Monday, May 25, 2009

இந்த பிளாக்கர்கள் தொல்லை தாங்க முடியலப்பா!

நானே ஒரு பிளாக்கரா இருந்தும் இப்படி ஒரு தலைப்பு வைக்க எனக்கு எப்படி துணிச்சல் வந்தது? அதான் இங்க பாயிண்டே!

டெல்லியிலிருந்து விடுமுறைக்கு பெங்களூர் வந்திறங்கிய முத்துலெட்சுமி அக்காவை பாக்க அலைகடலென கூட்டமான கூட்டம். அக்காவும் சளைக்காம பத்து மணிக்கு இங்க போண்டா, பதினோரு மணிக்கு அங்க கேசரின்னு வளச்சு வளச்சு ஒரே மீட்டிங்க். நேத்து கப்பன் பார்க்குல கூட ஒரு மாபெரும் பொதுக் கூட்டம். எனக்கு நெறைய வேலை இருந்ததால அக்கா ஆற்றும் உரையை கேட்க முடியாத அபாக்கியசாலி ஆயிட்டேன்.

எதுக்கும் முன்னாடியே ஒரு வார்த்தை சொல்லிடுவோம், இல்லாட்டி அடிப்படை உறுபினர் பதவியை பறிச்சுடுவாங்கன்னு போன் போட்டாச்சு. எதிர்முனையில் ஒரு பெண்மணி குரல் கேட்டது.

முத்துலெட்சுமி அக்கா இருக்காங்களா?

நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாமா?

இங்க தான் குழப்பமே! நெஜப் பெயரை சொல்லவா? பிளாக்கர் பெயரை சொல்லவா? சரி ரெண்டையும் சொல்லுவோம்னு சொல்லியாச்சு.

என் நிக்-நேமை கேட்டு எதிமுனையில் கொல்லுனு ஒரு சிரிப்பு சத்தம், கஷ்டப்பட்டு அவங்க சிரிப்பை அடக்கி கொண்டு,

"முத்து காலையிலேயே கிளம்பி போயிட்டாங்க, இப்ப சாப்டற நேரத்துக்கு வந்துடுவாங்க (அதானே!, அதெல்லாம் அக்கா கில்லாடி ஆச்சே!). ஏதேனும் மெசேஜ் சொல்லனுமா?"

இன்னிக்கு கப்பன் பார்ர்குல ஒரு மீட்டிங்க், அது விஷயமா தான், சரி நான் மறுபடி போன் பண்றேன்னு சொல்லி போனை வெச்சாச்சு.

சமீபத்தில் இலவச கொத்தனார் சென்னைக்கு வந்திருந்தார். நல்லா தூங்கி எழுந்திருக்கும் சாயங்கால வேளையில் அவரு எனக்கு போன் பண்ணி இருந்தார். என் தம்பி தான் போனை எடுத்தது.

யப்பா அம்பி! நான் ___ பேசறேன்பா!ன்னு அவரு நிஜப் பெயரை சொல்லி இருக்காரு.

என் தம்பி தூக்க கலக்கத்துல நீங்க யாருன்னு எனக்கு தெரியலையே!ன்னு சொல்லிட்டான்.

நான் தான்பா 'கொத்தனார்' பேசறேன்! - இலவசமும் விடறதா இல்லை.

கொத்தனாரா? நாம வீடு எதுவும் கட்டலையே?ன்னு சொல்லிட்டே போனை என்கிட்ட தந்ததால மேட்டர் அதோடு போச்சு.

என் பெயருக்கே இவ்ளோ சிரிப்பு. இதையே இப்படி நெனச்சு பாக்றேன்:

நான் தான் பரிசல்காரன் பேசறேன்,
ஜாலி ஜம்பர் பேசறேன், குசும்பன் பேசறேன்,
வெட்டிபயல் பேசறேன், கைபுள்ள பேசறேன்,
கெக்கேபிக்குணி பேசறேன், வால் பையன் பேசறேன்,
பலூன் மாமா பேசறேன், ஈர வெங்காயம் பேசறேன்,
உடன்பிறப்பு பேசறேன்.....

இன்னும் வேடிக்கையா நிறைய பிளாக்கர் பெயர்கள் டக்குனு எனக்கு நினைவுக்கு வர மாட்டேங்குது. முடிஞ்சா நீங்க யோசிச்சு பாருங்க.

ஒரு பிளாக்கர் வீட்டை சேர்ந்தவங்க இப்படி போன் கால் அட்டெண்ட் பண்ணினா எப்படி மண்டை காஞ்சு போவாங்கன்னு நெனச்சு பாத்தாலே சிரிப்பா வருதில்ல? :))