Wednesday, July 14, 2010

ஐஸ் ராவணன்

கர்நாடக பிலிம் சேம்பரின் அழுகுனி ஆட்டத்தாலும், என் மேனேஜரின் சதியாலும் படம் வந்த முதல் வாரம் போக முடியலை. இப்பல்லாம் படத்தின் ப்ரிவியூவுக்கே லாப்டாப்புடன் பதிவர்கள் சென்று அந்த டைரக்டருடன் அமர்ந்து விமர்சனம் எழுதி விடுகிறார்கள். போகட்டும்.

கதை என்ன? கருத்து என்ன?னு எல்லாம் நான் நீட்டி முழக்க விரும்பலை. கவனமாக எல்லா விமர்சனங்களையும் தவிர்த்து விட்டு தான் இந்த படத்தை பாத்தேன். படத்தில் ஐஸ் நடித்திருப்பதே தியேட்டருக்கு போன பின்பு தான் தெரியும். :)

பெண்களூரில் வார கடைசியில் தியேட்டருக்கு போனால் தலையில் துண்டு போட்டு கொண்டு தான் திரும்ப வரனும். எனவே கடவாய் பல்லில் தேங்காய் துகள் புகுந்து விட்டதுனு ஆபிசுக்கு லீவு சொல்லி ஐஸ் ராவணன் படம் பாக்க தம்பதி சமேதராய் கிளம்பியாச்சு. நிற்க, அம்மணிக்கு மணி ரத்ன படங்கள் பிடிக்கும்.

முன்புற சீட்டீல் காலை நீட்டாதீர், ஒன்று பெற்றால் ஒளி மயம், அரசன் சோப் ரொம்ப ரொம்ப நல்ல சோப், கோபுரம் மஞ்சள் தூள், பெண் குழந்தைகளை படிக்க வைங்க! என ஒரு விளம்பரமும் போடாமல் படக்குனு படத்தை போட்டுட்டாங்க பாவி பசங்க.

பொதுவாக மணி ரத்னம் படங்களை பார்ப்பதற்கு முன்னால் முந்தைய நாள் ஜான்சன் அன்ட் ஜான்சன் காது குடையும் பட்ஸ் வாங்கி காதை நன்றாக க்ளீன் செய்து கொள்வேன். படத்தில் பக்கோடா விக்கும் துணை நடிகர் முதல் வில்லன் வரை எல்லாருமே "ஏன்? எப்படி? அப்டியா? யாரு..?சொல்லிடு"னு ஏதோ கிச்சனுக்குள் கேசரி திருடி திங்க போனவன் மாதிரியே ஹஸ்கி வாய்ஸில் பேசுவார்கள். "வானம் பொழிகிறது, பூமி விளைகிறது"னு எழுபது டெசிபலில் வசனம் கேட்டு வளந்த நம்ம கூட்டத்துக்கு இதெல்லாம் ஒத்து வராது. புதுசா நாலு எவரெடி(சிவப்பு) பாட்டரி போட்ட ஒரு டார்ச் லைட்டும் ரொம்ப அவசியம். மொத்த படத்தையும் நாப்பது வாட்ஸ் பல்பு வெளிச்சதில தான் அவரு படமாக்கி இருப்பாரு. இருட்டா இருக்கற எடத்துல நாம டார்ச் அடிச்சு பாத்துக்கலாம்.

ஆனா இதுகெல்லாம் கொஞ்சமும் இடம் தராமல் இந்த படத்தில் ஐஸ் வராத ப்ரேம் கூட பளிச்சுனு இருக்கு. ஐஸை அறிமுகப்படுத்தும் காட்சியில் ஒரு பாட்டு கூட வைக்க தெரியலை மணிக்கு. அட, விக்ரமுக்காவது
" நான் தான்டா வீரா,
பறக்குது பாரு புறா!
பாத்து தொலச்சியா சுரா?"னு ஒரு ஒப்பனிங்க் சாங்க் வைக்க வேண்டாமோ..?

மனிதர்களை அப்படியே காட்ட முயற்சி செய்திருக்கிறார்கள். ஒரு பில்டப் இல்லை, இவன் தான் வில்லன், இவன் தான் ஹீரோன்னு எல்லாம் முத்திரை குத்தலை. விக்ரம் ஏன் அடிக்கடி வாயல் கொட்டு அடிக்கிறார்?னு புரியலை. ஆனால் அவரது உடல்மொழிகள் அற்புதம். நாகரீகம் கருதி மிக கவனமாக பல வட்டார (கெட்ட) வார்த்தைகளை தவிர்த்து அல்லது எடிட் செய்து இருக்கிறார்கள்.

மலையில் இருந்து ஐஸ் கீழே விழும் காட்சியை வைரமுத்துவுக்கு போட்டு காட்டி விட்டு தான் உசுரே போகுதே! பாட்டை எழுதி வாங்கி இருப்பார்கள்னு உறுதியாக சொல்கிறேன். கள்வரே பாடலில் ஐஸை சுத்தி எதுக்கு ஆறு கண்ணாடி வைத்து படமாக்கினார்கள்னு தெரியலை. படத்தின் பல முடிவுகளை பார்வையாளர்களிடமே விட்டு விடுகிறார். "என்ன தைரியம் இருந்தா என் கண் முன்னாடியே வீராவ சுடுவீங்க?னு வீட்டுக்கு போயி, ஐஸ் ப்ருத்வியை கும்மு கும்முனு கும்முவாரா..? அல்லது ஐஸே ஒரு முடிவுக்கு வந்து ப்ரித்வியை டைவர்ஸ் செய்து விட்டு "ஓ! ஒரு தென்றல் புயலாகி வருதே!னு பேக்ரவுண்டில் சாங்க் ஒலிக்க இன்ஸ்டென்ட் பெண்ணீயவாதியாக மாறி நடந்து போய்கிட்டே இருப்பாரா?னு எனக்கு ஒரே மண்ட குடச்சல். மணிக்கு மெயில் அனுப்பனும்.

வசனங்கள் ஒகேன்னு சொல்ல தோணினாலும் ஷார்ப்பா இல்லை. வட்டார வழக்கு என்றெல்லாம் சொல்லி தப்பிக்க முடியாது. எங்கூரு பாசை எங்களுக்கு தெரியும்லே!

தூத்துகுடி இன்ஸ்பெக்டர் பெயர் ஹேமந்த் என்பது ரொம்பவே ஓவர். என்னிடம் கேட்டு இருந்தால் ஒரு டஜன் பெயர்கள் சொல்லி இருப்பேன். வழக்கமாக மணி படங்களில் வரும் கல்யாண சீன் பாடல்களில் ஏதாவது ஒரு பாட்டி அபிநயம் பிடிப்பார். ப்ரியா மணி கல்யாண சீன் மீண்டும் யாரோ யாரோடி நினைவு படுத்துகிறது. 'நித்தி புகழ்' ரஞ்சிதா அந்த பாடலில் ஏதோ ரேணிகுன்டா ரெட்டி வீட்டுப் பெண் போல காசு மாலை எல்லாம் போட்டுக் கொண்டு வருவதாக காட்டுகிறார்கள். இதையும் சன் டிவி நிஜம் நிகழ்ச்சியில் புலனாய்வு செய்வார்கள் என நம்புகிறேன்.


கார்த்திக், பிரபு இருவரையும் இதே மணி தான் அக்னி நட்சத்திரத்தில் இயக்கினார். இப்பொழுதும் அதே மணி தான் இயக்கி இருக்கிறார். தம்மை அடிக்கடி புதுப்பித்துக் கொள்ளாதவர்கள் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறார்கள். இளமையும், காலமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.

இன்னமும் அலை பாயுதே போல இல்லை, அக்னி நட்சத்திரம் போல இல்லைன்னு எத்தனை காலம் நாம் சொல்லி கொண்டிருக்க போகிறோம்னு தெரியலை. அதை போலவே இந்த படம் இருந்தால் தான் தப்பு. எனக்கு படம் பிடித்து இருந்தது. ஒரு வேளை நான் அறிவு ஜீவியாகி விட்டேனோன்னு பயமாகவும் உள்ளது.

பி.கு: எனக்கென்னவோ மணி படத்தின் பெயரை ஐஸ் ராவணன் என வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என தோன்றுகிறது.

Tuesday, July 06, 2010

நமீதாவுக்கு மிகவும் பிடித்த பாடல்

என்னிடம் ஒரு நல்ல (கெட்ட?) பழக்கம். காலையில் எந்த பாடலை முணுமுணுக்க ஆரம்பிக்கறேனோ அதே பாடல் இரவு தூங்க போகும் வரைக்கும் என்னுடன் பயணிக்கும். இதில் இன்னும் ஒரு படி மேலே போயி, பாடலுடன் அதன் பின்ணனி இசை எல்லாம் வேறு வந்து தொலைக்கும். உதாரணமாக

மேகம் கருக்குது! (டக்கு சிக்கு டக்கு சிக்கு)

மின்னல் சிரிக்குது (டக்கு சிக்கு டக்கு சிக்கு).


இப்படிதான் ஒரு நாள் "எம் பேரு மீனாக்குமாரி" வந்து விட மேலிடம் நெற்றிக் கண்ணை திறந்ததில் நாலு நாளைக்கு வலுக்கட்டயமாக "வினாயகனே வினை தீர்ப்பவனே" என சீர்காழி மாதிரி முணுமுணுக்க வேண்டியதா போச்சு.

நிற்க, நேற்று ஆபிஸ் கிளம்பும் வரை ஒரு பாடலும் வரவில்லை. இதற்காக நானும் ஒன்னும் பிரயத்தனப்படுவதில்லை. ஆபிஸ் போகிற வழியில் யாரோ ஒரு புண்யவான் தன் செல்பேசியில் ரிங்க் டோனாக கர்ணன் படத்தில் வரும் "கண்கள் எங்கே? நெஞ்சமும் எங்கே? என்ற பி.சுசீலா அம்மா பாடிய பாடலை வைத்திருக்க இதோ இன்னிக்கு வரைக்கும் இந்த பாடல் தான் ஓடிக் கொண்டு இருக்கிறது. கவியரசு கண்ணதாசன் அவர்கள் கை வண்ணத்தில் இதை விட எளிமையாக ஒரு பெண்ணின் மனோபாவத்தை சொல்ல கூடிய பாடல் உண்டா? என சந்தேகமே.

இந்த பாடல் முழுக்க பிஜிஎம்மில் "ஆ ஆ" என ஒரு கோரஸ் ஒரே ராகத்தில் ஓடிக் கொண்டே இருக்கும். நாமே ஏதோ அரண்மனை அந்தபுரத்தில்(ஆசை தான்) உலவுவது போல தோன்ற வைக்கும்.

முதல் சரணத்தில் வரும்

"மணி கொண்ட கரம் ஒன்று அனல் கொண்டு வெடிக்கும்" - இதுக்கு என்ன அர்த்தம்? என் சந்தேகத்தை தீர்த்து வைப்பவர்களுக்கு என்றும் தன்யனாக இருப்பேன்னு சொல்ல வந்தேன். தங்கம் விக்கற விலையில ஆயிரம் பொற்காசு எல்லாம் பாண்டிய மன்னனுக்கே டூ மச்சோ மச்சு.

ரெண்டாம் சரணத்தில் வரும்
"கொடை கொண்ட மத யானை உயிர்க் கொண்டு நடந்தான்" - என்ன ஒரு உவமை.

யானை நின்றாலே அழகு, அதுவும் நடந்து வந்தால் இன்னும் அழகு. இதே வரிகளை கொஞ்சம் தூசி தட்டி
"தேக்கு மரம் உடலை தந்தது,
சின்ன யானை நடையை தந்தது"னு எம்ஜியாருக்கு பாடி விட்டார் ஒரு கவிஞர்(யார்னு தெரியுமா?).

சமீபத்தில் கவிஞர் தாமரை கூட காக்க காக்க படத்தில்

"சந்தியா கால மேகங்கள் வானில் ஊர்வலம் போகுதே,
பார்க்கையில் ஏனோ உந்தன் நடையின் சாயலே தோணுதே" என எழுதி இருந்தார்.

மறுபடியும் கர்ணன் பாடலுக்கு வருவோம். இந்த இடத்தில் கொடையா? குடையா..? குடையுடன் கூடிய யானை நடந்து வருவதை பார்த்ததுண்டா? ஒரு வேளை கர்ணன் என்பதால் இங்கே கொடை என்ற சொல் வந்ததா..? யாராவது கொஞ்சம் விம் பார் போட்டு விளக்குங்களேன்.

ஆபிஸ் மீட்டிங்குல கூட இதே சந்தேகம் தான். எவ்ரி திங்க் க்ளியர்?னு கேட்ட டாமேஜரிடம் இந்த டவுட்டை எல்லாமா கேக்க முடியும்? :)

கொடை கொண்ட மத யானை எப்படி நடந்து இருக்கும்?னு வீட்டில் நடந்து பாக்கும் போது தானா என் ஜூனியர் வரனும்? பார்த்து விட்டு கெக்கபிக்கெவென சிரித்து அவன் அம்மாவ வேற அங்கு கூட்டி வந்து விட்டான். இது போதாதா?

"என்னங்க, குழந்தை சாப்ட படுத்தறான், கொஞ்சம் சீக்ரம் வந்து அந்த நடை நடந்து காட்டுங்க" என தனக்கு கிடைத்த பெனால்டி கார்னரில் கோல் போட்டுக் கொண்டிருக்கிறார் தங்க்ஸ். ஆக கொடை கொண்ட மத யானை இப்பொழுது கோவில் யானையாக மாறி வீட்டில் சலாம் போட்டுக் கொண்டிருக்கிறது.

பி.கு: தலைப்பு சும்மா லுலுவாயிக்கு. :)