Tuesday, October 13, 2009

கிரெடிட் கார்டு/லோன் வேணுமா?

மும்பையை தலைமையிடமாக கொண்ட அந்த பேங்கிலிருந்து கரக்ட்டா என் சம்பள நாளுக்கு அடுத்த நாள் மேற்படி கேள்விகளுடன் ஒருத்தர் எனக்கு போன் பண்ணுவார். எனக்கு அந்த ஆள் பேசும் தொனி பிடிக்காது. நான் என்னவோ திக்கு தெரியாத காட்டில் தவிப்பது போலவும், அவங்க பேங்க் தான் ஏதோ கோவிலில் குடுக்கும் சுண்டல் போல எனக்கு கிரெடிட் கார்டும் பெர்சனல் லோனும் வழங்குவது போல பில்டப் குடுப்பார்.

மும்பை எஸ்டிடி கோட் பாத்தவுடனேயே மொபைலை கட் பண்ணி விடுவேன். அந்த நம்பர் கூட எனக்கு அத்துபடி. போன தடவை அதே மும்பையில் இருந்து கால், வேற நம்பரில் இருந்து. புத்திசாலித்தனமா கால் பண்றாராம். பெரிய ஆபிஸ்களுக்கு நாலைந்து போன் லைன்கள் வரிசையாக இருக்கும் என்பது பொதிகை தொலைகாட்சியில் "காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு" பார்த்தவர்களுக்கு கூட தெரியும். சரி விடுங்க, என்ன தான் சொல்றார் இந்த ஆள்?னு இந்த தடவை பேசினேன். ஆச்சர்யம் பாருங்கள் இந்த தடவை போன் பண்ணியது ஒரு பெண். ஜொள்ளாண்டவரின் கருணையே கருணை.

ஹலோ, நான் ராக்கி பேசறேன், நீங்க தானே அம்பி..? உங்களுக்கு கோல்டன் கிரெடிட் கார்டு தரப்....

கார்டு கிடக்குது கழுத. என்னமா ராக்கி, உன் கல்யாணம் தான் என்.டி.டிவில அமர்களப்படுது. நீயே கதின்னு கனடால இருந்து வந்திருக்கற அந்த மொட்டையவே கல்யாணம் பண்ணிக்க தாயி. நீ விரும்பறவனை விட உன்னை விரும்பறவனை கல்யாணம் பண்ணிக்கனு ரஜினி சொல்லி இருக்காரு.

அடக் கடவுளே! நன் ராக்கி சாவந்த் இல்ல, ராக்கி ஜெயின். என் ஆபிஸ்ல தான் என்ன கலாய்க்கறாங்கன்னா கிளையன்ட் நீங்களுமா?

அப்படியா? வெரி சாரி. எனக்கு கார்டெல்லாம் வேணாம். எதிர்காலத்துல தேவை இருந்தா ராக்கிக்கு தான் போன் போடுவேன். ஓக்கேவா? -ஹெவ் ஏ நைஸ் டே!

கலகலவென சிரிப்பு சத்ததுடன் (ரெண்டு பக்கத்திலும் தான்) போன் கட் செய்யப்பட்டது.

இதே மாதிரி பல ராக்கிகள், திவ்யாக்கள், லாவண்யாக்கள் தங்கள் வங்கிக்காக தினமும் போன் செய்கிறார்கள். நமக்கு வேணாம் என்பதை எதுக்கு வள்ளுனு விழுந்து பிடுங்கி சொல்லனும்? யோசித்து பாருங்கள், அவங்க வேலைய அவங்க செய்றாங்க. நமது கிளையன்ட் இதே மாதிரி விழுந்து பிடுங்கினா நமக்கு எப்படி இருக்கும்?

நம்மால் இத்தகைய ராக்கிகளுக்கு, திவ்யாக்களுக்கு போன் மூலம் பரிமாறப்படும் கோபம், இன்னொரு ரூபத்தில் வேறு யாருக்கோ போய் சேரும். அது ஒரு சாலை விபத்தாக கூட முடியலாம். இதுவும் பட்டர்பிஃளை எபக்ஃட் தான். சட்டியிலிருந்து கிண்ணத்தில் மாற்றுவதற்க்கு கோபம் ஒன்னும் சூடான கேசரி இல்லை. :)

இது என் கருத்து மட்டுமே. எல்லாருக்கும் பொருந்துமா? என தெரியாது. :)

Tuesday, October 06, 2009

புடவை

சார் தசரா வருது, ஒரு புடவை எடுத்து தாங்க! இப்படி உரிமையுடன் என் வீட்டில் வேலை செய்யும் லலிதா கேட்டவுடன் எனக்கு கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தது.


தசரா எல்லாம் வழக்கம் கிடையாது மா! தீபாவளிக்கு தான் சீலை எடுத்து கொடுப்போம். சரியா? என பதில் குடுத்ததும் சரியென்று தலையாட்டினாலும் ஏமாற்றத்தை முகம் காட்டி கொடுத்து விட்டது. நானும் மறந்து விட்டேன்.


அதே கேள்வி. இந்த முறை என்னிடம் அல்ல, தங்கமணியிடம். கேட்டது லலிதா இல்லை, அவளின் அக்கா சரளா. லலிதா லீவு எடுத்தால் சரளா தான் சப்ஸ்ட்யூட். என்னடா இது வம்பா போச்சு? சரி, தசராவுக்கே எடுத்து குடுத்தறலாம்னு முடிவு பண்ணி தங்கமணி சகிதமா எங்க ஏரியாவுல இருக்கற ஒரு புடவை கடைக்கு போயாச்சு.


வருஷத்துல ஒரு தரம் எடுக்கறோம், நல்லதா குடுக்கனும்னு முடிவு பண்ணி, இந்த கலர் அந்த கலர்னு பாத்து, பார்டர்ல அன்னம் இருக்கா? மயில் இருக்கா? பூ போட்டு இருக்கா?, ஐந்தரை மீட்டர் இருக்கா? டேமேஜ் இல்லாம இருக்கானு எல்லாம் செக் பண்ணி மயில் கழுத்து கலர்ல ஒரு புடவை எடுத்து அதுக்கு மேட்சிங்க் பிளவுஸ் எல்லாம் செலக்ட் பண்ணி ஒரு வழியா வீட்டுக்கு வந்தாச்சு.


வீக் எண்டுல சென்னை செல்வதால், மறக்காம புது புடவையை லலிதாவிடம் குடுக்க சொல்லி தம்பியிடம் சொல்லிட்டு ஊருக்கு போய் விட்டோம். தசரா முடிந்த பிறகு மறுபடி பெங்களூருக்கு வந்தபின் ஆபிஸ், வேலைன்னு ஓட்டம் துவங்கியது.


நான் ஆபிஸ் கிளம்புமுன் லலிதா வேலைக்கு வர, என்னமா? தசரா எல்லாம் சிறப்பு தானே? என மையமாய் கேட்டு வைத்தேன்.


புடவை நல்லா இல்லை சார்! பளிச்சென்று வந்த பதில் என்னை அதிர வைத்தது. உடுத்தின அன்றே துவைத்து இருப்பாளா? சுருங்கி விட்டதா? சாயம் போய் விட்டதா? படபடவென கேள்விகள் என்னிடம் இருந்து பறக்க, கலர் நல்லா இல்லை சார்! - ரொம்பவே நிதானமாக பதில் வந்தது.

நான் எதுவும் பதில் பேசவில்லை. ம்ம், நமக்கு பிடித்த கலர் அடுத்தவங்களுக்கும் பிடிக்கும் என எப்படி எதிர்பாக்க முடியும்? வாங்கறத்துக்கு முன்னாடி அட்லீஸ்ட் உன் விருப்ப கலர் என்ன?னு ஒரு வார்த்தை கேட்டு இருக்கலாம். யதேச்சதிகார அமெரிக்க மனப்பான்மையுடன் நாமே ஒரு முடிவு எடுத்து அதை அடுத்தவர் மேல் திணிக்கும் மனோபாவம் தானே இது? (கொஞ்சம் ஓவராத் தான் போறேனோ?)

மனதில் பட்டதை பளிச்சுனு, தைரியமா சொன்ன லலிதாவின் துணிச்சல்(அல்லது அட்டிடியூட்) என்னை மிகவும் கவர்ந்தது. போன தடவை நீங்க எனக்கு குடுத்த ரேட்டிங்க், சம்பள உயர்வு விகிதம் எனக்கு சுத்தமா பிடிக்கலை! என துணிச்சலாய் என் டாமேஜரிடம் சொல்ல எனக்கு துணிவு இல்லையே? ஒரு வேளை அப்படி துணிந்து சொல்லி இருந்தால் ஏதேனும் நிகழ்ந்து இருக்குமா? தெரியலை. காலம் பல நேரங்களில் சிலர் மூலமாக பரீட்சை வைத்து விட்டு பின் பாடத்தை நடத்துகிறது.