Tuesday, July 22, 2008

அமுதுக்கும் தமிழ் என்று பெயர்!

மற்ற டிவிகளை ஒப்பிடும் போது விஜய் டிவியில் பல உருப்படியான, சிந்திக்க வைக்கும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறார்கள். அனேகமாக வாரத்தில் ஒரு நாலு நாட்கள் யாராவது சோபாவில் உட்கார்ந்து கொண்டு பேசுகிறார்கள். இதை மாதிரி டாக் ஷோ நடத்த ரொம்பவே தில்லு வேணும்.

  1. முதலில் சரியான நிகழ்ச்சி நடத்துனர்(Anchor) வேணும்.
  2. மக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் நிகழ்ச்சியை வடிவமைக்க தெரியனும்.
  3. மூணாவது, நல்ல ஸ்டூடியோ தளம் அமையனும். ஒரு சில டிவிகள் வாய்கால் ஓரங்களில் எல்லாம் பேட்டி எடுக்கிறார்கள். பேக்ரவுண்டில் ஒருத்தர் சொம்பை தூக்கி கொண்டு நமக்கு தரிசனம் தருகிறார்.

இல்லாட்டி பொதிகையில் ஒரு காலத்தில் வந்த செவ்வாய் கிழமை நாடகம் மாதிரி ஆகி விடும். :)

நெல்லை கண்ணனை குழு தலைவராக கொண்டு "தமிழ் எங்கள் பேச்சு!" என ஒரு நிகழ்ச்சி தினமும் இரவு பத்து மணிக்கு நடந்து வருகிறது. பல்வேறு கட்டங்களாக தமிழகத்தின் தமிழ் ஆர்வலர்களை வடிகட்டி இப்போ நிகழ்ச்சி களை கட்ட தொடங்கி விட்டது. வெகு காலத்துக்கு பிறகு இனிய தமிழை அதுவும் தனியார் டிவியில் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. நெல்லை கண்ணன் அவர்களின் ஆழ்ந்த தமிழறிவு, தங்குதடையற்ற தமிழ் பேச்சு, திருகுறளாகட்டும், அக/புற நானூறு, சிலப்பதிகாரம், என வெள்ளம் போல பாய்ந்து வருகிறது.

திரு.கண்ணன் நாவில் பாரதியும், பாவேந்தரும் ரவுண்டு கட்டி வருகிறார்கள். போட்டியில் பங்கு பெறுபவர்களும் சளைத்தவர்களாக தெரியவில்லை. கவிதை சுற்று, எதுகை மோனை சுற்று என தெள்ளமுதாய் தமிழ் பிரவாகமெடுத்து வருகிறது. ஐந்து நிமிடங்களுக்கு மேல் இப்போதெல்லாம் எந்தவொரு நிகழ்ச்சியையும் பாக்க முடியாத நிலையில், இது போன்ற நிகழ்ச்சிகள் அத்தி பூத்தாற் போல வருவது மனதுக்கு இதமாக உள்ளது.

பல புதிய தமிழ் சொற்களின் அறிமுகம் கிடைத்தது. அவர்கள் முன் இலக்கியமோ, பின் இலக்கியமோ என்னை மாதிரி பட்ஜட் பத்மநாபனுக்கும் புரியும்படி பேசினார்கள்! எனபது இங்கு குறிப்பிடத்தக்க விஷயம். அதுவும் தமிழ்மணத்துக்கு ஒவ்வாத சொற்கள் அறவே இல்லாமல் பின்னிலக்கியமும் பேசபடுகிறது. ஒரு வேளை *** தான் பின்னிலக்கியமோ? என்ற எனது மாயை விலகியது. நிகழ்ச்சியை வெகு சுவாரசியமாக சின்ன சின்ன தகவல்களுடன் நெல்லை கண்ணன் கொண்டு செல்லும் அழகே அழகு. நிறை குடம் என்றும் தளும்புவதில்லை.

விஜய் டிவியின் கிரியேட்டிவ் டீமுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். நேரம் இருந்தால் நீங்களும் கண்டு களியுங்கள்.

Friday, July 18, 2008

கோபிகாவுக்கு கல்யாணமாம்!

அம்பியை எப்படி தான் மறக்க போறேனோ?


அம்பியவே நினைச்சுட்டு இருக்காத! என்ன புரிஞ்சதா?


வெட்டுப்படுவது கேக் மட்டுமல்ல...

பல கோடி இதயங்களும் தான்...


எங்கிருந்தாலும் வாழ்க!

ஸ்டிக்கர் பொட்டுடன் வாழ்க!
டிஸ்கி: கோபிகா போலவே, எனக்கும் துக்கம் தொண்டைய அடைக்கறது. அதனால் இந்த வாரம் ஒன்னும் எழுத முடியலை.
பி.கு: தங்கமணி இந்த பதிவ பாத்து, எதிர்வினை பதிவு போட்டா இப்படி தான் இருக்கும். ஹிஹி.

Friday, July 11, 2008

பக்கத்து சீட்டுல பிளாகர் உட்காந்தா....-II

ஏற்கனவே இந்த பதிவின் மூலம் உங்களுக்கு நன்கு அறிமுகமான ஜம்புலிங்கம், வெள்ளிகிழமையும் அதுவுமா அவருக்கு ஏற்பட்ட சில சந்தேகங்களை எனக்கு தனிமடலில் கேட்டுள்ளார். எனக்கும் பதிவிட ஒரு விஷயம் (நல்லா பாருங்கண்ணா! மேட்டர்னு எழுதலை!) கிடைத்தது.
மெயில் எல்லாம் சரிபடாதுன்னு சாட்டுல வர சொன்னேன்.

அம்பி, நானும் ஒரு வலைப்பூ தொடங்கறத்துக்கு முன்னால சில சந்தேகங்கள் இருக்கு.

வெரிகுட், கேளுங்க ஜம்பு.

என் அனுபவத்தையெல்லாம் கூட பதிவா போடலாம் தானே?

யூ மீன் சுற்றுலா, வேலை சம்பந்தமாவா?

ஆமா! அதே தான்!

(நல்ல வேளை, நான் வேற நினைச்சேன்) ஓ! தாராளமா பதிவிடுங்க. என்ன எழுதினாலும், நீங்க ஒரு இணைய ஜர்னலிஸ்ட், அத மனசுல வெச்சுட்டு எழுதுங்க.

என்னாது இணைய ஜர்னலிஸ்ட்டா?

இத பாருங்க ஜம்பு, முதல்ல உங்கள நீங்க நம்பனும், அப்ப தான் மத்தவங்க நம்புவாங்க. சரியா? உங்களுக்கு பிடிச்ச நடிகர் யாரு?

ஜிம் கேரி.

நல்லதா போச்சு! ஜிம் கேரியின் மறுபக்கம்னு ஒரு பதிவ போட்ரலாம். மக்கள் விரும்பினா ஜிம் கேரியின் இடது பக்கம், வலது பக்கம்னு ஒரு சீரிஸ் கூட எழுதலாம்.

அட சூப்பர் ஐடியா அம்பி! இந்த சூடான இடுகைன்னா என்ன அம்பி?

அதுவா? உங்க பதிவை எத்தனை பேரு கமண்டு போடாம படிச்சுட்டு போனாங்கனு காட்டறது தான் சூடான இடுகை. இதுல வரனும்னா நீங்க ரூம் போட்டு யோசிச்சு பதிவுக்கு தலைப்பு வைக்கனும்.

அப்படியா?

ஆமா! இப்போ நீங்க சமையல் குறிப்புகளை பத்தி எழுத போறிங்கன்னு வெச்சுபோம். என்ன தலைப்பு வைப்பீங்க?

வேற என்ன, ஜம்புஸ் கிச்சன் கார்னர்!

அதான் இல்லை, சட்டிக் கதைகள் அப்படின்னு தலைப்பு வைக்கனும். நீங்க சட்டியே இல்லாம மைரோவேவ்ல கூட சமைக்கலாம். கடைசில இதே பதார்தத்தை சட்டியிலும், அதாவது வானலியிலும் சமைக்கலாம்!னு யதார்த்தமா ஒரு டிஸ்கி போட்ருங்க. இதான் டெக்குனிக்கு. புரிஞ்சதா?

இப்போ புரியுது.

வெரிகுட். உங்க இஷ்ட தெய்வம் யாரு? சிவனா? விஷ்ணுவா? இல்ல முருகனா?

ஐயப்பன்.

தப்பிச்சீங்க. ஐயப்பன் எல்லாருக்கும் வேண்டியபட்டவர் தான். சாமியே சரணம்!னு ஒரு பக்தி வலைபூ பெயரை துண்டு போட்டு வெச்சுகுங்க. பின்னாடி உதவும்.

ஓகே அம்பி, வேற ஏதாவது சந்தேகம்னா மறுபடி கேக்கறேன்!னு சொல்லிட்டு ஜம்பு எஸ்கேப் ஆயிட்டார். உங்களுக்கும் ஏதாவது யோசனை தோணிச்சுனா சொல்லுங்களேன், பாவம் ஜம்புவுக்கு உதவியா இருக்கும்.

Wednesday, July 09, 2008

வங்கி தேர்வு - நடந்தது என்ன?

நீங்கள் எப்போதாவது இந்த வங்கி தேர்வுகள் ஏதேனும் எழுதியதுண்டா? ஆம்! எனில் மேற்கொண்டு படியுங்கள். இல்லையெனில் என்னவென்று தெரிந்து கொள்ள மேற்கொண்டு படியுங்கள்.(அவ்ளோ லேசுல விட்ற மாட்டோம் இல்ல).
80-90களில் வங்கியில் வேலை செய்வது என்பது பலருக்கு ஒரு லட்சிய கனவாகவே இருந்தது. பிஎஸ்ஆர்பி(BSRB) என்ற வார்த்தை மந்திரம் போல உச்சரிக்கப்பட்ட காலம் அது. அந்த போட்டி தேர்வுக்கு ஏதோ அலங்க நல்லூர் ஜல்லிகட்டுக்கு காளையை தயார் செய்வது போல சிலர் பத்தாவதில் இருந்தே தம் மக்களை தயார் செய்தவர்களும் உண்டு.

கணக்கில் ஆழ்ந்த அறிவு, நுண்ணிய லாஜிக்கல் அறிவு, ஊறுகாய் போல கொஞ்சம் ஆங்கில அறிவு இருந்தால் ஞான பழம் எனக்குத் தான்!னு சொல்லி விடலாம். கணக்குனா சும்மா எட்டில் ஐந்து போனால் மிச்சம் எவ்வளவு? ரகம் இல்லை.
நான் குறிப்பிட்ட எட்டு, ஐந்து என்பதை வெறும் நம்பர்கள் என நினைவில் கொள்க.

1) சென்னையிலிருந்தும், மதுரையிலிருந்தும் இரண்டு வேறு ரயில்கள் மணிக்கு முறையே 50, 40 கிமீ வேகத்தில் வந்தால் அவை இரண்டும் எங்கு சந்தித்து கொள்ளும்? - இது ஒரு வகை.

2) ரமா, ஸ்வேதா, ரம்யா, அக்ஷிதா, ஷாலினி ஆகிய ஐந்து பேரும் வட்டமாக உக்காந்து கேசரி சாப்பிட்டால், ரமாவுக்கு பக்கத்தில் ரம்யா இல்லை, ஷாலினிக்கு பக்கத்தில் ஸ்வேதா தான் இருக்கா, அக்ஷிதாவுக்கு கேசரி பிடிக்காது, அப்போ அம்பி யாரு பக்கத்துல உக்காந்து இருப்பான்? - இது லாஜிக்கல் ரீஸனிங்கில் ஒரு வகை.

3) ரூம் போட்டு யோசித்து ஐந்தாண்டு திட்டத்தை நேரு தீட்டியதால் இந்தியாவுக்கு விளைந்த நன்மைகளை பத்தி ஒரே பீட்டரா எடுத்து விடு - இது ஆங்கில அறிவை சோதிக்க ஒரு வழிமுறை.

இதற்கென ப்ரத்யேக வகுப்புகள் எல்லாம் அனல் பறக்கும் பயிற்சிகள் அளித்து வந்தன. கேள்விக்கான விடைகள் ஏ/பி/சி/டி தான் (டிபிசிடி இல்லை). எங்க ஊரில் இவ்வகை வகுப்பு ஒன்று ரொம்பவே பிரசித்தம். நெல்லை மாவட்டத்திலேயே எங்க ஊரில் உள்ள அந்த குறிப்பிட்ட வகுப்பில் பயிற்சி எடுக்கவென்றே பலர் தங்கி படித்த காலங்களும் உண்டு. உங்க ஆட்கள் கொஸ்டின் பேப்பரை லவட்டி விடுவீர்களோ? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை. எல்லாம் திட்டமிட்ட பயிற்சிகள் தான்.

இவ்வகை தேர்வு மையங்கள் பெரும்பாலும் பெரு நகரத்தில் உள்ள கல்லூரிகளாக தான் இருக்கும். பையங்கள் எல்லாம் ஏதோ ஜாலி டூர் போவது போல போவார்கள். பெண்கள் தேர்வு எழுத கிளம்பினால், உஜாலா சொட்டு நீலம் போட்டு வெளுத்த வேட்டியும், முழங்கை வரை மடித்து விட்ட வெள்ளை சட்டையுடன் அப்பாவோ, தம்பியோ (வெட்டியாக இருக்கும் பட்சத்தில்) முந்தைய நாளே மஞ்சபையுடன் கூடவே கிளம்பி விடுவார்கள்.
முப்பிடாத்தி அம்மன் கோவில் குங்குமம், அதற்கு மேல் திருனீறு, பின் ஒரு சாந்து பொட்டு, அதற்க்கு மேல் வீட்டின் பெரியவர்கள் யாரேனும் இட்டு விட்ட வெற்றி திலகம் சகிதமாக தேர்வு மையத்துக்கு ஒரு ஸ்பெஷல் எபக்டோடு வருவார்கள்.

வாம்மா மின்னல்! இது எத்தனையாவது படையெடுப்பு?னு ஏதேனும் ஒரு பையன் சவுண்டு விட்டா, பதிலுக்கு வெள்ளை வேட்டி விடும் சவுண்டுக்கு ஏரியாவே அதகளபடும். தப்பிச்சோம்! பிழைச்சோம்!னு அந்த பையன் எக்ஸாம் எழுதாமலேயே எஸ்ஸாகி விடுவான்.

சும்மா ஆசைக்கு ஒரு தரம் நானும் தேர்வுக்கு போய் நட்ராஜ் பென்சிலால் கொஸ்டின் பேப்பரில் ஷேடு அடித்து விட்டு வந்தேன். நல்ல வேளை தேர்வாகவில்லை, பேங்குல உக்காந்து பிளாக் எல்லாம் எழுத/படிக்க முடியுமோ?

இனிமே இவ்வகை தேர்வுகளுக்கு ஹால் டிக்கட்டுடன் பணம் கட்டிய ரசீது, ரசீது தந்த காஷியரின் பெயர், முகவரி, அவருக்கு எத்தனை குழந்தைகள்? போன்ற விபரங்களும் தெரிந்து கொண்டு போகனும் போலிருக்கு. அமெரிக்காவில் இருக்கும் வங்கிகளுக்கு பாங்கிங் சாப்ட்வேர் எழுத தெரிந்த நம்மால், நிஜமான சமீபத்தில் (போன வாரம் தான்) இங்கு ஒரு வங்கி தேர்வை கணினிமயமாக்க முடியலை என எண்ணும் போது சிலபல தெலுங்கு பட டைடில்கள் எல்லாம் வாய்க்கு வருகிறது.

Friday, July 04, 2008

எதிரொலி

சன் டிவியும் விஜய் டிவியும் தமிழனின் வரவேற்பறையில் நுழையாத என்பதுகளில் தூர்தர்ஷன்காரர்கள் டில்லியிலிருந்து, போனா போகட்டும் என அவ்வப்போது தமிழ் நிகழ்ச்சிகளையும் நடத்தி கொள்ள அனுமதித்து இருந்த காலம்.
உடனே வாசகர்கள் கிரேன் ஷாட், காமிரா ஆங்கிள் எல்லாம் யோசித்து பார்க்க வேண்டாம்.

திங்கள் கிழமைன்னா எல்லா மொழி பாடல்களும் வரும் தமிழ்மணம் போன்ற சித்ரஹார், செவ்வாய்னா ஒரு ரூம் செட்டுக்குள்ளேயே மொத்த கதையையும் நகர்த்தும் குடும்ப நாடகம், புதனும் வியாழனும் சில மொக்கை பேட்டிகள், வெள்ளி கிழமைன்னா ஒளியும் ஒலியும், சனி கிழமைன்னா ஸ்லீவ்லஸ் ஸ்வட்டர் போட்ட ராஜேஷ் கண்ணாவும், பன் கொண்டை போட்ட ஷர்மிளா டாகூரும் தள்ளி தள்ளி நின்னு டூயட் பாடும் ஹிந்தி படம், ஞாயிறுன்னா காலையில் ரங்கோலி, பின் ராமாயணம், சாயந்திரம் மனாளனே மங்கையின் பாக்கியம் என்ற புத்தம் புதிய திரைபடம் என மக்களை மெய்மறக்க வைத்து இருந்தது தூர்தர்ஷன்.

இதுல வியாழ கிழமைன்னு நினைக்கிறேன், ஒரு வார நிகழ்ச்சிகளை சில வாசக கண்மணிகள், விமர்சனம் என்ற பெயரில் டெம்ளேட் கடிதங்கள் போடுவார்கள். அந்த நிகழ்ச்சிக்கு பேர் எதிரொலி. காமடி நிகழ்ச்சி இல்லாத குறையை இந்த நிகழ்ச்சி போக்கி கொண்டிருந்தது என சொல்லலாம்.

அந்த நிகழ்ச்சிக்குன்னே பாலசந்தர் ப்ரேம் போட்ட கண்ணாடி அணிந்த ஒருத்தர் தான் பதில் சொல்ல வருவார். நியூஸ் படிக்க செலக்ட் செய்யாமல், இந்த எதிரொலிக்கு கடிதம் படிக்க ஒரு அம்மணியை அனுப்பி இருப்பார்கள். ஏன்னா அப்ப ஷோபனா ரவியின் புடவை டிஸைனுக்கு தான் மவுசு.

பெரும்பாலும் எதிரொலிக்கு வரும் கடிதங்கள் எல்லாம் ஜிங்ஜக்காக தான் இருக்கும்.
உதாரணமாக, போன வாரம் செவ்வாய் இரவு 7 மணிக்கு வயலும் வாழ்வும் நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அந்த நிகழ்ச்சியில் இயற்கை உரம் பற்றி எடுத்துரைத்த நபர் சட்டை கூட போட நேரமில்லாமல் உள்பனியனோடு வந்திருந்தது நெஞ்சை நெகிழ செய்தது! என்று விழுப்புரத்திலிருந்து வீராச்சாமி என்ற நேயர் எழுதியுள்ளார்!னு அந்தம்மா ஒரு பிட்டை போடுவாங்க.

உடனே நம்மாளு ஒரு தெய்வீக சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு, அடுத்த தடவை அவரை சட்டை போட்டு பேட்டி குடுக்க செய்கிறேன் அப்படின்னு சமாளிப்பார்.

ஏன் செவ்வாய்கிழமை நாடகங்களை ஒரே ரூமில் எடுக்கறீங்க?னு ஜாம்பஜார்லேருந்து ஜக்கு என்ற வாசகர் கேட்டு இருக்கார்.

இது ஒரு நல்ல கேள்வி. இப்ப குடும்ப விஷயங்கள்னா அது நாலு சுவத்துகுள்ள தான் இருக்கனும் என்பதை தான் அந்த நாடகத்தின் இயக்குனர் சிம்பாலிக்கா சொல்லி இருக்கார்.
ஜாம்பஜார்ல தக்காளி ரொம்ப சீப்பா கிடைக்குமாமே! தக்காளி தொக்கு போட்டா இட்லிக்கும், தயிர் சாததுக்கும் செம காம்பினேஷன் மிஸ்டர் ஜக்கு! அப்படினு ஒரே போடா போடுவார் நம்மாளு.

இப்ப இந்த நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருக்கும் ஜக்கு, கேள்வியை விட்டுவிட்டு தக்காளி வாங்கி தொக்கு போட ஆரம்பிச்சுடுவார்.

டிஸ்கி: தமிழ்மணத்துல சில கேள்வி பதிவுகளை படித்து விட்டு பின் அதுக்கு பதில்களையும், பதிலுக்கு பதிலையும், பதிவா படிக்கும் போது இந்த எதிரொலி நிகழ்ச்சி எனக்கு நியாபகத்துக்கு வரவில்லைன்னு சொல்லிக்கறேன். :))

Wednesday, July 02, 2008

புலம் பெயர்ந்த NRI


சென்னைக்கும் பெங்களூருக்கும் நான் சீசன் டிக்கட் எடுத்து வைத்திருப்பதால் தான் லாலுவால் துண்டு விழாமல் ரயில்வே பட்ஜெட் போட முடிகிறது என இப்பதிவை ஆரம்பித்தால் இதுவும் பட்டர்பிளை எபக்ட் தான் என பின்னூட்டம் விழற வாய்ப்புக்கள் பிரகாசமாக இருக்கிறபடியால் நேரே மேட்டருக்கு வருகிறேன். (மேட்டர் என்றால் விஷயம் என இங்கு பொருள் கொள்ளவும், என்ன செய்ய? தமிழ்மண நிலமை அப்படி)

உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக திரைக்கே வராத ஏதோ ஒரு படம் ஓடிகொண்டிருக்கும் ஒரு இனிய மாலை வேளையில் தங்கமணியின் அப்பாவழி பாட்டியோட தம்பி பையன் டெக்சாஸிலிருந்து தம்பதி சமேதராக எங்களுக்கு காட்சி குடுக்க விழைகிறார் என தொலைபேசி செய்தி கேட்டு, நான் அவருக்கு என்ன முறை?னு யோசிக்கும்முன்னரே எங்கள் தெருவுக்கு எப்படி வரனும் என்று மறுபடி போன் கால்.

இந்த இடத்தில் தங்க்ஸின் ஏரியா பத்தி ஒரு சிறுகுறிப்பு. ஆட்டோ பிடிக்கவே ஆட்டோல தான் போகனும். மதுரை மீனாட்சி கோவிலில் கூட தெற்கு கோபுரம் வழியா நுழைஞ்சு, வடக்கு கோபுரம் வழியா வெளிய வந்து சிம்மக்கல் பஸ் ஸ்டாப்புக்கு வந்து சேர்ந்து விடலாம். ஆனால் இந்த ஏரியாவில் எந்த தெருவில் நுழைஞ்சு எந்த பக்கம் வந்தாலும் மறுபடி அதே தெருவுக்கு வந்து விடுவோம். ஒரு பிரபல பதிவர் கூட இதே ஏரியா தான்! என்ற க்ளூவுடன் இந்த இடத்தில் நிறுத்தி கொள்கிறேன்.(இதுக்கே இருக்கு எனக்கு மண்டகபடி).

ஒரு வழியாக அந்த குடும்பம் எங்கள் தெரு முக்கு வரைக்கும் வந்து விட்டது. நேர வர வேண்டியது தானே? மறுபடி ஏதோ குழப்பம் ஆகி, சத்யமா முடியலை!னு மறுபடி ஒரு போன். சரின்னு என் மாமனாரே எதிர் கொண்டு அழைத்து வந்து சேர்ந்தார்.


சரி பாவம்!னு ஆளுக்கு ஒரு சொம்பு தண்ணி காட்டினோம். அவங்க வீட்டு அம்மணி உடனே இது பாயில்டு வாட்டரா?னு புருவத்தை நெளித்தார்.
அக்குவா கார்டு வாட்டர்னு பதில் வந்த பிறகும் பல்ராம் நாயுடு பைனாக்குலரில் பாப்பது போல ஒரு லுக் விட்டுவிட்டு குடித்தார். பரஸ்பர ஷேம உபயஷேமம் எல்லாம் விசாரித்து கொண்டோம்.

அந்த டெக்சாஸ் பார்ட்டி என்ன பேசினாலும் தமிழிலும், பின் அதையே ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து மேஜர் சுந்தர் ராஜன் பேசுவது போல பேசினார்.

"நைஸ் மீட்டிங்க் யூ! உங்கள பாத்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம். "

"எங்க வேலை பாக்கறீங்க? வேர் ஆர் யூ வேர்க்கிங்க்?"

என்னடா நம்மள வெச்சு காமடி கீமடி எதுவும் பண்றாங்களா?னு எனக்கு முதலில் சின்ன டவுட்டு. சரி இவங்க வழியிலேயே போவோம்!னு நானும் மே.சு.ரா பாஷையில் ஆரம்பித்து விட்டேன்.

"இப்ப உங்களுக்கு லீவா? ஆர் யூ இன் ஹாலிடே?"
"யெஸ்! ஆமா".

ஆஹா! அவனா நீயி? சரி, ஒரு வழி பண்ணிடறேன்னு தொடர்ந்து போட்டு தாக்க, சிரிப்பை அடக்க முடியாமல் தங்கமணி உள் அறைக்கு ஓடி விட்டார்.
அப்படி இருந்தும் அந்த டெக்சாஸ் அம்மணி விடாமல் என் தங்க்ஸ் பின்னாடியே போய் அமெரிக்கா தல புராணம் பாட ஆரம்பித்து விட்டார். தல புராணம் என்றால் அஜித் வாழ்க்கை வரலாறு இல்லைனு இங்க சொல்லிக்க கடமை பட்டுள்ளேன்.

அங்க வீட்டுகுழாயை திறந்தா பாலும் தேனுமா வரும். இந்தியன் ஸ்டோர்ஸ்ல எல்லாம் கிடைக்கும்னு அம்மணியின் பில்டப் ஓவரா போகவே, தங்கமணியை காப்பாற்ற, "கேசரி பவுடர் கிடைக்குமா அங்கே?னு நானும் கேட்டு விட்டேன்.

அவரின் மூத்த பெண் பரத நாட்டியம் கற்று வருவதாய் டெக்சாஸ் அம்மணி அபிநயம் பிடித்து காண்பிக்க, தில்லானா வந்தாச்சா? இல்ல பதங்களா?னு நானும் அபிநயத்துலேயே கேட்டு விட்டேன். அடுத்த வருடம் அரங்கேற்றமாம்.

மறக்காம போட்டோ எடுத்து அனுப்புங்க!னு என் தங்கமணியும் அபிநயம் புடிக்க, என்னடா இது? ரெண்டாயிரம், மூவாயிரம்! மாமா பிஸ்கோத்து! ரேஞ்சுக்கு நிலைமை மாறுதேனு எனக்கு சிரிப்பு ஒரு பக்கம், கவலை ஒரு பக்கம் வந்துடிச்சி.

கண்டிப்பா ஈமெயிலில் அனுப்புறோம்!னு தட்டச்சு சைகை செய்தபடியே டெக்சாஸ் பார்ட்டி விடை பெற்றது.

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். இந்தியாவுல இருக்கற எங்களுக்கு தமிழ் தெரியாதுனு அவங்க நெனச்சாங்களா, இல்ல அவங்களுக்கு தமிழ் மறந்து போச்சா?

பி.கு: கடைசியில் ஈமெயில் முகவரி அவங்களும் வாங்கிக்கவே இல்லை, நாங்களும் குடுக்கலை.