Thursday, February 18, 2010

My Name is Ambi

சரியாக நான்கு வருடங்களுக்கு முன்பு இதே நாளில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. அன்று உலகில் வழக்கத்துக்கு மாறாக பல செயல்கள் நடந்தது. தொடு வானில் விடிவெள்ளிக்கு நிகராக இன்னொரு நட்சத்திரம் ஒளிர்வதை கண்டு ஜெருசலேம் நகரத்து மக்கள் ஒன்று கூடி அதிசயித்தனர். அட்லாண்டிக் பெருக்கடலில் வழக்கத்துக்கு மாறாக பெரும் அலைகள் எழுந்ததை அமெரிக்க மீனவர்கள் இன்றளவும் நினைவு கூர்கின்றனர். நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயர் சதுக்கத்தில் பெரும் திரளான மக்கள் கூடி விவாதித்தன்ர். லன்டன் நகரத்து வீதிகளிலும் இதே நிலை தான்.

ரஷ்யா, அமெரிக்கா, சைனா, சப்பான், பிரான்ஸ் போன்ற வல்லரசு நாடுகள் தம்முள் இருக்கும் ஈகோவை மறந்து உடனே இந்த நிகழ்வை ஐ நா சபையில் கூடி விவாதித்தன. பிபிசி நிருபர்களுக்கு அன்று இருபத்தி நாலு மணி நேரங்கள் போதவில்லை. உலகெங்கிலும் இந்த நிகழ்வை பற்றிய செய்திகள் வந்து குவிந்த வண்ணம் இருந்தன.

மாசி மாதமென்றாலும் திடீரென கரும்மேகங்கள் சூழ்ந்து மழை வருஷித்தது. ஏதேனும் அதிசயம் நிகழ இருக்கிறதா? என கேரளாவில் பல பணிக்கர்கள் ப்ரச்னம் வைத்து பார்த்தனர். பெரும் தந்தங்களை உடைய ஆண் யானைகள் பெருங் குரலில் பிளிறின.

சரி, அப்படி என்ன நிகழ்ந்தது..?

அதற்கு முன்னால் இந்த சுட்டியை பார்த்து விடுங்கள். பக்கத்தில் மறக்காமல் வேர்க்கடலை பாக்கெட் வைத்துக் கொள்ளவும், (இந்த பக்கத்தில் உள்ள வீடியோ லோட் ஆக நேரமாகும், அதுவரைக்கும் கடலையை...)

சுட்டி அனுப்பிய தானைத் தலைவி ராப்புக்கு மிகவும் நன்றி.




ஹிஹி, நான் பிளாக் ஆரம்பித்து இன்றோடு நான்கு வருடங்கள் ஆகி விட்டது. அது தான் அந்த நிகழ்வு. :)

உங்கள் தற்போதைய மன நிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நாலு வரியில் இதை சொல்லி, கமண்டு போட்டவர்களுக்கும், கமண்டு போடாமல் முக்காடு போட்டு படிப்பவர்களுக்கும் நன்றினு சொன்னா சப்புனு இருக்காது? அதான் இவ்ளோ பில்டப்.

இதே சோலியை தான் கரண் ஜோக்கரும்(எ-பிழை இல்லை), ஷாருக் கானும் செய்திருக்கிறார்கள். போதா குறைக்கு சிவசேனையின் பால் தாக்ரே கையில் பசை வாளியுடன் மும்பை நகர வீதி சுவர்களில் போஸ்டர் ஒட்டாத குறையா இந்த படத்துக்கு அரும்பணியாற்றி இருக்கிறார். அன்னாருக்கு எங்கள் மனமார்ந்த நன்றினு படம் ஆரம்பிக்கும் போது ஒரு ஸ்லைடு காண்பித்து இருக்கலாம். மற்றபடி இந்த படத்தை விமர்சனம் செய்து உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்ப வில்லை.

இந்த நாலு வருடங்களில் நீங்கள் காட்டிய ஆதரவுக்கு மிகவும் நன்றி.

Tuesday, February 09, 2010

கலைமகள்

பொதுவா சில பத்திரிகைகள் பெயரை கேட்டாலே நமக்குள் ஒரு மரியாதை உருவாகுவதை தவிர்க்க இயலாது. கல்கி, கலைமகள் போன்ற சஞ்சிகைகள் தனகென்று ஒரு தரம், வாசகர் வட்டம் வைத்துள்ளது. பத்திரிகை தர்மத்தை ஒரு போதும் விட்டு குடுக்காமல், சீப்பான மார்கெட்டிங்க் டெக்னிக் எதுவும் பண்ண தெரியாமல் காமராஜர் காலத்து காங்கிரஸ் போல இன்னமும் கம்பீரமாக வெளிவந்து கொண்டிருக்கிறது என சொன்னால் அது மிகையல்ல.

ஒரிரு முறை பள்ளி பருவத்தில் கலைமகள் வாசித்து அதன் தரத்துக்கு தாக்கு பிடிக்க முடியாமல் விழி பிதுங்கியதுண்டு. நிறைய தமிழ்சொற்கள், மொழி ஆளுமை எல்லாம் வசப்பட(இன்னும் இல்லை) நல்ல பயிற்சி களமாக திகழ்கிறது.

கலைமகளில் இணைய ஜர்னலிஸ்ட்டுகளான( நாமே சொல்லிக்க வேண்டியது தான்) நம்மை பத்தி, நமது பதிவுலகத்தை பத்தி ஒரு கட்டுரை எழுத போறோம். சுருக்கமாக ஒரு குறிப்பு எழுதி, சின்னதா ஒரு போட்டோவும் அனுப்பவும்னு மெயில் வந்ததும் நான் செய்தது:


1) நம்மை வெச்சு யாரும் காமெடி கீமடி பண்றாங்களோ?னு முதலில் இமெயில் முகவரியை செக் செய்து கொண்டேன்.


2) போட்டோ எடுக்க பி.சி ஸ்ரீராம் ப்ரீயா இருக்காரா?னு கேட்டு பாத்தேன். பிசியாம். சரி விடுங்க, அவருக்கு யோகம் அவ்ளோ தான்.


பத்திரிகையில் போட்டோ எல்லாம் வரப்போகுது, எப்படி போஸ் குடுக்கலாம்? ஒரு பேனாவை மூக்கினுள் விட்ட படியே (ஆழ்ந்து யோசிக்கறாங்களாம்) ஒரு ஷாட் எடுக்கலாமா? இல்லாட்டி செல்போன் பேசியபடி ஒரு ஷாட் எடுக்கலாமா? அல்லது தலைக்கு பின்னாடி ஒரு ஜீரோ வாட் பல்ப் மட்டும் எரிய விட்டு, விட்டத்தை பாத்தபடி ஒரு போஸ் குடுக்கலாமா?னு ஒரே யோசனை.

முகத்துக்கு ஒரு ப்ளீச் செய்து போட்டோ எடுத்தால் நன்றாக இருக்கும்னு ஆபிசில் உள்ள பெங்காலி யோசனை சொன்னது. "பேஷியல் செய்து கொண்டால் ஒரு மஜாஜ் ப்ரீ" - புதுசா ஒரு மலபார் பியூட்டி பார்லர் நம்ம ஏரியாவுல கடை தொறந்ருக்கான். கடையும் கண்ணுக்கு குளிர்ச்சியா, நல்லா காத்தோட்டமா இருக்கு. நான் ஒரு நடை போயிட்டு வரேன்னு நைச்சியமாய் நான் சொன்னதையெல்லாம் மேலிடம் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. கேரளா என்றவுடன் பார்ட்டி உஷார் ஆகி விட்டது.


பின் ஒரு முடிவுக்கு வந்து எந்த போட்டோவை தங்கமணிக்கு முதன்முதலில் அனுப்பினேனோ அதே போட்டோவையே கொஞ்சம் டச்சப் பண்ணி அனுப்பி வைத்தேன். (இங்குள்ள படம் பிடிஎப் கோப்பிலிருந்து எடுத்தது, எனவே படத்தின் குவாலிட்டி கம்மியா தான் இருக்கும், ஆகவே யாரும் நமுட்டு சிரிப்பு சிரிக்க வேண்டாம்.)



வகுப்பறை ஆசான் சுப்பையா வாத்தியார், துளசி டீச்சர், ரிஷான் ஷெரீப் போன்ற பெரிய பெரிய்ய ப்ரைம் டைம் ஜாம்பவான் வித்வான்களுக்கு இடையில் கமர்ஷியல் ப்ரேக் போல என் பதிவு பற்றியும், என் உள்ளங்கவர் கேசரி பற்றியும் கட்டுரை வந்துள்ளது. முழு கட்டுரையையும் வாசிக்க சொந்த காசிலோ, ஓசியிலோ இந்த மாத கலைமகள் வாங்கி படியுங்கள்.


அடுத்த மாத இதழில் இன்னும் பெரிய பெரிய்ய ஆட்கள் பத்தி எல்லாம் வரப் போகுது. அந்த சஞ்சிகை ஆசிரியருக்கு என் மனமார்ந்த நன்றிகள். இந்த கட்டுரை தொடர்பாக பாராட்டு கடிதம் ஏதும் தப்பித் தவ்றி வந்தால் உங்களுக்கும் தெரிவிக்கிறேன்.