Friday, June 26, 2009
கேள்வி கேக்கறது ரொம்ப ஈசி
1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
சொந்த பெயரை(ரெங்க ராமன்) தானே கேக்கறீங்க? பெயர் எல்லாம் அப்பா அம்மா வெச்சது தான். ரொம்ப பிடிக்கும். ஏறக்குறைய ஐம்பதாயிரம் பேர் ஆணி புடுங்கும் என் கம்பெனியில் என் பெயர் கொண்ட இன்னொரு நபர் இல்லவே இல்லை.
2) கடைசியா அழுதது எப்போது?
போன ஞாயிறன்று. ஆனாலும் வெங்காயம் ரொம்பவே படுத்தி விட்டது. சுயிங்கம் சாப்பிட்டு கொண்டே வெங்காயம் உரித்தால் கண்ணீர் வராதாமே! உண்மையா?
3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?
பத்தாவது வரை அழகாக இருந்தது. காலேஜ் வந்தபுறம் அவசர அவசரமா புரபசர் சொல்வதை நோட்ஸ் எடுத்ததால் கையெழுத்து கெட்டு விட்டது. வேற யாராவது கையெழுத்து போட்டு எனக்கு குடுக்கும் காசோலை ரொம்ப பிடிக்கும்.
4) பிடித்த மதிய உணவு?
சின்ன வெங்காயம் போட்டு மணக்க மணக்க சாம்பார் + உருளைகிழங்கு(காரம் சேர்த்த) ரோஸ்ட்.
செம பசியோடு இருக்கும் போது சாப்பிடும் படி இருக்கும் எந்த சைவ உணவும் எனக்கு இஷ்டமே!
5) நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?
கண்டிப்பாக. முதலில் உங்களை நீங்களே நேசியுங்கள். தன்னாலே உலகம் உங்களை நேசிக்கும்! என்ற வரிகளை நம்புகிறேன்.
6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?
அகத்தியர் அருவி, பாண தீர்த்தம்னு மணிக்கணக்கா மூழ்கி முத்தெடுத்த கூட்டம்லே நாங்க. தடுக்கி விழுந்தாக் கூட தாமிர பரணியில் தான் விழுவோம்லே நாங்க.
7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?
முகம். ஒருவரின் மன நிலையை முகமே காட்டி விடும்.
8) உங்கள் துணைவர்/துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?
பிடித்தது: எதையும் உடனே செய்து விட வேண்டும் என்ற துடிப்பு. பல சமயங்களில் அது எனக்கே ஆப்பாகி விடுகிறது. :)
பிடிக்காதது: "கலகம் விளைவிக்கும் கேள்விகளை தவிர்த்தால் மங்களம் உண்டாகும்" என சீவல்புரி சிங்காரம் என் ராசிக்கு பலன் சொல்லி இருக்கார், எனவே, நாம அடுத்த கேள்விக்கு போவோமே, ப்ளீஸ்.
(ஆமா, யாரது மங்களம்? என்றெல்லாம் கலாய்த்து பின்னூட்டம் போடக் கூடாது. )
9) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?
கோபிகா, நயன் தாரா என நான் சொல்வேன் என நீங்கள் எதிர்பார்த்தால் நான் பொறுப்பல்ல. என்னோடு எம்சிஏ படித்த சில நண்பர்கள் இப்போ அருகில் இல்லை.
10) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?
கறுப்பு கலர் டி-ஷர்ட், சாம்பல் கலர் காட்டன் பேண்ட்.
11) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?
வேற என்ன, நான் பிடுங்கி கொண்டிருக்கும் ஆணியை தான் பாத்திட்டு இருக்கேன். என் பக்கத்து சீட்டிலிருந்து ஏதோ ஒரு மலையாள பாடல் முணுமுணுக்கப்படுகிறது. வல்லிய கேரளம். :)
12) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?
ஸ்கை ப்ளூ. ஆமா பேனாவா மாத்தி யாரு கைல குடுப்பீங்க?
13)பிடித்த மணம்?
ரவையை நெய்யோடு சேர்த்து ஐஸ்வர்யா ராய் நிறத்துக்கு வறுத்துகொண்டு, ஒன்றுக்கு ரெண்டு பங்கு சீனி போட்டு, நெய் விட்டு, பதமாக கிண்டிய கேசரியை சுட சுட வாழை இலையில் போடும்போது ஒரு நறுமணம் வரும். அது நமக்கு ரொம்ப இஷ்டம்.
14) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?
எல்லாரையுமே பிடிக்கும். விருப்பமும், நேரமும் உள்ள யாரும் அம்பி அழைத்ததாய் நினைத்து எழுதலாம், படிக்க ஆவலாய் உள்ளேன்.
15) உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
ராப்: வலையுலகில் வேஷம் போடாமல் மனதில் பட்டதை கலக்கலாய் சொல்ல தைரியம் கொண்ட இவரின் எல்லா பதிவுகளும் தான்.
பிளாகேஸ்வரி: இவரின் எல்லா விளம்பரங்கள் தொடர்பான பதிவுகள் மற்றும் இவரின் நையாண்டி தொணி கலந்த மற்ற பதிவுகளும் தான்.
ஸ்ரீதர்: மிக நேர்த்தியாய், கொஞ்சமும் லாஜிக் இடிக்காமல் இவர் எழுதும் கதைகள்.
16) பிடித்த விளையாட்டு?
லக்கோரி. ஏழு கற்களை வரிசையாக அடுக்கி ஒரு டீமிலிருந்து பந்தை எறிந்து அந்த கற்களை சிதறடிக்க வேண்டும். எதிரணி பந்தை எடுத்து நம்ம டீம் ஆட்கள் மீது எறிவார்கள். நம்மாட்கள் எல்லாரும் அவுட் ஆகறதுகுள்ள சிதறிய கற்களை அடுக்கிடனும். செம த்ரில்லா இருக்கும்.
ரெண்டு விஷயம் இதுல ரொம்ப முக்யம்:
1) கற்களை சிதறடிக்கும் போது கவனமா இருக்கனும். பிள்ளையாருக்கு தேங்காய் வடல் போடற மாதிரி எறிந்தால் அம்பேல்.
2) பந்தை கரக்ட்டா எறிந்து எதிரணியை அவுட் ஆக்கனும். ஒரு தடவை, என் டீம் எறிந்த பந்து குறி தவறி தெருவில் ஒரு மாமியின் பின்புறத்தை பதம் பார்த்து விட மொத்த ஆட்டமும் க்ளோஸ். ஆனா அந்த மாமியின் ரங்கமணி எங்க டீமுக்கு ரகசியமாய் ஆளுக்கு நூறு கிராம் அல்வா வாங்கி தந்தார். :)
17) கண்ணாடி அணிபவரா?
இப்பொழுது கணினிக்கு முன்னால் மட்டும்.
18) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?
போரடிக்காமால் விறுவிறுப்பான திரைகதை உள்ள எந்த படமும்.
பிரெஞ்சு, ஜப்பான், இரானிய மொழி படங்கள் எல்லாம் பாக்க ஆசை, ஆனா இன்னும் நேரம் வாய்க்கவில்லை (அப்படின்னு சொல்லிக்க வேண்டியது தான்)
19) கடைசியாகப் பார்த்த படம்?
வெண்ணிலா க-குழு மற்றும் யாவரும் நலம் (டிவிடி).
20) பிடித்த பருவ காலம் எது?
வெண்பொங்கல் மணம் வீசும் மார்கழி மாதம்.
21) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?
Magic of Thinking Big
22) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?
ஆபிஸ்ல படமே வைக்கறதில்லை.
லேப்டாப்பில் நயந்தாரா, அனுஷ்கா,மேக்னா நாயுடுனு வைக்கனும்னு ஆசை தான், மேலிடம் அனுமதி கொடுக்கவில்லை.
23)பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
மென்டலின், புல்லாங்குழல் இசை பிடிக்கும்.
பூமியில் டர்ர்ர்னு போரிங்க் போடற சத்தம், குழாயை டொர் டொர்ர்னு ரம்பம் வைத்து அறுக்கும் சத்தம் பிடிக்காது.
24) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?
இந்த பக்கம் ஆப்ரிக்கா, அந்த பக்கம் அன்டார்டிகானு சொல்ல ஆசை தான். ஆனா அங்க எல்லாம் போனதில்லை. இப்போதைக்கு இந்த பெண்களூரு தான்.
25) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?
இதை என் நண்பர்களாகிய நீங்கள் தான் சொல்லனும். அடக்கம் அமரருள் உய்க்கும் யு நோ!
26) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?
தன் பொறுப்பை தட்டிக் கழிக்கும் பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளவர்களின் செயல்கள்.
27) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
முன் கோபம்
28) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?
முன்னார் (கேரளா)
29) எப்படி இருக்கணும்னு ஆசை?
போதுமென்ற நிறைவான மனதுடன்.
30) கணவர்/மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?
மறுபடியுமா? விட மாட்டீங்க போல. பெங்களூர் தக்காளியில் தொக்கு போட்டால் ருசியா இருக்காது, ஆனா ஜாம் செய்யலாம், குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். நாம அடுத்த கேள்விக்கு போவாமா? ( நன்றி பொதிகையில் எதிரொலி நல்ல தம்பி)
31) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க.
உருகும் ஐஸ்க்ரீம்.
முழுதும் உருகுமுன் நீங்களும் உண்டு பிறருக்கும் பகிர்ந்து வாழுங்கள். (எனக்கே இது டூ மச்சா தெரியுது)
32) உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
பிடித்தது: அதீத தைரியம் (சில நேரங்களில் மட்டும்).
பிடிக்காதது: முன் கோபம், சில சமயம் சோம்பல்.
Thursday, October 16, 2008
அம்பி நடிக்க போகும் சினிமா
ஊர் கூடி தேர் இழுக்கும் இந்த திரை வைபவத்துல என்னையும் எழுத்து விட்ட புண்ணியவதி ராப் மற்றும் உஷாஜி அவர்களுக்கும் முதலில் நன்றி.
1) எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
தூர்தர்ஷன் வாரம் ஒரு படம் போட ஆரம்பிச்சதும்னு நினைக்கிறேன். சாந்த சக்குபாய்னு ஒரு படம், தேவர் மகன்ல ரேவதி வாய தொறந்தா வெறுங்காத்துதேங் வருது!னு சொல்வாங்க. ஆனா இந்த படத்துல நடிச்ச அந்த அம்மா வாய தொறந்தா ஒரே பாட்டா கொட்டுது. செம கொத்து கொத்திட்டாங்க. என் ஆயுசுக்கும் மறக்க மாட்டேனே!
அதுக்கப்புறம் ஆயிரத்தில் ஒருவன் படம். எம்ஜிஆர் பட்டய கிளப்பி, லவங்கத்தை லவட்டி, சோம்பை சுவைத்திருப்பார். அதுல வர ஒரு காட்சிய தெனாலில ஜோ-தேவயானி-கமல் வெச்சு செமையா கலாய்ச்சு இருப்பாங்க.
2) கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
கடைசியா தங்கமணியுடன் சென்னை சத்யத்துல பாத்த சிவாஜி. பக்கத்துல தங்கமணி இருந்ததால ஷ்ரேயாவின் உணர்ச்சி கொப்பளிக்கும் நடிப்பை வாய்/மனம் எல்லாம் திறந்து பாராட்ட முடியாத துர்பாக்கியசாலி ஆயிட்டேன். குறிப்பா வாஜி! வாஜி! பாட்டுல ஒரு கட்டத்துல வாஜிஜிஜிய்ய்ய்!னு இழுப்பாங்க பாருங்க, அதுக்கே டிக்கட் காசு சரியா போச்சு.(இன்னிக்கு செமையா இருக்கு எனக்கு). :)
3) கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
இந்த கே டிவில நைட் போடற படத்த தான் பாக்கறது. கடைசியா பாத்தது தமிழ் செல்வன். இப்ப எல்லாம் கவர்மெண்டுக்கு எதிரா மக்கள் பொங்கி எழுற மாதிரி படங்களா போட்டு தாக்கறாங்க. என்ன நுண்ணரசியல்டா சாமி! மீடியான்னா சும்மாவா? மஞ்சள் மகிமை, மானாட மயிலாடன்னு ஆடிட்டு இருந்தா டப்பா டான்ஸ் ஆடிரும்.
4) மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
(கமல் நடித்த) நாயகன், சின்ன வயசுல தென்பாண்டி சீமையிலே! கேக்கும் போது என்னையறியாமல் கண்களில் கண்ணீர் வழிந்தது. அதுக்கப்புறம் 'தாரே சமீன் பர்' படத்துல அமீர் அந்த குழந்தையின் பெற்றோரிடம் பேசிட்டு வெளிய வருவாரு, அப்ப அந்த குழந்தைய காட்டுவாங்க, பொல பொலன்னு கண்ணீர் வந்ருச்சு. சே! தங்கஸ் பாத்தா நக்கல் வுடுவாங்களேன்னு நைசா துடச்சுகிட்டு அங்க பாத்தா, அம்மணியும் கண்ண கசக்கிட்டு இருக்காங்க. என்ன கொடுமை அமீர்? :)
5a) உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - அரசியல் சம்பவம்?
இருவர். அவரு கணக்கு கேட்டதும், இவரும் பேசாம, "மாநாட்டுக்கு வந்த மன்னார்சாமி அளித்த நன்கொடை நூறுபாய்ய்ய்!"னு கணக்கு காட்டிருந்தார்னா ப்ரச்சனையே வந்ருக்காதோ? சில கேள்விகள் கேள்விகளாகவே இருப்பது தான் நல்லது. என்ன சொல்றீங்க?
5b) உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?
கஜேந்திரா!ன்னு ஆஸ்காருக்கு தேர்வாக வேண்டிய ஒரு கேப்டன் படம். அதுல போலிஸா வர ராதாரவிக்கு கஜா எப்போ கேட்டாலும் ஒரு கோடாலிய தூக்கி வீச வேண்டியது ஒன்னு தான் பொறுப்பு. ஒரு சீன்ல நடு ஏரியிலிருந்து கிட்டதட்ட ரெண்டு கிமீ இருக்கும். கஜா இந்தா பிடி!னு கரையிலிருந்து நம்ம ராதாரவி கோடலிய வீசுவாரு பாருங்க! அடடா என்ன டெக்னாலஜி? என்ன கிராபிக்ஸ்? :)
சீரியசா பதில் சொல்லனும்னா, ஆளவந்தான்ல ரெண்டு கமலுக்கும் நடக்கும் கிளைமாக்ஸ் பைட் தான். ஒரு பைப்பை வெச்சுகிட்டு நந்து கமல் ரேஞ்ச் காட்டுவாரு. எந்த ஆங்கில படத்திலிருந்து சுட்டிருந்தாலும் அத அப்படியே இங்க காட்டற திறமை வேணுமில்ல?
6) தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
ஸ்கூல் படிக்கும் போது வாரமலர்ல வர சினிமா பொன்னய்யா "இந்த காரை சொப்பன சுந்தரி வச்ருந்தாக!" போன்ற கிசுகிசு படிச்ச நியாபகம். இப்ப சுத்தமா இல்லை. ஆமா, விஷாலுக்கும் நயனுக்கும் ஏதோ கிசுகிசுவாமே! நிசமா? ஏன் தான் என் வயிதெறிச்சலை கொட்டிகாறானோ இந்த விஷால்.
7) தமிழ்ச்சினிமா இசை?
கேட்பது உண்டு. பெரிய்ய்ய ஈடுபாடுன்னு ஒன்னும் சொல்றதுக்கு இல்லை. காலை ஏதும் ஒரு பாட்டை ஹம் பண்ண ஆரம்பிச்சா நைட்டு ஜுனியரை தூங்க வைக்கற வரைக்கும் அதே லைனை பாடறது பழக்கமா போச்சு.
கோக்க கோலா ப்ரவுனு கலருடா!
என் அக்கா பொண்ணும் அதே கலருடா!னு நேத்து பாடி ஜுனியரை தூங்க வெச்சேன்.
ஒரு ஜப்பனிய மொழி படம், 1942 ல அமெரிக்க விமானம் ஜப்பான்ல குண்டு போட பறந்து போகும். அந்த விமானி பட்டனை அமுக்கறத்துக்கு ஒரு நிமிஷம் முன்னடி தான் அவருக்கு நியூயார்க்குல குழந்தை பொறந்ருக்கு!னு நடுவானத்துல போன் வரும். இந்த நொடில போய் இப்படி ஒரு கொலபாதக செயல் செய்யனுமா?னு மனபோராட்டத்துல தவிப்பாரு. ஆனா கடைசில கடமை தான் பெரிசு!னு பட்டனை அமுக்கிடுவாரு. குண்டு நேரே ஒரு ஜப்பானிய பிரசவ ஆஸ்பத்திரில போய் விழும். ஒரு சோகமான ஜப்பானிய மொழி பாடல் பேக்ரவுண்டு மியூசிக்கோட படத்தை முடிச்சுடுவாங்க.
- மேலே சொன்ன மாதிரியெல்லாம் அள்ளி விட்டு லெவல் காட்டனும்னு எனக்கு மட்டும் ஆசையில்லையா? :)
என்ன செய்ய, என் உலதரம் எல்லாம் போன வாரம் போட்ட அனகோண்டா(ஆத்தாடி, எம்மாம் பெரிய்ய பாம்பு), முந்தின வாரம் போட்ட ஸ்பைடர்மேனோட தான் இன்னும் இருக்கு.
9) தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?
ஜென்டில்மேன் பட ஹுட்டிங்குக்கு நான் பத்தாவது படிக்கும் போது ஷங்கர் வந்தாரு.முதன் முறையா அப்ப தான் ஒரு படபிடிப்பை நேர்ல பாத்தேன். பாரதி படத்துல என் தம்பி ஒரு கேரக்டர் ரோல் செஞ்சான். மூனு நாள் படபிடிப்புக்கு மொட்டை எல்லாம் போட்டுகிட்டான். என் தூரத்து சொந்தகாரர் ஒருவர் வடபழனில துணை நடிகர் ஏஜண்டா இருக்கறதா அம்மா சொல்வாங்க. அவ்ளோ தான் நம்ம தொடர்பு.
துண்டை கக்கத்தில் வைத்து கொண்டு, "கும்படறேன் எஜமான்!" போன்ற நாலு பக்க வசனம் பேசி, நயந்தாரா கூட நடிக்க நான் தயாரா தான் இருக்கேன். ஒரு பயலும் கூப்ட மாட்டேங்கரான். இதுனால சினிமா துறை முன்னேறாதா என்ன?
10a) தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
கவலைகிடமா இருக்கு. இப்படியே பார்முலா படங்களும், "என் பின்னாடி டோட்டல் தமிழகமே இருக்கு!" போன்ற வசனங்களுமா வந்தா மக்கள் டிவிடில கூட படம் பாக்க பயப்படுவாங்க. நடக்கறத தான் காட்டுறோம்!னு சப்ப கட்டு எல்லாம் இனி செல்லாது. தமிழக டெக்னீசியன்கள் மூளகாரங்க. திரு, ரவிசந்திரன், சாபு சிரில், போன்றோரை வீணடிக்கற மாதிரி மொக்கை படங்கள் எடுக்ககூடாது.
10b) அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
ரொம்ப நல்லா இருக்கும். வாரம் மூனு பட விமர்சன பதிவுகளுக்கு பதில் கோலங்கள் அபியின் பேத்திக்கு காதுகுத்து!னு சிலர் பதிவு எழுதலாம். ஆனா துணை நடிகர்கள் எல்லாம் என்ன செய்வாங்களோ? அவங்களுக்கு எல்லாம் தினப்படி சம்பளம், பேட்டாவாமே! :(
எனக்கு தெரிஞ்சு எல்லா மக்களும் இந்த சங்கிலிய இழுத்தாச்சு.அதனால தமிழ்மண நிர்வாகிகளை இந்த டேக்கை எழுத கூப்ட்டுக்கறேன்.
பாவம்! தமிழ்மண நிர்வாகிகளை பாண்டிசேரி வாசக கண்மணிகள் கூட கூப்டலை. :)