Monday, May 26, 2008

சரம் தெரியுமா சரம்?

சரம் என்றவுடன் உங்களுக்கு மல்லிகை சரம் நினைவுக்கு வந்தால் நீங்கள் நம் குசும்பன் போல சமீபத்தில் (அந்த சமீபம் இல்ல) திருமணம் ஆனவராக இருக்கலாம்.

சர வெடி நினைவுக்கு வந்தால் நீங்கள் கைப்புள்ளை, என்னை போல சமீபத்தில்(இப்பவும் அந்த சமீபம் இல்ல) தலை தீபாவளி கொண்டாடியவராக இருக்கலாம்.

சரம் என்றவுடன் சூடி கொடுத்த சுடர் கொடி நினைவுக்கு வந்தால் அடிக்கடி நம் 'பாசுரபுயல்' கேஆரெஸ் பதிவுகளுக்கு சென்று வந்தவராக இருக்கலாம்.


சரம் என்றவுடன் லலிதாம்பிகையின் புருவங்கள் தானே! என்று தோன்றினால் சாக்த சிரோண்மணி மதுரையம்பதி அவர்களின் பதிவில் தடுக்கி விழுந்தவராக இருக்கலாம்.

சரம் என்றவுடன் பச்சை கிளி முத்துச் சரம் என நீங்கள் பாடினால் நீங்கள் எம்ஜிஆர் ரசிகர். கரக்ட்டா? இல்ல, டக்குனு ஜோதிகா முகம் நினைவுக்கு வந்தால் பிறர் மனை நோக்கா பேராண்மையாளர் நீங்க தான். ஹிஹி.


இதை எல்லாம் மீறி அட வலை சரம்னு சொல்ல வேண்டியது தானே?னு நீங்க முணுமுணுத்தால் கைய குடுங்க. அதே தான்! இந்த வாரம் என்னை வலை சரத்துக்கு ஆசிரியரா இருக்க சொல்லிருக்காங்க. பாவம், அவங்க போதாத நேரம்!
ஏற்கனவே பல ஜாம்பவான்கள் (கரடினு எல்லாம் ஒன்னும் திட்டலப்பா) முத்திரை பதித்த இடம் அது. என்னை போன்ற தேங்காய் மூடி பாகவதர்களுக்கும் ப்ரைம் டைமில் நாரத கான சபாவில் தெரியாத்தனமா நேரம் ஒதிக்கிட்டாங்களோ?னு எனக்கே ஒரு சந்தேகம் இருக்கு.

ஆகவே ஒரு வாரம் அங்க தான், தினம் ஒரு பதிவு போடலாம்னு எண்ணம். எல்லோரும் வந்து வழக்கம் போல அட்சதை போட வேணும்னு கேட்டுக்கறேன்.

Monday, May 19, 2008

மைசூர் காவேரி எக்ஸ்பிரஸ்

சென்னை மத்திய புகைவண்டி நிலையத்தில்(சென்ட்ரல் ஸ்டேஷன்னு சொல்ல வந்தேன்) சிட்டு குருவி லேகியம் தவிர எல்லா கடைகளும் வந்து விட்டது. ஆனாலும் நிலையத்தின் தூய்மை என்னவோ இன்னும் விஜய் படங்கள் போல அதே நிலைமையில் தான் இருக்கு. சட்ட வட்டமாக நடுவில் உட்கார்ந்து கொண்டு தலைக்கு நாலு சப்பாத்தியும் சப்ஜியையும் குடும்பத்துக்கே பறிமாறி கொண்டிருந்தாள் ஒரு பரதேவதை.

ஸ்டேஷனில் இருக்கும் டிவிக்களில் அண்ணாச்சி கடையில் குளிர் அடிக்குது!னு யாரோ ஒரு நடிகை வாங்கிய காசுக்கு அள்ளி விட்டு கொண்டிருந்தார். (அந்த நடிகையின் பெயரை முடிந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும், சும்மா ஒரு பொது அறிவுக்கு தான். )

சென்னையில் அடிக்கும் வெய்யிலுக்கு அப்பளம் காய போட்டால் எண்ணெய் செலவின்றி பொரிந்து விடும் போலிருக்கு. 9.30க்கு தான் ரயில். எனக்கு கொஞ்சம் எப்பவுமே எச்சரிக்கை உணர்வு அதிகம். ஆனாலும் ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே வந்து தேவுடு காப்பது எல்லாம் எனக்கே டூ மச்சாக இருந்தது. ஏற்கனவே பிளாட்பாரத்தில் வண்டி நின்று கொண்டிருந்தாலும், எனக்கு வண்டிக்குள்ளே போக இஷ்டமில்லை. சும்மாவே நம் மக்களுக்கு பேசறத்துக்கு காசு கொடுக்கனும். அதிலும், அறிமுகம் இல்லாதவர்களிடம், அது சன் பீஸ்ட் பிஸ்கோத்து விக்கும் சூர்யாவா இருந்தா கூட பேச்சு வெச்சுக்காதீங்கனு மைக்கில் அறிவித்து இருந்தபடியால், சுமாராக சூர்யா போல் இருக்கும் என்னை (சரி, இதுக்கே துப்பினா எப்படி?) சந்தேகமாகவே பார்க்கும் வாய்ப்புக்கள் இருக்கறபடியால், எதுக்கு வம்பு?னு சரியாக 15 நிமிடத்துக்கு முன்னாடி தான் வண்டியில் ஏறினேன்.

ரயிலில் தனியாக, அதுவும் என்னை போன்ற ஏமாந்த சோனகிரிகள் பயணித்தால் எப்படி தான் கூட இருப்பவர்களுக்கு தெரியுமோ?
"எச்சூஸ்மி! நாங்க பேமிலியா வந்ருக்கோம். என் மச்சினி மட்டும் 10ம் நம்பர் சீட். கொஞ்சம் மாத்திக்க முடியுமா?னு சொல்லி அந்த சீட்டை தள்ளி விட்டு விடுவார்கள். அங்க போனா உச்சா வாடை புரட்டி எடுக்கும். கூட பயணிக்கும் சதாவை பார்க்காமல் டாய்லைட்டை பார்த்து டிடிஆர்ர்ர்ர்ர்!னு தொண்டை கிழிய கத்றத்துக்கு நான் என்ன அன்னியன் படத்து அம்பியா என்ன?

நல்ல வேளை இந்த தடவை அந்த மாதிரி ஒன்னும் நடக்கலைனு நான் பெறுமூச்சு விடுமுன் தொப்பி போட்ட ஒரு தடியன் (மிடில் பர்த்தாம்)மெதுவாக தொண்டையை கனைத்தான். நானும் என் பிரண்டும் சேர்ந்து வந்துருக்கோம். அதனால....
(பெரிய துரியோதனனும் கர்ணனும்) நானும், என் பிரண்டு கூட தான் வந்ருக்கேன்! அதனால... அதே பிட்டை அவனுக்கே போட்டதில் கடுப்பாகி போனான். ஆனால் இன்னொரு லோயர் பர்த்த்காரனை சரி கட்டி இடத்தை பிடித்து விட்டான்.

இந்த பெங்களுர் டிரெயினில் பயணிப்பவர்களை மிக எளிதாக கண்டு கொள்ளலாம்.

ஆண்கள் எல்லோரும் டவுசர் பாண்டிகளாக இருப்பார்கள். தோளில் ஏதேனும் கேக்ரான்-மோக்ரான் சாப்ட்வேர் கம்பனி ப்ரீயா குடுத்த பை இருக்கும். இடது கையில் கண்டிப்பாக ஒரு பிஸ்லரி பாட்டில் இருக்கும், வலது கையில் காமிரா மொபைல் (யாருக்கு தான் பேசுவார்களோ?). ஏதேனும் ஒரு காதில் கடுக்கன், ஈயம் பித்தளையில் தேள் டாலர் போட்ட செயின் கண்டிப்பாக இருக்கும்.

அம்மணிகளை பத்தி சொல்ல வேண்டியதில்லை. சென்னையில் மீரா சீயக்காய் போட்டு வளர்த்த கூந்தலை, பெங்களுரில் கழுதை வால் மாதிரி வெட்டி இருப்பார்கள் என்பதோடு நிறுத்தி கொள்கிறேன். முக்யமா எல்லோரும் இ-டிக்கட் தான் வைத்து இருப்பார்கள்.

ரயில் புறப்பட்டு பத்து நிமிடத்தில் பரிசோதகர் நீல நீற கோட்(இந்த வெய்யிலில் எப்படி சார்?) அணிந்து வந்தார். ஒழுங்கா இ-டிக்கட்டுக்கு ஐடி கார்டு எடுத்து வைங்க!னு கறாராக சொல்லி விட்டார். அதோடு நிற்கவில்லை, இந்த சீட் எக்ஸ்சேஞ்ச் மேளா நடத்திய தொப்பிகாரனை ஒழுங்கா அவன் சீட்டுக்கே போக சொல்லிவிட, கம்பார்ட்மெண்ட் முழுக்க பலபேர் குறுக்கேயும் நெடுக்கேயும் போக ஆரம்பித்து விட்டனர். எல்லோரும் இடம் மாத்தி இருக்காங்க போலிருக்கு.

வாலு போச்சு! கத்தி வந்தது டும்! டும்! டும்! போல தனக்குரிய சீட்டுக்கு ஜீன்ஸும், டிஷர்ட்டும் அணிந்த பெண் வந்து சேர்ந்தாள். ஒட்டு கேட்கும் பழக்கம் எல்லாம் எனகில்லை, காத்து வாக்கில் டிடிஆரிடம் சொன்ன போது விழுந்தது, பெயர் கூட ஏதோ பூஜாவாம்.

சரி, இந்த டிடிஆர் செஞ்சது கரக்ட்டா? அதாவது கராறாக ரூல்ஸ் ராமானுஜமாக இருந்ததை சொல்றேன். மக்களுக்காக தான் ரூல்ஸ்!னு நினைக்கறீங்களா? இல்ல ரூல்ஸுக்காக தான் மக்கள்!னு நினைக்கறீங்களா? வளர்ச்சியடைந்த நாடுகளில் எல்லாம் மக்கள் சட்டத்தை மிகவும் மதிக்கிறார்கள், பொது இடத்தில் குப்பை போடாமல் இருப்பது, துப்புவது போன்றவை. சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால் மக்கள் நம்மூரிலும் சட்டத்தை மதிப்பார்களா? இதை பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?

டிஸ்கி#1: கடைசி பாரா தான் மாரல் ஆப் தி பதிவு. :)

டிஸ்கி#2: அப்புறம் பூஜா பற்றிய பிற தகவல்களை அடுத்த பதிவுல சொல்லுவியா அம்பி?னு பின்னூட்டம் எல்லாம் போட கூடாது. :))

Tuesday, May 13, 2008

இந்த நாள் உன் காலண்டர்ல குறிச்சு வெச்சுக்கோ!

பதினாலு மே 2007

அக்னி நட்சத்திர வெய்யிலையும் பொருட்படுத்தாது வந்திருந்த கூட்டம் குளிரூட்டபட்டு இருந்த அந்த மண்டபத்தில் பிதுங்கியது. ஒன்பதரைக்கு முகூர்த்தம் ஆரம்பம் என்பதால் காலையில் இட்லி, மசால் தோசை, நெய் வழுக்கிய கேசரியை சுகமாய் உள்ளே தள்ளி விட்டு சாவகாசமாய் வம்படித்து கொண்டிருந்தனர் பல மாமாக்கள்.

மண மேடையில் ஒன்னுமே சாப்பிடாம உட்கார்ந்து இருக்கும் மாப்ளையையும், பெண்ணையும் மிலிட்டரி டிரில் வாங்கி கொண்டிருந்தனர் இரு வீட்டு புரோகிதர்களும். நெக்லஸ் புதுசா? செவப்பு கல் வெச்ச தோடு போட்டு இருந்தா உனக்கு இன்னும் எடுப்பா இருந்திருக்கும்! ஆம்படையான்ட சொல்லி இந்த தீவாளிக்கு வாங்கிக்கோ! என யாரோ ஒரு அப்பாவி ரங்குவுக்கு ஆப்படித்து கொண்டிருந்தார் ஒரு மாமி.

டிரவுசரை அவுத்து கொண்டு "டாடி! அலம்பி விட வா! என திருவாய் மலர்ந்து அவசரமாய் ஓடிய தன் மூணு வயது தவபுதல்வனை பின் தொடர்ந்து ஓடி கொண்டிருந்தார் இன்னொரு அப்பாவி ரங்கு. வாங்கிய காசுக்கு வஞ்சனையில்லாமல் "வள்ளி கணவன் பெயரை வழிப்போக்கன் சொன்னானடி!"னு அட்ரஸ் விசாரித்து கொண்டிருந்தார் நாதஸ்வர வித்துவான்.

பாச மலர் சாவித்திரியின் தோழிகள் ரேஞ்சுக்கு ஐந்து நிமிஷத்துக்கு ஒரு முறை கலகலவென சிரித்து, தம் டிஜிட்டல் காமிராவில் தம் தோழியை பதிந்து கொண்டிருந்தனர் மணபெண்ணின் தோழிகள். உன்னை பாத்து ஒன்னும் சிரிக்கலை, நீ வேஸ்ட்டா அசடு வழியாதே!னு மாப்ளையின் தம்பி தன் பங்குக்கு கடுப்பேத்தி கொண்டிருந்தான்.

இதோ அந்த தருணம் வந்து விட்டது. அண்ணாமலையில் ரஜினி சரத்பாபுவை பாத்து சொல்வாரே!

ஆபிஸ்ல வேலை இல்லாத போதும் நைட் பத்து மணி, பதினோரு மணி வரை வெட்டியா(அய்ய, வெட்டி பாலாஜி உங்கள இல்ல) சீட்ட தேய்ச்சுட்டு ஒவ்வோரு மொக்கை பதிவா போய், பின்னீட்டீங்க அண்ணே! கலக்கிடீங்க அக்கா! அங்க தான் நீங்க நிக்கறீங்க போங்க! ரீப்பீட்டேய்ய்!னு பின்னூட்டம் போட்டுட்டு வர உன்னை,

ஆபிஸ் கேண்டீன், ஓட்டல்னு வெந்ததையும் வேகாததையும் சாப்பிட்டு காலம் தள்ற உன்னை,

பக்கத்து சீட்டு ரசகுல்லா கிட்ட பெங்காலி, எதிர் சீட்டு பஞ்சாபி கிட்ட ஹிந்தி,அடுத்த சீட்டு திருச்சூர் குத்து விளக்குகிட்ட மலையாளம்னு சம்சரிச்சுட்டு இருக்கற உன்னை

ஒரு பொறுப்புமிக்க ரங்குவாக, இட்லிக்கு மாவு பதம் தெரிந்த ஒரு ரங்குவாக, பூரிகட்டையின் நீளம், பருமன், அகலம் தெரிந்த ஒரு ரங்குவாக மாத்தி காட்டறேன்!

இந்த நாள் உன் காலண்டர்ல குறிச்சு வெச்சுக்கோ!

அக்னியை சாட்சியாக வைத்து, பொன் தாலியை மணபெண்ணின் கழுத்தில் கட்டியவுடன் அந்த பெண், இந்த அப்பாவி பையனை பார்த்த பார்வையின் விளைவே இந்த பதிவு. காலம் யாருக்காகவும் நிற்பதில்லை.

மே 15 இன்று தமது திருமண நாளை கொண்டாடும் பிளாகேஸ்வரி அக்காவுக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.

Friday, May 09, 2008

சென்ஷி அண்ணணுக்கு ஒரு கடிதம்(09/05/2008)

//இது சும்மா இட்லிக்கு மாவு ஆட்டிக்கொடுத்துட்டு சாப்டப்புறம் பாத்திரம் கழுவி வைக்குற வேலை இல்ல.. பின்னூட்டம்.//

இட்லிக்கு மாவட்டறதுன்னா சும்மா இல்ல, முந்தின நாளே சரியா எட்டு மணி நேரத்துக்கு முன்னாடி அரிசிய ஊற போட்டனும், 1 மணி நேரத்துக்கு முன்னாடி உளுந்த ஊற போடனும். அதுவும் கருப்பு உளுந்தா இருந்தா களையற வேலை வேற எக்ஸ்ட்ரா.


அப்புறம் இஷ்ட தெய்வத்தை கும்பிட்டு(அட இட்லி பஞ்சு போல வரனும் இல்ல) கிரைண்டரை முதல்ல லேசா கழுவி, மெதுவா ஓட விட்டு கொஞ்சம் கொஞ்சமா அரிசிய முதல்ல போடனும். உளுந்த போட்டா மாவு காலி. மொத்தமா அரிசிய அரைக்க போட்டா கிரைண்டர் சண்டித்தனம் பண்ணி நின்னுடுமாக்கும். நான் சொல்றது சாய்வு வகை கிரைண்டர். குழவி கல்லு கிரைண்டர்னா எடுத்து அலம்பி வைக்கறதுக்குள்ள தாவு தீர்ந்துடும். பத்து நிமிஷத்துக்கு ஒரு முறை கொஞ்சம் கொஞ்சமா தண்ணி விடனும். நைசா வரனுமில்ல.

நாப்பதஞ்சு நிமிஷம் அரச்ச பிறகு அரிசிய வழிச்சு எடுக்கனும்.


அப்புறம் உளுந்து. ஓவரா தண்ணி காட்டினா நாள் முழுக்க நீங்க உளுந்து மட்டும் தான் அரச்சுட்டு இருக்கனும். சன் மீயூசிக்குல ஹேமா சிம்ஹாவை பாத்து மெய் மறந்து, தண்ணி விட மறந்தீங்கன்னா கிரைண்டரில் இருந்து உளுந்து உருண்டை எடுக்கலாம்.

இத எல்லாத்தையும் விட மெயின் மேட்டர், நீங்க மாவாட்டும் சுபயோக சுப நேரத்தில் மின்சாரம் இருக்கனும். நடுவுல புடுங்கிகிச்சுனா மின்சாரம் வர வரைக்கும் தேவுடு காக்கனும். டிவியும் பாக்க முடியாது. ரீப்பீட்ட்ட்யேயும் போட முடியாது.


அப்புறம் தான் மெயின் மேட்டர்:
சரியான விகிதத்துல உப்பு போடனும். எல்லாம் முடிஞ்சு உடனே தூக்கி பிரிஜ்ஜுல வெச்சுடகூடாது. அரை நாள் வெளியே வெச்சா மாவு பொங்கி பாத்ரம் நுனி வரை வரும். அதனால் கொஞ்சம் பெரிய பாத்ரத்துல தான் மாவை சேமிச்சு வைக்கனும். இல்லாட்டி வீட்டை மறுபடி சுத்தம் பண்ற வேலை வேற.

அடுத்த நாள் இட்லி வார்க்கும் படலம் ஆரம்பமாகுது.

இட்லி அடுக்குகளில் லேசா நல்லேண்ணைய தடவிட்டு, ஒரு கரண்டி மாவை விட்டு, கேஸ் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து விட்டு இப்ப நீங்க டிவி பாக்கலாம். அவசரபட்டு முன்னாடியே இட்லி அடுக்கை தொறந்தா அரிசி மாவு களி தான் கிடைக்கும், இட்லி கிடைக்காது.

இப்ப சொல்லுங்க, கஷ்டப்பட்டு மேட்டர் சேகரிச்சு டாமேஜர் இல்லாத நேரமா பதிவ தட்டி, பின்னூட்டத்துக்கு தேவுடு காத்து கிடந்தா, நீங்க சாவகாசமா வந்து வெறும் ரீப்பிட்டேய்ய்ய்ய் (இதுக்கு தமிழாக்கம் எல்லாம் மிக அருமையா மிஸ்டர் புதசெவி குடுத்து இருக்காரே, பாக்கலையா?) மட்டும் போட்டுட்டு போவீங்களாக்கும்? எந்த ஊர் நியாயம்ண்ணே? :))

டிஸ்கி#1: இந்த பதிவின் உட்பொருள், வெளிபொருள் எல்லாம் கேட்டு குடைய கூடாது.
டிஸ்கி#2: இதுக்கும் மேல ஏதாவது சந்தேகம்னா கைபுள்ளையை தொடர்பு கொள்ளவும். :))

Wednesday, May 07, 2008

ஐபிஎல் கிரிக்கெட்

இந்த ஐபிஎல் கிரிக்கெட் வந்தாலும் வந்தது, ஆபிஸ்ல ஒரே கும்பமேளாவா இருக்கு. அதுவும் பெங்களூரில் பல மாநில மக்கள் ஒன்றாக(?) ஒரே கம்பனியில் வேலை பார்க்கும் நிலையில், அவனவனுக்கு தம் சொந்த ஊர் பாசம் பீறிட்டு(பீர் இட்டுனு வாசிக்கபடாது) கிளம்புகிறது.

இப்ப எங்க ஆபிஸ்லயே பாருங்களேன்:

1) ரசகுல்லா டீம் (ஆமா பெங்காலி ரசகுல்லாஸ் தான்)
2) சப்பாத்தி டீம் (எல்லா வட இந்திய மா நிலங்களும் அடக்கம்)
3) வடா பாவ் டீம் (மாராத்தி டீம்)
4) கொல்டி டீம்
5) கப்பகெழங்கு டீம் (என்டா ஆயில்ய சேட்டா! முழிக்கினது?)
6) காவிரி டீம் (அவங்களே தான்)
7) சாம்பார் இட்லி டீம் (இட்லி வடை இல்லப்பா! நாமே தான்)
8) பஞ்சாப் குதிரைகள் டீம் (எல்லா குதிரகளுமே கிட்டதட்ட ஆறு அடி எழுபது கிலோவுங்கோ)

இதுல ஒருத்தருக்கு ஒருத்தர் அனுசரணையா, ஆதரவா (பிராஜக்ட்டுல தான்) இருந்து வந்த நிலையில் இந்த ஐபிஎல் மொத்தமா ஆப்படித்து விட்டது.

ஏய்! ரூவாய வாங்கிட்டு என்னடா உங்க ஆளு விளையாடவே வர மாட்டேங்கறாரு?னு கப்பகிழங்கு மும்பையை கேட்க,

உங்க ஆளு குமட்டுலயே குத்தினான் பாரு பஞ்சாப்! பேச வந்துட்டாங்க இவங்க!னு பதிலுக்கு தாக்க,

ஆனாலும் ஒரு குத்துக்கு மூணு கோடி! டூ மச்! சர்தாஜிகளால தான் முடியும்!னு கொல்டி குதிரைய வம்புக்கு இழுக்க,

வேணாம்டா உனக்கு! பஞ்சாப் அடி வாங்கனும்னு ஆசையா?னு கொல்டி அட்வைஸ் பண்ணினான்.
(ஏற்கனவே எசகுபிசகா வாங்கி இருப்பான் போல!)

நாலு மேட்ச் வரிசையா ஜெயிச்சதை பாத்து ஏமாந்து போய், "கும்தலக்கடி கும்மாவா? இட்லி சாம்பார்னா சும்மாவா?"னு நாம கடுப்பேத்தியது, இப்ப வரவன் போறவன் எல்லாம் அவ்ளோ தானா?னு துக்கம் விசாரித்து விட்டு போகிறான்.

ஆனா ஒரு விஷயத்துல எல்லோரும் ஒத்துமையா இருக்காங்க.

ஐபிஎல்லுல டிராவிட் தலைமையில் டெஸ்ட் மேட்ச் உங்களால் மட்டும் தான்டா ஆட முடியும்!னு காவிரிகாரங்களை ஓட்டு ஓட்டுனு ஓட்டி தள்றாங்க. அதே சமயம், விஜய் மல்லையாவின் தாராள குணத்தை பாராட்டாத ஆட்களே கிடையாது.

பின்ன, இவ்ளோ காசு செலவழிச்சு வெளிநாட்டுல இருந்து இல்ல கரகாட்ட செட்டை வரவழைச்சு இருக்கார்.

அடடா! என்ன ஆட்டம்! என்ன சுறுசுறுப்பு! :)

Wednesday, April 30, 2008

ரங்கமணி Vs கிச்சன்

இந்த பெண்கள் மத்த விஷயங்களில் 33 சதவித இட ஒதுக்கீடு கேட்டாலும், கிச்சன் சமாசாரங்களில் ஆண்களை ஒதுக்கியே வைத்து நூறு சதவிதத்தையும் தம்மிடமே வைத்துள்ளனர். இரண்டு நாள் தங்கமணிகள் பிறந்த வீட்டுக்கு போவதாக இருந்தாலும், நீங்க ஓட்டலில் பாத்து கொள்ளுங்கள்! தேவையில்லாம கிச்சன்ல நுழைய வேணாம்!னு ஒரு அபாய எச்சரிக்கை செய்து விட்டு தான் பெட்டியை தூக்குவார்கள். நாமளும், அவங்க சொன்ன சொல்லை மீறாம திக்கற்ற ரங்குகளுக்கு தெருவோர ஓட்டலே கதி!னு சரணடைவோம்.

சமையல் ஒன்னும் பெரிய கம்ப சூத்திரம் இல்லை!னு முதலில் நாம் நம்ப வேணும். மனுஷனுக்கு நம்பிக்கை தான் முக்யம். சாதரணமா நாம காலையில் எழுந்தவுடன் ஒரு காப்பி, அப்புறமா ஏதேனும் ஒரு டிபன், மதியம் லஞ்சுக்கு என்ன பெரிசா இருக்க போவுது, ஒரு காய், சாம்பார் அல்லது ரசம், தயிர், முடிந்தால் ஒரு அப்பளம்/வடகம் இவ்ளோ தான் மேட்டர். இதுக்கு போய் பயப்படனுமா என்ன?

இதோ நானும் கோதாவுல குதிச்சாச்சு. காலை எழுந்து பல் தேய்த்தவுடன் அடுத்தது காப்பி தானே. அடடா! காப்பி வேணும்னா முந்தய நாளே பால் கூப்பன் வெச்சு இருக்கனும். ஐபிஎல் மேட்சுல கிரிக்கெட்டை (மட்டும்) ஆ!னு வாய் பிளந்து இரவு பதினோரு மணி வரை பாத்ததில் பால் கூப்பன் வைக்க மறந்தாச்சு. சரி விடுங்க, காப்பி குடிக்காதவங்க எவ்ளோ பேர் உலகத்துல இருக்காங்க.

டிபன் கடைக்கு போவோம். நேத்திக்கே மாவாட்டி வெச்சதுனால தோசை ரெடி பண்ணிடலாம். குடுகுடுனு போய் தோசைக்கல்லை கேஸ் அடுப்புல வெச்சதுக்கு அப்புறம் தான் நினைவுக்கு வருது, மாவு இன்னும் பிரிஜ்ஜுல தான் இருக்கு, அதை ஒரு பத்து நிமிஷம் வெளில எடுத்து வைக்கனுமே! சரி அதுவும் பண்ணியாச்சு.

தோசை வார்க்க எண்ணெய் வேணுமில்ல. நல்லெண்னையா? ரீபைண்ட் ஆயிலா? ஒரு மனுஷனுக்கு என்னவெல்லாம் சந்தேகம் வருது? நல்லெண்னையா தான் இருக்கும். ஆமா! ஜோதிகா கூட தோசைக்கு ஒரு கப் இதயம் நல்லெண்ணை தானே விடறாங்க. அடடா அம்பி! என்னே ஒன் பொதுஅறிவு! ஆமா! நம்மை நாம் தான் முதலில் மெச்சிக்கனும். சமைக்கும் போது அது ரொம்ப முக்யம்.

அட, தோசை வாக்க சட்டுவம் வேணுமில்ல. (ம்ஹும், மறக்க கூடிய பொருளா அது?)
பொதுவாக எல்லோர் வீட்டு கிச்சனும் ஒரு அலிபாபா குகை மாதிரி தான். தங்கமணி "திறந்திடு சீசேம்!னு சொன்னா தான் எல்லா பொருளும் நம் கண் முன்னால் வரும் போலிருக்கு. அது எப்படிங்க தங்கமணிகள் அவங்களுக்கு மட்டும் தெரியும்படியா ரசபொடியிலிருந்து, பெருங்காயம் வரைக்கும் மறைச்சு வெக்கறாங்க. நம்ம கண்ணுக்கு ஒன்னுமே தெரிய மாட்டேங்குது. எல்லாம் காலகாலமா ஆண்களுக்கு எதிரா நடந்துட்டு வர கூட்டு சதி.

கிச்சனையே ஒரு புரட்டு புரட்டி, ஒரு வழியா சட்டுவத்தை பார்த்ததும், "கண்டேன் சட்டுவத்தை!"னு துள்ளி குதிக்காத குறை தான்.
ஒரு வழியா கல்லுல தோசை விட்டாச்சு. அட! காலைல சன் மியூசிக்குல வர அந்த மஹாலட்சுமிய( நிஜ பெயரும் அது தான்) பாக்கலைனா இந்த நாள் எப்படி இனிய நாளாகும்? அடடா! அடடா! என்ன நளினம், என்ன தமிழ் உச்சரிப்பு!

தோசைய திருப்பி போடனுமில்ல? திரும்பி வந்து பாத்தா தோசை கலரும், தோசகல்லு கலரும் ஒன்னா இருக்கு. சே! அடுத்த தோசைல கவனமா இருக்கனும். காலைல சன் மியூசிக்குல இனிமே கந்த சஷ்டி கவசம் மட்டும் தான் ஒலிபரப்பனும்!னு சட்டம் கொண்டு வரனும். ரெண்டாவது தோசை கல்லை விட்டு வர சண்டிதனம் பண்ணியதில் கொத்து பரோட்டாவாக மாறி இருந்தது.

சரி, இப்ப என்ன ஆகி போச்சு? எல்லாரும் என்ன ஒரு முழு தோசைய ஹார்லிக்ஸ் மாதிரி, அப்படியேவா சாப்டறாங்க? பிச்சு பிச்சு சாப்டற வேலை மிச்சம்.

இனிமே லஞ்சுக்கு போவோம்.
கேஸ் அடுப்புல ஒரு சைடு குக்கர வெச்சு, இன்னொரு சைடுல பீன்ஸை வதக்கி, கொஞ்ச நேரம் கழிச்சு பருப்பை கரச்சு ஊற வெச்ச புளியோட கொதிக்க விட்டா சாம்பார் ரெடி. முடிஞ்சது சமையல்! அப்படினு நான் இங்க ஒரு பாராவில எழுதற மேட்டர் இல்லைனு பிறகு தான் புரிஞ்சது.

பீன்சை முந்தின நாளே நறுக்க வேண்டி இருக்கு, புளிய முன்னாடியே ஊற போடனும் போல, குக்கருக்கு மறக்காம காஸ்கட் போட வேண்டி இருக்கு. ஒரு நாள் அரிசிக்கு தண்ணிய குறைச்சா சரியா வரலைனு, மறு நாள் தண்ணிய கூட்டி வெச்சா சுட சுட பொங்கல் வருது. ஸ்ஸ்ப்ப்பா!
வருஷ கணக்குல இத எல்லாம் பொறுமையா செஞ்சு, நாம குடுக்கற பின்னூட்டத்தையும் வாங்கிட்டு, எப்படி தான் பெண்கள் பொறுமையா இருக்காங்களோ?

இங்க அம்பி! அம்பினு ஒரு மானஸ்தன் இருந்தானே? எங்கப்பா அவன்?னு நீங்க கேக்கறது நல்லா காதுல விழுது.
*************************************************
இந்த இடுகையும் இரண்டு போட்டிக்கு தான்!

Tuesday, April 29, 2008

தீதும் நன்றும்...


டிஸ்கி ஒன்னு: இந்த கதையில் வரும் பெயர்கள்,சம்பவங்கள் யாவும் கற்பனையே!

காட்சி ஒன்று:

புகழேந்திக்கு மிகவும் படபடப்பாக இருந்தது. ஆளுங்கட்சியில் ஒரு முக்ய பொறுப்பில் இருந்தாலும், அவனுக்கு இந்த இரண்டாம் நிலை தலைவர்கள் என்ற பட்டம் பிடிக்கவில்லை. அதுலயும் தன்னை விட வயதிலும் அனுபவத்திலும் முதிந்தவர்கள் பலர் இருக்கிறார்களே! என்ற ஏக்கம் பெருமூச்சாக வெளி வந்து கொண்டிருந்தது. ஏதேனும் செஞ்சே ஆகனும்!

மருத்துவர், முதல்வர் அறையிலிருந்து வெளிவருவதை பார்த்து, அரக்க பரக்க முக்ய தலைகள் ஓடினர்.

தலைவருக்கு ஒன்னும் ஆபத்தில்லையே?

ஒன்னும் சொல்றதுக்கில்லை, இருபத்தி நாலு மணி நேரம் கழித்து தான் எதுவும் சொல்ல முடியும். என்னால முடிஞ்சத எல்லாம் செஞ்சு இருக்கேன். பார்ப்போம்! மருத்துவர் நகர்ந்து விட்டார்.

மருத்துவரின் பேச்சு பெருந்தலைகளுக்கு காத்து புடுங்கி விட்டது போல ஆனது. ஒருவர்பின் ஒருவராக கலைய தொடங்கினர்.

புகழு! இதவிட்டா அடுத்து ஒரு வாய்ப்பு கிடைக்காது. சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கோ! என உள்மனம் சொல்ல, "அய்யகோ! தமிழகத்தின் தலைமகன் தலையணை இல்லாமல் உறங்குவதா?" என கதறியபடியே முதல்வர் அறைக்குள் சென்ற புகழை மெய்காவலர்கள் தடுக்க வில்லை.

நாற்பது வருடங்களுக்கு பிறகு,

காட்சி இரண்டு:

முதல்வர் வீட்டுக்கு வெளியே வட்டம், மாவட்டம் என எல்லாம் ஒன்று கூடி ஒரே சலசலப்பு.

முறைப்படி, மூத்தவர் தானே ஆட்சிக்கும் வாரிசா வரனும்?

என்னயா முறைப்படி? இரண்டாமவர் தான் கட்சிக்கு எல்லாம். எல்லா தொகுதி பணிகளையும், மாநாட்டையும் இவரு தான் முன்னின்னு நடத்தறாரு. அப்ப எல்லாம் வராத மூத்தவரு இப்ப எங்கயா வந்தாரு? ஒரு வட்டம் தன் விசுவாசத்தை காட்டியது.

மூக்கு ஒழுகிட்டு இருந்தவங்க எல்லாம் முச்சந்தில மேடை போட்டு பேசினா முதல்வராகிட முடியுமா? தென் மாவட்ட ஆதரவு இல்லாம தமிழகத்துல எவனும் ஆட்சி அமைக்க முடியாது. எங்க அண்ணன் கன்ட்ரோலுல இருக்கு டோட்டல் தென்னகமே! அது தலைவருக்கும் தெரியும். தல இருக்கும்போது வாலாட கூடாது. ஒரு மாவட்டம் பதிலுக்கு வாலாட்டியது.

இந்த சூடான விவாதங்களை எல்லாம் மாடியிலிருந்து கேட்டபடியே நம்பர் இரண்டு, முதல்வர் அறைக்கு நுழைந்தது.

என்ன டாக்டர்? இப்ப எப்படி இருக்கு தலைவருக்கு?

தலைவர் நிறைய ரெஸ்ட் எடுக்கனும். இப்பவும் தலைவர்னு தான் கூப்டனுமா? அப்பானு சொல்ல கூடாதா? டாக்டர் சரியான நேரத்தில் பிட்டு போட்டார். மருத்துவ கல்லூரிக்கு அப்ரூவல் வாங்கியாகனுமே!

இல்ல டாக்டர், அவர் இந்த நாட்டுக்கே தலைவர், அப்புறம் தான் எங்களுக்கு எல்லாம் அப்பா.

சரி தம்பி, நான் கிளம்பறேன், ஏதாவது தேவைனா போன் பண்ணுங்க.

இருவரின் சம்பாஷணைகளை கேட்டு புன்முறுவல் பூத்த தலைவர்,

தமிழ் மூன்றேழுத்து!

தம்பி மூன்றேழுத்து!

அன்பு மூன்றேழுத்து!

கட்சி மூன்றேழுத்து!

வெற்றி மூன்றேழுத்து!

வீரம் மூன்றேழுத்து!

யோவ்! அல்வா கூட மூன்றேழுத்து தான்! இப்ப எதுக்கு இந்த பிட்டு? இப்பவே என்னை அடுத்த வாரிசு!னு அறிவிக்கனும், இல்ல நடக்கறதே வேற.

ஆத்திரம் அறிவுக்கு பகை தம்பி! பொதுகுழு கூடி ஒரு நல்ல முடிவு எடுக்கும். அதுவரை காத்திரு!
கழகம் காத்து இரு!
பொறுமை கூட மூன்றேழுத்து தான் தம்பி! (புகழேந்தியா கொக்கா? )

கடுப்புடன் நம்பர் இரண்டு, அறையை விட்டு வெளியேறியதும் நம்பர் ஒன் வந்து சாமியாடிவிட்டு, அதே பதிலை வாங்கி கொண்டு கடுப்புடன் வெளியேறியது.

நடு நிசியில், "அய்யகோ! தமிழகத்தின் தலைமகன் தலயணை இல்லாமல் உறங்குவதா?னு கூவியபடியே நுழைந்த நம்பர் ஒன்னையும், இரண்டையும், முதல்வரின் மெய்காவலர்கள் ஏனோ தடுக்க வில்லை.

டிஸ்கி இரண்டு: டிஸ்கி ஒன்னை மறுபடியும் படித்து விட்டு பின்னூட்டத்துக்கு செல்லவும்.
*************************************************
இந்த இடுகையும் ரெண்டு போட்டிக்கு தான்.

Monday, April 21, 2008

தமிழ் Vs உதித் நாராயண்

எந்த மொழி பாட்டானாலும் அந்த பாடல் ஹிட்டாக மூன்றே காரணங்கள் தான் இருக்க முடியும். ஒன்னு அந்த பாடல் வரிகள், இரண்டு பாடல் வரிகளை அமுக்காத இசை, மூணு அந்த பாடலை பாடிய பாடகரின் தனிதிறமை. நான்காவதாய் படமாக்கிய விதத்தையும், அதில் நடித்த நடிக/ நடிகையரின் திறமையை சேர்த்து கொள்ளலாம், என்றாலும் அது இரண்டாம் பட்சமே!
என்ன தான் கவிஞர் சிறப்பாக எழுதினாலும், இசை கருவிகள் அந்த வரிகளை அமுக்கி விட்டால் அந்த பாடலின் கதி கோவில் திருவிழாவில் கொட்டு சத்தத்துக்கு இடையில் வில்லுபாட்டு மாதிரி தான். இதற்க்கு சரியான உதாரணம் சிவாஜியில் வரும் ஒரு கூடை சன் லைட் பாட்டு. அதில் அந்த பாடகர் ஒரு வாரமாய் ரெண்டுக்கு வராமல் நயம் மலவாழபழம் நான்கை உள்ள தள்ளி விட்டு, இரண்டு டம்ளர் தண்ணீரையும் குடித்து விட்டு டாய்லட்டில் பிரம்மபிரயத்தனம் செய்யும் போது ஏ.ஆர்.ரஹ்மான் ரீரெக்கார்டிங்க் வைத்திருப்பார் போலும். ரொம்பவே மெனக்கெட்டிருப்பார் பாவம்.

பிற மாநில பாடகர்களை வைத்து தமிழ்பாடல்களை பாட வைக்கும் போது இசை அமைப்பாளர்கள் சில தியாகங்கள் செய்ய வேண்டி இருக்கும். யேசுதாஸ், சித்ரா, ஹரிஹரன்(?) போன்ற பிற மா நில பாடகர்கள் தம் கடும் உழைப்பால் தமிழர் மத்தியில் நீங்கா இடம் பெற்றுவிட்டனர். இந்த வரிசையில் ஷ்ரேயா கோசல், சாதனா சர்கம் போன்றோரும் மிக வேகமாக முன்னேறி வருகிறார்கள்.

இப்போ நம் பதிவின் நாயகன், உதித் நாராயண் பத்தி சில வரிகள் சொல்லியே ஆகனும். பல மொழிகளிலும், அவரது தாய்மொழியாம் போஜ் புரியிலும் பல பாடல்கள் பாடி உள்ளார். "மெஹந்தி ரஹா கே ரஹ்னா"வையும், லகானில் வரும் "மிட்டுவா! அரே மிட்டுவா!"வையும் யாராலும் மறக்க முடியாது. எல்லாம் சரி தான்.



இந்த சப்பாத்தி தேசகாரங்களுக்கு 'ச' 'ஸ'காரங்களில் உள்ள வித்யாசம் அவ்ளோ லேசில் வராது. டென் தெளசண்ட் என நாம் சொன்னால் டென் தெளஜண்ட் என அவர்கள் உச்சரிப்பார்கள். என் மீது நம்பிக்கை இல்லையானால் உங்க ஆபிஸில் இருக்கும் ஒரு சப்பாத்தியிடம் (பிகராய் இருத்தல் சால சிறந்தது) வாயை கிண்டி பாருங்கள்.

நமது அண்ணன் உதித் தென்னிந்திய மொழி அனைத்திலும் இப்போ சக்கை போடு போடுகிறார். ரன் படத்தில், "காதல் பிசாசே! ஏதோ சவ்க்யம் பரவாயில்லே!" என இவரின் பாடலை கேட்டு புளங்காகிதமடைந்த தமிழர்கள் ஏராளம். சரி விடுங்க, மாதவனே அப்படி தான் தமிழ் பேசறார், அதான் உதித்தை பாட வெச்ருகாங்க, இல்லையா?னு சமாதானம் சொல்லி கொண்டேன்.

இந்த ஹீரோக்கள் தண்ணீயடித்து விட்டு "ஏரோப்ளேன் பறக்குது பார் மேல"னு ஒரு தத்துவ பாடல் பாடுவார்கள் நம் தமிழ் சினிமாவில். அந்த பாடல்களுக்கு கூப்டுடா உதித் அண்ணனை!னு கோடம்பாக்கம் சிவப்பு கம்பளம் விரித்தது. பின் மெல்ல மெல்ல "சோனியா! சோனியா சொக்க வைக்கும் சோனியா" என டூயட் எல்லாம் உதித் குரலில் நம் ஹீரோக்கள் பாடி ஆடினார்கள். இப்போ என்னடானா மெலடில கூட உதித் அண்ணன்,ஏழரை கட்டையில் பாட ஆரம்பித்து விட்டார்.

எந்த பாடலுக்கு யாரை பாட வைத்தால் அந்த பாடல் சிறப்பாக அமையும்? என திறமையான இசையமைப்பாளருக்கு கணிக்க தெரிய வேண்டும். இந்த விஷயத்தில் எனக்கு தெரிந்து ராஜா, ரகுமானை விட விஞ்சி நிற்கிறார் என கருதுகிறேன். (ரகுமான் ரசிகர்கள் என் வீட்டுக்கு ஆட்டோ அனுப்ப நேரிடலாம்). :)

பல புதிய குரல்களை நமக்கு அறிமுகபடுத்தியதில் ரகுமான் கிங்க் தான். ஆனால் சிவாஜியின் சஹானாவை உதித் அண்ணனுக்கு தாரை வார்த்தது எல்லாம் டூ மச்சோ மச்! ஆமா!
இதே பாடலை, ஒரு மது பாலகிருஷ்ணனோ, ஷ்ரிராம் பார்த்தசாரதிக்கோ ஹரிஷ் ராகவேந்திராவுக்கோ குடுத்து இருந்தால் பின்னி பெடலெடுத்து இருப்பார்கள். தமிழில் தான் உதித் அண்ணன் தாண்டவமாடுகிறார் என பார்த்தால் இங்கு கன்னடத்திலும் அண்ணன் பட்டய கிளப்புகிறார் என கன்னட கண்மணிகள் புலம்புகிறார்கள்.

பள்ளி காலங்களில் கோனார் தமிழ் உரைகளை படிக்காத மாணவர்களே இருக்க முடியாது. அதுபோல உதித் நாராயண் தமிழ் உரைனு யாரேனும் கைடு போட்டால் கொஞ்சம் உபயோகமாய் இருக்கும். திரைபடங்களுக்கு தமிழில் பெயர் வைத்து வரிவிலக்கு வாங்குபவர்கள் நல்ல தமிழ் பாடல் உச்சரிப்புக்களில் அசட்டையாக இருப்பது ஏனோ? எனபது புரியாத புதிராகவே உள்ளது.
********************************************************
இந்த இடுகையும் ரெண்டு போட்டிக்கு தான்.

Thursday, April 17, 2008

ரெட்டை ஜடை வயசு - II

Part-I

மேக்கப் என்னவோ திருவள்ளுவர் மாதிரி போட்டாச்சு. நான் நினைத்த அனிமேஷனை எப்படி கொண்டு வருவது? என ஒரே யோசனை. பரமார்த்த குரு தன் சிஷ்ய புள்ளைகளிடன் யோசனை கேட்பது மாதிரி என் விசுவாச மாணவர்களிடமே மேட்டரை விளக்கினேன். ஒரு ஊஞ்சலில் வள்ளுவரை உக்காத்தி திரைக்கு பின்னாடி இருந்து இயக்கலாம்!னு சொல்றான் ஒருத்தன், வள்ளுவரையே கயிறு கட்டி மேடைக்கு மேலிருந்து தூக்கலாம்னு சொல்றான் இன்னொருத்தன். ஒன்னும் சரி வரலை. என் நோக்கம் எல்லாம், பார்வையாளருக்கு நாம் எப்படி வள்ளுவரை இயக்குகிறோம்? என்பது தெரியவே கூடாது.

அப்ப தான் கிஷ்கிந்தா வானர சேனையில் ஜாம்பவான் மாதிரி ஒருத்தன் பளிச்சுனு ஒரு ஐடியா குடுத்தான். கார்களை தூக்க ஜாக்கி பயன்படுத்துவோம் இல்லையா? அத மாதிரி ஏதாவது?னு அவன் சொல்ல, எனக்குள் வள்ளுவர் சும்மா ஜிவ்வுனு மேடையில் எழும்ப துவங்கினார்.

போட்டி நாளும் வந்தது. மேக்கப் எல்லாம் கச்சிதமாக அமைந்தது.கையில் ஏற்கனவே எழுதி வைத்த பனை ஓலை சுவடி, திருக்குறள், எழுத்தாணி எல்லாம் குடுத்து வெச்சாச்சு. மேடையில் வழக்கம் போல காந்தி வந்தார், அன்னை தெரஸா, இந்திரா காந்தி, ஆதி வாசி எல்லாம் வந்து போனார்கள்.

தீடிரென மொத்த அரங்க விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டன. பவர் கட் என எல்லோரும் நினைத்திருக்கும் வேளையில், மேடையில் வள்ளுவர் தலைக்கு பின்னாடி ஒரு ஓளி வட்டம் தெரிந்தது. மேடை முழுக்க சாம்பிராணி புகை மூட்டம். பிண்னணியில் கவிதாலயாவின் "அகர முத எழுத்தெல்லாம்" பாடல் ஓடிக் கொண்டே இருந்தது. தீடிரென வள்ளுவர் உட்கார்ந்திருந்த மரபலகை மெல்ல இஞ்ச் இஞ்சாக எழும்ப துவங்கியது.

மரபலகையின் மேல் ஒரு சால்வை போட்டு வள்ளுவர் அமர்ந்து இருந்ததால் பலகை எப்படி இயக்கபடுகிறது? என பாக்கறவங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. வள்ளுவரின் முதுகுக்கு பின்னால் இருக்கும் மிக பெரிய திரை மறைவில் இருந்து பரமார்த்த குருவின் சிஷ்யர்கள் இருவர் கார் ஜாக்கியை பதமாக இயக்கினார்கள்.

டக்குனு பிண்னணி இசை நிறுத்தப்பட்டது. "குழந்தாய்! இந்த ஒலை சுவடியை நடுவர்களிடம் கொண்டு போய் குடு!" என வள்ளூவர் முன் வரிசையிலிருந்த ஒரு பிகரை பாத்து பிட்டு போட, அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது. வள்ளுவர் கிடைத்த கேப்பில் கெடா வெட்டி விட்டார். அடபாவி! நான் எழுதி குடுத்த டயலாக்குல இது இல்லவே இல்லையே? என நான் பதற, அந்த குழந்தை வேறு வழியில்லாமல் வள்ளுவரிடம் ஓலை வாங்கி நடுவர் குழுவிடம் சமர்த்தாக குடுத்து விட்டு இருக்கையில் அமர்ந்து வள்ளூவரை முறைத்தது.

நடுவர் குழுவில் இரண்டு தமிழ் புரபசர்களும் இருந்தனர். அவர்கள் வள்ளுவரை நேரில் பாத்த பரவச நிலையிலிருந்து சகஜ நிலைக்கு வரவே இரண்டு நிமிடங்கள் ஆனது. அப்புறம் என்ன, காந்தி, இந்திரா என எல்லாரையும் பின்னுக்கு தள்ளிவிட்டு வள்ளுவர் பரிசு கோப்பையை தட்டி சென்றார்.

நான் லெக்சரராக பணி புரிந்த இரண்டாம் ஆண்டில், இரண்டாம் ஆண்டு மாணவர்களோடு ஏற்பட்ட இந்த அனுபவத்தை வ.வா சங்கத்தின் ரெண்டு போட்டிக்கு அனுப்புகிறேன்.

அப்புறம், படிச்சுட்டு ஆளுக்கு ரெண்டு கமண்ட் போட்டுட்டு போங்க என்ன?

Wednesday, April 16, 2008

ரெட்டை ஜடை வயசு

பொதுவா இந்த கல்லூரிகளில் வருடம் முழுக்க செமஸ்டர் பரீட்சை, பிராக்டிகல்ஸ்னு மாணவர்களை பிராண்டி எடுத்தாலும் யூத் வெஸ்டிவல், ஒவ்வோரு துறைக்கும் தனி விழானு ஏதாவது ஒரு வகையில் ஒரு இடைகால நிவாரண நிதி அளித்து விடுவார்கள். அதுவரை வாலை சுருட்டி கொண்டிருந்த வானரங்கள் எல்லாம் அந்த ஒரிரு நாட்களில் அசோக வனத்தில் புகுந்த அனுமாராட்டும் கல்லூரியை துவம்சம் செய்து விடுவார்கள்.

அவனவன் த(ண்)னி திறமை எல்லாம் சும்மா பீறிட்டு வந்து பார்வையாளர்களை பரவசபடுத்தும். அதுவும், பதினெட்டு பட்டி மகளீர் கல்லூரிகளும் வருகிறார்கள் என்றால் கேட்கவே வேண்டாம்.

தீடிரென கடைகளில் பேர் அன் லவ்லி கீரிம்கள் அனைத்தும் விற்று தீரும். சலூன்களில் கூட்டம் ரொம்பி வழியும். துவைக்காத ஜீன்ஸும் டீ-ஷர்ட் சகிதமாய் பேஷன் ஷோவுக்கு வெங்கல கடையில் யானை புகுந்த கதையாய் இளைஞர் பட்டாளமும் களத்தில் குதிக்கும். ரீமிக்ஸ், மசாலா மிக்ஸ்னு கேசட் கடைகாரன் உயிரை வாங்கி பழம் நீயப்பா!வில் ஆரம்பித்து பம்பர கண்ணாலே! காதல் சங்கதி சொன்னாளேனு நைசா ப்ரபோஸ் பண்ணும் கேடிகளும் உண்டு.

தப்பிதவறி ஏதேனும் அப்பிராணி பெண் மேடையேறி அவள் குலதெய்வத்தை கும்பிட்டு, கண் மூடி, நித்யஷ்ரி மகாதேவன் ரேஞ்சுக்கு வாதாபி கணபதிம்! பஜே!னு ஆரம்பித்தால் பஜல்! பஜல்! காமன் பஜல் ஸே! பஜல்! பஜல்!னு மேடைக்கு கீழே ஒரு கூட்டம் தனியாவர்த்தனம் வாசிக்கும்.

இசைகருவிகள் போட்டினா, ஸ்டைலாக கிதார் வைத்து கொண்டு மைக்கேல் ஜாக்ஸனின் மச்சினன் மாதிரி பீட்டர் விடுவது ஒரு கோஷ்டினா மதுரை மண் மணம் கமழ, கரகாட்டகாரன் கவுண்டமணி மாதிரி தனிதவில் வாசித்து அசத்தும் இன்னொரு கோஷ்டி. டான்ஸ் போட்டினா இந்த மக்களுக்கு எங்கிருந்து தான் அவ்ளோ ஐடியா பெறுக்கெடுக்குமோ? ஆனா அழகா வந்து, அம்சமாய் ஆடி, முதல் பரிசை மகளிர் கல்லூரி தான் தட்டி செல்லும் எனபது ஊரறிந்த ரகசியம்.

நடன போட்டிகளுக்கு நடுவராய் அமர்ந்து சபாஷ்! சரியான போட்டி!னு சேவை புரிய புரபசர்களிடையே பலத்த போட்டி நிலவும். சலங்கை ஒலி பத்து தடவை பாத்தவனாக்கும்!னு பிஸ்து காட்டுவார்கள் சில பெருந்தலைகள்.

மாதம் ஒரு கிலோ லயன் டேட்ஸ்(பேரீச்சம்பழம்) சம்பளத்துக்கு நான் ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கணிணி மாணவர்களோடு சேர்ந்து நானும் லெக்சரர் என்ற பெயரில் நான் படித்த காலத்தில் சாய்ஸில் விட்ட பாடங்களை மறுபடி படித்து, நடத்தி கொண்டிருந்த போது நடந்த நிகழ்ச்சி இது.

என்னை போன்ற அம்மாஞ்சிகளுக்கு "களி மண்ணில் கை வண்ணம் காணும் போட்டி" அல்லது " நேர் நேர் தேமா! நிரை நேர் புளிமா! போன்ற கவிதை போட்டிகளுக்கு நடுவராய் மாரடிக்கும் பாக்யம் தான் வந்து சேரும்.

அந்த வருஷ போட்டிகளில் மாறுவேட போட்டியும் இருந்தது. சுமார் ஒரு பத்து கல்லூரிகள் கலந்து கொண்டன. என் மாணவன் ஒருவனும் போட்டி ஆரம்பிக்கும் ஒரு வாரத்துக்கு முன்னாடி இருந்தே என்ன வேஷம் போடலாம்? ஒரு ஐடியா குடுங்க சார்!னு என்னை நச்சரித்து கொண்டிருந்தான்.

பொதுவா இந்த மாறுவேட போட்டினா ஒன்னு மொட்டை அடித்து கொண்டு கையில் கம்பு வைத்து, ஒரு டைம்பீஸ் கடிகாரத்தை முக்கால் முழ வேட்டியின் இடுப்பில் சொருகி காந்தினு பில்டப் குடுப்பார்கள், இல்லாட்டி தலையில் முக்காடு போட்டு கொண்டு அன்னை தெரஸானு அல்வா குடுப்பார்கள். நீ ஏதாவது வெரைட்டியா குடுடா! அப்ப தான் ஜெயிக்க முடியும்னு நான் வேறு கடுப்பேத்தி இருந்தேன்.

பையனுக்கு என்ன தோணினதோ தெரியலை, குடுகுடுனு போய் ஒரு நாடக கம்பனியிலிருந்து ஜடா முடி, நீளமான தாடி கமண்டலம் என அள்ளி கொண்டு வந்து சாமியார் வேஷம் போட போறேன்!னு ஒரு குண்டை தூக்கி போட்டான். வெறும் சாமியார் வேஷம் எல்லாம் கதைக்கு ஆவாதுனு நான் சொல்லியும் பையன் விடாபிடியா இருந்தான். சரி, வழக்கம் போல ஏதவது டகால்டி பண்ணிட வேண்டியது தான்!னு முடிவு பண்ணி கையில் பனை ஓலை கட்டு, எழுத்தாணி, வடகம் காய போட்டிருந்த வெள்ளை வேட்டினு சாமியாரை திருவள்ளுவரா மாத்தியாச்சு. மாத்தினாலும் ஒரு சின்ன நெருடல் இருந்தது. நமக்கு எல்லம் திருவள்ளுவர் என்றவுடன் என்ன ஞாபகம் வரும்? "அகர முத எழுத்தெல்லாம்"னு கே.பாலசந்தரின் கவிதாலயா தானே? (எனக்கு அப்படி தான்பா!)

அதே மாதிரி ஒரு அனிமேஷன் மேடையில பண்ணினா என்ன?னு தோணியது. அதை எப்படி செயல்படுத்தினேன்னு அடுத்த பதிவில் பார்ப்போமா?

Friday, April 11, 2008

ரெண்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா!

இந்த இரண்டு என்ற எண் இருக்கே! சராசரி மனிதன் முதல் சன்யாசி வரை எல்லோர் வாழ்க்கையிலும் ஒரு நீங்கா இடம் பிடித்து விடுகிறது. இன்பம்-துன்பம், பகல்-இரவு, பிறப்பு-இறப்பு, வானம்-பூமி, ஆண்-பெண், இளமை-முதுமை, சூரியன் - சந்திரன், நட்பு-பகை, தேவன் - சாத்தான், அகம்-புறம், சரி-தவறு, இந்த லிஸ்ட் போயிண்டே இருக்கும்.

அட உணவுல கூட பாருங்க நீங்க சைவமா? அசைவமா?னு தான் கேக்கறாங்க. சரி உணவை விட்டு தள்ளுங்க, ஆன்மிகத்துல ஜீவாத்மா-பரமாத்மானு த்வைதம் சொல்லுது. ஜீவன் பரமாத்மாவிலே அடக்கம்னு அத்வைதம் சொல்லுது. (எல்லாம் இந்த கேஆரெஸ் அண்ணன் பெங்களூர் விஜிட்டின் மகிமை.)

அரசியலுல பாருங்க, அது பிரிட்டீஷ் நாட்டுல இரண்டு கட்சி ஆட்சி முறை தான், இங்க தமிழ் நாட்டுலயும் அதே கதி தான்! அடிக்கடி காமராஜர் ஆட்சி அமைப்போம்!னு ஒரு கோஷ்டி காமெடி பண்ணும், அத எல்லாம் கண்டுக்கபடாது. :)

சினிமா துறைய எடுத்துகோங்க, தியாகராஜ பாகவதர் - பி.யூ.சின்னப்பா, சிவாஜி-எம்ஜிஆர், ரஜினி-கமல், என எல்லாமே ரெண்டு தான். ஹிரோக்களை சொல்லிட்டு மகளீர் பத்தி ஜொள்ளியே ஆகனும்னு நான் பாவனா - நயன்தாரானு ஷ்டார்ட் மீஜிக் போட்டால் வீட்ல சாம்பாரில் உப்பு அதிகரிக்க கூடிய சாத்தியங்கள் இருப்பதால், அந்த அரிய பணியை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

சலசல! சலசல! ரெட்டைகிளவி தமிழில் உண்டல்லோ?னு ஐஸ் குட்டியே ஜீன்ஸ் படத்துல திருவாய் மலர்ந்திருக்காங்களே! (இன்னிக்கு சாம்பாரில் தெரியும் இந்த வரியின் தாக்கம்)

சினிமா காமடில ஒரு பழம் இந்தா இருக்கு! இன்னோரு பழம் எங்கே?னு கேட்ட அந்த காமடிய நம்மால மறக்க முடியுமா?
என்ன இப்ப எல்லாம் ரெட்டை அர்த்த வசனங்களில் வரும் நகைச்சுவைகளை சகித்து கொள்ள வேண்டி இருப்பது வருந்ததக்க விஷயமே!

சினிமால டபுள் ஆக்க்ஷன் படங்கள் சக்கை போடு போட்டு இருக்கு. எங்க வீட்டு பிள்ளை, கெளரவம், வாணி-ராணி, பில்லா, நாட்டாமைனு ஒரு பெரிய லிஸ்டே நீளும். ஆனா இப்ப எல்லாம் ஹீரோக்கள், அப்பா, பெரியப்பா, மகன், பேரன்னு சகட்டு மேனிக்கு எல்லா வேஷங்களையும் கலந்து கட்டி அடிக்கறாங்க. இதுனால் என்ன ஆகுது? இந்த அப்பா ரோலில் வரும் வி.எஸ்.ராகவன், பூர்ணம் விஸ்வ நாதன், மேஜர் சுந்தர்ராஜன் எல்லாம் பீல்ட் அவுட் ஆகி வீட்ல கோலங்கள் சீரியல் பாக்கற நிலைமை உருவாகிடுச்சு.

இசைத் துறையிலும் இந்த இரண்டு ஆதிக்கம் செலுத்திகிறது. கர்நாடக இசையில் ப்ரியா சகோதரிகள், கனேஷ்-குமரேஷ் (வயலின்), மான்டலின் ஷ்ரினிவாஸ்-ராஜேஷ்,மாம்பலம் சகோதரிகள், சூலமங்கலம், பாம்பே சகோதரிகள்னு எல்லாம் இரண்டு மயம் தான்.

(இன்னும் யாரையாவது மிஸ் பண்ணி இருந்தா பின்னூட்டதில் தெரிவிக்கலாமே!)

சினிமா இசையிலும் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, லக்ஷ்மிகாந்த்-பியாரேலால், சங்கர் கணேஷ், டைரக்டர்கள் ஜெடி-ஜெர்ரினு ரெண்டு ரெண்டா கலக்கி இருக்காங்க.

விளையாட்டு துறைய பாருங்க, டென்னிஸ்ல வீனஸ்-செரினா வில்லியம்ஸ் சகோதரிகள், கிரிக்கெட்டுல மார்க் வாக் - ஸ்டீவ் வாக்(ஆஸி), கிராண்ட் பிளவர்- ஆன்டி பிளவர்(ஜிம்பாவே)னு ரெண்டு ஆதிக்கம் செலுத்துகிறது.

உளவியல் ரீதியா சொல்லனும்னா, மனிதர்கள் எல்லோருக்குமே ரெண்டு முகங்கள் உண்டு. ஒன்னு சமூகத்தில் அவர்கள் காட்டும் முகம், மற்றது தனிப்பட்ட வாழ்க்கையில் காட்டும் முகம். கூடியவரை இந்த ரெண்டு வாழ்க்கையிலும் கோபம், பொறாமை, பேராசை,காம கசடுகள் இல்லாமல் பாத்து கொள்வது தனி மனிதனுக்கும், சமூகத்துக்கும் நல்லது. இல்லையா?

எதுக்குடா அம்பி இவ்ளோ பெரிய வில்லுபாட்டு?னு நீஙக கேக்கலாம்.

இந்த வ.வா.சங்கத்து இரண்டாம் ஆண்டு விழவுக்கு அவங்க அறிவிச்சு இருக்கற போட்டிக்கு தான் இந்த மொக்கை. அதானே! எலி ஏன் அம்மணமா ஓடுது?னு இப்ப புரிஞ்சுருக்குமே உங்களுக்கு.

ஆங்க்! சொல்ல மறந்துட்டேனே! வ.வா.சங்கம் ஏற்கனவே அறிவிச்சு இருந்த பிரம்ம ரச புகைப்பட போட்டிக்கு நான் அனுப்பி இருந்த படங்களில் எனது இரண்டாம் படத்துக்கு இரண்டாம் பரிசு அறிவிச்சு இருக்காங்க. (அட பாருங்க! இங்கயும் இரண்டு தான்).

Friday, April 04, 2008

பரீட்சை

வால் டிராயர் போட்டு கொண்டு எல்.கேஜி படிக்க ஸ்கூல் போன காலத்திலும் சரி, துவைக்காத ஜீன்ஸ் அணிந்து காலேஜ் செமஸ்டர் பரீட்சை எழுத போன போதும் சரி இந்த எக்ஸாம் பீவர் என சொல்லபடும் பரீட்சை பயம் எல்லாம் எனக்கு இருந்ததில்லை.
இதற்கு காரணம் அட்டை டூ அட்டை எல்லாம் கரைத்து குடித்து விட்டு போனேன் என அர்த்தம் கொள்ள கூடாது.

பள்ளி காலங்களில் அப்படி படித்ததுண்டு. ஐந்தாம் வகுப்பில் தொடர்ந்து எல்லா பரீட்சைகளிலும் முதலாவதாக வந்ததுக்காக, ஆண்டு இறுதியில் மேடை போட்டு கேசரி சாப்பிட ரெண்டு எவர்சில்வர் பேசின் குடுத்தார்கள். இன்னும் பத்ரமாக வைத்திருக்கிறேன்.

ஆறாவது சற்று பெரிய பள்ளிகூடம். புதிய களம், புதிய ஆசிரியர்கள். கண்ண கட்டி தமிழ்மணத்துல விட்ட மாதிரி இருந்தது. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தேர்வு. இந்த சமூக அறிவியல் பாடத்தில் தூர்தர்ஷனில் வரும் சுரபி ரேணுகா ஷாஹேன் தயவில் இமய மலை பத்தி நான் மட்டும் எக்ஸ்ட்ரா பிட்டு போட்டதில் என்னை தவிர மொத்த கிலாஸும் பெயில். நான் மட்டும் 45 மதிபெண்கள். பாஸ் ஆனா தான் ரேங்க் தருவார்கள். (இப்பவும் அப்படி தானே?)ஆக நான் மட்டும் பாசாகி முதல் ரேங்கும் பெற்று அடுத்த பத்து நாட்களுக்கு கிளாஸில் மகுடம் இல்லாத மகாராஜா ரேஞ்சுக்கு சீன் போட முடிந்தது.

அந்த பள்ளியில் ஒவ்வொரு ஆசிரியருக்கு ஒவ்வொரு மாதிரி எழுதனும்.

1) ஒருத்தருக்கு பாயின்ட் பாயின்டா எழுதினா தான் பிடிக்கும்.
2) ஒரு டீச்சருக்கு முக்யமான வரிகளை கலர் ஸ்கெட்ச்சால் பெயின்ட் அடிக்கனும்.
3) ஒரு ஆசிரியருக்கு பாரா பாராவா எழுதனும். எத்தனை ஷீட் பேப்பர் எழுதி இருக்கோம்னு பாத்து தான் சில பேர் மார்க் போடுவாங்க.

இந்த பாரா பார்ட்டிய நம் மக்கள் ஈசியா ஏமாத்திடுவாங்க. பாராவின் முதல் மற்றும் கடைசி வரிகள் மட்டும் அறிவியல் சம்பந்தமா எழுதிட்டு, நடுவுல அவனவன் ஈஷ்டத்துக்கு ராமாயணம் முதல் படையப்பா படத்தில் நீலாம்பரியின் பங்கு வரை எழுதி வைப்பான். நடுவுல நியூட்டன், ஐன்ஸ்டின் எல்லாம் வேறு வந்து நீலாம்பரியை குசலம் விசாரித்து விட்டு போவார்கள்.இதுல டோட்டல் மிஸ்டேக்னு சொல்லி மேலும் சில மார்க்குகள் வாங்கி வரும் கில்லாடிகளும் உண்டு.

எக்ஸாம் நடக்கற ஹால்களுக்கு மேற்பார்வைக்கு எந்த வாத்யார் வருகிறார்? என்பதை பொறுத்து தம் மார்க்குகளை முடிவு செய்யும் மக்களும் இருந்தனர். குறிபிட்ட ஒரு டீச்சரை எல்லா ஹால் மாணவரும் வலிய போய் தம் ஹாலுக்கு அழைத்து வருவர். ஏன்னா அந்த டீச்சருக்கு அவ்ளோ தயாள குணம்.

ஒரு வழியாக பள்ளீயில் இருந்து கல்லூரி வந்தபிறகு படிப்பு என்பது வேறு விதமாய் மாறியது.
இந்த கிண்டியில் நடக்கும் குதிரை ரேஸ் பத்தி தெரியுமா? இந்த குதிரை தான் ஜெயிக்கும்! என யூகத்துடன் பணம் கட்டுவார்களே, அது போல கல்லூரி வந்தபிறகு குறிபிட்ட பகுதியில் இருந்து தான் கேள்வி வரும் என கணித்து அதை மட்டும் படித்து விடுவேன்.

என் ஜாதகத்தில் பூர்வ புண்ய ஸ்தானமாகிய ஐந்தாம் இடத்தை குரு பார்ப்பதால், நான் படிச்சது மட்டும் தான் பரீட்சைக்கு வரும்! என நான் சொன்னதை இரண்டு ஆண்டுகள் வரை நம்பிய நண்பர்களும் உண்டு. அப்ப மூனாம் ஆண்டு என்ன ஆனது?னு நீங்க பின்னூட்டம் போடலாம். அந்த வருடம் குருபெயற்ச்சி ஆகி விட்டார் என சமாளித்து விட்டேன்.

சரி, இப்ப என்ன மேட்டர்னா, திருமணத்துக்கு பின்பும் எம்பிஏவில் எழுத வேண்டிய பேப்பர் நாலு பாக்கி இருக்கு! என தங்கமணி கூறியதும் (ஹிஹி, நானாவது இனி எக்ஸாமாவது) கடமை கண்ணாயிரமாக, "அதுக்கென்ன! நமக்கு படிப்பு தான் முக்யம்! நீ படிம்மா! என பெரிய தசரத சக்ரவர்த்தி மாதிரி வாக்கு குடுத்து விட்டேன்.

அந்த பரீட்சை இப்ப வந்து நிக்குது. ஈஸ்டர் விடுமுறை! ஹாயா வீட்டுல குறுந்தகடு (சி.டி தான்)பாக்கலாம்! என்ற என் திட்டத்துக்கு ஆப்பு வைப்பது போல் வீட்டில் வேலை செய்பவர் வேறு லீவு எடுத்து கொள்ள, நீங்க தானே வரம் குடுத்து இருக்கீங்க!னு சமயம் பாத்து தங்கமணி கோல் போட, வேற வழி இல்லாமல், எங்க வீட்டு சிற்றம்மல மேடையில் நானே தேவாரம் பாடவேண்டியதாய் போயிற்று. :)

ஆங்க்! சொல்ல மறந்துட்டேனே! விம் பாரும், ஸ்கரப்பரும் கூட்டணி சேர்ந்தால் பாத்ரங்கள் எல்லாம் என்னமா மின்னுது தெரியுமா? இதை தான் கற்றது கையளவு!னு பெரியவங்க சொல்லி இருக்காங்க போலிருக்கு.

Monday, March 31, 2008

பிரம்ம சாம்பார் குடிக்கலாம் வாங்க!

இந்த கூத்து தானே எல்லா ஆபிஸ்லயும் நடக்குது!

இது முழுக்க முழுக்க கற்பனையே! என இந்த தருணத்தில் நான் எதிர்கட்சிகளுக்கு சொல்லி கொள்கிறேன்.

என்ன டீச்சர்! சந்தோஷமா?

இது சத்யமா நானில்லை. நம்புங்க எஜமான்! :))

வ.வா சங்க போட்டிக்காக தான் இதேல்லாம்.

Saturday, March 01, 2008

கும்மி அடிக்க வாரீகளா?

வ.வா சங்கத்தில் நான்காம் பதிவு வெளி வந்து விட்டது. காண தவறாதீர்

சற்றே பசி எடுக்க துவங்கும் பகல் சுமார் பன்னிரெண்டு மணிவாக்கில் ஆபிசில் நாம் பிசியாக வேலையில் மூழ்கி இருந்த போது (சரி, இதுக்கே சிரிச்சா எப்படி?) ஒரு போன் கால். யாருனு பாத்தா அட நம்ம தல கைப்புள்ளை. பரஸ்பரம் ஷேமம்! உபயஷேமம், எல்லாம் விசாரித்தபின் மேட்டருக்கு வந்தார் நம்ம தல.

வ.வா.சங்கத்தில் மார்ச் மாத அட்லாஸ் வாலிபராக நம்மை தேர்ந்தேடுத்துள்ளதாகவும், ஒரு மாதம் அங்க வந்து கும்மி அடித்து சிறப்பிக்க வேணும்! என அவர் சொன்னதை கேட்டவுடன், நமக்கு ஒரு சின்ன தயக்கம். என்னடா! எம்பெருமான் இலவச கொத்தனாரும், இளயனார் கண்ணபிரானும் கட்டிகாத்த வ.வா.சங்கத்தில் இந்த குழந்தை வந்து என்ன செய்ய போறது? நீங்களே சொல்லுங்கள்!

அட்லாஸ் குழந்தை கேட்டகரியில் வர வேண்டிய நம்மை இப்படி வாலிபர் கேட்டகரியில் சேர்த்தால் எப்படி அது நியாயம்..? நாம ஏற்கனவே ஒரு இளஞ்சிங்கம்! என்பது வேறு விஷயம் என நைசா சைடு கேப்பில் கோல் போட முயற்சிக்க, தங்கமணிக்கு தொண்டையில் கிச் கிச். பொதுவாக தொண்டையில் கிச் கிச் வந்தால் விக்ஸ் சாப்பிடனும், இல்லாட்டி நன்றாக காறி துப்பி விட வேண்டும். அது என்னவோ முக்ய தருணங்களில் எல்லா தங்கமணிகளும் இரண்டாவது வழியை தான் கடைபிடிக்கிறார்கள்.

சரி, வருடம் ஒரு முறை திருஷ்டி கழிக்க நம்மை கூப்பிட்டு இருக்கிறார்கள் போலும். ஆக மார்ச் மாதம் வவா சங்கத்தில் தான் நம்ம கச்சேரி. ஆமா! இங்க கிழிச்சாச்சு! என்ன செய்ய? வீட்லயும், ஆபிஸ்லயும் ஒரே வேலை. ஒத்து கொண்டதால் வாரம் ஒரு பதிவாவது அங்கே கண்டிப்பாக போட்டு விடுவேன்! என்ற நம்பிக்கையுடன் உங்கள் ஆதரவை வழக்கம் போல் எதிர்பார்த்து இருக்கிறேன்.

Friday, February 22, 2008

போடுங்கம்மா ஓட்டு!

அன்பார்ந்த பிளாக்காளப் பெருங்குடி மக்களே!
நம்ம பிளாக் யூனியன் ஆரம்பித்து ஒரு வருடம் நிறைவடைய போகுது. உருப்படியா என்னத்தை கிழிச்சோம்? என நாளைய சரித்திரம் சொல்லும். (ஹிஹி, வேற எப்படி தான் சமாளிக்கறதாம்?).

சென்னை வரும் நம் யூனியன் மக்களை மிக அன்பாக தட்டி கொடுத்து, ஹோட்டலுக்கு தள்ளிகொண்டு போயி கிடா வெட்டும் நமது ஜி3 அக்காவின் பெருந்தன்மையாகட்டும், ஜிடாக்கில் சிக்கினால், மொக்கை போட்டு எதிராளியை துண்டை காணோம்! துணியை காணோம்! என ஓட வைக்கும் நமது மை பிரண்டின் தன்னிகரில்லா சேவையாகட்டும், மொக்கை போடவென்றே தனியாக ஒரு பிளாக், ஆன்மீகத்துக்கு தனி பிளாக் என பதமாக பிரித்து, இதமாக மொக்கை போடும் நம் பதிவுலக காரக்கால் அம்மையாராம் கீதா பாட்டியின் திருத்தொண்டாகட்டும், நமது யூனியனின் சேவை சொல்ல, சொல்ல புல்லரிக்க வைக்கும்.

இது தவிர, அவ்வப்போது வேலைவாய்ப்பு, பொது விழிப்புணர்வு, சுகாதாரம் சம்பந்தமாக சில பதிவுகளும் வரத்தான் செய்கின்றன.

என்னடா இழுவை?னு நீங்கள் கும்முவதற்க்கு முன்னால் மேட்டருக்கு வருகிறேன். நமது பிளாக் யூனியனையும் சிறந்த வலைப்பூவாக கருதி, சங்கமம் (படம் பெயர் இல்லை) வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்து இருக்கிறார்கள்.


ஓட்டு எப்படி போடனும்? என்ன செய்யனும்? என்ற விவரம் எல்லாம் இந்த சுட்டியில் உள்ளது. எனவே நம் யூனியன் மக்கள் அனைவரும் தவறாமல் இந்த வாக்கெடுப்பில் பங்கு கொண்டு நம் பிளாகுலக கடமையை நிறைவேத்திட வேண்டும்.

வாக்களிக்க கடைசி நாள் 29-பிப்பரவரி 2008. வழக்கம் போல பதிவை படித்து விட்டு கமண்ட் போடாமல் நழுவுவது மாதிரி ஓட்டு போடாமல் இருந்துவிட வேண்டாம். :))

Friday, February 01, 2008

பொங்கல் ரிலீஸ்

இந்த சன் டிவியில் கோட் சூட் அணிந்து, சலூன் கடை சேரில் கால் மேல் கால் போட்டு கொண்டு திரை விமர்சனம் செய்ய வருவாரே ஒருத்தர், அது மாதிரி என்னை நினைத்து கொண்டு மேலே படியுங்கள். பொங்கலுக்கு ரீலீஸ் ஆன படங்களில் பீமா, பழனி, மற்றும் காளை ஆகிய படங்களை தான் இப்போ கிழிக்க போறோம்.

முதலில் பீமா. படத்துக்கு இந்த பேர் வைச்சதுக்கே இயக்குனருக்கு சுத்தி போடனும். ஏற்கனவே தர்மா, அர்ஜுனா, கர்ணா எல்லாம் வந்து விட்டது. இந்த வரிசையில் இனி நகுலா, துரியோதனா, துச்சாதனா! சகுனினு வரலாம். கெளரவர்கள் நூறு பேர் பெயரும் என்ன?னு தெரிஞ்சா நம் தமிழ் இயக்குனர்களுக்கு ரொம்ப வசதியா இருக்கும்.

சரி படத்துக்கு போவோம்! விக்ரம் இந்த படத்தில் பஜாஜ் பல்சர் பைக் மாதிரி கும்முனு இருக்கார். படத்தில் அவர் வரும் பைக்குக்கும் அவருக்கும் வித்யாசமே தெரியலை. பாட்டி வடை சுடுவது போல டுமீல், டுமீல்னு படம் முழுக்க துப்பாக்கியால் யாரையோ சுட்டு கொண்டே இருக்கார். பாவம்! தயாரிப்பாளர் சம்பள பாக்கி வைத்து விட்டாரோ என்னவோ? படத்தில் பிரகாஷ் ராஜ் கூட இருக்கிறார். இப்படி பத்து படம் நடித்தால் தான் அவரால் மொழி போன்ற படம் தயாரிக்க முடியும் என்பதால் மன்னித்து விடுவோம்.

த்ரிஷா டூயட் பாடல் காட்சிகளில் காத்தாட வளைய வருகிறார் என்பதால் இசை மற்றும் பாடல் வரிகளை கவனிக்கவே முடியலை. அப்படியே கவனிக்க முயன்றாலும் (இசையை தான் சொன்னேன்) தங்கமணி டக்குனு கார்ட்டூன் நெட்வர்க் மாத்தி விடுகிறார். என் நிலையை பாத்து டாம் & ஜெர்ரி கூட விழுந்து விழுந்து சிரிக்கிறதோ?னு ஒரு சந்தேகம் அடி மனதில் உள்ளது.

பொதுவாக லிங்குசாமி படங்களின் கிளைமாக்ஸ் எல்லாம் ஒரு பாட்டில் பீரை இரண்டு லிட்டர் தண்ணி கலந்து குடித்தது போல சப்புனு இருக்கும். இந்த படத்திலும் அப்படித்தான். இந்த பீர் மேட்டர் எல்லாம் நண்பன் ஒருத்தன் தான் டெக்னிகல் சப்போர்ட் என்று நான் சத்யம் செய்தால் நீங்கள் நம்பி தான் ஆகனும்!
ஆக மொத்ததில், பீமா - பலசாலி இல்லை!

அடுத்து வருவது பழனி. படத்தின் பெயரை கேட்டவுடன் முருகன் பத்திய பக்தி படம் என நினைத்து, பதிவு போட ஏதாவது மேட்டர் கிடைக்கும் என சப்பு கொட்டிகொண்டு ஆன்மிக பதிவர்களான அண்ணன் கண்ணபிரான், ஜி.ரா, கீதா பாட்டி மற்றும் சிலர் தியேட்டருக்கு காவடி எடுக்க வேண்டாம் என இந்த சமயத்தில் எச்சரிக்கபடுகின்றனர்.

பாய்ஸ் படத்தில் அறிமுகமான பலரில் ஓரளவுக்கு உருப்பட்டது பரத், மற்றும் சித்தார்த் (இந்த வரியை படித்தவுடன் மை பிரண்ட் முகத்தில் பிரகாசமாய் பல்ப் எரியுது பாருங்க).

அஜித்தை வைத்து திருப்பதி என்ற முழு நீள காமெடி வெற்றி படம் குடுத்த இயக்குனர் பேரரசு "நல்ல வெயிட்டான ரோல்"னு பரத்துக்கு பஞ்சாமிர்தம் குடுத்திருக்கிறார்.

"வெட்டி சீவ நான் ஒன்னும் இளனி இல்ல பழனி" போன்ற காமெடி வசனங்களுக்காகவே படத்தை கண்டிப்பா பாக்கனும். ஏனேனில் வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும். பூ பூத்து, காயாகி, பழமாகி...னு பல்லை கடித்து கொண்டு பரத் வசனம் பேசி முடிக்கும்போது வில்லனுக்கு மட்டுமல்ல, நமக்கும் கொட்டாவி வருவது நிச்சயம்.

ஆக பழனி தயாரிப்பாளருக்கு மொட்டை! ரசிகர்களுக்கு அரோகரா!

அடுத்து வருவது சிம்பு நடித்த(?) காளை. அட பெயரை கேட்டவுடன் களுக்குனு யாருப்பா அங்க சிரிக்கறது? பொங்கல் சமயத்தில் படம் ரிலீஸ் என்பதால் காளைனு பெயர் வைத்தால் படம் தறி கெட்டு ஓடி விடும் என முடிவு செய்து விட்டார்கள் போலும். உண்மை தான்! தியேட்டரை விட்டு படம் தறி கெட்டு ஓடுகிறது, ரசிகர்களும் தான்.

நீளமாய் முடி வைத்த சிம்புவை அடிக்க வரும் அடியாட்களும் நீளமாய் ஹேர்ஸ்டையிலில் இருப்பதால் எல்லோருமே அடியாட்களாய் தெரிவதை தவிர்க்க முடியலை. "டண்டணக்கா டணக்கு டக்கா" என செவிக்கு இனிமையாய் பாடல்களை கேட்கும் போது, தயாரிப்பு செலவை குறைக்க பேசாம சிம்பு அப்பாவையே பாட்டு எழுத சொல்லி விட்டனரோ?னு நமக்கு சந்தேகம் வருகிறது. ஹிரோயின் பெயர் நினைவில் இல்லை.

பாடல்களை படமாக்கிய விதத்தை பாக்கும் போது சென்சார் போர்டில் உள்ளவர்கள் பாதி படத்தில் எழுந்து போய் பக்கோடா சாப்பிட போய் விட்டனர் என நினைக்கிறேன்.அனேகமாக எல்லா பாடல்களுமே ஏதோ விஜய் டிவியில் வரும் ஜோடி நம்பர் ஒன் சீசன்:ஐந்து பார்ப்பது போல் உள்ளது. ப்ரித்விராஜ்(எ) பப்லு தான் முதல் நாள் முதல் காட்சி முதலில் டிக்கட் எடுத்து தியேட்டரில் குலுங்கி குலுங்கி சிரித்தார் என ரகசிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மொத்தத்தில் காளை - ரொம்பவே முட்டி விட்டது.

பழனியையும் காளையையும் ஆஸ்கார் நாமினேஷனுக்கு இந்தியா சார்பாக அனுப்பியே தீருவோம்! என இரண்டு இயக்குனர்களும் அடம் பிடிக்கிறார்களாம்.

வெற்றி பெற நம் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Friday, January 25, 2008

அவுட்லுக்

உங்கள் கம்பனி தனியாக இமெயில் ஐடி குடுத்து இருக்கிறதா? அப்படினா இந்த பதிவுக்கும் உங்களுக்கும் நெருங்கிய சம்பந்தம் உள்ளது. அதுக்காக மற்றவர்களுக்கு தொடர்பில்லைணு அர்த்தம் கொள்ள கூடாது.

அடிச்சு பிடிச்சு டிராபிக்ல சிக்கி ஒரு வழியா ஆபிஸ் போய், கணினி பொட்டியை தொறந்தவுடன் நாம், சரி, நான் செய்யும் முதல் வேலை என்ன? அவுட்லுக்கை தொறந்து என்ன மெயில் வந்ருக்குனு பாக்கறது தானே?

என்னதான் யாஹூ, ஜிமெயில்னு இருந்தாலும், கம்பெனி ஐடியில வர ஈமெயிலை படிக்கற சுகமே அலாதி.

காலையில், ஒரு கரடி கையில ரோஜா பூவை வைத்து கொண்டு குட் மார்னிங்க் சொல்லும் மெயிலாகட்டும், மதியம் புவா முடிந்ததும் ஒரு அரை மயக்கத்தில் நாம் என்ன தட்டுகிறோம்?னு நமக்கும் தெரியாம, கணினிக்கும் தெரியாத அந்த பேரானந்த நிலையை அடையும் போது என்ன தூக்கமா?னு வரும் மெயிலாகட்டும், சாயந்தரம் டீ குடித்த சூடு தணிவதற்குள் ஐஸ் குட்டி முழுகாம இருக்காளாம்!னு என்டி.டிவி கர்ம சிரத்தையாக அளித்த ரிப்போர்டை காப்பி பேஷ்ட் பண்ணி நமக்கு வரும் மெயிலாகட்டும் அடடா! நாம் பிறந்த பயனை அடைந்தே விடுவோம்.

வெள்ளிகிழமையானா போதும் "ஏ மானிடா திங்ககிழமை உலகம் இருக்குமோ இருக்காதோ, அதனால அடுத்து வரும் இரண்டு நாட்களில் வாழ்க்கையை முழுதும் வாழ்ந்து விடு!" என கருத்து கந்தசாமிகள் வீக் எண்ட் ஸ்பெஷல் மெயில் அனுப்புவதை தன் தலையாய கடமையாக கொண்டுள்ளனர்.

இது போதாதுனு பல பேர் ஊர்ல இருக்கற மொக்கை சைட்டுல அதாவது வெப் சைட்டுல எல்லாம் போயி எனக்கும் கம்பெனி ஐடி இருக்கு! எனக்கும் கம்பெனி ஐடி இருக்கு!னு போஸ்டர் அடிச்சு ஓட்டாத குறையா ரிஜிஸ்டர் பண்ணிட்டு வந்து விடுவர்.
அப்புறம் என்ன? இந்தா பிடினு அவனும் தினமும் "விருச்சிக ராசி நேயர்களே! இன்று உங்கள் பதிவுக்கு கமண்ட் போடாம கமுக்கமா படிச்சுட்டு போற கூட்டம் தான் அதிகம்! கவனமா இருக்கனும்"னு ஒத்த ரூவா பொட்டு வெச்ச ஓம் உலக நாதன் ரேஞ்சுக்கு தின, வார, மாத பலன் எல்லாம் அழகாய் அனுப்பி வைப்பான்.

ஏதாவது ஒரு ஏடாகூட வெப்சைட்காரனுக்கு நம்ம ஐடி தெரிந்து விட்டால் போதும், டாலருக்கு நாலு நயாகரா வாங்கிக்கோ! வயாக்ரா வாங்கிக்கோ!னு மெயில் அள்ளி விடுவான்.

நம்ம பாசக்கார மக்கள் மட்டும் என்ன சும்மாவா? தியேட்டருக்கு போனா பக்கத்து சீட்ல யாரு இருக்கா?னு பாக்காம உன் சீட்டுல ஊசி இருக்கா?னு பாரு. இப்படி தான் ஐதராபாத்துல ஐதர் அலி உக்காந்த சீட்டுல எயிட்ஸ் பரப்புற ஊசி இருந்ததாம்! இந்த மெயிலை ஐந்து பேருக்கு அனுப்பினா ஐஸ் குட்டி கனவுல வருவா! பத்து பேருக்கு அனுப்பினா பத்ம ப்ரியா வருவா! 15 பேருக்கு அனுப்பினா...னு பீதியை கிளப்பி விடுவர்.

சாப்பிட்ட பின், உடனே ஜில்லுனு தண்ணி குடிச்சா கான்சர் வரும், பழங்களை உணவு உண்ட பின் எடுத்து கொண்டால் கக்கா வரும்!னு இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே போகும்.

ஆபிஸில் இந்த யாஹூ, ஜிமெயில் எல்லாம் தடா செய்யப்பட்ட திக்கற்றவர்களுக்கு அவுட்லுக்கே துணை! சதா சர்வ காலமும் ஜிமெயிலிலேயே மோன நிலையில் தவம் கிடக்கும் ஒரு க்ரூப்புக்கு(இப்போ உங்களுக்கு ஜி3 அக்கா, ரசிகன் எல்லாம் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பில்லை) தப்பி தவறி சவுக்கியமா?னு மெயில் அனுப்பினா நம்ம ஐடிக்கு சும்மா வளைச்சு வளைச்சு கும்மி அடித்து விடுவார்கள்.

ஒரு கட்டத்தில் நமக்கு வரும் மெயிலுக்கு, நமது ஆபிஸில் பொழுது போகாமல் பிளாக் படித்து கொண்டிருக்கும் நாகை சிவா போன்ற நெட்வர்க் அட்மின்களே பதில் போடும் அளவுக்கு நம் இன்பாக்ஸ் எகிறி விடும்.

இந்த களேபரத்தில், "சாயந்தரம் வரும் போது அரைகிலோ தக்காளி, மற்றும் எலுமிச்சம்பழம் வாங்கி வரவும்! வழக்கம் போல, கறிவேப்பிலைக்கு தனியாக காசு குடுத்து ஏமாற வேண்டாம்"னு பின்குறிப்பு போட்டு தங்கமணியிடமிருந்து வந்திருக்கும் அதிமுக்யமான மெயிலை காண தவறிவிட்டால், சாலமன் பாப்பையா சொன்ன மாதிரி, இந்த நாள் இனிய நாளாகி விடும்.

இரண்டு வருடங்களுக்கு ஒருதரம், ஒரு கம்பெனி விட்டு இன்னொரு கம்பெனி தாவும் என்னை போன்ற வானரங்களுக்கு, அட்ரஸ்புக்கில் இருக்கும் ஈமெயில் ஐடிகளை சிந்தாமல் சிதறாமல் கொண்டு போவதே பெரிய வேலை.

புது கம்பெனியில் பிளாக் எல்லாம் பிலாக் ஆகாமல் இருக்கனும்!
நம்ம கணினியில் சீன, ஜப்பான் மொழி எல்லாம் வராமல் தமிழ் எழுத்துக்கள் தெரியனும், நாம் உட்காரும் சீட் டேமேஜர் சீட்டுக்கு முதுகுபக்கமா இருக்கனும், அப்ப தான் நம்ம வழக்கமான தமிழ்தொண்டை(ஹிஹி) தங்குதடையில்லாமல் செய்ய முடியும்! போன்ற நியாயமான கவலைகள் எல்லாம் தலைவிரித்தாடும்.

Wednesday, January 16, 2008

எழுதியதில் பிடித்தது

அன்புடன் வல்லி அம்மா ஒரு கொக்கியில் என்னை மாட்டிவிட்டு விட்டார்கள். ஏற்கனவே ரசிகனின் டேக் பாக்கி. ஆனால் நாம் எழுதுவதில் முக்கால்வாசி மொக்கை வகை தான் என்பதால் தனியா நாம வேற ஒரு டேக் எழுதனுமா?னு ஒரு யோசனை. அதனால கோச்சுகாதீங்க ரசிகன்.

அடியேன் எழுதியதில் பிடித்தது எது?னு ஒன்று! இரண்டு!னு வரிசைபடுத்தி, கீதா பாட்டி மாதிரி, மன்னிக்கவும், அவ்வையார் மாதிரி நமக்கு நாமே திட்டப்படி ஒரு விளம்பரம் தேங்க்!னு சுட்டி(லிங்க்) குடுக்கனும்.

ஆஹா! கைல கிடைச்ச லட்டு போல அருமையான வாய்ப்பு. விட்ருவோமா என்ன? இதோ:

1) சென்னையில் நான் வேலை பாத்த போது நடந்த ஆபிஸ் பார்ட்டி தான் நான் மிகவும் ரசித்து எழுதியது.
(பார்ட்டி என்றால் எல்லோரும் சந்திக்கும் நிகழ்ச்சி! என பொருள் கொள்ளவும்.)

2a) இதே மாதிரி நாங்கள் கலந்து கொண்ட ஒரு இசை போட்டி பற்றிய பதிவுக்கு தான் இரண்டாம் இடம்.
2b) தங்கமணியை பொண்ணு பாக்க போன நிகழ்வுகள் பற்றிய பதிவும் இரண்டாம் இடத்தை பிடிக்கிறது. (ஹிஹி, மூணாம் இடம் குடுத்தா என்ன நடக்கும்?னு எங்களுக்கு தெரியாது?)

3) தீபாவளிக்கு(பாவனா நடிச்ச படம் இல்லை) பஸ் டிக்கட் எடுத்த நிகழ்வு பத்திய பதிவு மூணாம் இடத்தை பிடிக்கிறது.

ஆன்மீக பதிவுகள், என்ன தான் நான் கஷ்டப்பட்டு எழுதினாலும், "எல்லா புகழும் தம்பி கனேசனுக்கே!" என எதிர் கட்சிகள் முழங்குகிறார்கள்.
சரி, பரவாயில்லை, கந்த சஷ்டி விழாவின் போது நான் ரொம்ப ரசித்து, உருகி எழுதியது என் மனதுக்கு நிறைவை தந்த பதிவு.

நான் டேக் செய்ய விரும்பும் நபர்கள்:

1) கண்ணபிரான் ரவி சங்கர் அண்ணா: ஆன்மீகத்தில் பட்டய கிளப்பும் பதிவர்.

2) கைபுள்ளை: காமடி, பயண குறிப்புகள், குவிஜுனு ஒரு நடமாடும் தகவல் சுரங்கம். இட்டிலி நல்லா சாப்ட்டா வந்ருக்கா தல? :)

Sunday, January 06, 2008

சுந்தர காண்டம்

ராமாயணத்தில் ராமனின் சிறப்பை சொல்ல பல பகுதிகளாக(காண்டங்களாக) பிரித்த கம்பர், சுந்தர காண்டம் என ஒரு பகுதிக்கு பெயரிட்டுள்ளார். இந்த பகுதியில் மட்டும் முழுக்க முழுக்க அனுமனின் சிறப்பை நமக்கு விளக்குகிறது. சுந்தர காண்டம் படித்தால் முழு ராமயணமே படித்த மாதிரி. ஏனேனில் சீதையை அசோக வனத்தில் பார்க்கும் அனுமன், ராமனின் பிறப்பு, வளர்ப்பு என அத்தனையும் பாட்டாக பாடி விடுகிறார். மேலும் துயரம் கொள்ளும் சீதையை தேற்றும் விதமாக, "ராவண வதம் நடந்து, நீங்கள் இருவரும் சந்தோஷமாக அயோத்தி சென்று ராஜ்ய பரிபாலனம் செய்வீர்கள்!" என முழு ராமாயணத்தையும் சொல்லி விடுகிறார்.
சுந்தரன் என்றால் அழகன் என பொருள்படும். உருவத்தால் மட்டுமல்ல, குணத்தால், நல்ல மனதால், இனிமையான வார்த்தைகளால் எவர் ஒருவர் பிரகாசிகின்றாரோ அவரே சுந்தரன். தமது இனிமையான, புத்திசாலித்தனமான பேச்சால், துயரத்தில் வாடும் ராமனையும், சீதையையும் தேற்றும் அனுமன் சுந்தரன் தானே!
என்ன தான் ராமன் தெய்வ அம்சமென்றாலும், மனித ஜென்மம் எடுத்ததால், மனைவியை பிரிந்த துயரால் பலவாறு புலம்ப, அப்போழுது அனுமனே தக்க வார்த்தைகள் பேசி தேற்றுகிறான்.
அதே போல வரங்கள் பல வாங்கி இருந்தாலும், ஈஸ்வர பட்டமே பெற்று இருந்தாலும், பிறர் மனை நோக்கும் ஈனச் செயலை ராவணன் செய்துவிடுகிறான். இலங்கைக்கு செல்லும் அனுமன் கடைசி முயற்சியாக ராவணனுக்கு நல்ல புத்தி சொல்கிறார்.
ஆக, பிறப்பால் குரங்காக அவதாரம் எடுத்தாலும், மனிதனாய் பிறந்த ராமனுக்கும், வல்லமை படைத்த அரக்க குலத்தில் பிறந்த ராவணனக்கும் புத்தி சொல்லும் உயரிய நிலைக்கு அனுமன் உயர்கிறார்.
சுருங்க சொல்லி பொருள் விளங்க வைப்பதில் அனுமனுக்கு இணையே இல்லை.
"கண்டேன் கற்பின் கனலை" என்ற ஒற்றை வரியில் தான் எத்தனை பொருள்?
1) எந்த காரியத்துக்கு நான் சென்றேனோ அது ராமன் அருளால் வெற்றி என சூசகமாக, அடக்கமாக சொல்கிறார் அனுமன்.
2) சீதை உயிரோடு இருக்கிறாள், மேலும் சீரிய கற்போடு இருக்கிறாள் என மிக அழகாக தெரிவிக்கிறார் அனுமன்.

இவ்வளவு சிறப்புகள் பெற்றிருந்த போதும், அதை பற்றி துளியும் கர்வம் கொள்ளாமல், "தன்னடக்கமே உன் பெயர் அனுமனா?" என வியக்கும் வண்ணம், ராம பட்டாபிஷேகத்தின் போது, ராமனின் காலடியில் பவ்யமாக அமர்ந்திருந்து, இந்த பூவுலகில் எங்கெல்லாம் ராம நாமம் ஜெபிக்கபடுகிறதோ அங்கெல்லாம் வந்து சேவை சாதிக்கும் அந்த அனுமன் அவதரித்த திருநாள் மார்கழி மாதம் அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் கூடிய நன்னாள் வரும் செவ்வாய்கிழமை(8th ஜனவரி) வருகிறது. இந்த நன்னாளில் சின்ன திருவடி என போற்றப்படும் அஞ்சனா மைந்தன், வாயு குமாரன், வானரவீரன், ராமதூதன், பக்தர்களின் குரலுக்கு ஓடி வருபவன் எல்லா வளங்களையும், என்றும் மாறா தன்னடக்கத்தையும் நமக்கு தரட்டும்.


சென்ற வருட பதிவு இங்கே!

Monday, December 31, 2007

இனிய (ஆங்கில) புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


தனித்தனியா மெயில் அனுப்ப சோம்பலா இருப்பதால் இப்படி போஸ்டர் அடித்து வாழ்த்து சொல்லியுள்ளேன்.
பதிவு போட்டுவிட்டு கருத்து சொல்லலைனா எப்படி..?
ஆங்கில புத்தாண்டை கொண்டாடுகிறேன் பேர்வழி!னு இன்று பல ஸ்டார் ஹோட்டல்களில் ஆட்டம் பாட்டம் கேளிக்கை என தூள் பரக்க போகிறது என்பது ஊரறிந்த ரகசியம். மார்கட் போன பல நடிகைகள் எல்லாம் வந்து நடனமாடி புத்தாண்டை வரவேற்க போகிறார்களாம். (தமிழ் குடிதாங்கிகள் இன்னும் கோதாவில் குதிக்க வில்லையா? )
இந்த விஷயங்களுக்கு காசை சும்மா தண்ணீயா(தண்ணிக்கும்) செலவழிக்கும் மக்கள் மூன்றில் ஒரு பங்காவது தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்கி போற வழிக்கு புண்ணியமும், இருக்கும் வரைக்கும் வருமான வரி விலக்கும் பெற்று கொள்ளலாமே!