ்ளோ தான்!

3 Things I like to do:

சின்ன குழந்தைகளோடு என் பொழுதை இனிமையாக கழிப்பது.

நேரம் கிடைக்கும் போது இந்த பிளாக் எல்லாம் படிக்கறது,(இத தானே முழு நேரமும் செய்யறது!னு குத்தி காட்ட வேண்டாம்.)

என் உடன்பிறப்புடன் தினமும் ஆபிசில் நடந்த விஷயங்களை பற்றி அரட்டை அடிப்பது.

3 Of my favorite foods:

Butter scotch Ice Cream
தக்காளி சாதம், தயிர் சாதம்
ஹிஹி, கேசரி.

3 Places I would like to be right now:

நெல்லை அகத்தியர் அருவி, பாண தீர்த்த அருவிக் கரைகள்,

மதுரையில் அமைதியான என் தாத்தா வீடு, கடை வீதிகள்.

எனக்கு ப்ரியமானவர்கள் இதயத்தில் எப்பொழுதும்.(டச் பண்ணிட்டேன் இல்ல?).

3 Things that make me cry:

உண்மையானவர்கள்!னு நான் நம்பியவர்கள் புரியும் நம்பிக்கை துரோகங்கள். நான் அதிகம் கண்ணீர் சிந்துவதில்லை.

சரி, மூனு பேரை இழுத்து விட்ருவோம் இந்த தடவை.

1)SKM - எழுத ஒன்னும் இல்லை!னு சொன்னீங்க இல்ல? நல்ல ஹோம்வொர்க், ம்ம் ம்ம், ஒழுங்கா எழுதுங்க.

2) கைப்புள்ளை - தல! நீங்க இந்த அடியவன் வீட்டுக்கு வரதே பெரிசு, ஹிஹி, அதான் ஏதோ என்னால முடிஞ்ச கைங்கர்யம்.

3)கார்த்திக் - இந்த போஸ்ட்டை நீங்க படிச்சு முடிக்கறத்துக்கு முன்னாடி கார்த்திக், என் டேகை எழுதி போஸ்டா போட்ருப்பார் பாருங்க.

Friday, November 03, 2006

சொர்க்கமே! என்றாலும்....



ஒரு வழியா தீபாவளி முடிஞ்சு மறுபடி வந்தாச்சு! திட்டமிட்டபடி முதலில் மதுரைக்கு போய் டிரஸ் எல்லாம் அங்கே எடுத்துண்டு போகலாம்!னு சொல்லி நம்ப சேக்காளி ஒருத்தனையும் கூட கூட்டிண்டு கடை வீதிக்கும் போயாச்சு. முதலில் அம்மாவுக்கு புடவை எடுத்துடலாம்!னு முடிவு பண்ணி புடவை கடைக்கு நுழைஞ்சா ஆண்களை அதுவும் பால் வடியும் முகம் கொண்ட என்ன மாதிரி குழந்தைகளை எல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டா! போலிருக்கு.

தம்பி! வீட்டுலேருந்து விவரம் தெரிஞ்ச யாரும் வரலையா?னு நக்கல் விடறான் கடைக்காரன்.
அப்புறம் போனா போகுது!னு ரெண்டே ரெண்டு புடவைகளை மட்டும் எடுத்து போட்டு செலக்ட் பண்ணூங்க!னு மிரட்றான்.

சரி, இன்னிக்கு இவனை சோடா குடிக்க வெச்சுபுடனும்!னு முடிவு பண்ணிட்டு, கார்டன் புடவைகளின் குவாலிடியில, மெட்டல் ஷிபான் வகை பளபளப்போட, பூனம் சில்க்ஸ் புடவை மாதிரி லேசா, பீக்காக் சில்க்ஸ் மாதிரி பார்டர் டிஸைன் போட்டு மைசூர் சில்க்ஸ் மாதிரி, பகல ஒரு ஷேடு, நைட்ல ஒரு ஷேடு காட்ற மாதிரி டபுள் ஷேடோட இருக்கற மாதிரி காப்பர் சல்பேட் ப்ளூ அல்லது நல்ல மெரூன் ரெட் ஆலிவ் க்ரீன் கலர் பார்டர் (சிங்கிள் சைடு மட்டும்)போட்டு ஒரு புடவை எடுத்து போடுய்யா! பார்ப்போம்!னு சொன்னேன்.

அதுக்கபுறமா அவன் வாயவே தொறக்கலை.

பின்ன என்ன, 4 வருஷமா எங்க அம்மாவுக்கு பார்த்து பார்த்து புடவை எடுக்கற இந்த அம்பிய, ஆபிஸ்ல இருக்கற மேனேஜர் மேடத்துக்கே காஸ்டியூம் ஐடியா குடுக்கற இந்த அம்பிய பார்த்து ரெண்டு புடவையில ஒண்ண செலக்ட் பண்ணு!னு சொன்னா என்ன அர்த்தம்?

ஒரு முக்கால் மணி நேரம், 4 அலமாரிய காலி பண்ணி கடைசியா நான் கேட்ட ஷேடுல (பார்டர் கலர் மட்டும் வேற) ஒரு புடவை கிடைத்து, கிடைதே விட்டது. என்னை விட, அந்த சேல்ஸ்மேனுக்கு ரொம்ப சந்தோஷம்.

அதுக்கபுறமா, பக்கத்து கடையில எனக்கு ஒரு ஜீன்ஸ், ஷர்ட், அப்பா/தம்பிக்கு ஒரு ஷர்ட் வெறும் பத்து நிமிடத்தில் கிடைத்து விட்டது.

இரவே மதுரையிலிருந்து கல்லிடை வந்தாச்சு! தொடர்ந்து மழை பெய்ததால் இந்த தடவை தாமிரபரணிக்கு போக அம்மா 144 தடை உத்தரவு போட்டு விட்டார்கள்.

சரி, வந்ததுக்கு ஒரு வெங்காய சாம்பார் நம் கையால் செய்வோம்!னு வெங்கல கடையில் யானை நுழைந்தது போல கிச்சனை அத களபடுத்தியாச்சு!


நல்லா 4 நாள் அம்மா சமையலை வெட்டியதில், புதுசாக வாங்கி வந்த ஜீன்ஸை அணிய தீபாவளி அன்று சிறிது சிரமப் படவேண்டி இருந்தது. எங்கள் வீட்டில் வாங்கிய நெல்லை அல்வா, பக்கத்து மாமியாத்து தேங்காய் பர்பி, எதிர் வீட்டு மாமி குடுத்த மாலாடு, அத்தையாத்து பாதுஷா, பெரியப்பா வீட்டு மைசூர் பாகு என்று கணக்கு வழக்கில்லாமல் ரைஸ்மில் டபுள் டியூட்டி பார்த்தது.தீபாவளி இஞ்சி லேகியம் வேறு தன் வேலையை காட்ட தொடங்க கார்க் புடுங்கி கொள்ளும் அறிகுறி வேறு பிரகாசமாக தெரிந்தது.

தீபாவளி அன்று, ஸ்வீட் என்ன வேணும்? சேமியா பாயசமா? ரவ கேசரியா?னு அம்மா கேட்க, ஹிஹி, எல்லார் ஓட்டையும் பெற்று தனிபெறும் மெஜாரிட்டியில் எப்போழுதும் போல ரவா கேசரியே வந்தது. (இல்லைனா நடக்கறதே வேற!)


கிலோ கணக்கில் லிஸ்ட் போட்டு வாங்கி வந்த திருனெல்வேலி அல்வாவை ஆபிஸ்ல எல்லோருக்கும் பங்கு வெச்சு குடுத்தது போக எனக்கும், உடன்பிறப்புக்கும் ஆளுக்கு கால் கிலோ தான் தேறியது.

நான் புதுசா நிக்கான் டிஜிட்டல் கேமரா வாங்கி இருக்கேன்!னு உங்க கிட்ட சொல்லாம(பீத்தாம) வேற யாருகிட்ட போய் சொல்லுவேன்?(பீத்துவேன்?)

எங்கள் வீட்டு மேல் மாடியிலிருந்து தொங்கியபடியே மேற்கு தொடர்ச்சி மலையை ஜூம் பண்ணி எடுத்தது.


எங்கள் வீட்டிலிருந்து தாமிர பரணிக்கு போகும் வழியில் உள்ள நெல்வயல்கள்.(இப்போ அறுவடை ஆகி விட்டது.) "என் இனிய தமிழ் மக்களே"!னு எத்தனை பாரதி ராஜா, K.S.ரவிக்குமார் படங்களில் பார்த்திருப்பீர்கள்?


அதோ கிழக்கால தெரியுதே! அந்த வாழைத்தோப்புலிருந்து, மேற்கால தெரியற மாந்தோப்பு வரை எல்லாம் நம்மது தான்! அப்படினு நான் இங்கே அள்ளி விட்டா தோப்புக்கு சொந்தக்காரங்க என்னை தூக்கி போட்டு மிதிப்பாங்க! :)


பி.கு: கல்லிடையை பற்றி இன்னும் தெரிந்து கொள்ள தவறாமல் படியுங்கள் TRC சார் பிளாக்கை. (ஏற்கனவே நாலு போஸ்ட் போட்டுட்டார்!) சீக்கிரம்! சீக்கிரம்! இன்னுமா லேட்டு?

(TRC சார்! குடுத்த காசுக்கு அதிகமாவே கூவியாச்சு! அடுத்த தடவை பஜ்ஜி வேணும்!)

Friday, October 27, 2006

வீர வேல்! வெற்றி வேல்! ஷக்தி வேல்! எமை ஆளும் வஜ்ரவேல்!





தேவர் படை ஒரு புறம், அசுரர் படை மறு புறம். சூரபத்மன் மனம் போல திருச்செந்தூர் கடலும் பொங்கியது. அவனின் மனதில் தோன்றிய எண்ண அலைகள் போல கடலில் தோன்றிய அலைகளும் ஆர்பரித்தது.

"யார் இந்த பாலகன்? பால் மனம் மாறாது, மந்தகாச புன்னகையுடன், கண்களில் குறும்பு தெறிக்க, காதில் மகர குழைகள் ஆட, சிவப்பு பட்டாடை உடுத்தி, கழுத்தில் முத்து மாலைகள் அசைய, கைகளில் ரத்ன கங்கணம் மின்ன, பாதங்களில் பொற்சிலம்புகள் ஒலி எழுப்ப, ஆயிரம் கோடி சூரியனை போல பிரகாசத்துடன் ஒளி பொருந்திய முகத்துடன், எழுத்தாணி பிடிக்க வேண்டிய வயதில்,கையில் வேலுடன் இருக்கும் இவனா என் அசுரர் படையை அழித்தவன்?


சிங்கமுகனை இவன் தான் கொன்றான்! என செய்தி வந்ததே? உண்மையா என்ன? அவனை வெல்ல இந்த உலகில் ஒருவரும் இல்லையே?

சரி, தாரகன் கதி..? இந்திரனையே மண்டியிட செய்தவன் ஆயிற்றே?

இந்த பாலகனை என்னால் எதிரியாகவே பார்க்க முடியவில்லையே? கையேடுத்து வணங்க மனம் துடிக்கிறதே? எங்கே போனது எனது ஆக்ரோஷம்?

சே! நான் கோழை ஆகி விட்டேனா? இவன் யார்? யக்ஷனா? தேவனா? கிங்கரனா? கந்தர்வனா? அற்ப மானிட பதரா?"

குமரன் திருவாய் மலர்ந்தான்,"என்ன அசுரர் தலைவனே! மவுனம் ஏன்? தன்னெஞ்சே தன்னை சுடுகிறதா?
பேராசை பட்டாய், நான் என்ற அகங்காரம் கொண்டாய்! தர்மத்தை மறந்தாய்! தன்னடக்கத்தை துறந்தாய்! அடாத செயல்கள் செய்தாய்! அனுபவிக்கிறாய்!

இப்பவும் ஒன்றும் கெட்டு போகவில்லை. உன் தவறுக்கு வருந்து. தப்பு செய்தமைக்கு மன்னிப்பு கேள்".
"வினாஷ காலே விபரீத புத்தி!" விதி யாரை விட்டது?

"பச்சிளம் பாலகனே! மாயைகள் கற்றவனே! என் தம்பி மார்களை கொன்றாய்! இந்த ஒரு காரணம் போதும்! உன்னை தண்டிக்க. ஆனாலும், இந்த சூரபத்மன் ஒரு பாலகனை கொன்றான்! என்ற பழி வேண்டாம், மன்னிப்பு கேள்! உயிர்பிச்சை அளிக்கிறேன்!" பாவம் ஆணவம் கொக்கரித்தது.

கோபமும், ஆணவமும் தலையெடுத்து விட்டால் அங்கு புத்திக்கு ஏது இடம்?

நான் அப்படி தான் இருப்பேன்! மாற மாட்டேன்! என்னை மிஞ்ச யாரும் இல்லை! எனக்கு யாரும் புத்திமதி அளிக்க வேண்டாம்! என மனம் ஆர்ப்பாட்டம் செய்யும். இதுவரை இனிமையாக பழகியவரும், பகைவராய் தெரிவர்.

சூரன் மட்டும் விதிவிலக்கா என்ன?

ஆனாலும், நமது கந்தன், கடம்பன், குமரன், வேலன், முருகன், அழகன், கார்த்திகேயன், பகைவருக்கும் அருள்வானே!

சூரனை இரண்டாய் பிளந்து, மயிலும், சேவற் கொடியுமாய் மாற்றி எப்போழுதும் தன்னோடு இருக்குமாறு செய்து விட்டானே! அவனது கருணையே கருணை.

நாளை கந்த சஷ்டி திருவிழா!

நான் உடல் வருத்தி, பட்னி எல்லாம் இருந்து, பெரியதாக எந்த விரதமும் இருந்தது இல்லை.

"உடலை வளர்த்தேனே! உயிரை வளர்த்தேனே!"
என்று இருந்து வந்தேன்.

மூன்று வருடங்களுக்கு முன்னால் நான் மிகுந்த கஷ்ட தசையில் இருந்த போது, "முருகா! என் வினையை களைவாய்! என மனமுறுகி ஷஷ்டி விரதம் இருந்தேன். அதுவும் சூரசம்காரம் அன்று மட்டும் தான்!

இதோ இப்பவும் 6 நாட்கள் முருகன் சிந்தனையில் ஆழ்ந்து விட்டேன். என் மனம் எல்லாம் திருசெந்தூரில் நாளை நடக்க இருக்கும் சூரசம்காரத்தில் தான் உள்ளது.


நான் குழந்தையாக இருந்த போது எங்கள் ஊரில் முருகன் காவடி வரும். எங்கள் வீட்டு முன்னால் என் அப்பா முருகன் மேல் மனமுருகி காவடிசிந்து பாட, அழகாக முருகனடியவர் காவடி ஆடுவர். நான் அவர்களுக்கு தாகம் தணிய மோர் அளிப்பேன்.

இப்பவும் நம்மிடையே தலை தூக்கும் அசுரர்களான, நான்! என்ற அகந்தை, ஈகோ, கோபம், பேராசை, உலக இச்சைகள், சோம்பேறித்தனம், எல்லாவற்றையும் அந்த கந்தன் கைவேல் நொறுக்கட்டும்.

கூவி அழைத்தால், குரல் குடுக்காமல் இருப்பானோ அந்த மால் மருகன்?

பி.கு: முதல் கமண்ட் போடுபவர்களுக்கு, முருகன் பேரை சொல்லி அலகு குத்தி விடப்படும். :)


Wednesday, October 18, 2006

நான் சிரித்தால் தீபாவளி!



"வீட்டை கட்டி பார்! கல்யாணம் பண்ணி பார்!" வரிசையில் இனிமேல், "டிக்கட் ரிஷர்வேஷன் பண்ணி பார்!" என்பதையும் சேத்துக்கனும் போலிருக்கு.

ஆபிஸில் நமது லீவு ஸ்டேடஸ் சரியாக தெரியாததால், ரயிலில் முன்பதிவு செய்யமுடியவில்லை. பூசாரி(PL) சாமி(PM) எல்லாம் வரம் குடுத்து முடித்த போது, அடுத்த பொங்கலுக்கு டிக்கட் இருக்கு! பரவாயில்லையா?னு பதில் வந்தது.

சரி, இந்த தனியார் பஸ்ஸில் டிரை பண்ணலாம்!னு முடிவு பண்ணி போயி கேட்டா, ஓடிப் போ! அற்ப பதரே! என்பதையே ரொம்ப டீசண்டா பதில் சொன்னார்கள்.

இனி தமிழ் நாடு பஸ் தான்!னு முடிவு பண்ணி காலையில் பல் தேய்த்த கையோடு, அவசரமாக வந்ததை கூட அடக்கி கொண்டு கியூவில் போயி நின்னாச்சு! (டிக்கட் எடுக்க தான்! வேற எதுக்கும் இல்லை).
ஆந்திரா முன் பதிவு கவுண்டர் காத்தாடியது. குல்டிகள் என்னிகி பஸ்ல போயிருக்கா? H1B விசா எடுத்து அமெரிக்காவுக்கே லாரில போற கோஷ்டி தானே அது?

நம்ப நேரம், எல்லா பயலும் மதுரைக்கு தான் டிக்கட் எடுப்பான் போலிருக்கு. ஒரு சேஞ்சுக்கு இந்த தடவை ஹைத்ராபாத்ல போயி தீவாளி கொண்டாடுங்களேன்!னு பக்கதுல நின்ன கடா மீசை மாமாவிடம் நான் ரவுசு விட்டதில் இடுப்பு பெல்ட்டை தட்டி காட்டினார். ஜாமான், செட்டு எல்லாம் அதுல தான் போலிருக்கு.

இது போதாது!னு முன்னாடி இருந்த சில பயலுகள், இலவச சேவையாக பின்னாடி நின்ன அவுக ஊரு டிக்கட்டுகளுக்கும் சேர்த்து டிக்கட் எடுத்து கொடுத்து சைடு கேப்பில் சாண்ட்ரோ ஓட்டி கொண்டிருந்தனர். ஹைவேஸ்லயே அம்பாசிடர் ஓட்ட முடியாம நாம தவிச்சுண்டு இருக்கோம், சரி விடுங்கோ, பல்லு இருக்கறவன் பக்கோடா திங்கறான்.

ஒரு வழியாக நம்ப முறை வந்து, குறி கேட்க காத்து இருப்பதை போல கவுண்டர் ஆளை நெருங்கினால், அப்ப தான் அவருக்கு டீ வருது. நான் எல்லாம் கழனி தொட்டிய கண்ட கன்னுகுட்டி மாதிரி, சர்ர்ர்ர்!னு ஒரு மடக்கில் டீயை உறிந்து விடுவேன். அவர் என்னடா?னா எதோ நம்ப ஷ்யாம் சரக்கு அடிப்பது போல ரசித்து, சுவைத்து குடிக்கறார். சைடு டிஷ்ஷுக்கு கடலெண்ணய்ல போட்ட பஜ்ஜி வேற. சரி, அடுத்த அரை மணி நேரத்தில் கடல மாவு பஜ்ஜி தன் வேலையை காட்டி விடும்!னு நான் யூகித்து அதுகுள்ள நாம டிக்கட் எடுத்துடணும்!னு எனக்கு தவிப்பு.

பஜ்ஜி முடிஞ்சு நல்வாக்கு சொல்வார்!னு பார்த்தா பக்கத்து சீட்டு பங்கஜத்துக்கு(ஆமா! அப்படி தான் போர்டுல இருந்தது) அப்ப தான் டவுட்டு வரனுமா? நம்மாளு ஒரு வழியாக கிளியர் பண்ணிட்டு,(டவுட்டை தான்)என் சீட்டை வாங்கி ஏதோ "கவுன் பணேகா கரோர்பதி" அமிதாபச்சன் மாதிரி கம்யூட்டரை தட்டி ஸ்டேடஸ் பார்த்தார். என் 10th, 12th எக்ஸாம் ரிஸல்ட் கூட அவ்வளவு படபடப்புடன் நான் பார்த்தது இல்லை. ஒரு வழியாக என் மூதாதையர் செய்த புண்ணியத்தில் 25ம் சீட் கிடைத்தது.

ஆபிஸில் நான் திரு நெல்வேலி காரன்!னு பீத்தி கொண்டதில் ஆளாளுக்கு எவ்வளவு அல்வா வேணும்?னு லிஸ்ட் குடுக்க ஆரம்பித்து விட்டனர்.

மேனேஜர் - அரை கிலோ
சீனியர் டெக்னிகல் மேனேஜர் - 1 கிலோ
HR வைஸ் பிரெஸிடண்ட் - 2 கிலோ

வரும் போது பஸ் ஸ்டாண்டில் போலீஸ் நாய் மோப்பம் பிடித்து அல்வா பொட்டலத்தை தூக்கிண்டு ஓடிட கூடாதே முருகா!னு இப்பவே வேண்டிக் கொண்டேன்.

இது போதாது!னு டீம்ல இருக்கற வானரங்கள் வேற தனி லிஸ்ட் குடுத்ருக்கா. நீயே ஸ்வீட்! உனக்கு எதுக்கு ஸ்வீட்?னு சில மனுக்களை தள்ளுபடி பண்ணியாச்சு!

ஆக மொத்ததுல, ஆபிசுக்கே அல்வா குடுக்க போறேன். :p

சரி, எல்லோருக்கும் அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள்! இந்த தடவை மார்கட்ல ஏதவது புதுசா நயன் தாரா வெடி, பாவனா வெடி, கும்தலக்கா ரசிகா வெடி!னு வந்திருக்கலாம். எல்லாத்தையும் பாத்து ஜாக்ரதையா ஹேண்டில் பண்ணுங்கோ! நான் வெடியை தான் சொன்னேன்.

சில ஆதரவற்ற இல்லங்களுக்கும் முடிந்த பொருளுதவி அளிக்கலாம், தப்பில்லை.ஆயிரம் இரண்டாயிரம்!னு வெடிக்கு செலவழிக்கும் காசை சில பேருக்கு டிரஸ் எடுக்க குடுத்து உதவலாமே! பாவம்! சிலருக்கு வருடம் ஒரு முறை தான் புது டிரஸ் கிடைக்கும்.

இந்திய தொலைகாட்சிகளில் முதன் முறையாக "ஜோதிகாவின் தலை தீபாவளி!"னு ஒரு புரோகிராம் உடும்பு மார்க் ஜட்டிகள் விளம்பரதாரர் உதவியுடன் உலகமெங்கும் ஒளிபரப்பப் படலாம். வாயை பொலந்துண்டு டிவியவே பார்த்துண்டு இருக்க வேண்டாம், உங்கள் நண்பர்கள், பெற்றவர், உற்றவர்களை சந்தித்து பேசி மகிழலாம்.

இதோ இன்று இரவு மதுரை, நாளை மதுரை வீதிகளில் அம்பியின் திக்விஜயம், ஷாப்பிங்க் எல்லாம். இரவு நெல்லை பயணம். எப்படா வீட்டுக்கு போவோம்?னு இருக்கு. ஒரு வாரம்
பிளாக்குக்கு லீவு விட்டாச்சு. என் பிளக்கை ஜாக்ரதையா பாத்துக்கோங்கோ! பேரீச்சம்பழத்துக்கு ஆசைப்பட்டு பார்ட் பார்டா பிரிச்சு இந்த ஷ்யாம் விலை பேசி விடலாம். :)

பி.கு: சரி, நீங்களும் தலைக்கு எவ்ளோ கிலோ அல்வா வேணும்?னு சொல்லுங்கோ. வாங்கிண்டு வரேன். நான் சாப்பிட்டா நீங்க சாப்பிட்ட மாதிரி தானே? :D

Wish U all a  Safe and Prosperous Diwali  

Wednesday, October 11, 2006

பெஷ்டு கண்ணா! பெஷ்டு!



'மதுரையின் மங்கையற்கரசி' 'மலையரசன் புதல்வி' அருமை சகோதரி
தீக்ஷண்யா என்னை எழுத சொன்ன பதிவு.

1)The best thing to do -
நாலு பேருக்கு நாம உதவி செய்ய முடிஞ்சா அதுவே பெரிய விஷ்யம்.

2) The best gift -
that i gave is:
பொறுமையாக சிலருக்கு எழுதறிவித்தது!

that i received- இது தான்.

அண்ணன் மகள் சித்தப்பாவுக்கு, ஒரே முத்த மழை பொழிந்து விட்டாள்.

3) The best thing I've ever heard -
அண்ணா! I got the Offer!னு உடன்பிறப்பு(Srini) என்னிடம் போனில் சொன்ன அந்த தருணம்.

4) The best thing I've said:
கவலை படாதீங்க! (srini)அவனை நான் பாத்துக்கறேன்!னு என் அம்மா அப்பவாவிடம் சொன்னது. என்னை "ஆனந்தம்" படத்துல வர மம்முட்டி மாதிரி தான் வீட்டுல நடத்துவாங்க. எதுனாலும் பெரியவனிடம்(நான் தான்!) ஒரு வார்த்தை கேட்டுகலாம்!னு அம்மா சொல்வா.

5) The best thing that happened to me:
நடப்பது எல்லாமே நல்லதுக்கு தான்!என்று நம்புகிறேன்.

6) The best person I've met:
திருமதி உமா மேடம்( Mrs.TRC)
(TRC sir, உங்க பேரு சொல்வேன்னு! பாத்தீங்களா? அஸ்க்கு புஸ்க்கு!)

7) The best friend:
என்னோட அம்மா!

8) The best moment:
When I took in-charge and lead my college NCC-Navy team for a Prestigious Camp.

9)The best book:
பகவத் கீதை.

10) The best blog:
நான் கமண்ட் போடற எல்லா பிளாகும் தான்! குறிப்பா சொல்லனும்னா,
Ms.Congeniality இவங்க எழுதற விதம் ரொம்ப பிடிக்கும். கமண்ட் போடறதுல ரொம்ப Etiquitte பார்ப்பாங்க!அனுமார் பத்தி போஸ்ட் போட்டு என்னை கண் கலங்க வச்சுட்டாங்க.

11) The best place:
எங்கள் வீடு & நெல்லை அகஸ்தியர் அருவி, பாண தீர்த்தம் (சின்ன சின்ன ஆசை!ரோஜா படம் நினைவில் உள்ளதா?)

12) The best food:
தயிர் சாதம் - மாவடு/மாங்காய் ஊறுகாய். ஸ்ஸ்ஸ்ஸ்....

13) The best song:
a)தாயே யசோதா! - மஹாராஜபுரம் சந்தானம் அவர்கள்

b)ஷ்ரி சக்ர ராஜ சிம்ஹாசனேஸ்வரி - எங்க அப்பா பாடுவார். மனமே லேசாயிடும். இப்ப எல்லாம் அப்பா ரொம்ப பாடறது இல்லை. :(

இந்த பாடலை, இப்ப தான் கேட்கற வாய்ப்பு கிடைச்சது! இப்போ இது தான் ஆபிஸ்ல ரிப்பீட்ட்ட்ட்டூ....


14) The best hangout:
மதுரையில் நண்பர்/ நண்பிகளுடன் அரட்டை அடிக்கும் விங்க்ஸ் கிச்சன்.

15) The best eatout:
மூணு வேளையும் ஹோட்டல் தான். இதுல என்னத்த சொல்வேன்! படு பாவி பசங்க பொசுக்கு பொசுக்குனு பந்த் வேற நடத்தறாங்க இந்த ஜிலேபி தேசத்துல. ம்ம்ஹும்ம்.

16) The best hobby:
குட்டி குட்டி குழந்தைகளின் செயல்களை கண் கொட்டாமல் பார்த்து கொண்டு இருப்பது! நைசா அதை பிரண்டு பிடிச்சு அதுகளோட விளையாடுவது. இப்படி தான் போன வாரம், ஒரு குழந்தையை பிரண்டு பிடிச்சு, அது என்ன விட்டு வரவே மாட்டேன்!னு அடம் பிடிச்சு, அதோட அம்மாவும், சித்தியும் என்ன செய்யறது?னு திகைச்சு போயி ஒரே ரகளை ஆயிடுச்சு. அப்புறம் நானே Dairy Milk குடுத்து சமாதானம் பண்ணி டாட்டா எல்லாம் காமிச்சேன், குழந்தைக்கு மட்டும் தான்!னு நான் சொன்ன நம்பவா போறீங்க? ம்ம்ஹும்!

17) The best TV show ever:
தூர்தர்ஷனில் வந்த சுரபி - இந்தியாவை பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். அதில் வரும் ரேணுகா ஷஹேன் சிரிப்புக்கு மட்டுமே சொத்தை எழுதி வைக்கலாம்.

18) The best manager:
என் அம்மா! She is More than a CEO!

19) The best musician:
கடவுள். இவரு ஒகே! ஸ்டார்ட் மீஜிக்!னு சொல்லிட்டா அப்புறம் யாரால நிப்பாட்ட முடியும்?

20) The best gang:
எம்.சி.ஏ படிக்கும் போது நாங்க ஏழு பேரு. ரெயின்போஸ் கேங்க். ஏழு வண்ணங்களை போல ஏழு விதமான குணங்கள்.
இப்போ நம்ப பிளாக்ல வர ப்ரியா, TRC sir, கார்திக், வேதா, உஷா, ஷ்யாம், பொற்கொடி, கீதா மேடம்(நான் மேடம்!னு தான் எழுதி இருக்கேன்) etc... கேங்க்.

21) The best drink:
தாமிர பரணி தண்ணீர். (என் மேல நம்பிக்கை இல்லைனா TRC சாரை கேளுங்க!)

22)The best quote:
Be Yourself! Trust will follow You! :D

23) The best woman:
ஹிஹி, My Future தங்கமணி! (இப்பவே தாஜா பண்ணி வைக்கனும் இல்ல? அப்புறம் பூரி கட்டை பறக்கும்)

24)The best kid:
நாம எல்லோரும் தான். எவ்ளோ பெரியவங்க ஆனாலும், நம்மிடம் ஒரு அளவுகாவது சிறுபிள்ளதனம் இருக்க தானே செய்யும்? பாருங்க, இந்த கீதா மேடம் தனக்கு 15 வயசு!னு சிறுபில்லதனமா போஸ்ட் போடறாங்க. நாம சகிச்சுக்கலையா? (தலைல அடிச்சுண்டு தான் அதை படிச்சேன்)

25)The best poem:
"Miles to go befor I sleep!"

26) The best dancer: இவரு தான்!

Pic courtasy: 'நவீன ரவிவர்மா' உஷாலு! :)

நந்தி பகவான் மிருதங்கம் அடிக்க, ப்ரிருங்கி தாளம் போட, சரஸ்வதி வீணை வாசிக்க, நாரதர் (நான் இல்லீங்கோ!) மகர யாழ் மீட்ட, பதஞ்சலி முனிவரின் ஜதிக்கு
"சிதஞ்சித முதஞ்சித பதம்ஜல ஜலம்ஜித மஞ்சு கடகம்!
அஹம் ஜன, மனம்ஜன .....!"

என்று சிவ கணங்கள் முன்னிலையில் டமருகம் ஒலிக்க, எனது உள்ளத்தில் எப்போழுதும் உறைந்து இருக்கும் சிவகாமியுடன் சேர்ந்து ஆடினாரே! அது ஆட்டம்.

27) The best movie:
நிறைய இருக்கு. குறிப்பா சொல்லனும்னா முகவரி. அஜித் உணர்ந்து நடித்திருப்பார்.

தனது லட்சியத்துக்கும், வாழ்க்கை போராட்டதுக்கும் இடையே சிக்கி தவிக்கும் ஒரு மிடில் கிளாஸ் பையனின் கதை. டெஹ்ராடன் லால் பஹதூர் சாஸ்திரி அகாடமியில் டிரைனிங்க் முடித்து இந்த நேரம் இந்திய ஆட்சி பணியில் அமர்ந்து இருக்க வேண்டியது. இப்படி பிளாக் எழுதும் அற்ப பதராயிட்டேன்.

28) The best actor:
மம்முட்டி. அந்த அமைதியான, ஆனால் அழுத்தமான முக பாவங்களை எப்படி ரசிக்காமல் இருக்க முடியும்.

29) The best vehicle:
என்னுடய மனம். இதை விட வேகமான ஒரு வாகனமும் உண்டோ?
இதோ TRC சார் வீட்டு சோபாவில் உக்காச்சுண்டு ஏலக்காய் டீ குடிக்கனும்!னு நினைகிறேன். ஹைய்யா! Tea குடிச்சாச்சு!

ஆஞ்சேனேயர் ஒருத்தர் தான் மனதின் வேகத்தை விட வேகமாக செல்ல கூடியவர்.
"மனோ ஜவம் மாருத துல்லிய வேகம்!"னு என் தங்க தலைவனை சும்மாவா சொல்றாங்க?

30) The best scene in a movie:
நாயகன் படத்தில் வேலு நாயக்கருக்கும், அவர் மகளுக்கும் நடக்கும் விவாதம்!
"உங்களுக்கு சரி!னு படறது மத்தவாளுக்கு தப்பு!னு படுதே அப்பா?"னு கேட்கும் அந்த சீன். நமது வாழ்க்கையிலும் இதே மாதிரி எத்தனை காட்சிகள் வந்து போகின்றன.

"அற்ப மாயைகளோ?
வெறும் காட்சி பிழை தானோ?
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?"

பி.கு: யக்கா கை வலிக்குது! :D
நானா இந்த டேகை எழுத யாரையாவது இழுத்து விட்டா, வீட்டுக்கு ஆட்டோ வரும்!னு உளவுதுறை தகவல் அளித்து விட்டது. எனவே விருப்பம் உள்ளவர்கள் Continue பண்ணலாம். நிலா ரொம்ப ஆசைபடறாங்க போல. :)

Friday, October 06, 2006

சென்னை மாநாட்டு செய்திகள்!



நெல்லையில் நடந்த பிளாக்கர்கள் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றதை நீங்கள் யாவரும் அறிவீர்கள். இதை தொடர்ந்து நமது கழக கண்மணி குவைத்தில் நமது புகழை பரப்பி வரும் பக்கா திருடன்! சே! பக்கா தமிழன் தாம் சென்னைக்கு வருவதாகவும், சென்னையில் ஒரு மா பெரும் கூட்டத்தை ஏற்பாடு செய்து எதிர் கட்சிகளுக்கு நமது பலத்தை நீருபிக்க வேண்டிய கட்டாயத்தை எடுத்து சொல்லவும், 'ஆகட்டும் பார்க்கலாம்!" என்று சொல்லி இருந்தோம்.

தொண்டர்கள் விருப்பம் தான் நமக்கு முக்கியம்! என கருதி, சென்னைக்கு பயணபட்டோம். சென்னைக்கு வந்தால் தமது குடிலில் தான் தங்க வேண்டும்! என
TRC சார் அடம் பிடிக்கவே, அவரது விருப்பத்தை ஏற்று கொண்டோம்.

தனி விமானத்தில் வந்தால் நம்மால் பொது மக்களுக்கு இடையூறாக அமையுமே! என்று இரவு நேரம் பயணப்பட்டு ஒரு வழியாக சென்னை வந்து சேர்ந்தோம்.

காலை சிறிது ஷாப்பிங்க் எல்லாம் செய்து விட்டு, கரெக்ட்டா சாப்பாடு போடும் வேளையில் சார் வீட்டுக்கு போய் கதவை தட்டினோம். 25 - 29 வயதே மதிக்கதக்க ஒருவர்(கீதா மேடம் கவனிக்கவும்) என்னை வரவேற்றார். எதிரே நிற்பது TRC சாரின் பேரனா? இளைய மகனா?னு என் மனதில் சாலமன் பாப்பையா தலமையில் ஒரு குட்டி பட்டி மன்றமே நடந்தது. "நான் தான் TRC சார்!" என்று சொல்லவே நான் அவர் வீட்டு சோபாவில் மயங்கி சரிந்தேன்.

பின் அருமையான மதிய உண்வை அமுக்கினேன். (நல்ல வேளை கத்திரிகாய் கறி செய்யவில்லை.)

மாலை நாங்கள் இருவரும் பாப நாசம் சிவன் அவர்களின் 116 -வது பிறந்த நாள் சிறப்பு கச்சேரிக்கு நாரத கான சபாவுக்கு கிளம்பினோம். பாகவதர் கால ஜிப்பா, மற்றும் கரை வேஷ்டி கட்டிய மாமாக்களும், வைர மூக்குத்தி அணிந்த மாமிகளும் "இரும்பு அடிக்கற இடத்தில் ஈக்கு என்ன வேலை?" என்பது போல டி-ஷர்ட், டெனிம் நீல ஜீன்ஸில் வந்த எங்கள் இருவரையும் பார்த்தனர். கச்சேரி படு அமர்களம். அதை பற்றி விலாவரியாக சார் எழுதுவார்.

முக்கியமாக, "நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு!" என்ற வரி வரும் போது என் பக்கத்தில் இருந்த ஒரு மாமா அவரது மாமியை பார்த்து ரொமான்ஸ் லுக் விட்டு "ரம்பா!" என்று அழைக்க, பதிலுக்கு மாமியும் "ஸ்வாமி!"னு திருப்பி போட்டு தாக்க, அட்ரா சக்கை! அட்ரா சக்கை! ம்ம்ஹ்ம்ம்.

அடுத்த நாள் தான் சென்னை பொது கூட்டம் என்று முடிவாகி இருந்தது. ஏற்கனவே சொன்ன இடம் சின்னதாக இருந்ததால், சார் அவரது மனதை போலவே பெரியதான அவரது வீட்டுக்கே மாற்றப்பட்டது.

"கழக கண்மணி! டகால்டி ராணி! எம்முடன் ஒரு கொடியில் பிறந்த இரு மலரான போர்கோடி!" சே! பொற்கொடி முன்னதாகவே வந்து மாநாட்டு பந்தல் முகப்பில் காத்திருந்தார். "வாழ்வளித்த தெய்வம்!"
வேதா(ளம்) தமது சுண்டல் கலக்க்ஷன் பணியை கூட விட்டு விட்டு பொது கூட்டத்துக்கு வந்திருந்ததை பார்த்து அதிர்ச்சியில் எமக்கு பேச்சே வர வில்லை...

தொண்டர்களை பிக்-கப் செய்ய எதிர்கட்சிகள் லாரி தான் ஏற்பாடு செய்வார்கள். ஆனால் நாங்கள் சொகுசு காரில் அனைவரையும் அழைத்து வந்தோம். இதற்கிடையில் பக்கா தமிழனும் வந்து சேர்ந்தார். டிநகர் பிரசாரத்தில் தான் மும்முரமாக இருப்பதால் கூட்டதில் கலந்து கொள்ள முடியாமைக்கு செல்பேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார். சசிபிரபா அவர்கள். (சசி, சென்னை சில்க்ஸ்ல அன்று புடவை செம விற்பனையாமே? உண்மையா?)

இப்படியாக சார் வீட்டில் கசேரி களை கட்டியது. பிளாக்கர்கள் சந்திப்புக்கும் போண்டாவுக்கும் என்ன சம்பந்தமோ? இங்கேயும் போண்டா தான்! கூடவே சமோஸாவும் ஏலக்காய் டீயும்! உமா மேடத்தின் (சாரின் பிரதம மந்திரி) நல்ல மனம் போல டீயும் இனித்தது.விருந்தோம்பலில் தமிழர்கள் தலை சிறந்தவர்கள்! என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து விட்டார் சார்.

வெறும் இரண்டு பேரை வைத்து நெல்லையில் மாநாடா? என்று கை தட்டி கொக்கரித்த கூட்டமே! இன்று என்ன சொல்ல போகிறீர்கள்?

இரண்டு ஐந்தானது! நாளை ஐநூறு ஆகும்.
இன்று சென்னையில் மாநாடு நடத்தி விட்டோம்,
நாளை டெல்லியில் நடத்துவோம்.
பின் நாளை மறு நாள் அமெரிக்கவில் ஐ. நா சபையில் கோபி அன்னன் தலைமையில் நடத்துவோம்.

(ஹி,ஹி உஷா, இது அந்த
கோபி இல்லைமா! அண்ணாவை கோச்சுக்காத!)

போனா போகுது, வயதில் பெரியவர்கள்!னு சொல்லி கீதா மேடத்துக்கு(யாருப்பா அது? பாட்டி!னு வாசிக்கறது?) செல் பேசினால் மொபைலை அணைத்து விட்டார்கள். சரி! பாவம், பயண களைப்பு! மேலும் குதிரையில் இருந்து வேறு கீழே விழுந்து மூக்கில் அடி பட்டு கட்டு போட்டிருப்பதாக கேள்வி! எனவே தொந்தரவு செய்யவில்லை.

"ஒசில போண்டா தறாங்க!"னு விஷயம் வெளியே தெரிந்தால் மிக பெரிய கூட்டமே கூடி விடும் என்ற பயம் கருதி கட்சி உயர்மட்ட குழு மீட்டிங்க் போல இது ரகசிய கூட்டமாகவே நடத்தப்பட்டது. உடனே இதை கட்-காப்பி-பேஷ்ட் பண்ணி
"கீரை கடைக்கு எதிர்கடையா? உனக்கு பிடிச்சது தயிர் வடையா?"னு ஒரு பில்டப் குடுத்து மீள்பதிவு போட்டு விட வேண்டாம்.

இது பிரியாணி பொட்டலம் குடுத்து சேர்த்த கூட்டமல்ல, அன்பால் தானாகவே (போண்டாவுக்கு) சேர்ந்த கூட்டம்.

இது மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இன்னொரு முறை மூத்த பிளாகர் கீதா மேடம் தலை(மை)யில் நடத்தலாம் என்றும், அப்போழுது சுட சுட வாழைக்காய் பஜ்ஜியும், கொத்தமல்லி சட்னியும் பறிமாறப்படும்! என்ற வரலற்று சிறப்புமிக்க தீர்மானம் இயற்றப்பட்டது. இதனால் மேலும் பலர் ஜோதியில் ஐக்கியமாவர்கள்! என்று உளவுத்துறை தகவல் அளித்துள்ளது.

பி.கு: இது ஒரு வெள்ளோட்டம் தான். பலரது ஈ.மெயில் முகவரி தெரியவில்லை. நானும் தனி போஸ்ட் போட்டு தெரியபடுத்த வில்லை. அடுத்த முறை இன்னும் சிறப்பாக செய்வோம். என்ன மக்களே! சரி தானே? இதுகேல்லாம் அழ கூடாது! :)

Saturday, September 30, 2006

சொல்லுக்கடங்காதே! பராசக்தி சூரத்தனங்கள் எல்லாம்!



இந்த ஒன்பது என்ற எண்ணுக்கு தான் எத்தனை சிறப்பு!

1) நவ கிரகங்கள் ஒன்பது.
2) நவ ரத்னங்கள் ஒன்பது
3) ஜோதிஷத்தில் நவாம்சம் என்று சொல்வர்கள்
4) சக்தி உபாசனையில் ஷ்ரி சக்ரத்துக்கு நவாபர்ண பூஜை என்று ஒன்று உண்டு.
5) நவமி திதியில் தானே ராமர் மானிடராக ஜனித்தார்.
6) ஒன்பது ஒளஷதங்களை கொண்டு தான் நவபாஷணம் என்ற அரிய மருந்து தயாரிக்கப் படுகிறது.
7) நவ ரசங்கள் - கோபம், சிருங்காரம், ஹாஸ்யம் என உணர்வுகள் ஒன்பது விதமானதே!
8) பூவுலகில் எம் பெருமாளுக்கு திருப்பதிகள் ஒன்பது.( நவ திருப்பதி)
9) நவராத்திரி - தேவி கொலுவிருந்து ஆட்சி செய்யும் திரு நாட்கள்.


இன்று துர்க்காஷ்டமி. சக்தி சீற்றம் கொண்டு மகிஷனை சம்காரம் செய்த நாள். கருணையே வடிவம் கொண்ட அவளா இவள்? என்று உலகே அதிசயித்த நாள்.

எனக்கு சின்ன குழந்தையிலிருந்தே பாட்டியிடம் கதை கேட்கும் போது அஷ்டபுஜங்களில், சகல விதமான ஆயுதஙளுடனும் சிங்க வாகனத்தில் புயலென நேரில் வருவதை போல உணர்வேன்.


மேலும் சாந்தமான அம்மனை விட, இந்த துர்க்கா, காளி, சண்டி, அபராஜிதா தேவி போன்ற உக்ர தேவிகள் தான் என்னை மிகவும் கவர்ந்தனர்.

சக்தி, இந்த உலகத்துக்கே அவள் தான் ஆதாரம். அந்த சிவனும் இயங்குவதே இந்த சக்தியால் தானே!
துர்க்கை, லக்ஷ்மி, சரஸ்வதி என நாம் அந்த ஆதார சக்தியை பிரித்து அவர்களுக்கு ஒரு உருவமும் குடுத்து வழிபடுகிறோம். ஆனால் இம் மூன்று சக்திகளும் நம்முடனே உள்ளது.

துர்கை (இச்சா சக்தி) - மன உறுதி.
லக்ஷ்மி (க்ரியா சக்தி) - மனம் லயித்த செயல்பாடு.
சரஸ்வதி (க்னான சக்தி) - தெளிந்த ஆறிவு.

நம் உடம்பை கிரியா சக்தியும், புத்தியை இச்சா சக்தியும், ஆத்மாவை க்னான சக்தியும் ஆள்கிறது.

தெளிந்த அறிவுடன் புத்தி சரியாக கட்டளை இட்டால் மனம் லயிகிறது. உடம்பு சொன்னபடி கேட்கிறது. ஒரு வேலையில் உடல், மனம், புத்தி எல்லாம் மன உறுதியுடன் ஈடுபடுகிறது.

நல்ல பழக்கமும், புலன்களை நம் கட்டுக்குள் வைப்பதன் மூலம் லக்ஷ்மி வந்தடைகிறாள். மனதை கட்டுபடுத்துவதன் மூலம் துர்க்கை நம்மை வந்தடைகிறாள்.
உண்மையான, குளிர்ந்த சொற்களை பேசுவதன் மூலம் சரஸ்வதி வருகிறாள்.

இந்த துர்க்காஷ்டமி அன்று தேவியை பார்த்தால் அடுத்த நாள் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்ற நம்பிக்கை உண்டு. ஏனெனில் துர்க்கை உக்ரமாக தீப்பறக்கும் கண்களுடன், "இனி உனக்கு மன்னிப்பில்லை! தைரியம் இருந்தால் வாடா!"னு அசுரனை அறைகூவல் விடுத்து சம்காரம் முடித்து, குருதி அபிஷேகத்துடன் கோபம் தணியாமல் நின்ற கோலம் அது.



ஆனால் மறு நாள், கருணையே வடிவாக, கையில் மாணிக்க வீணையேந்தி, மதுர மொழிகள் பேசி, அபய முத்திரை காட்டி, தம்மை நாடி வருபவர்களுக்கு அவரவர் தகுதிக்கு ஏற்ப கலைகளை வாரி வழங்கும் சரஸ்வதியாக அருள் பாலிக்கிறாள்.

Pic courtasy: www.starsai.com

போஜ ராஜன் தீவிர லக்ஷ்மி உபாசகன். எனவே, அவனது மெய்யான பக்திக்கு கட்டுபட்டு, அஷ்ட லக்ஷிமிகளும் அவனது தேசத்தில் வாசம் செய்தனர்.

ஒரு நாள், மாஹாலக்ஷ்மி அவன் முன் தோன்றி, "போஜ ராஜனே! உன் நாட்டிலேயே பல காலமாக நாங்கள் தங்கி இருந்தால், மற்ற இடங்களுக்கு நாங்கள் எப்போழுது செல்வது? என முறையிட்டாள்.

போஜனும், சரி அம்மா! ஒரெ ஒரு லக்ஷ்மியை தவிர மீதி எல்லோரும் விடை பெறுங்கள்" என கூற, மஹாலக்ஷ்மியும் சம்மதிதாள்.

போஜன் கேட்டது தைரிய லக்ஷ்மியை தான்!

தைரிய லக்ஷ்மி அவனுடன் இருக்க, மற்ற லக்ஷ்மிகளும் வேறு வழியில்லாமல் மறுபடி அவனிடமே வந்தடைந்தனர்.


இந்த நவராத்திரி - விஜயதசமி நன் நாளில் நம் எல்லோர் மனதிலும் அந்த தைரிய லக்ஷ்மி குடி கொள்ளட்டும். மற்ற எல்லா லக்ஷிமிகளும் தன்னாலே நம்மை வந்தடைவார்களாக!

If she is with You, Who can be against to You?

Friday, September 22, 2006

கடவுள் பாதி! மிருகம் பாதி!



கேப்டனின் அகில உலக கொள்கை பரப்பு செயலாளரும், எனது நண்பனுமான அர்ஜுனா மற்றும் புளியோதரை மன்னனின் பாசமலருமான வேதா(ளம்) இருவரும் "Five wierd Things in Me" என்ற தலைப்பில் எழுத சொன்னார்கள். அது தான் "கடவுள் பாதி! மிருகம் பாதி!" என்று நான் என் ஸ்டைலில் மாற்றி விட்டேன்.

ரெளத்ரம் பழகு!
சிறு வயதில் நான் கொஞ்சம் அதிகமாகவே பழகி விட்டேன். கோபம் அதிகமாக வரும். போதா குறைக்கு சின்ன வயதிலிருந்தே நரசிம்மர்(கேப்டன் படம் இல்லை)மீது தீவிர பக்தி, உபாசனை. கோபம் வரும் சமயங்களில் அம்மா மட்டும் தான் சமாதானப் படுத்த முடியும். நானும் இந்த கோபத்தை அடக்க வேண்டும்! என்று பல வழிகள் கையாண்டு பார்த்து விட்டேன்.
ஒரு சத்ரு சொன்னானேனு தாமிர பரணி நதியின் 12 அடி ஆழத்தில் தம் பிடித்து யோகத்தில் அமர்ந்து எல்லாம் பார்த்தேன். கண் முன்னால் ஒரு பாம்பு வந்து, "என்ன அம்பி சவுக்கியமா?"னு குசலம் விசாரித்ததில் அலறி புடைத்து கொண்டு துண்டை காணும், துணியை காணும்!னு வந்தது தான் மிச்சம். அப்புறம் என் உடன்பிறப்பு கிருஷ்ண பரமாத்மா மாதிரி கரையில் வந்து துண்டு குடுத்து காப்பற்றினான். இதை கேட்டு விட்டு அந்த சத்ரு சொல்றான், "அது நாக கன்னிகை டா மாப்ளே! நாக லோகம் போயி அமிர்தம் எல்லாம் பருகி இருக்கலாம். நல்ல சான்ஸை மிஸ் பண்ணிடியே!"

அடப்பாவி! பொட்டுனு ஒரு போடு போட்டிருந்தா தெரிஞ்சு இருக்கும், அது நாக கன்னிகையா? இல்ல நான் தான் ஜெமினி கனேசனா?னு. Now i'm Mr.Cool. (upto some extent) :)

சுதந்திரம் எமது பிறப்புரிமை!
ஒரு விஷயம் வேண்டும்/செய்ய வேண்டும்! என்று முடிவெடுத்து விட்டால் ரொம்ப உறுதியாக இருந்திருக்கிறேன். ஸ்கூல் படிக்கும் போது பஞ்சாபில்(யாரு யா அது? நமுட்டு சிரிப்பு சிரிக்கறது?) (Ambala District) நடந்த ஒரு NCC கேம்ப்பில் கலந்து கொள்ள நான் தேர்வாகி விட்டேன். ஆனால் அப்போ தீவிரவாதிகள் அட்டகாசம் அதிகம் என்பதால் என் அப்பா என்னை அனுப்ப மறுத்து விட்டார். எனக்கு பயங்கர கோபம், வருத்தம், ஏமாற்றம், எல்லாம்! ஒரு மாதம் என் அப்பாவிடம் நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதன் பின் சுசீந்தரத்தில் நடந்த இன்னொரு கேம்புக்கு அப்பாவே அனுப்பி வைத்தார்.
அந்த அளவுக்கு பிடிவாதம் இப்போ இல்லை.

நாராயண! நாராயண!
இனியவர்களை வம்புக்கு இழுத்து, கலகம் மூட்டி, சீண்டுவது மிகவும் பிடிக்கும். என் உடன்பிறப்பை செமையா சீண்டுவேன். "இன்னிக்கி அம்மா சுட சுட கேசரி பண்ணி இருந்தா! கொஞ்சமா இருந்ததா, நானே எல்லாத்தையும் சாப்டாச்சே! ஏவ்வ்வ்வ்!னு ஒரு ஏப்பமும் விட்டாச்சுனா உடன்பிறப்புக்கு(Srini) பிரஷர் குப்புனு ஏறிடும். அப்புறம் என்ன? ஏது?னு கூட விசாரிக்க மாட்டான். தாமிரக்கனி ஸ்டைலில் என்னை நாலு தட்டு தட்டுவான். அம்மாவிடம் போயி குதிப்பான். எனக்கு செம ஜாலி. இப்ப பிளாக்குலயும் இந்த சேவையை செவ்வனே செய்து வருகிறேன். விட்டு விடலாமா?னு யோசிக்கிறேன்.

நியாபகம் வருதே! நியாபகம் வருதே!
என் நியாபக சக்தி மீது எனக்கு அபார நம்பிக்கை உண்டு. பல சமயங்களில் இது வரம், சில நேரங்களில் சாபம். நம் முதுகில் குத்தியவர்களை பார்த்தால் அவர்களது கீழான செயல் தான் நினைவுக்கு வந்து தொலைக்கும்.
"மன்னிகறவன் மனுஷன்!
மன்னிப்பு கேட்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்!" - விருமாண்டி டயலாக் தான் இப்போ எல்லாம் சொல்லி பழகறேன்.


"நான் சந்தோஷம் கொண்டாடும் சன்யாசி!"
2 நாட்களுக்கு முன்னால் கீதையில் கர்ம யோகம் படித்து கொண்டு இருந்தேன்.(நம்புங்க ப்ளிஸ்).

அதில் ஒரு வரி, "ஏ பார்த்தா! எவன் ஒருவன் தன்னுடய கடமையில் உறுதியாக இருந்து, முழு மனதுடன் அதில் ஈடுபடுகிறானோ, அவனை அந்த கர்மத்தின் பலன் பாதிப்பதில்லை!" எனவே உன் கடமையில் இருந்து சிறிதும் பிறழாதே!"

அடடா! என்ன ஒரு சத்யமான வரிகள்!னு அனுபவித்து கொண்டிருக்கும் போது தானா ஒருத்தன் என்னை செல் போனில் அழைகணும்?

"சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்!
அங்கே தொலந்தவன் நானே!"

என்ற தேவ கானம்(ஹி, ஹி) காதில் விழ, இந்த பாடலை எழுதிய கவிதாயினி தாமரையின் வரிகளை மெச்சுவதா? அந்த பாடலில் கண்ணாலேயே எல்லாம் பேசி, ஒயிலாக நடை பயிலும் அசினின் நடைழகை மெச்சுவதா? என்று நான் பேரின்ப நிலையை அடைந்தேன்.
(அடச்சீ! இது ஒரு பொழப்பா?னு நீங்க துப்பினாலும் பரவாயில்லை. ஏனெனில் கர்மத்தின் பலன் என்னை சாராது, ஹி,ஹி, கிருஷ்ணர் சொல்லியிருகாரே)

கத்திரிக்கா! கத்திரிக்கா!
யாரு தான் இதை கண்டுபிடிச்சாங்களோ? சே! எனக்கு பிடிக்காத காய்கறியில் டாப் - 10 இல் தொடர்ந்து 26 வருடங்களாக முதலிடம் வகிக்கிறது. ஊரில் "அம்மா! உங்க பெரிய பையன் வீட்டுல இல்லையே"?னு கேட்டு விட்டு தான் தெருவில் கத்திரிகாய் விற்க காய்கறிகாரன் வருவான். TRC ஸார், உங்க வீட்டுல நான் வரும் போது இந்த காய் செஞ்சு போட்டு என்னை பழி வாங்கிடாதீங்க. நான் பாவம் இல்ல?

சரி, உண்மையை சொல்றவங்க தெய்வத்துக்கு சமம்! தன்னுடைய குறைகளை வெளிப்படையாக சொல்வதே ஒரு நல்ல குணம் தானே! (ஆமாம்!னு சொல்லுங்கோ)நான் என்னை மாற்றி கொள்வேன், கொள்கிறேன்!

"ஒரு குழந்தையை வையாதே பாப்பா!"னு எனக்காக பாரதி அன்னிக்கே சொல்லிருக்கார். அதுனால ஹி,ஹி!

இந்த தொடர் பதிவில் சில பேரை இழுத்து விடலைனா நன்னாவா இருக்கும்?

1) 'கில்லி' ப்ரியா! - புதிதாக வீடு கட்டி இருப்பவர். இவரது எழுத்து நடை எனக்கு மிகவும் பிடிக்கும்.

2) 'கொடி கொடியாம்' பொற்கொடியாம்! - டகால்டி ராணி! என்னிடம் பென்ஸ் கார் கேட்ட புண்ணியவதி.

3) 'எந்தரோ மஹானுபாவுலு' TRC ஸார் - எதுகை மோனையில் புகுந்து விளையாடுபவர். என்னை அவர் வீட்டுக்கு அழைத்து பெரிய ரிஸ்க் எடுத்துள்ளார். ம்ஹும்... விதி யாரை விட்டது?

பி.கு: அடுத்த பதிவு ஒரு ஆளுக்கு வசமா ஆப்பு! யாருக்கு?னு யோசிச்சுண்டே இருங்க.

Saturday, September 16, 2006

சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா?....



செப் - 17 எமது இனிய தோழி விஜி பூவுலகில் உதித்த நாள்.

காவிரிக்கரையில் உதித்த தோழிக்கு எவ்வுலகமும் போற்றும் தாமிரபரணியிலிருந்து ஒரு பிறந்த நாள் வாழ்த்து மடல்.

"ஆதியும் நானறியேன்! நிஸ்ரமும் நானறியேன்!
கண்டசாப்பை கனவிலும் அறியேன்!
ரூபகமாய் நான் வரைந்த வாழ்த்திதுவே!"


"உனது காலைபொழுது பூபாளமாய்
வார்த்தைகள் அனைத்தும் கல்யாணியாய்
காட்சிகள் முழுதும் இன்பம் சுரக்கும் ஆரபியாய்
பிரியமானவர்கள் மனதில் என்றும் மோஹனமாய்
கயவர்கள் காதுகளுக்கு கம்பீர நாட்டையாய்

மக்களின் நெஞ்சுருட்டிச் செல்லும் செஞ்சுருட்டியாய்
நீல வானில் சுடர்விடும் நீலாம்பரியாய்
மலைத்தேனை வெட்க செய்யும் நாட்டை குறிஞ்சியாய்
சோர்ந்து விழும் மனங்களுக்கு ஒரு காப்பியாய்
எளியவர் துயர் தீர்க்கும் சாரங்கனாய்

அறிவில் உயர்ந்தவர் கொலுவிருக்கும் தர்பாராய்
வள்ளிக் கணவன் துள்ளி குதிக்கும் காவடிச்சிந்தாய்
ஆதிசேஷனும் கிரங்கி நிற்க்கும் புன்னக வராளியாய்
பாதி தந்தவனை மீதியும் தர வைக்கும் காம்போதியாய்
சுக துக்கங்கள் அனைதிலும் மத்யாமாவதியாய்

ஆபரணங்கள் எதிலும் உயர்ந்த சங்கராபரணமாய்
கண்டவர் முகங்களுக்கு என்றும் நளின காந்தியாய்
பெற்றவர் மனதிற்க்கு தித்திக்கும் ஷ்ரிரஞ்ஜனியாய்
நான்முகன் நாவில் களி நடம் புரியும் கீரவாணியாய்
குழந்தை மனம் கொண்டு குதூகலிக்கும் ஆனந்த பைரவியாய்

தோழிகள் மனம் மகிழ வைக்கும் தோடியாய்
மிஸ்ரசாப்புடன் தேனாய் இனிக்கும் சாருகேசியாய்
(அ)ரங்கனின் திருமார்பில் அம்சமாய் வீற்றிருக்கும் ஷ்ரியாய்
நல்லவர் என்றுமே முகழும் ராகமாலிகையாய்
பல்லாண்டு வாழ இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்!"

- Srini (அம்பியின் உடன்பிறப்பு)

என் உடன்பிறப்புக்கு தமிழில் என்னை விட புலமை அதிகம். லெப்ட், ரைட், U-Turn போட்டு வருவான். பேச்சு, கவிதை போட்டினு கல்லூரியில் கும்மி அடித்து விட்டு வருவான். ஒவ்வோரு முறை நான் ஊருக்கு போகும் போதும் கப்பு, மெடல்கள்னு மேஜையில் அடுக்கி இருக்கும். "லீவுக்கு வந்தது தான் வந்துட்ட, எல்லாத்தையும் சுத்தமா தொடச்சு வை!னு நக்கல் விடுவான். என்ன செய்ய? நான் ஜெயித்த போட்டிகளில் எல்லாம் கேசரி சாப்பிடும் பேசின் தான் எனக்கு குடுத்தா.

என் மீது பாசம் அதிகம். இந்த கவிதையை எழுதி வாங்க நான் குட்டிகரணம் எல்லாம் போட வேண்டி இருந்தது. நாம, இந்த கவிதை ஏரியாவில் கொஞ்சம் வீக்.

"கண்மணி! பொன்மணி!" எல்லாம் போட்டு, இந்த மானே! தேனே! எல்லாம் நடுவுல தூவி எப்படியாவது ஒரு கவிதை எழுதிடனும்!னு தான் பாக்கறேன்.
ஒன்னும் தோண மாட்டேங்கறது. படிக்கற காலத்துல படிப்பே கதி!னு இருந்துட்டோமா! அதான்! (இதை நீங்க நம்பி தான் ஆகனும்!) ஒரு வேளை ஓட்டலில் ரூம் போட்டு யோசிச்சா, எழுத வருமோ என்னவோ?

பி.கு: இது ஒரு அவசர பதிவு. விரைவில் எதிர்பாருங்கள்! உங்கள் அபிமான பிரவுஸர்களில் கடவுள் பாதி! மிருகம் பாதி!

Saturday, September 09, 2006

பூ மழை தூவி, வசந்தங்கள் வாழ்த்த!.....



9 th செப். இந்த நாள் ஒவ்வொரு தமிழரும் மறக்க கூடாத நாள். எனது பிளாக் உலக அருமை தங்கை, பாச மலர், பவள கொடி, நல்லவள், வல்லவள், நாற்பதும் தெரிந்தவள், சென்னையின் சுனாமி, ஒரு வாய் தண்ணி! தண்ணி(ஹி, ஹி) கூட குடிக்காமல் போர் முரசு போல பிளாகில் முழங்குபவள், "தினம் ஒரு பிளாக்" புகழ் சுபா பூமியில் திருஅவதாரம் செய்த நாள். மறக்காமல் எனக்கு ரக்ஷா பந்தன் வாழ்துக்கள் சொன்ன போதே என் தங்கைக்கு நான் வாக்களித்திருந்தேன், "உடன்பிறப்பே! உனக்கு ஒரு Swift கார் உண்டு!" என்று!
சொன்ன சொல் மாறாத சூரிய குலத்தில் உதித்த இந்த அம்பி, குடுத்த வாக்கை நிறைவேற்ற இரவு பகல் பாராமல், வியர்வை, ரத்தம், ஜொள்(சே! பழக்க தோஷம்) எல்லாம் சிந்தி கடுமையாக உழைத்து இதோ வாங்கி விட்டான்.


"பூ மழை தூவி, வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது!
எழில் பொங்கும் அன்பு தங்கையின் நெற்றியில்
குங்குமம்(or ஸ்டிக்கர் பொட்டு) சிரிக்கின்றது"

என்று நான் அவளது திருமண ஊர்வலத்தில்
பாட்டு பாட, என் தங்கை காரில் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.
அது மட்டுமா? அவளது திருமண ஊர்வலத்தில்

"அத்தானை பார்!(not surya, ofcourse) என்று தோழி உனை கிள்ள
முகம் நாணத்தால் செந்தூர நிறம் கொள்ள"
என்ற பாச காட்சியும் உண்டு.

தனது அறிவை வளர்க்க ஒரு பரமார்த்த குரு போதாது! என்று கருதி இரண்டு பரமார்த்த குருக்களிடம் கல்வி பயிலும் என் தங்கையின் அறிவே அறிவு!

இப்போழுது கட்சி பணி காரணமாக, திருச்சி, கும்பகோணம்(ஹி, ஹி) என சுற்று பயணம் செய்து கொண்டிருக்கும் எனது தங்கையை நேரில் வாழ்த்தி கார் சாவியை வழங்க முடிய வில்லை. தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த என்னிடம் "சில்லுனு ஒரு காதல் கதை" பிளாப்பா அண்ணா?"னு பொறுப்பு சிகாமணியாக தனது இன்னொரு அண்ணன் சூர்யாவை பற்றி விசாரித்த என் தங்கையின் சகோதர பாசத்தை என்ன என்று சொல்ல்வது?

எனவே அன்பு தங்கையே! எப்பொழுது வேண்டுமானாலும் வந்து உனது காரை தாராளமாக பெற்று கொள் கண்மணி! அது வரை நானும், உனது மன்னியும் காரை பத்திரமாக பார்த்து கொள்வதில் உனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லயே பொன்மணி!

இந்த பொன்னான தருணத்தில், எதிர் கட்சிகளுக்கு நான் ஒரு அறைகூவல் விடுக்கிறேன்!
தில்லு இருந்தால், உப்பு போட்டு புளியோதரை(ஹி, ஹி) தின்பவராக இருந்தால், சொன்ன சொல்லை காக்க நினைத்தால், எங்கே நீங்கள் வாக்களித்த அந்த வைர மூக்குத்தியை
பரிசளியுங்கள் பார்க்கலாம்! அப்படி பரிசளிப்பதாக இருந்தால், எங்கள் சார்பாக மூக்கு குத்த ஒரு கோணி ஊசி வழங்கப்படும். நாங்கள் ரெடி! நீங்கள் ரெடியா?( ஜாதி பெயர் இல்லீங்கோ!)
நல்ல சான்ஸ்! மிஸ் பண்ண வேண்டாம்!

ஒரு செல்ல தங்கை Octavia கார் கேட்டு உள்ளார். இன்னொரு பாச மலர், பென்ஸ் கார் கேட்டு உள்ளார். அவை இரண்டும் பரீசீலனையில் உள்ளன.

பி.கு: குடுத்த காசுக்கு அதிகமாவே கூவிட்டேன் மா! மறக்காம account transfer பண்ணிடு! என்ன? :)

Friday, September 01, 2006

உமையொரு பாகன்!



கடவுளின் விசித்ரமான படைப்புகளில் அரவாணைகளும் அடங்குவர். உருவத்தால் பெண் போலவும், குரலில் ஆணாகவும், சிவனின் "உமையொரு பாகன்!" தத்துவத்தை விளக்க வந்த படைப்பாகவே எனக்கு தோன்றும். இவர்களை பற்றி மகாபாரததில் கூட குறிப்பு உள்ளது.

மகாபாரத போர் துவங்குமுன், களபலியாக அர்ஜுனன் மகன் அரவாணன் தேர்ந்தெடுக்கப்பட்டு, களபலி ஆவான். அவனையே தங்கள் கணவனாக வரித்து, இந்த அரவாணைகள் சித்திரை மாத பவுணர்மி அன்று கூத்தாண்டவர் கோவிலில் (விழுப்புரம் அருகில் உள்ளது) தங்களுக்கு தானே தாலி கட்டி கொண்டு, அடுத்த நாள் அவன் இறந்ததாக பாவித்து, அந்த தாலியை அறுத்தெறிந்து அழுது புலம்புவது ஒரு சடங்காக உள்ளது.

வட இந்தியாவிற்கு நாம் ரயிலில் பயணம் செய்ய நேரிட்டால், சில ஸ்டேஷன்ங்களில் கூட்டம் கூட்டமாக இவர்கள் ரயிலில் ஏறி பயணிகளிடம் காசு வசூலிப்பார்கள் என்றும், சேட்டு வீட்டு திருமணங்கள் நடக்கும் இடங்களுக்கு இவர்கள் சென்று அந்த தம்பதியரை ஆசிர்வாதம் செய்து வசூல் வேட்டையும் நடத்துவர் என்றும் கேள்விப்பட்டுள்ளேன்..

மும்பையில் அதிரடியாக, ஸ்கார்பியோ காரில் வலம் வரும் ஒரு பிரபல தாதா ஒரு அரவாணை. பின்பு என்கவுண்டர் செய்யப்பட்டதாக கேள்வி!
அவனை மையமாக வைத்து தான் அப்பு என்ற படத்தில் பிரகாஷ் ராஜ் ஒரு அரவாணையாக நடித்திருப்பார்.

எத்தகைய வேதனையை தமக்குள் சுமந்து கொண்டு, அதை துளியும் வெளிக் காட்டி கொள்ளாமல் இவர்களால் எப்படி முடிகிறது? என்று நான் பலமுறை வியந்தது உண்டு.

பெறும்பாலும் பல அரவாணைகள் தங்கள் பெற்றவர்களால் புறக்கணிக்கப்பட்டு, துரத்தப்பட்டு நாடோடியாக திரிகிறார்கள்.
இந்த சமூகமும் இவர்களை ஏளனமாகவும், ஒரு வித வேற்று கிரக ஜந்துவை போலவும் தான் நடத்துகிறது.
சினிமாவில் காமடி டிராக்கில் இவர்கள் கண்டிப்பாக தேவைப்படுவார்கள். பெறும்பாலும் நமது ஹீரோக்களை கலாய்க்க, பாட்டுக்கு நடுவில் ஏடாகூட வசனம் பேச இவர்களை தான் பயன்படுத்துவார்கள்.

ஒரு வாரமாக இந்த ஜிலேபி தேசத்தில் ஒரு கூத்தை பார்த்து வருகிறேன். முக்கியமான டிராபிக் சிக்னல்களில் வண்டிகள் குறைந்த பட்சம் 5 - 10 நிமிடங்கள் நிற்க வேண்டி உள்ளது. அப்பொழுது, குபீரென ஒரு அரவாணை கூட்டம் கொரில்லா தாக்குதல் நடத்தி அவர்கள் வழக்கப்படி கைகளை தட்டி,அனைவரது தலைகளிலும் இலவசமாக ஆசிர்வாதம் செய்து, காசு குடு! என்று அன்பாக மிரட்டுகிறார்கள். மினிமம் பத்து ரூபாய் குடுக்க வேண்டும். இல்லா விட்டால் என்ன நடக்கும்? என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.

இப்படி தான் ஒரு நாள் மாலை அதிசயமாக கொஞ்சம் சீக்கிரமாக 6.30 மணிக்கே ஆபிசை விட்டு கிளம்பி எம்.ஜி.ரோட்டில் வரும் போது, வசமாக ஒரு அரவாணையிடம் மாட்டிக் கொண்டேன். நாம தான் தர்ம மகா பிரபு ஆச்சே! 5 ரூபாய் குடுத்தால், முடியாது! 10 ரூபாய் தான் வேண்டும்! என்று அடம். அடுத்த கட்ட கொரில்லா தாக்குதல் நடக்குமுன் நான் சுதாரித்து கொண்டேன்.

"ஒரு காரணம்! ஒரெ ஒரு காரணம் சொல்! உனக்கு ஏன் நான் 10 ரூபாய் குடுக்கனும்? என்று எனது "ஏக் காவ் மேம் ஏக் கிஸான்" இந்தியில், புருவத்தை உயர்த்தி குரலில் கோபம் தெறிக்க கேப்டன் போல கேட்டேன்.
சில சமயங்களில் ரெளத்ரம் பழக வேண்டி இருக்கிறது. என்னை ஆழ்ந்து ஒரு பார்வை பார்தார்(ள்). "ஒரு பத்து ரூபாய் குடுக்க கூடாதா?" என்று பாவமாக முகத்தை வைத்து கொண்டு கேட்க, அதற்கு மேல் நான் எதுவும் பேச முடியலை. குடுத்து விட்டு நகர்ந்தேன்.

சரி, எனக்குள் சில கேள்விகள்:
1) அரசாங்கம் இவர்களை கண்டு கொண்டுள்ளதா? ஒரு துரும்பையாவது இவர்களுக்காக நகர்த்தி உள்ளதா? இவர்களுடைய நிலை என்ன? என்பதை இந்திய அரசு தெளிவுபடுத்துமா?
இவர்களை "Physically Challenged Category"ல் சேர்த்தால் ரிசர்வேஷன் கோட்டா கிடைக்க வழி உண்டே!

இவர்களது எண்ணிக்கை மட்டும் ஒரு தொகுதிக்கு பத்தாயிரம் இருந்தால் நமது கரை வேட்டிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசி இருக்க மாட்டார்கள்? அப்பவும் உங்களுக்கு சினிமாவில் நடிக்க சான்ஸ் வாங்கி தரோம்!னு தான் சொல்லி இருப்பார்கள், அது வேற விஷயம்!
வாக்குறுதி அள்ளி வீசுவதில் எல்லா X.மு.க. கட்சிகளும் ஒன்னு தான். (X = You pple fill up the blanks)

2) இவர்களும், தங்கள் தன்மானத்தை ஏன் விட்டு கொடுத்து, இப்படி திரிய வேண்டும்? படங்களில் தங்களை கேவலமாக சித்தரித்துக் கொள்ள வேண்டும்?

3) நேர்மையாக பிழைக்க எத்தனையோ வழிகள் உள்ளதே! சுய உதவி குழுக்கள் உதவியை நாடலாமே!

பண்டைய தமிழகத்தில் அந்தப்புர காவலில்(ஹி,ஹி, நம்மூர் ராஜாக்கள் ரொம்ப தான் உஷாரு!) அரவாணைகள் இருந்ததாக படித்து உள்ளேன்.
தனியார் செக்யூரிட்டி சர்வீஸ்களில் இவர்களை ஏன் சேர்க்க கூடாது? இவர்கள் ஏன் சேர கூடாது?

ம்ம்ம், இந்த 33% சதவீத ஒதுக்கீட்டுக்கே துப்பை காணோம்! ம்ம்ம்ம்! யானைக்கு யார் Snuggy pad கட்டுகிறார்கள்?னு பார்ப்போம்!பூனைக்கு யார் மணி கட்டுகிறார்கள் என்ற டயலாக்கையே எத்தனை நாளைக்கு சொல்வது? :)

பி.கு: அடுத்த பதிவு "கடவுள் பாதி! மிருகம் பாதி!"

Saturday, August 26, 2006

மாபெரும் வெற்றி பெற்ற நெல்லை பிளாக்கர்கள் மாநாடு!


நெல்லை பிளாக்கர்கள் மாநாட்டை மாபெரும் வெற்றியடைய
செய்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி!
நன்றி! நன்றி!  
.

நெல்லை பிளாகர்கள் மாநாட்டுக்கு பக்காவா பிளான் பண்ணி வைத்து இருந்த நேரத்தில், நம்ம ஆபிஸ்ல மேனேஜர், "அம்பி! லீவு இப்ப கிடையாது!"னு டமால்னு ஒரு குண்டை தூக்கி போட்டார். ஆஹா! இப்பவே எதிர் கட்சியின் சதி தொடங்கி விட்டதா?னு ஒரு நிமிடம் மலைத்து விட்டேன். அத தொடர்ந்து என் உடன்பிறப்புடன் அவசர ஆலோசனை நடத்தி, பயண திட்டத்தை மாற்றி விட்டேன். முந்தய நாளில் எனது அருமை அண்ணன் டுபுக்கு போனில் அழைத்து நான் வருவதை உறுதி செய்து கொண்டார்.

அப்புறம் என்ன? "எலெய்! எடுறா வண்டிய!"னு கிளம்பி விட்டேன். நெல்லைக்கு சரியாக 65 கிலோமீட்டர் தொலைவில் வரும் போது பஸ் டயர் பஞ்சர். சே! இப்படி ஒரு சோதனையா? "எத்தனை சதி வந்தாலும் முறியடிப்போம்! இப்படை தோற்பின் எப்படை வெல்லும்?"னு நமது தொண்டர்களின் உற்சாக குரல் கேட்டு சிலிர்த்து விட்டேன்.

பெங்க்ளுரில் இருந்து புறப்படும் போதே எனக்கு சிறிது உடல் நல குறைவு, ஜல தோஷம், இருமல் எல்லாம் இருந்தது. இருந்தாலும், கொள்கை பெரிதா? நமது உடல் நலம் பெரிதா? வீடு பெரிதா? நாடு பெரிதா? என்ற தன்மான உணர்ச்சி பொங்கி வழிந்திட, பிடரிகள் சிலிர்க்க, கர்ஜனை புரிந்து, தோள் தட்டி,அதோ தெரிகிறது பார் இமயம்! என்று கூறிக்கொண்டே வந்து சேர்ந்தேன் கல்லிடை.

வந்து விட்டான் எங்கள் யசோதை இளஞ்சிங்கம்! என்று அன்னையின் ஆனந்த கண்ணீர் ஒருபுறம், ஆபிஸ்ல ஒழுங்கா வேலை எல்லாம் செய்றியா?னு தந்தையின் அன்பான விசாரிப்புகள் ஒரு பக்கம் என்றால், "என்ன மாப்ளே! பெங்க்ளுரில் இருந்து தனியா தான் வந்தியா? சே! சப்புனு போச்சே!"னு நண்பர்களின் வழக்கமான வாரல்கள் மறுபுறம் என்று கச்சேரி ஆரம்பமே களை கட்ட தொடங்கியது.

2 வாரமாக துவைக்காத டிஷர்ட் நாலு, துவைத்து 2 மாதமே ஆன(ஹி,ஹி) 2 ஜீன்ஸ்களை என் பையில் இருந்து என் அம்மா கைப்பற்றினார்கள்.
உடல் நிலை சரி இல்லாததால் அம்மா தாமிர பரணி நதியில் குளிக்க 144 தடை உத்தரவு பிறப்பித்தார்கள். பின் நான் கொஞ்சம் அழுது அடம் பிடித்து, உருண்டு புரண்டதில், 30 நிமிடம் மட்டும் சென்று வர அனுமதி கிடைத்தது. ஆனால் நான் 1 மணி நேரம் ஜலக்ரீடை நடத்தி விட்டு தான் வந்தேன்! அதன் பலனாக நிமிட்டாம்பழம் ஒன்று கூட கிடைத்தது,அது வேறு விஷயம்.
பின் வழக்கம் போல தட்டில் மல்லிகை பூக்கள்(தமிழ்நாட்டில்,இட்லினு பொதுவாக சொல்வார்கள்) தக்காளி சட்னியுடன், சுட சுட பறிமாறப்பட்டன.

அதன் பின் அம்மாவுடன் துணைக்கு சமையல் செய்து கொண்டே(சும்மா வறுத்தல், கிண்டுதல் தான்) ஆபிஸ் கதை, சில மாஹானுபாவுலு பிளாக்கர்கள் பற்றி எல்லாம் கதையடித்து விட்டு மாலை மாநாடுக்கு செல்ல தயார் ஆனேன். எல்லா மாவட்டத்திலிருந்தும் கூட்டம் வந்திருப்பதால் கூட்டம் பெரிய திடலுக்கு மாற்றபட்டதாக என் அண்ணாச்சி தகவல் சொன்னார்.

மாவட்ட வாரியாக வண்டி கட்டிக் கொண்டு "உடல் மண்ணுக்கு! உயிர் பிளாக்குக்கு!
இதை உரக்க சொல்வோம் உலகுக்கு!"னு வந்திருக்கும் கூட்டதின் ஒரு பகுதி தான் இது!


மாலை ஆனதும், என் அண்ணாச்சியின் காரை பின் தொடர்ந்து ராமரை தொடரும் இளவலை போல நான் மக்கள் கூட்டதில் நீந்தி செல்லும் காட்சியை பாரீர்.


மாநாட்டின் முக்கிய ஹைலேட்டே அம்பி தலைமையில் நடந்த சைக்கிள் பேரணி தான்!
"சிங்கமொன்று புறப்பட்டதே!
அதுக்கு நல்ல காலம் பொறந்திருக்கு!"னு குழாய் மைக் செட்டில் பாடல் ஒலிபரப்ப பட்டது.


"முதல்வனே! எனை கண் பாராய்!....
ஆசை பூவை தவிக்க விட்டு அமைச்சரோடு நகர்வலமா?"னு பல நெல்லை ஜிகிடிகள் மாடியிலிருந்து பூ தூவிய படியே பாடியதை எல்லாம் இந்த அம்பி கேட்கவே இல்லை.

நமக்கு கொள்கை தானே முக்கியம்!

பின் இரவு சுமார் 9.30 க்கு மாநாட்டு மேடையில் கொள்கை சிங்கம், தாமிர பரணி தங்கம்! தமிழர் குலகொழுந்து! எனது அண்ணன் டுபுக்கு அவர்களை சந்தித்தேன். உணர்ச்சி பெருக்கில் இருவருக்கும் பேச்சே வர வில்லை. வெறும் காத்து தேங்க்(வாயிலிருந்து தான்) வந்தது.

"ஒரு மந்தையிலிருந்து இரண்டு ஆடுகள் தனி தனியே சென்றன. மீண்டும், அவையிரண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே?"
(ஆடு எங்கடா பேசும்?னு கமண்ட் போட கூடாது! சொல்லிட்டேன் ஆமா!)

3 வருடம் கழித்து இருவரும் சந்தித்து கொள்கிறோம். அந்த சந்திப்பு, வராலாற்று சிறப்பு வாய்ந்த ஒரு சந்திப்பு. நதி கடலை சேருவது போன்றது.
"நாம் இருவரும் சேரும் சமயம்! நம் கைகளில் வரும் இமயம்!"

தம்பி! எப்படி பா இருக்கே? என்று படையப்பா சிவாஜி மாதிரி உச்சி முகர்ந்தார்.(நல்ல வேளை தலைக்கு ஷாம்பு போட்டு குளித்திருந்தேன்).

இதயமும், இதயமும் அங்கு பேசி கொண்டன. எனவே வார்த்தைகளுக்கு அங்கு இடம் இல்லை. (செமத்தியா என்னை ஓட்டு ஓட்டுனு ஓட்டினார்!னு உண்மையை இங்கு சொல்லவா முடியும்?).

மாநாட்டிற்க்கு வந்திருந்த மழலை பிளாக்கர்கள் படை(என்னையும் சேர்த்து தான்)


சித்தப்பாவின் கன்னத்தில் முத்தமிட்டால்
இதற்கு தானே செல்லம் 600 கிலோமீட்டர் தாண்டி வந்தேன்!


பல முக்கிய தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
1) பதிவில் முதல் கமண்ட் போடுபவர்களுக்கு புளியோதரை, சர்க்கரை பொங்கல், ரவா லட்டு, பால் திரட்டி பால் என தாராளமாக குகிள்.காம் வழங்க வேண்டும்.

2)மொக்கை பதிவு போடுபவர்களுக்கு வயதில் மூத்த பிளாக்கர் கீதா மேடம், தனது சொந்த செலவில் தங்க கங்கணம் வழங்குவார்.

பிளாக் ஸ்பாட்டை தடை செய்ததற்க்கு கடும் கண்டனம் தெரிவித்து, தீர்மானம் இயற்றப் பட்டது.

1) ஆட்சியாளர்கள் 108 தோப்பு கரணம் போட வேண்டும். இல்லாவிட்டால், மாதம் ஒரு போஸ்ட் போடும் ஒரு குழந்தை, இனி வருடம் ஒரு போஸ்ட் போட ஆரம்பித்து விடும்.

2) "தினம் ஒரு போஸ்ட்" புகழ் சுபா இனி ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மொக்கை போஸ்ட் போட ஆரம்பித்து விடுவார்கள்.

3) பிளாக் புளியோதரை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழும் ஷ்யாம் இந்த தடையை எதிர்த்து ஆட்சியாளர்கள் வீட்டிலும் இனி புளியோதரை கேட்க ஆரம்பித்து விடுவார்.

வந்திருந்த அத்தனை பேருக்கும்(இதை படிப்பவர்களுக்கும் சேர்த்து தான்) நெல்லை அல்வா கிண்டி கொடுக்கப்பட்டது. இவ்வாறு நெல்லை மாநாடு இனிதே நிறைவுற்றது.

பி.கு: மேல சொன்ன மாதிரி எல்லாம் மாநாடு நடத்த எனக்கு மட்டும் ஆசை இல்லையா என்ன? ஆனால் நானும், என் அண்ணனும் அவர்கள் மாமியார் வீட்டு (சே! சே! லாக்கப் எல்லாம் இல்லை) ஹாலில் சுட சுட வாழைக்காய், உருளைகிழங்கு பஜ்ஜி, கெட்டி சட்னியுடன் பிளாக்கர்கள் மாநாட்டை கொண்டாடினோம். ஒரு சின்ன வருத்தம், வெறும் பஜ்ஜி தான் தந்தார்கள், கேசரியும் தரலை -(ஹி,ஹி) ஒரு பொண்ணையும் காட்ட வில்லை.

Saturday, August 19, 2006

தீராத விளையாட்டு பிள்ளை...!



இது கொஞ்சம் விவகாரமான பதிவு. எழுதலாமா? வேண்டாமா?னு ஒரே யோசனை. இப்ப நம்ம பிலாக்குக்கு TRC சார் நடேசன் சார் போன்ற மகானுபாவர்களும் கீதா மேடம் போன்ற வயசானவாளும்(ஹி,ஹி) வரா! இருந்தாலும் அம்பியின் குழந்தை மனசை எல்லாரும் புரிஞ்சுப்பா!னு நம்பி களம் இறங்கறேன்.

சரி இனி மேட்டருக்கு போவோம். 2 நாளா ஆபிச்ல ஒரு டிரைனிங்குக்கு என்னை அனுப்பி என் மேனேஜர் நன்னா பழி வாங்கிட்டா. சாதாரணமாவே தொடர்ந்து 2 மீட்டிங்க்ல கலந்துண்டாலே எனக்கு தூக்கம்,தூக்கமா வரும். அதுவும் மதிய வேளைனா கேக்கவே வேண்டாம்.
இந்த பிரோக்ராம் 2 நாளைக்கு நடந்தது.காலை 9 க்கு ஆரம்பிச்சு மாலை 6 மணி வரை. ஒரே பவர்பாய்ண்ட் பிரசேன்டேஷன்ஸ். என்னையும் சேர்த்து 50 பேர் கலந்து கொண்டோம். பேசின பாதி பேர் சும்மா கொத்து கொத்துனு கொத்தி எடுத்துட்டா. எல்லார் காதுலயும் ஒரே பிளட்.
"காலை சுத்தின பாம்பு கடிக்காம விடாது!"ங்கறது மாதிரி சில புண்ணியாவான்கள் கேள்வி எல்லாம் கேட்டா. எங்களுக்கு புரிஞ்சதா? இல்லையா?னு டெஸ்டிங்காம். அதனால வழக்கம் போல தூங்க கூட முடியலை. மானம் போயிடுமே!(எங்க இருக்கு? போறதுக்கு).

ஒரு நல்ல காரியம், என்னனா இந்த பிரோக்ராமை ஒரு நல்ல ஓட்டலில் ஹால் புக் பண்ணி ஏதோ பார்ட்டி மாதிரி ரவுண்ட், ரவுண்டா டேபிள் எல்லாம் போட்டு நடத்தினா. என் டேபிளில் ஒரு 5 பேர் வந்து உக்காச்சுண்டா. புதுசா ஒரு பஞ்சாபி குதிரை எங்க ஆபிஸ்ல வந்து இருக்கு. சொல்லி வெச்ச மாதிரி கரெக்ட்டா என் டேபிளில் தான் அதுக்கு சீட் போட பட்டிருந்தது. கரெக்ட்டா சீட்டு போட்ட புண்ணியவான் வாழ்க!னு நான் மனதுக்குள் வாழ்த்தவேயில்லை. ப்ளீஸ் நம்புங்கோ!

லக்னத்துக்கு பதினோறாம் இடதுல கால் மேல கால் போட்டு ஆட்சியில் அமர்ந்து இருக்கும் சுக்ரன் வேலையை காட்ட ஆரம்பித்தார். இதுல என்னை யாரும் குத்தம் சொல்லப் படாது!

"அங்கிள்! அங்கிள்!னு நன்னா மிங்கிள் ஆறாளே டா!"னு விவேக் எதோ ஒரு படத்தில் சொன்ன மாதிரி, குதிரை முதல் நாளில் இருந்தே நமது திறமை, புலமைய பார்த்து நன்னா மிங்கிள் ஆயிட்டா. என் டேபிளில் இருந்த மீதி பேரும் "குருவே! எப்படி இதெல்லாம்? உங்க கூட போட்டி போட முடியாது பா சாமி!"னு அடக்கி வாசிக்க ஆரம்பிச்சுட்டா.

ரெண்டவது நாள் தான் இந்த பதிவோட ஹைலேட்டே!
இந்த நிகழ்சியை நடத்தின ரசகுல்லாவை கூப்பிட்டு, "கொஞ்சம் போர் அடிக்குது! அப்பப்ப சில கேம்ஸ் எல்லாம் நடத்து!"னு பொறுப்பு சிகாமணியா நான் சொன்னது தான் எனக்கே வினையா போச்சு!

"அம்பி சொன்னா அப்பீலே கிடையாது!"னு அதுவும் முடிவு பண்ணி மதியம் நல்ல தூக்கம் வர 2.45 - 3.15 வேளையில ஒரு கேமை நடத்தியது.

எல்லா டீமுக்கும் ஒரு தினசரி பேப்பரை குடுத்து அதை தரையில் போட்டு டீமில் இருக்கும் எல்லோரும் தங்கள் ஒரு காலை மட்டும் அந்த பேப்பர் மேல வைத்து கொண்டு நிக்கனும். "இது என்ன ஜுஜுபி!"னு முதலில் எல்லாரும் நின்று விட்டோம். (எங்கள் டீமில் 6 பேர்). அதுக்கு அப்புறமா அதே பேப்பரை ரெண்டாக மடித்து அதன் மேல் டீமில் உள்ள எல்லாரும் நிக்கனும். சரி நின்னாச்சு!

நாலாக மடித்து நில்லு!னு சொன்னா. காலில் உள்ள ஷுவை கழற்றி எப்படியோ சமளிச்சு நின்னாச்சு!

எட்டாக மடித்து நில்லு!
ரொம்ப கஷ்ட்டப்பட்டு ஒரே விரலில் பேலன்ஸ் பண்ணி நின்னாச்சு!

பதினாறாக மடித்து நில்லு!
என் டீம்ல இருக்கற குதிரை அசரவேயில்லை. அழகா, என் கழுத்தை வளைத்து பிடிச்சுண்டு பேலன்ஸ் பண்ணி விட்டது. மூக்கில் மோப்பம் பிடித்து இந்த பிராண்ட் செண்ட் தான் யூஸ் பண்றியா? எனக்கு ரொம்ப பிடிச்ச பிராண்ட்!னு சர்டிபிகேட் வேற. "டாமி கேள் செண்ட் தான் நீ யூஸ் பண்றியா?னு பதிலுக்கு நான் அவளிடம் கேக்கவேயில்லை.

மத்த டீம்ல இருக்கற பசங்க எல்லாம் "எச்சூஸ்மி! அம்பி! எனி ஹெல்ப்?"னு நக்கல் விட ஆரம்பிச்சுட்டா. அடடா! அடடா! ஜேம்ஸ்பாண்ட் படம் பாக்ற மாதிரியே இருக்கே!னு ஒரு தடியன் கமண்ட் அடிக்கறான். என்னாடா இது வம்பா போச்சு? ஒரு குழந்தை மனம் கொண்ட நல்ல உள்ளத்துக்கு இப்படி ஒரு சோதனையா?

இதுக்கு நடுவுல 3 டீம் போட்டியில் அவுட் ஆகி விட்டது!

கடைசியாக அந்த பேப்பரை மேலும் ஒரு தடவை மடித்து நிக்கற டீமுக்கு தான் பரிசு!னு ரசகுல்லா அறிவிக்க, மேலும் 2 டீம்கள் தாமாகவே விலகி கொண்டன.

இப்ப தான், குதிரை ஒரு யோசனை சொன்னது! "பேசாம அலாக்கா என்னை தூக்கிக்கோ! நீ மட்டும் பேப்பர் மேல நில்லு!"
சரி தான்! நான் என்ன அன்பே வா! எம்.ஜி.ஆரா? "ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்!"னு பாடிண்டு அவளை தூக்கிகறத்துக்கு? சே! ஒரு ஹனுமார் பக்தனுக்கு இப்படியெல்லாமா சோதனை வரும்?

அட! நம்ம மனசு கள்ளம், கபடம் இல்லாத என் நண்பன் அர்ஜுனாவை போல வெள்ளை உள்ளம்.

விகல்பம் இல்லாம, ஒரு வேளை தூக்கிகலாம்!னு வெச்சுக்குவோம். ஆனா அந்த குதிரை, கர்ணம் மல்லேஸ்வரிக்கு ஒன்னு விட்ட ஓர்படி பொண்ணு மாதிரி ஆஜானுபாகுவா இருக்கு. பஞ்சாப் கோதுமையின் மகிமையை பற்றி கேள்விபட்டு இருக்கேன். இப்ப தான் பாக்கறேன். வீட்ல பொண்ணு வளர்க்க சொன்னா புளி மூட்டைய வளர்த்துருக்கா!

"சத்தியமா என்னால முடியாது தாயி!"னு சொல்லிட்டேன்.

"அப்ப நான் உன்னை தூக்கறேன்!"னு கையை பிடிச்சுண்டா. ஆள விடுமா தாயே!னு நான் எஸ்கேப் ஆகி விட்டேன். இதுக்காக, "கைய பிடிச்சு இழுத்தியா?"னு ஊர் நாட்டாமைய வெச்சா பஞ்சாயத்து பண்ண முடியும்?
போட்டிய நடத்தின அந்த புண்ணியவதியும் சரி, இதுவே போதும்!னு தீர்ப்பு சொல்லிட்டா. "உனக்கு தாண்டா பம்பர் பரிசு!"னு சில சத்ருக்கள் நக்கல் விட்டா! இப்படி எல்லாம் போட்டி நடத்தினா, யாருக்காவது தூக்கம் வருமா என்ன?

பி.கு: ஒழுங்கா நடந்த கதைய உள்ளது உள்ளபடி சொல்லு!னு யாரும் இந்த குழந்தைய (நான் தான்) டார்ச்சர் பண்ணப் படாது!
அடுத்த பதிவு நெல்லை மாநாட்டு செய்திகள். (இன்னும் போட்டோக்கள் லண்டனில் இருந்து வரவில்லை)

Monday, August 14, 2006

50) எந்தரோ மஹானுபாவுலு!.....



"எந்தரோ மஹானுபாவுலு!
அந்தரிக்கி வந்தனமு!!"

- இந்த லோகத்தில் வாழும் எத்தனையோ கோடானுகோடி புண்ணியவான்களை நான் நமஸ்கரிகிறேன்!
- நாதப் பிரம்மம் தியாராஜ ஸ்வாமிகள்.

தாமிர பரணி நதிக்கரையாம் ஆழ்வார்குறிச்சியை மையமாக வைத்து சத்தமில்லாமல் ஒரு பசுமைப் புரட்சி நடந்து வருகிறது. அங்கு உள்ள பரமகல்யாணி கல்லூரியில் பயோ டெக்னாலஜி துறையில் பணி புரியும் இளம் புரபஸர் திரு.விஷ்வநாதன் அவர்கள் The Tree என்று ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தை தொடங்கி ஓசைப் படாமல் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார். அதை பற்றி என் உடன்பிறப்பு மூலம் கேள்விப்பட்டு, சரி, நமது 50-வது பதிவாக போட்டு உலகுக்கு தெரியபடுத்தலாம்னு ஒரு சின்ன ஆசை.

"தனி மரம் தோப்பாகாது!" என்பது போல தனக்கு மட்டும் ஆர்வம் இருந்து பயன் இல்லை, ஒரு சொந்த லாபமற்ற நிறுவனமாக மாற்றினால் தான் முடியும் என உணர்ந்து கொண்ட நமது புரபஸர், அரும்பாடு பட்டு இதை தொடங்கினார்.

இந்த நிறுவனத்தின் சில நோக்கங்கள்:
1) மக்களிடையே மரங்களை பற்றியும், பசுமையாக நமது சுற்றுபுறத்தை வைக்க என்ன செய்ய வேண்டும்? என பல நல்ல விஷயஙளை எடுத்து கூறுவது.

2) சொன்னால் மட்டும் போதாது! காரியத்திலும் இறங்கி, மரக் கன்றுகளை தந்து உதவி அதை பரமாரிக்கவும் உதவி செய்வது.

இலவசமாக அட்வைஸ் சொல்ல ஆயிரம் பேர் வருவா! ஆர்வத்தை கெடுக்க பத்தாயிரம் பேர் வருவா! பர்ஸை திறந்து பத்து ரூபாய் தர பத்து பேர் கூட வர மாட்டா நம்ம ஊருல!

அது போல, "இந்தாப்பா, விச்சு! உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை எல்லாம்? லோகத்தை நம்மால மாத்த முடியாது! எல்லாம் விதி படி தான் நடக்கும்!னு சில Old Monks(அய்! இது என் பிராண்டு பேர் ஆச்சே!னு ஷ்யாம் குதிக்கறான் பாரு!) சொன்னதை எல்லாம் கேட்டு சோர்ந்து விடாமல், "உன்னால் முடியும் தம்பி!" சத்யமூர்த்தி மாதிரி உற்சாகத்துடனும், ரமணா விஜயகாந்த் ரேஞ்சுக்கு ஒரு மாணவர் படை அமைத்து உண்மையிலேயே களப்பணி ஆற்றி வருகிறார்.
சில பேர் வயசான காலத்துல ஊர், ஊரா சுத்திட்டு களப்பணி ஆற்றுகிறேன்!னு பீலா விடுகிறார்களே, அது மாதிரி எல்லாம் இல்லை, இவருடைய களப்பணி.

சில தனியார் தொண்டு நிறுவனங்கள், மற்றும் தமிழக அரசாங்கத்தின் குறிப்பிட்ட ஒரு பிரிவின் நிதி உதவி யானை பசிக்கு சோள பொரி மாதிரி வருகிறது.

மத்திய அரசின் நிதி கிடைக்க அளித்த பைல்கள், வழக்கம் போல கோடு வைத்து கோவிந்தா சட்டை போட்ட கொட்டாவி விடும் ஆபிஸர்கள் மேஜையில், அவர்கள் பிஸி! என காட்ட சாட்சியாக உள்ளது. இந்தியன் தாத்தா மாதிரி, நமது பிளாக் உலக அம்மையார்(பாட்டி!னு யாராவது வாசித்தால் அதுக்கு நான் பொறுப்பில்லை)
திருமதி கீதா அவர்கள் போய் குத்தினால் தான் வேலை நடக்குமோ என்னவோ?.(ஹி, ஹி, இது எப்படி இருக்கு மேடம்?)

கோவிலில் ஒரு டியூப் லைட் போட்டாலே "மாவு.வேவு.சேவு.முனா.பானா"னு தனது பாட்டன், மாமன், மச்சினி பேர்களை அந்த டியூப் லைட்டில் எழுதி விட்டு, "ஒரு விளம்பரந்தேங்க்"னு பல்லை காட்டும் இந்த காலத்தில் தனது பேர் வெளியே தெரியாமல் இவர் ஆற்றும் சேவைகள் ஏராளம்! ஏராளம்!

தினமும் ஒரு ரூபாய்! ஒரே ஒரு ரூபாய் வீதம் நீங்கள் ஒரு வருடம் சேமித்து தந்தால் உங்கள் பெயரில் அல்லது உங்கள் பெற்றோர் பெயரிலோ மரம் நட்டு அதை பராமரிக்கும் பொறுப்பையும் இந்த நிறுவனம் ஏற்று கொள்கிறது.

எத்தனை காலத்துக்கு தான் அசோகர் மரம் நட்டார்!னு படிப்பது?
உங்கள் பெயரும் வரலாற்றில் இடம் பெறட்டுமே!

"இந்த பாட்டை யாருக்கு டெடிகேட் பண்ண விரும்பறீங்க?"னு சன் மியூசிக்கில் ஒரு ஜீன்ஸ் அணிந்த சின்ன கிளி கேட்டால் நம்ம ஆளுங்க ஒரு பெரிய லிஸ்டே குடுப்பாங்க. இந்த மரத்தை அக்கா அசினுக்கு டெடிகேட் பண்றேன்! அண்ணன் சூர்யாவுக்கு டெடிகேட் பண்றேன்! ஹி,ஹி மச்சினி கோபிகாவுக்கு டெடிகேட் பண்றேன்!னு ஸ்டைலா சொல்லிக்கலாம் இல்ல? என்ன நான் சொல்றது?

"சோறு போட்ட கோவிந்தசாமிக்கு மொய் பணம் நூறு ரூபாய்ய்ய்ய்!"னு செந்தில் மாதிரி ஏலம் விடும் இந்த காலத்தில், தன் சொந்த அக்கா வீட்டு கிரகபிரேவேசத்துக்கு கூட ஆயிரம் ரூபாய்க்கு மர கன்றுகளாய் வாங்கி நட்டு விட்டார் இந்த புரபஸர்.

இவரது தளராத முயற்சிகளை பார்க்கும் போது
இந்த பாட்டில் வரும் வரிகளான "அந்த வாசுதேவன், இவன் தான்!" என பாட தோன்றுகிறது.

இந்த நிறுவனத்தை பற்றி மேலும் தகவல் அறியவோ அல்லது நாலு வார்தை பாரட்ட வேண்டும்! போல தோன்றினால் இந்த greenvishu@rediffmail.com ஈ.மெயில் முகவரிக்கு மெயில் அனுப்பலாமே! (இவரது புகைப்படம் எனக்கு வந்து சேர்ந்ததும் எனது பதிவில் போட்டு விடுகிறேன்!)

பி.கு: அடுத்த போஸ்ட் "மாபெரும் வெற்றி பெற்ற அம்பியின் நெல்லை மாநாடு!"(அம்பியின் அரிய புகைபடங்களுடன்)

Thursday, August 03, 2006

யார் அந்த கர்ம வீரன்?



எப்போழுதெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ
அப்பொழுதெல்லாம் நான் அவதரிப்பேன்!
- பகவத் கீதையில் கண்ணன்.

டிசம்பர் மாதம் ஒன்றாம் நாள்.
பாரத தேசத்தின் வரலாற்றில் அது ஒரு பொன்னாள். பாரதத்தை வல்லரசாக்குவதற்க்கு,
கார்த்திகை மாதம், தனுர் லக்னத்தில் ஒரு குழந்தை அவதாரம் எடுத்தது.

தேவர்கள் பூ மாரி பொழிந்தனர். யக்க்ஷர்கள் யாழ் மீட்டி தேவ கானம் இசைத்தனர். தேவ மங்கையர்கள் இன்னிசை நடனமாடினர். பூத கணங்கள் சங்க நாதம் செய்தனர்.

பூவுலகில், குயில்கள் கூவின, மயில்கள் தோகை விரித்தாடின. பசுக்கள் தாமாகவே பாலை சொரிந்தன. காட்டில் வாழும் புலி, சிங்கங்கள் எல்லாம் பயந்து கர்ஜனை செய்து, அடர்ந்த காட்டில் ஓடி ஒளிந்தன. கொடியவர்களுக்கு தம்மை அறியாமலேயே நடுக்கம் உண்டானது.

வங்காள விரிகுடா, அரபிக்கடல், இந்து மகா சமுத்திரம் எல்லாவற்றிலும், அலைகள் ஆர்பரித்தன. தேவ தாரு மரங்கள் பூக்களை வர்ஷித்தன. வழக்கத்துக்கு மாறாக அன்று பூக்கள் எல்லாம் மிகவும் மலர்ச்சியாக இருந்தது. அந்த தெய்வீக குழந்தையை பெற்றவர்கள் மகிழ்ச்சியில் பூரித்தனர்.
"உலகை வெல்ல வந்து விட்டான் எங்கள் இளஞ்சிங்கம்!" என்று கர்ம வீரர்கள் "வீரவேல்! வெற்றி வேல்!" என முழக்கம் இட்டனர்.

யார் அந்த கர்ம வீரன்?
இராஜ இராஜ சோழனா? இல்லை!

உங்கள் ஆர்வம் எனக்கு புரிகிறது.அந்த கர்ம வீரனை பற்றி அறிய
இங்கு கிளிக் செய்யுங்கள்.

பி.கு: அடுத்த போஸ்ட் ஐம்பதாவது பதிவு - சிறப்பு பதிவு.

Friday, July 28, 2006

மெக்காலே கல்வி முறை



எப்படி கட்டம் போட்டு திட்டம் தீட்டி நம்மை அடிமைப்படுத்தி விட்டனர்!
மெக்காலே கல்வி முறை என்று ஒன்றை அறிமுகப்படுத்தி நம்மை மழுங்க அடித்து விட்டர்கள்.
உலகமயமாகல் படி குன்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட முடியாது தான். ஆனால் சைனா, ஜப்பான் தங்கள் தாய்மொழியில் படிக்க வில்லையா? முன்னேற வில்லையா?

சரி, ஆங்கிலத்தை ஒதுக்க வேண்டாம். ஆனால் நமது தனி தன்மை வாய்ந்த கலாசாரத்தை நாம் ஏன் விட்டு குடுக்க வேண்டும்?

இதே விஷயத்தை பற்றி வெறு ஒரு கோணத்தில் ஒரு நல்லவள்! வல்லவள்!
சகோதரி சுபா ஏற்கனவே அலசி, காய போட்டு விட்டார்கள்.
ஆபிஸ் முழுக்க ஆங்கிலம், கன்னடம், இந்தி, பெங்காலி!னு கேட்பதால்/பேசுவதால் தான் மணக்க மணக்க தமிழில் (நிறைய ஆங்கிலம் கலந்து தான்) எழுதுகிறேன்.
சங்கம் வெச்சு தமிழ் வளர்க்க ஆசை தான்.(நான் வ.வா சங்கத்தையும் தான் சொல்றேன்) ஆனா நம்ம லெவலுக்கு இது தான் முடியும்.

ஆபிச்ல நிறைய வேலை பளு. அதான் இப்படி ஒரு Forwarded mail பதிவு. மன்னிக்கவும்.

Friday, July 21, 2006

கும்பாபிஷேகா! ஆராதனா!


பொதுவா நாம ரொம்ப பிசியா இருக்கோம்னு சொல்லனும்னா "எனக்கு தலைக்கு மேல வேலை இருக்கு"னு சீன் போடுவோம்.

ஆனா, சில பேருக்கு தலையில தான் வேலையே! சரி பாயிண்டுக்கு வரேன்! ஒரு மூணு மாதமா வேலையில ரொம்ப பிசியா இருந்ததுல *ahem* நம்ம பெர்ஸ்னாலிடிய கொஞ்சம் கவனிக்காம விட்டுடோம். அது என்ன ஆச்சு, த்லையில இருக்கற முடி, நெற்றி, மூக்கு வரை விழுந்து ஒரு அன்னியன் லுக் குடுக்க ஆரம்பித்து விட்டது.

"ஓ! ஷக்க மஷிஷா! அன்னியா!",அபராஜிதடு ஒச்சாயினு!"னு டீம்ல சில குல்டிகள் நக்கல் விட ஆரம்பிச்சுடானுங்க. சரி, இனி பொறுக்க முடியாது!னு முடிவு பண்ணி, இந்த ஜிலேபி தேசத்துல என் ஏரியாவுல சலூன் எங்க இருக்குனு பார்த்தா, ஒன்னு கூட இல்லை.

எங்க பார்த்தாலும் இந்த அரிவை, தெரிவை, பேதை, பெதுமை,மங்கை,மடந்தை,பேரிளம் பெண்களுக்கு தான் அழகு நிலையங்கள் இருக்கு.(எதாவது பருவத்தை மிஸ் பண்ணி இருந்தா or order மாத்தி இருந்தா சுட்டி காட்டவும்).

நகம் வெட்ட, அது மேல சாயம் பூச, புருவத்தை கட்டிங்க்-ஒட்டிங்க் பண்ண, அட! இந்த கண் இமைகளுக்கு கூட ஏதோ பண்றாங்க பா! முகத்துக்கு சுண்ணாம்பு அடிக்க, சாரி, சாரி ப்ளிச் பண்ண, உதடுக்கு ரத்த காட்டேரி மாதிரி சாயம் பூச!னு எல்லாத்துக்கும் நிலையங்கள் இருக்கு.

நானும் சுத்தி சுத்தி பாக்கறேன், ஒரு பாய்ஸ் சலூன் கூட இல்லை. என்னடா இந்த ஊருல ஒரு பயலும் முடி வெட்டிக்க மாட்டானோ?னு எனக்கு சந்தேகம் வந்துடுத்து!

அப்புறம் ஒரே ஒரு கடையை பார்த்ததும், "கண்டேன் சலூனை!"னு துள்ளி குதிக்காத குறையா கடைக்கு உள்ள போயி வரிசையில உக்காச்சுண்டேன்.

சரி, இப்ப ஆபிஸ்ல இருந்து (வெட்டியா) இந்த பதிவை படிக்கும் எல்லாரும் ஒரு தடவை உங்க சேர்ல சுத்திக்கவும், வீட்டுல இருக்கறவங்க மார்டீன் கொசுவர்த்தி சுருளை சுத்தி பார்த்து கொள்ளவும், பிளாஷ்பேக் பா!

Before 20 years, கல்லிடைகுறிச்சியில் நான் இருந்த காலங்களில் முடி வெட்ட இந்த சலூன் எல்லாம் போனதே கிடையாது.(பார்த்ததே கிடையாது!)
நடமாடும் சலூனாக பதினட்டு பட்டிக்கும் ஒரு நல்லவர், வல்லவர் வருவார். எனக்கு எல்லாம் கரெக்ட்டா ஒரு மாதம் தான், மூளை வளருதோ இல்லையோ, முடி வளந்துடும்.
வீட்டு அழி(ரிஷப்ஷன்)ல தான் கும்பாபிஷேகா! ஆராதனா!னு(ஜீன்ஸ் படம் நினைவில் உள்ளதா?) தலையில் தண்ணி தெளிச்சு,நல்லா தடவி பட்டாபிஷேகம் நடக்கும்.

சும்மா சொல்ல கூடாது, அந்த வல்லவர்,கத்ரியையே மிஷின் ரேஞ்சுக்கு யூஸ் பண்ற வித்தை தெரிஞ்சவர். அப்ப மிஷனை எப்படி யூஸ் பண்ணுவார்னு பாத்துக்கோங்க!

எனக்கு முடி வெட்டும் போது என் அப்பாவும் புட்பால் கோச் மாதிரி களத்துக்கு அருகில் வந்து உட்கார்ந்து விடுவார்.
"இந்தாங்க Mr.வல்லவர்! நல்லா மிஷின் போட்டு க்ளோஸா வெட்டுங்க!"னு சொன்னதோட இல்லாம, அடிக்கடி "லெப்டுல குறைச்சுடு, ரைட்டுல குறைச்சுடு! அப்படியே ஒரு U turn போட்டு முன்னாடி போயி நல்லா வெட்டு!"னு தந்தை மகனுக்கு ஆற்றும் உதவியை செவ்வனே செய்து விடுவார்.

இது போதாதா? அந்த வல்லவருக்கு! பய புள்ள சும்ம சுத்தி சுத்தி வெட்டுவார், நின்று கொண்டு வெட்டுவார், முட்டி போட்டு வெட்டுவார், சாய்ந்து கொண்டு வெட்டுவார்.

கத்ரி சேவை முடிஞ்சதும் மிஷின் சேவை ஆரம்பிக்கும். இந்த பிளக்குல சொருகி சர்ர்ர்ருனு எடுக்கற மிஷின் இல்லை அது! கையால தான் இயக்குவார். ரொம்ப வலிக்கும். அது முடிஞ்சு பினிஷிங்க் டச் குடுக்கறேன்!னு கத்தி மாதிரி ஒரு வஸ்துவை எடுத்து என் கண் முன்னாலயே அதை சவர கல்லுல சானை பிடிப்பார்.

எங்கே கொஞ்சம் முன்ன பின்ன அசங்கினா சூர்பனகை மாதிரி காதை இழந்துடுவோமோ?னு பயத்துல நான் மூச்சு கூட விட மாட்டேன் ஒரு 2 நிமிஷத்துக்கு.
அந்த கண் கொள்ளா காட்சியை என்னால் பார்க்க முடியாது. ஏனெனில் கண்ணாடி எல்லாம் காட்ட மாட்டார்.
அவருக்கு கை வலிச்சு, கத்தரிகோலுக்கும் வலிச்சு,போதும்னு எங்க அப்பா தீர்ப்பு சொன்ன பிறகு தான் கும்பாபிஷேகம் இனிதே நிறைவடையும். முடி வெட்டின பிறகு வீட்டுகுள் நுழைய முடியாது. கட்டின துண்டோட பட்டினத்தார் மாதிரி நேர தாமிரபரணி தான்!

போற வழியில மக்கள் விடற நக்கல் இருக்கே!
"என்ன இந்த மாதம் ராமருக்கு பட்டாபிஷேகம் நல்ல படியா முடிஞ்சதா?"னு ஒரு மாமாவின் நக்கல்.
"நல்ல அறுவடை போலிருக்கு! மகசூல் மூணு போகமோ?"னு ஒரு மாமியின் நக்கல்.

சே! ஏண்டா முடி வெட்டின்டோம்னு ஆயிடும்.
இந்த குருதி புனல், காக்க காக்க கட் எல்லாம் அப்பவே கண்டு பிடிச்ச புண்ணியவான்.
இவ்வளவுக்கும் சர்வீஸ் சார்ஜ் ஒரு ரூபாய்! ஒரே ரூபாய்! தான் வாங்கி கொள்வார்.

ஸ்கூலுக்கு போனா என் பக்கத்து சீட்டு உமா மகேஷ்வரி(லங்கினி!னு வாசிக்கவும்) அவ பேனா எழுதறதா?னு என் பின் மண்டையில அவ ஆட்டோகிராப் போட்டு செக் பண்ணிப்பா. எனக்கு கோவம் கோவமா வரும். இருந்தாலும் சண்டைக்கு போனா காம்பஸ்ஸால குத்திடுவாளோனு பயமா இருக்கும். அதோட மட்டும் இல்லை, அடிக்கடி அவள் எனக்கு ஆரஞ்சு மிட்டாய் எல்லாம் தருவா. போனா போகுதுனு விட்ருவேன்.(மீசையில மண் ஒட்டலை டா அம்பி!)

சில மாதங்களுக்கு முன் ஊருக்கு போயிருந்தேன். அதே வல்லவரை பார்த்தேன். "நல்லா இருக்கீங்களா?"னு இருவரும் பாசமுடன் விசாரித்து கொண்டோம். அவரின் மகன் நல்லா படித்து இப்போ சென்னையில் நல்ல வேலையில் இருப்பதாக சொன்னார். மிகவும் மகிழ்ச்சியா இருந்தது.

பாரதியின் கனவு நிறைவேறி கொண்டிருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

சரி, மறுபடி பெங்க்ளூருக்கு வருவோம்.
அந்த கடைகாரர் கேட்டார்,"சார், எப்படி வெட்டனும்?".
நான், "மிஷின் போட்டு நல்லா க்ளோஸா கட் பண்ணுங்க!"

பின்குறிப்பு: கமெண்ட் என்ற பெயரில் முதலில் நக்கல் விடுபவர்களுக்கு புளியோதரை மற்றும் சுண்டல் வழங்கப்படும்.

Thursday, July 13, 2006

அல்வா நகரத்தில் பிளாக்கர்கள் மாநாடு!



அரணி பரணி பாடி வரும் தாமிரபரணியாம் எங்கள் நெல்லை சீமையிலே ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரத்தில் பிளாக் பதிவாளர்கள் சந்திப்பு நடக்க இருக்கிறது.

"தென்னாட்டு வேங்கை, தெவிட்டாத தெள்ளமுது,சீறும் சிறுத்தை, பிகருக்கு வடை அளித்து கை சிவந்த வள்ளல், 3 வருடமாக பிளாக் உலகின் மன்னன், அம்பையின் அழகன், தொடர்ந்து தேன்கூட்டில் கப்பு(he, hee) வாங்கி வரும் வெற்றி வீரன், நல்லவர், வல்லவர், நாலும் தெரிந்தவர், என் அசின் பிரதர், ச்சீசீ, கசின் பிரதர், "லன்டன் புகழ்" நமது
டுபுக்கு அழைக்கிறார்! கூடவே அவரது பிளாக் உலக கலை வாரிசு(கண்டுக்காதீங்க அண்ணாச்சி!) உங்கள் அம்பியும் சேர்ந்து அழைக்கிறார்.

முதலில் மெரினாவில் தான் கூட்டம் கூட்டலாம் என்று இருந்தோம், ஆனால் அலை கடலென உங்கள் எண்ணிக்கை கண்டு மீன்டும் சுனாமியோ? என்ற அச்சம் வரலாம் என்று எண்ணி கூட்டத்தை நெல்லைக்கு மாற்றினோம்.

"பிளைட் டிக்கட் அதும் பிசினஸ் கிளாஸ் போதும்!"னு காமடி கீமடி எல்லாம் பண்ண படாது! வேணும்னா நம்ம கஜா கிட்ட சொல்லி தலைக்கு 50 ரூபாய் குடுத்து, கள்ள தோணி ஏறி வரவும். உள்ளூர் மக்கள் நடராஜா சர்வீசை பயன் படுத்தி கொள்ளவும்.

நெல்லைக்கு வாருங்கள்! திருநெல்வேலி சம்ரதாய விருந்தோம்பலை உங்களுக்கு அளிக்கிறோம். (ஏல மக்கா! அருவாள நல்லா தீட்டி வைல! ரொம்ப நாளு ஆச்சு!)

பாரதி ராஜா படத்தில் மட்டும் பார்த்திருக்கும் கிராமத்தை காட்டுகிறோம். ஒடினா தான் அதுக்கு பேர் நதி! தேங்கினா அது குட்டை!

ஒடுகிற நதியை காட்டுகிறோம் வாருங்கள். சென்னை வாசிகள் ஒரு செங்கல், கொஞ்சம் வைக்கல் கொண்டு வரவும். கொஞ்ச அழுக்கா ஒட்டி இருக்கு..? நல்லா தேய்ச்சு குளிக்கனும் இல்ல, அதுக்கு தான்!

மதுபாலா, திவ்யபாரதி, மனிஷா, த்ரிஷா, ஜோதிகா என பல பேர் காலடி பட்ட புண்ணிய மண் அது!
(வீர பாண்டிய கட்ட பொம்மன், பூலிதேவன், வீரன் வாஞ்சி ஆகியோரது ஆன்மா இந்த அடியவனை மன்னிக்கட்டும்!)

இந்த அரிய விழாவில், என் அண்ணனின் பிளாக் உலக கலை சேவையை பாராட்டி அவருக்கு இந்திய பணம் ஆயிரம் பொற்கிழி அளிக்க உள்ளேன். அவரும் எனக்கு ஆயிரம் பவுண்டுகள் மட்டும், பொற்கிழி அளிக்க போகிறார் எனபதை தெரிவித்து கொள்கிறேன்.

உங்கள் சுற்றமும் நட்பையும் கூட்டி வர இது ஒன்னும் அம்பியின் திருமணம் அல்ல, பிளாகர் மாநாடு, ஆகவே அடையாள அட்டை கொண்டு வரவும்.

அட! யாரும் வரலை! என்றாலும், எனது அண்ணன் சொன்னது போல் இந்த பிளாகர் மாநாடு,எங்கள் வீட்டு அடுக்களையிலோ அல்லது என் அண்ணன் வீட்டு அடுக்களையிலோ நடந்தே தீரும்! என்பதை 136 வது வட்டதின் சார்பாக எதிர் கட்சிகளுக்கு இங்கு கூறி கொள்ள ஆசை படுகிறேன்.

மா நாட்டுக்கு வரும் எல்லோருக்கும் திருநெல்வேலி அல்வா அம்பி கையால் கிண்டி குடுக்கப்படும். பார்சலும் வாங்கிக்கலாம்.

இந்த நெல்லை மாநாட்டை தொடர்ந்து பெங்களுர்,சென்னை ஆகிய இடங்களிலும் உங்கள் அம்பி மாநாடு நடத்த உள்ளார். சென்னை மாநாட்டின் முழு பொறுப்பையும் என் அருமை சகோதரி "One Post per Day" சுபா கவனித்து கொள்வார் என்பதில் எனக்கு துளியும் ஐயமில்லை.

"அலை கடலென திரண்டு வாரீர்! அமோக ஆதரவு தாரீர்!"

"இந்த படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?" என்ற கோஷம் விண்ணை சாடட்டும்.

முக்கிய குறிப்பு: ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல சிறுகதையை படிச்சேன். கைல காசு கொஞ்சம் இருந்திருந்தா இந்த கதையை ஒரு குறும்படமா எடுத்து திரைகதைக்கு National award/Oscar அவார்டு வாங்கி இருப்பேன். இது எங்க அண்ணன் எழுதின கதை தான்! நீங்களும் படிச்சு பாருங்க!


நெல்லையில் பிளாகர்கள் மா நாடு!  டுபுக்கு & அம்பி அழைகிறார்!   அலை கடலென திரண்டு வாரீர்!  ஆதரவு தாரீர்!

Saturday, July 08, 2006

Pubs In Banglore



பெங்க்ளுரில் நீங்கள் ரோட்டில் தடுக்கி விழுந்தால் மூன்று இடங்களில் விழ வாய்ப்புள்ளது.

1) அனுமார் கோவில்கள் - தினமும் நான் சாஷ்டாங்கமாக விழும் இடம்.
2) பூங்காக்கள் - 1 அல்லது 2 வாரங்களுக்கு ஒரு முறை சன்டேக்களில் லால் பாகில் அதி காலை தடுக்கி விழுவேன்.
3) பப்புகள்.

நான் நெல்லை மாவட்டத்தில் பள்ளி செல்லும் காலங்களில்(ஒரு 8th படிக்கும் போது), நம்ம தோஸ்து ஒருத்தன் லீவுக்கு பெங்க்ளுர் போய்ட்டு வந்து, எங்களிடம் 70 எம்.எம் சினிமாஸ்கோப்பில் பி.வாசு மாதிரி சூப்பரா கதை விட்டான். அதில் சில துளிகள்:

1) பெங்க்ளுரில் எப்போ பார்த்தாலும் பனி மழை தான். நன்னாரி சர்பத் பாட்டில் கையில இருந்தா, நாம ஜூஸ் போட்டு, போட்டு குடிச்சுண்டே இருக்கலாம்.

(இங்கு இருக்கும் மிதமான கிளைமேட்டுக்கு தான் அந்த p.வாசு இவ்வளவு பில்டப் குடுத்தான்னு எனக்கு அப்போ தெரியாது. ஆஆ!னு வாய் பிளந்தேன்.)

2) சகஜமா நாம, தெருவுல கூட எல்லா இந்தி நடிகைகளையும் பார்க்கலாம். மாதுரி தீட்சித்தை கூட நான் பார்த்தேன்.(அப்போ, ஏக்! தோ! தீன் பாட்டு சக்கை போடு போட்டது!)

(இங்கு உலா வரும் சில சப்பாத்திகளை தான் அந்த நாதாரி பாத்துட்டு, "மாதுரி தீட்சித்"னு எங்களிடம் கதை விட்டான்னு எனக்கு இப்போ தான் உரைக்கிறது.)

3) அங்கே நிறைய பப்புகள் இருக்கு!

மூணாவது பாயிண்ட் தான் எங்களுக்கு புரியலை.

"போடா! நீ ஆக்ஸ்போர்ட் டிக்க்ஷனரியில் ஏதோ ஒரு வார்த்தையை பாத்துட்டு எஙகளிடம் ரீல் விடறியா?"னு எங்கள் செட்டில் ஒருத்தன் சுதாரித்து விட்டான்.

நானும் என் பங்குக்கு, " நான் குழந்தையா இருக்கும் போது(இப்பவும் நான் குழந்தை தான்) என் அம்மா நெய் விட்டு பிசைஞ்சு பிசைஞ்சு எனக்கு ஊட்டி விட்ட பப்பு சாதம் விக்கற ஓட்டலை தானேடா நீ சொல்ற?" இது ஒரு பெரிய விஷயமா?னு புத்திசாலிதனமா அவனை மடக்கி விட்டேன்.

அந்த கூட்டத்துக்கு நான் தான் மொட்டை பாஸ்.
என் கூட்டத்துக்கு நான் சொல்றது தான் தீர்ப்பு! செல்லாது! செல்லாது!னு அவனது மூணாவது பாயிண்டை தள்ளுபடி செய்து விட்டோம்.

அதன் பின் நான் காலேஜ் படிக்க மதுரை வந்தாச்சு. இரண்டாம் ஆண்டு படிக்கும் போது, இங்கேயும் ஒரு நண்பன் லீவுக்கு பெங்க்ளூர் போயிட்டு வந்து, "பெங்க்ளூர் கலக்கலா இருக்குடா மச்சான்! கிளைமேட்டும் சரி, அத விடு, பப்ஸ் எல்லாம் அட்டகாசமா இருக்கு டா மாப்ளே!"னு சொல்ல, நான் "சரி, இவன் ஏதோ ஐயங்கார் பேக்கரி கடையில் கிடைக்கும் பப்ஸை தான் சொல்றான்!"னு நினைத்துக்கொண்டேன்.

வேலைக்கு சென்னை வந்து ஒரு வருடம் ஓடிய பின் தான் கொஞ்சம் விவரம் புரிந்தது. அதுவும், கம்பெனியில் எதாவது பார்ட்டி வந்தா, உடனே, நண்பர்கள் "எலா! சன்முகம்! எடுறா வண்டிய!"னு நாட்டாமை விஜயகுமார் ரேஞ்சுக்கு சவுண்டு விட்டு, பப்ஸை நோக்கி படை எடுப்பார்கள்.(அங்கு சென்று வாந்தி எடுப்பார்கள், அது வேற விஷயம்!)

நீயும் வா! சும்மா வேடிக்கை பாரு!னு கெஞ்சினாலும் நான் சிக்கியதில்லை.

அதன் பின் பெங்க்ளுரில் வேலை கிடைத்தவுடன், ஊருக்கு போய் அம்மா, அப்பாவிடம் சொல்லிவிட்டு ஜாயின் பண்ணலாம்னு போனேன்.

என் பக்கத்து வீட்டுல ஒரு புண்ணியவான் இருக்கார். அவர் நின்ன இடம் தீப்பற்றி எரியும். கொளுத்தி போடுவதில் டாக்டர் பட்டம் பெற்றவர்.

சும்மா நான் லீவுக்கு போனாலே, "ஏய்! என்ன அம்பி வந்துட்ட? வேலை அவ்ளோ தானா?"னு கேட்டவர். யோவ்! லீவுக்கு வந்திருக்கேன்யா! 4 நாளுல திரும்பி போயிடுவேன்!னு நான் மட்டும் விளக்கம் சொல்லலை அவ்ளோ தான்!

"நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி!அம்பியை வேலயை விட்டு தூக்கிட்டா! அதான் திரும்பி வந்துட்டான்!'னு டமுக்கு அடித்து விடுவார் அந்த மனுஷன்.

நான் தாமிர பரணியில் குளிக்க போயிருக்கும் போது(சுமாரா ஒரு 4 மணி நேரம் ஊறுவேன்) என் அம்மா அப்பாவிடம் என்ன சொன்னாரோ தெரியாது.

நான் (ஊறி) வந்தவுடன் என் அம்மா, "இதோ பாரு! பெங்களுரில் கண்ட கண்ட இடத்துக்கேல்லாம் போக கூடாது! நல்லவாளோட சேரணும்! உனக்கு நல்ல புத்தியை குடுக்கனும்னு அந்த பகவானிடம் நாங்க வேண்டிப்போம்! நீயும் வேண்டிக்கோ! என்ன புரிஞ்சதா?"னு என்னை போட்டு தாக்க, "ஆகா! பத்த வெச்சியே பரட்டை!"னு நான் அந்த ஆள் வீட்டை பார்த்து முறைத்தேன்.

என் தம்பி, இது தான் நல்ல சமயம்னு, அம்மா! அண்ணா அத மாதிரி எல்லாம் பண்ண மாட்டான் மா! தண்ணி அடிச்சாலும், வாந்தி எடுக்க மாட்டான் மா!னு ஸேம் சைடு கோல் அடித்தான்.

அடப்பாவி! உனக்கு பேண்ட், டி.ஷர்ட், sweets எல்லாம் நான் வாங்கி தறலையா? ஏன்டா இந்த நேரத்துல பழி வாங்கற?னு நான் கெஞ்சினேன்.

அதன் பின், தென் ஆப்ரிக்காவுக்கு போகும் காந்தி ரேஞ்சுக்கு, "பெருமாள்/அனுமார் கோவில் தீர்த்தம் தவிர எதையும் நான் இதுவரை தொட்டதில்லை! இனி தொட போவதும் இல்லை!"னு டிஸ்கிளைமர் குடுத்த பின் தான் வீடு சகஜ நிலைக்கு திரும்பியது.

போன வாரம், நண்பர் ஒருவருடன் M.G.ரோடில் ரோடில் உள்ள ஒரு ரெஸ்டாரெண்டில் இரவு டிபன் சாப்பிட நேர்ந்தது. பில்லை அவர் கட்டுவார்னு நான் நினைக்க, என்னை விட பார்ட்டி படு உஷாரு. பின் இரண்டு பேரும் ஷேர் பண்ணினோம்.

மாடியில் இருந்த அந்த ஓட்டலுக்கு கீழே ஒரு பப் இருந்ததை நான் கவனிக்க வில்லை. அவர் பார்த்து விட்டு, "என்ன, அம்பி! இதேல்லாம் பாத்ருக்கீங்களா? தண்ணி அடிச்ச்ருக்கீங்களா?னு கேட்டார்.

இது என்ன, மைசூர் ராஜா அரண்மனையா? மற்றபடி, மதுரையில் இரண்டு நாளைக்கு ஒரு தரம் வைகை தண்ணீர் கார்பரேஷனில் விடுவார்கள். குடம் குடமா எங்க பாட்டிக்கு அடிச்சு குடுத்ருக்கேன்னு நான் நக்கல் விட்டதில் பார்ட்டி டென்ஷனாகி விட்டார்.

சம்போ மகாதேவா! நாம கிளம்பலாமே!னு அவஸ்தையாக நெளிந்தேன்.

அவர் விடாமல், எப்படி இருக்கு?னு சும்மா உள்ள போயி பாருங்க!னு கூட்டி போனார்.

நைட் லேம்ப் தான் எல்லா டேபிள்களிலும் போட்டிருந்தனர். ஒரே புகை மண்டலம். எல்லார் கையிலும் புகைந்து கொண்டு இருந்தது.

சிவ சிவா! ராம ராமா! சில பாரதி கண்ட புதுமை(?) பெண்களும் ஊதிக் கொண்டு இருந்தனர். சில பேர் கையில் சோம பானம் வேறு!

பாவம்! அவாளுக்கு வீட்டில் என்ன கஷ்டமோ, மாமியார் கொடுமையோ யாரு கண்டா!

"மூச்சு முட்றது! போகலாம்!"னு நான் வெளியே வந்து விட்டேன்.

ரூமுக்கு வந்ததும், ஜில்லுனு(night 10 pm) ஒரு குளியல் போட்டு அனுமார் ஸ்லோகங்கள் சொன்ன பிறகு தான் நிம்மதி பிறந்தது!
நான் UG - B.sc(chem)படித்ததால், சிகரெட், மற்றும் தண்ணியால் என்னவேல்லாம் வரும்னு நல்லா தெரியும்.

பின் குறிப்பு: அடுத்த போஸ்ட் "கும்பாபிஷேகா! ஆராதனா!"
எட்டாவது அதிசயமான ஐஸ் குட்டி நடித்த ஜீன்ஸ் படம் பார்த்து விட்டு இந்த போஸ்ட்டை படிக்கவும்.

Wednesday, July 05, 2006

அலோ! செக்! மைக் டெஸ்டிங்க் 1..2..3

மிகுந்த வேலை பளு காரணமாகவும், வேறு சில சொல்ல விரும்பாத காரணங்களால் ஏற்பட்ட மனசோர்வினாலும் நான் பிளாக்கை இழுத்து மூட நினைத்தது என்னவோ உண்மை தான்.
அர்ஜுனாவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு போஸ்ட் போட்டு, கடையை இழுத்து மூடிவிடலாம்னு நினைத்தேன். ஆனல் நடந்தது எல்லாமே உல்டா.

ஆனால் அர்ஜுனாவின் உரையாடல் அந்த முடிவை மாற்றி விட்டது.

சும்மா சொல்ல கூடாது! அட டா! இ-மெயிலில் அன்பு கட்டளைகள், மிரட்டல்கள் மற்றும் உங்களின் நக்கல் கமெண்ட்ஸ், என பய புள்ளைங்க பாச மழை பொழிஞ்சுட்டீங்க.

"விட்டெறிந்த கீரையை வழிச்சு போடுடி என் சுரனை கெட்ட வல்லாட்டி!"னு எல்லாம் நக்கல் விடறாங்க.
இந்த பழமொழிக்கு விளக்கத்தை இங்கு பார்க்கவும்.

பிளாக் உலகின் பெரிய தலை (சும்மா அஸால்ட்டா 50 கமெண்ட்ஸ் விழும்) எல்லாம் போன் போட்டு விசாரிப்பு. (இதை படித்து விட்டு தலை இப்போ மெலிதாக புன்முறுவல் செய்யும்).
அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து 12 நிமிடம் 30 செகண்ட் ஆலோசனை நடந்தது.

எல்லாம் அந்த ஷ்ரிதேவி, பூதேவி சமேத நாரயண மூர்த்தியின் தனிப்பெருங் கருணை!

யாரு அந்த தலை..? கண்டுபிடிச்சாசா? அதான்! அதே தான்!

மனித உரிமை கமிஷனில் ரிப்போர்ட் பண்ணுவேன்! என்று எல்லாம் அன்பு மிரட்டல்கள் வந்தன.

கைபுள்ள சொல்ற மாதிரி இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி தான் உடம்பு ரணகளமா இருக்கு!

இதற்கு நடுவில், அம்பிக்கு ஒரு தங்கமணி(அக்னி நட்சத்திரம்) வர போறாங்க! அதான் காரணம்!னு ஒரு நல்லவன் கிளப்பி விட்டதில் "அப்படியா? எந்த ஊரு? என்ன பேரு?"னு விசாரிப்புகள்.

இதுவரை அப்படியேல்லாம் ஒன்னும் இல்லை. 18 பட்டிக்கும் வீட்டிலிருந்து சேதி பறந்திருக்கிறது. அட! ஒரு சக பிளாக்கர் கூட எனக்காக பொண்ணு தேடறாங்க பா!

அப்படியே வர வேண்டியவங்க வந்தாலும், அவங்களையும் சேர்த்து பிளாக் எழுத வச்சுட மாட்டோம்? he hee,I'll dictate, she will type.(ஆணாதிக்கம் ஒழிக!னு இப்பவே
சுபா கத்தறாங்க பாரு! ஒரு பன்னீர் சோடா ஒடச்சு ரெடியா வைங்க பா!

"என்னை மீறி யாரு வரானு அதையும் தான் பார்த்துடுவோம்!"னு அசின் ஒரு பக்கம், கோபிகா மறுபக்கம் மிரட்டல் விடுத்து உள்ளனர். நயன்,மற்றும் ஐஸ் குட்டிக்கு இன்னும் விஷயம் தெரியாது. (kutti, arjuna, syam, karthi, pls note the point your honour!)
சே! அசினுக்கு லிஸ்ட் கூடிட்டே போகுதுடா சாமி! இத சமாளிக்கறதே பெரும் பாடா இருக்கு!

பூரி கட்டை, தோசை திருப்பி போன்ற திவ்ய ஆயுதங்களால் நான் என்கவுண்டர் செய்யபடுவது உறுதியாகி விட்டது.(யாரு தான் இத எல்லாம் கண்டுபிடிச்சானோ?)

சரி, மீண்டும் ஜே.கே.பி! மாதிரி புத்தூணர்வுடன் இதோ எழுந்து விட்டேன்.

நாகை சிவாவின் கண்ணி வெடிகளை பற்றிய போஸ்ட் படித்ததும், நமக்கும் ஒரு சின்ன ஆசை. சீரியஸான மேட்டரை தொட்டு ரொம்ப நாள் ஆச்சே!
Men In Black - "The Elite NSG Commondos" பற்றி ஒரு 2 or 3 போஸ்ட் போடலாம்னு இருக்கேன். இப்போ தான் ஸ்கெட்ச் போட்ருக்கேன். பார்ப்போம்.

சரி, நம்ம பிளாக், எந்த அளவுக்கு மக்களிடம் அங்கீகாரம் பெற்றுள்ளதுனு தெரிந்து கொள்ள ஒரு சின்ன நப்பாசை. அதன் விளைவு தான் முந்தய பதிவு.

பிளாக் பிரமோஷன் டெக்னிகில் இது அடுத்த கட்டம். மார்கெட்டிங்க்ல இதை Brand Recoginisation என்று சொல்வார்கள். பரவாயில்லை, ரிஸல்ட் நல்லா தான் இருக்கு,

பின்குறிப்பு: அடுத்த போஸ்ட்
Pubs In banglore 

Thursday, June 29, 2006

என்ன தவம் செய்தனை!

2 வாரமாக ஒரே யோசனை. இந்த பிளாக் எழுத ஆரம்பித்து 5 மாதங்கள் ஆகி விட்டது. ஒரு 42 பதிவுகளும் போட்டாச்சு. நாலு பாசக்கார மக்களும் வந்து போறாங்க.
ஒரே மெக்கானிக்கலாக செல்லும் வாழ்க்கையில் இந்த பிளாக் எழுதுவது ஒன்று தான் மகிழ்ச்சியை தந்தது.

போதுமே! பிளாக்கை இழுத்து மூடி விடலாமா?

வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை பற்றி தீவிர சிந்தனை. நாம எழுதலைனா ஒன்னும் குறைந்து விடாது!

கதம்! கதம்!னு சொல்லிவிடலாம் என்று கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தாச்சு.

இந்த நிலையில், நேற்று ஒரு ISD- கால். என்னடா! நாளைக்கு தானே கான்பிரன்ஸ் கால்!னு நம்ம தல சொல்லிட்டு போச்சு! அதுவும் இப்படி நம்ம மொபைலுக்கு எல்லாம் கூப்பிட மாட்டாங்களே!னு குழப்பம்.

சும்மா வெள்ளைகார துரை மாதிரி, இங்லிபீஸ்ல என் பெயரை உச்சரித்து, நீங்க நல்ல பிளாக் எல்லம் எழுதறிங்க!னு பாராட்டு.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் (வடிவேலு மாதிரி இழுக்கவும்).

"யாருப்பா, நீ?"னு கேட்டேன்.
அட! நம்மஅர்ஜுனா!

நான் எழுதிய பதிவுகள், (சில கமண்ட்ஸ் கூட) பலதை வரிசையாக சொல்லி, சூப்பரு! எப்படி இதேல்லாம்?னு கேட்க கேட்க, எனக்கு பேச்சே வரலை. ரேவதி சொன்ன மாதிரி, "வெறும் காத்து தேங்க்" வந்தது!

நீண்ட நாளாக பழகியது போன்ற ஒரு உரையாடல், சினேகம். பல பல விஷயங்கள் பேசி விட்டு, "நல்லா எழுதுங்க!, உங்க Tag பாக்கி இருக்கு, ஆராய்ச்சி பணிகள் அதிகமா இருப்பதால் முடியவில்லை!"னு அர்ஜுனா சொல்ல, சொல்ல, எனக்கு "இப்படி ஒரு நல்லவனா?( நீ தான் அர்ஜுனா!)னு ஆச்சர்யம்.

இந்த ஒரு சந்தோஷம் போதுமே வாழ்க்கை முழுதும்! இனி என்ன வேண்டும்?

"ஜப்பான்லேந்து சாக்கிசான் கூப்டாக!
அமேரிக்காலேந்து மைக்கேல் சாக்சன் கூப்டாக!
லண்டன்லேந்து அர்ஜுனா கூப்டாக!!"னு இனி நானும் கோவை சரளா மாதிரி சொல்லிக்கலாம்.

நன்றி!னு ஒரு சொல்லில் உன்னை சிறியவனாக்க விரும்ப வில்லை அர்ஜுனா!

என்றேன்றும் நன்றியுடன்,
அம்பி

Saturday, June 24, 2006

ஆறு, மனமே ஆறு!

சில கேள்விகளுக்கு பதில் தெரியாம நான் பல தடவை முழிச்சதுண்டு. அதுல சில கேள்விகளை இங்கே லிஸ்ட் பண்ணிருக்கேன். பாருங்க,

ஒன்னு: அது என்னங்க, எல்லா பொண்ணுகளுக்கும் டெடி பியர்(கரடி பொம்மை) ரொம்ப பிடிக்குது? ச்ச்ச்சோ ச்வ்வ்வீட்ட்ட்!னு பில்டப் வேற! பேசாம கரடி பொம்மையா பொறந்து இருக்கலாம் போலிருக்கு!

டி.ராஜேந்தர் கூட டெடி பியர் மாதிரி தான் இருக்காரு, எங்கே யாராவது அவர் கன்னத்தை கிள்ளி, ச்ச்ச்சோ ச்வ்வ்வீட்ட்ட்!னு சொல்லி பாருங்களேன்!
"நானா கரடி?
நீ தான் என் எதிரி!
அடிச்சா ஆயிடுவ உதிரி!
ஓடி போ பதறி!"னு அடுக்கு மொழியில குதறி விட மாட்டார் மனுஷன்!

இரண்டு: இப்ப அனேகமாக எல்லா செல்போன் கம்பெனிகளும் நீங்க வாழற வரைக்கும்(Lifetime) இன்கம்மிங்க் பிரீ!னு அறிவிச்சாலும் அறிவிச்சானுங்க, தொல்லை தாங்க முடியலை.

அதுலயும் இந்த CUG (Closed User Group)வசதி வேற இருந்தா அவ்வளவு தான். ஆபிஸ்ல, அடுத்த அடுத்த கேபினுக்கு எல்லாம் போன் போட்டு, சாப்பிட போகலாமா? டீ குடிக்க போகலாமா?னு ஒரே டார்ச்சர் தான். இதுலயும் கேள்ஸ் தான் முண்னணி.
அவங்க குசு குசுனு பேசற விதம் இருக்கே! யப்பா! எதிராளி டென்ஷன் ஆயிடுவான். (ஒன் பிலாக் காப்பி பிளீஸ்!னு ஒரு விளம்பரம் கூட வந்ததே!)

இதுல ஆண்களுக்கு செல்போன்ல பேசவே தெரியாது!

தண்டயார்பேட்டையில தீப்பொறி ஆறுமுகம் (ஒரு செந்தமிழ் பேச்சாளர், காது குடுத்து கேக்க முடியாது) கட்சி மீட்டிங்க் மாதிரி பேசுவாங்க. இப்படி தான் நான் மதுரையில பஸ்ல போகும் போது, பக்கத்துல இருந்த ஒருத்தன் அவன் பொண்ணு பூப்புனித நீராட்டு விழாவுக்கு அவன் சாதி சனத்துக்கு செல் போன்ல முதல் தகவல் சொன்னான். மொத்த பஸ்ஸுக்கும் கேட்டது. பஸ்ஸுல இருந்த சில பேர் அவன் சொல்ல, சொல்ல, அட்ரஸ் எல்லாம் குறிச்சுண்டா.

இதுக்கு நேர்லயே போய் பேசிட்டு வந்துடலாம்.

இந்த செல் போன் இல்லாம நாம வாழவே முடியாதா? அண்ணா யுனிவர்சிட்டியில ஆப்பு அடிச்சது சரி தான்!

மூணு: மெடிக்கல் ரெப்/மார்கெட்டிங்க் துறை என்றாலே டை கட்டிண்டு தான் உலா வரனுமா? நல்ல மே மாத வெயிலுல கூட அவர்கள் டை கட்டிண்டு போறத பாத்தா எனக்கு பாவமா இருக்கும். யாரு இந்த ரூல்ஸ போட்டா?

நாலு: இந்த இந்தி கார பசங்க எல்லாம் மொழுக்குனு மீசைய எடுத்துடுவாங்க. இந்தி பேசனும்னா மீசை வெச்சுக்க கூடாதா? என்னையும், "மீசையை எடுத்துடு"!னு இந்த ரசகுல்லா ரொம்ப டார்ச்சர் குடுத்தது. முடியவே முடியாது! நாங்க எல்லாம் பாரதி வம்சம். மீசையை எடுத்தா எங்க அம்மா ரேஷன் கார்டுலேருந்து என் பெயரை எடுத்துடுவா, என்னை வீட்டுகுள்ளவே விட மாட்டா!னு கண்டிப்பா சொல்லிட்டேன்.

அது மட்டுமா, அசின் ஆத்திரப்படுவா! ஐஸ் குட்டி அழுவா! கோபிகா கோச்சுப்பா! நயன் தாரா நக்கல் விடுவா!னு உங்க எல்லாருக்கும் தெரியாதா என்ன?
(அசினுக்கு ரொம்ப போட்டி கூடிடே போகுது, அதான் ஒரு சேப்டிக்கு கோபிகா, நயன் எல்லாம்).

ஐந்து: இந்த ஜீன்ஸ் பேண்டை பார்த்தாலே துவைக்கனும்னே தோண மாட்டேங்குதே, அது ஏன்? இந்த விஷயுத்துல பேச்சுலர் பசங்களை அடிச்சுக்கவே முடியாது. 2 மாதம், 3 மாதம்னு ஒரே ஜீன்ஸ போட்டு அடிப்பானுங்க பாரு! அதுக்கு வாய் இருந்தா அழுதுடும். நான் லீவுக்கு ஊருக்கு போனா, என் அம்மா கேட்கிற முதல் கேல்வி, "எப்போ ஜீன்ஸை தோய்ச்ச?"


ஆறு: நாம ஸ்கூல் படிக்கும் போது, எல்லாருக்கும் ஒரு ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது லெட்டர் ரைட்டிங்க் சொல்லி தருவாங்க. முதல் லெட்டர் என்ன சொல்லுங்க பார்ப்போம்.
லீவு லெட்டர் தான். "As i'm suffering fever" எழுதாத ஆளுங்களே கிடையாது. இன்னிக்கும் ஆபிஸ்ல லீவு வேணும்னா அதே பொய் தான் சொல்ல வேண்டி இருக்கு. மேக்னி ஷோ படம் பார்க்க போறேன்! அதனால லீவு வேணும்னா சொல்ல முடியும்? ஒரு சேஞ்சுக்கு, ஏன் வேற லெட்டர் எழுத எல்லாம் சொல்லி தர மாட்டேங்கிறாங்க?

இந்த ஆறு மனமே ஆறு! விளையாட்டுக்கு, என்னை இழுத்து விட்ட புண்ணியம் ஒரு
சின்ன பெண்ணை போய் சேருகிறது.

நான் ஏற்கனவே என்னை பத்தி
நச்சுனு நாலு விஷயங்கள் சொல்லிடதுனால, ஆறு கேள்விகளா இங்கு கேட்ருக்கேன்.

ஒரு ஆறு பேரை இழுத்து விடுவோம் முடிவு பண்ணி,

1) சுபா - ஒரு நாளைக்கு ஒரு பிளாக் போடும் பிளாக் உலக இளம் புயல். ( நாளைக்கே இத பத்தி இவங்க போஸ்ட் போட்ருவாங்க, பாருங்க!)

2) Ms.Congeniality - பிளாக் உலகம் கண்டேடுத்த பத்மா சுப்ரமணியம். இவங்க எழுதறதும் ரொம்ப நளினமா இருக்கும்.

3) சச்சின்(கோப்ஸ்) - செம காமெடியா எழுதுவாரு. சமையல் கலையில அறுசுவை நடராஜன்.

4) விஜி - மாசத்துக்கு ஒரே ஒரு போஸ்ட் போடும் குழந்தை. பேசாம இவங்க பிளாக் யுசர் ஐடி, பாஸ்வேர்டை தந்தாங்கனா, நாமளே போஸ்ட் போட்டுடலாம்.(அந்த பொறுப்பை சுபா பார்த்துப்பாங்க)

5) கோப்ஸ் - ரொம்ப நல்ல்ல்லவன். திருப்பூர் பா.சிதம்பரம். என்னையும் குருவா ஏற்று கொண்ட சிஷ்யன்.

6) அர்ஜுனா - ஏடாகூடமா போஸ்ட் போடற ஆளு. இவர் முடி வெட்டிடுண்டதை கூட பிளாக்ல சொல்லிடுவார்.

நீங்கள் உங்களை பத்தி ஆறு விஷயங்கள் சொல்லலாம், என்னை மாதிரி ஆறு கேள்விகள் தான் கேக்கனும்னு இல்லை.

முதலில் இந்த வேதா, ஷ்ரி, 'கொடுமை'உஷா இவங்களை இழுக்கலாம்னு நினைத்தேன். அப்புறம் நான் தர்ம அடி வாங்க வேண்டி இருக்கும். எதுக்கு வம்பு?

இந்த ஆறு பேர் தான் எழுதனும்னு இல்லை. ஆறு கோடியே ஐம்பது லட்சம் தமிழர்களும் எழுதலாம். தப்பில்லை.