Friday, August 13, 2010

மனீஷாவும் சோன் பப்படியும்

சில பதார்த்தங்களுக்கு ஏன் இந்த பெயர் வைத்தார்கள்? என ரூம் போட்டு ஆராய்ச்சி செய்வதை விட கையில் கிடைத்தால் லபக்குனு முழுங்கி விட தோணும். சோன் பப்டியும் அப்படி தான். மாலை நேரங்களில் தெருவில் டிங்க் டிங்க்னு மணி அடித்து கொண்டு தள்ளு வண்டியில் ஒரு கண்ணாடி ஜாடியில் வெள்ளை வெளேர்னு இருக்கும். அந்த ஜாடிக்குள் லாவகமா கையை விட்டு ஒரு கைப்பிடி சோ-பாவை ஒரு பேப்பரில் போட்டு தருவார்.

எனக்கு தெரிந்து சோ-பாவை யாரும் தீபாவளிக்கோ, பொங்கலுக்கோ வீட்டில் செய்தது இல்லை என நினைக்கிறேன். சோன்பப்படி செய்வது எப்படி?னு எந்த பதிவும் எனக்கு தெரிந்தவரை தமிழில் வந்ததில்லை. கூகிளில் தேடினால் ஆங்கில பதிவுகள் காண கிடைக்கின்றன. ராஜஸ்தானிகள் - லாலா மிட்டாய் கடை வைத்திருப்பவர்கள் தான் செய்கிறார்கள். ஹால்டிராம்ஸ் காரர்கள் கட்டி கட்டியாக அழகா பீஸாக பாக் செய்து பேக்கரிகளில் வைத்திருக்கிறார்கள்.

யாராவது தங்கள் வீட்டுக்கு என்னை சாப்பிட கூப்பிட்டால் நான் வாங்குவது கால் கிலோ சோ-பா தான். ஒரு கட்டத்தில் நான் அந்த பேக்கரிக்கு போனாலே கடைகாரன் சோ-பாவை எடுத்து பேக் பண்ண ஆரம்பித்து விட்டான். தெரிந்த சிலர் வீட்டுக்கு ரெண்டாம் தரம் போன போது, "என்ன அம்பி, சோன் பப்டியா?" என அவர்களே கேட்க ஆரம்பித்து விட்டார்கள். :)

கேசரியெல்லாம் கிண்டி டிபன் பாக்ஸில் போட்டு கொண்டு போக முடியாது. சூடு ஆறி விடும் என்பது மட்டுமல்ல மத்த ஸ்வீட்ஸ் எல்லாம் ரொம்பவே காஸ்ட்லி, மேலும் சோ-பா பாக்கெட்டை நம் கண் முன்னாடியே பிரித்து நமக்கும் ஒரு பீஸ் தருவார்கள். ஹிஹி.

ஆத்தா நான் பாசாயிட்டேன்!னு ஹிந்தியில் கத்தி கொண்டே வரும் அமிதாப், ஜிதேந்திரா, சாருகான், சல்மான்கான்களுக்கு அவர்கள் அம்மா மஞ்ச கலர் லட்டுவோ அல்லது சோன் பப்டியையோ தான் ஊட்டுவார்கள். கவிஞர் வாலிக்கும் என்னை மாதிரி சோன் பப்டி பிடிக்கும் போல. இந்தியன் படத்தில் 'மாயா மச்சீந்திரா' என ஆரம்பிக்கும் பாடலில் சோன் பப்படி! என அழுத்தம் திருத்தமாக எஸ்.பி.பி குரலில் மனீஷா கொய்ராலாவை வர்ணித்து இருப்பார். அந்த வரிக்கு தியேட்டரில் நான் மட்டும் கை தட்டினேன், மனீஷாவுக்காக இல்லை சோ-பாவுக்காக! என நான் சத்தியம் செய்தாலும் நீங்கள் நம்ப போவதில்லை.

சோன் பப்டிக்கு விக்கி பக்கங்கள் எல்லாம் இருக்கு. என்ன தான் சோ-பா செய்வது எப்படின்னு பல ரெஸிப்பிகள் வந்தாலும் லாலா மிட்டாய்காரகளின் ரெஸிபி இன்னமும் ரகசியமா இருக்குனு கேள்விப்பட்டேன்.

இங்கு பெண்களுர் தெருக்களில் சோ-பா வண்டி எல்லாம் வருவதில்லை. சென்னையிலும் அதிகம் பாத்ததில்லை. ஒரு வேளை சில ஏரியாக்களில் வரலாம். இன்றைய விலைவாசியில், பாவம் இந்த சோன் பப்டிகாரர்கள் எப்படி தாக்கு பிடிப்பார்களோ..? ரேஷன் கார்டு இருந்தா தானே ஒரு ரூவாய்க்கு அரிசி கிடைக்கும்..? இவர்களுக்கும் ரேஷன் கார்டு இருக்குமா? ம்ம், கடவுள் ஒவ்வொரு சோன் பப்டி பாக்கெட்டிலும் ஒருத்தர் பெயரை எழுதி வைத்திருப்பான் என்ற நம்பிக்கை தான் இவர்களை வழி நடத்திக் கொண்டிருக்கிறது என நினைக்கிறேன்.

Friday, August 06, 2010

கதை கட்றாங்க பா

சாட்டிலைட் டிவிகளும் எப்.எம்களும் தமிழகத்தில் வராத காலத்தில் ரேடியோ தான் நம் மக்களுக்கு பொழுதுபோக்கு. அதில் நாடகம் எல்லாம் கூட ஒலிபரப்புவார்கள். ஒரு நாலு பேர் சுத்தி உக்காந்து கதாபாத்ரமாகவே மாறி டயலாக் பேசுவார்கள். ரொம்ப சுவாரசியமா இருக்கும். அதில் வரும் குரல்கள் நமக்கு ரொம்பவே பரிச்சயமா இருக்கும். ஏன்னா ராஜ ராஜ சோழனுக்கு குரல் குடுத்த அதே ஆள் தான் ஒட்டக்கூத்தருக்கும் குரல் குடுப்பார். எபப்டி ஜோதிகாவுக்கு குரல் குடுத்த அதே அம்மணி (சவிதா) சிம்ரனுக்கும் டப்பிங்க் குடுக்கறாரே அதே மாதிரி.

இப்படி உன்னிப்பாக கேட்டு வளந்ததாலோ என்னவோ பள்ளியில் படிக்கும்போதும் என்னையறியாமலே ஒரு கதை சொல்லியாக திகழ்ந்து இருக்கிறேன். பேச்சு போட்டிக்கு போய், கதை சொல்லும் போட்டியில் சும்மா கதை சொல்லி, நவராத்திரிக்கு வெத்தலை பாக்குடன் அரைத்த சட்னியை வழிச்சு போட உதவும் பேசின் கிண்ணங்களை பரிசாக வாங்கியதும் உண்டு. பேச்சு போட்டியில் மண்ணை கவ்விய விவரம் இங்கு தேவையில்லை.

அந்த அனுபவம் எல்லாம் இப்போ என் ஜூனியர் சாப்பிட அடம் பிடிக்கும் போது கைகுடுக்கிறது. நித்தமும் எங்க வீட்டில், அனுமார் கடல் தாண்டி இலங்கை சென்று சீதைக்கு கனையாழி குடுத்து விட்டு திரும்புகிறார். அனுமாருக்கே இப்படி தினமும் இலங்கை செல்வது போர் அடித்தாலும் என் மகனுக்கு மட்டும் போரடிப்பதில்லை. சமயத்தில் அனுமார் பொம்மையை தூக்கி கொண்டு சொய்ய்யிங்க்க்னு நான் ஸ்பெஷல் எபஃக்ட் எல்லாம் குடுத்து கொண்டு பறக்க வேண்டி இருக்கு. குழந்தைகள் கதை கேட்கும் போது அந்த உலகத்துக்கே சென்று விடுகிறார்கள். அதனால் தான அவர்களுக்கு அலுக்க வில்லை போலும்.

இன்னும் மொழி, அதன் எழுத்துக்கள், இலக்கணமெல்லாம் அறியப் பெறாத வயதில் (3 முதல் 6 வயது வரை) கதைகளின் மூலம் பயிற்றுவித்தல் ஒரு சிறந்த முறை என அறிகிறேன். இப்படி கதை கேட்டு வளந்த குழந்தைகளின் கற்பனை திறனும், படைப்பு திறனும் அபாரமாக இருக்குமாம். (அப்படியா..?#தன்னடக்கமாம்)..

மான்டிசரி முறையிலும் இத்தகைய கதை சொல்லல் முறை உள்ளதாமே. யாராவது வந்து சாட்சி சொல்லுங்க பாப்போம்.

பதிவர் விதூஷ் Scheme என்ற அமைப்பின் மூலம் ஒரு கதை சொல்லியாக திகழ்ந்து வருகிறார் என ஸ்ரீதர் நாராயண் பதிவின் மூலம் அறிந்தேன். அவருக்கு என் மனமர்ந்த வாழ்த்துக்கள்.

இதைப் போன்ற முயற்சிகள் ரொம்பவே அரிதாக நடைபெற்று வருகிறது. யாருக்கும் நேரம் இல்லை, அதை விட பொறுமை இல்லை. பெண்கள் இதழில் "என் குழந்தைகளுக்கு முள்ளங்கினாலே அலர்ஜி. ஆனா அவங்களுக்கு தெரியாம முள்ளங்கி போண்டா செஞ்சு குடுத்தேன், மிகவும் ப்ரியமாக சாப்பிட்டார்கள். என்னவர் கூட (எப்போதும் போல) என்ன? ஏது?ன்னு கேக்காமயே சாப்பிட்டார்" என வாசகர் கடிதம் எழுதும் மாதர் சங்க பெண்மணிகள் இதை மாதிரி அக்கம்பக்கம் இருக்கும் குழந்தைகளுக்கு ஒரு கதை சொல்லியாக இருந்து அந்த அனுபவத்தையும் கடிதமாக எழுதலாம்.

பெண்களூரில் இதை மாதிரி கதை சொல்லியாக இருப்பதில் சில நடைமுறை சிக்கல்கள் உண்டு. ஒரே அப்பார்ட்மெண்டில் ஆறு வங்காளிகள், நாலு மல்லு, மூனு தமிழர்கள், கொசுறாக சில கன்னடர்கள், மராத்திகள் என இருப்பார்கள். என்ன தான் 'ஏக் காவ் மேன்' ஹிந்தியை மைய மொழியாக கொண்டாலும் தாய் மொழியில் வரும் திருப்தி வேறு எதிலும் வருவதில்லை. மேலும் இங்குள்ள குழந்தைகள் இங்க்லிஸில் பொளந்து கட்டுவார்கள். நாம் தட்டு தடுமாறி ஆங்கிலத்தில் கதை சொன்னாலும் குழந்தைகள் கொட்டாவி விடும் வாய்ப்புகள் அதிகம். "டோன்ட் போர் அஸ் அங்கிள்!னு நமக்கு ஆப்படித்து விட சாத்தியங்கள் இருப்பதால் நான் இந்த முயற்சியில் ஈடுபட வில்லை.