Monday, June 30, 2008

பக்கத்து சீட்டுல பிளாகர் உக்காந்தா...


போன முறை மைசூர் காவிரி எக்ஸ்பிரஸில் பூஜா விளைவால் கடுப்பான தங்கமணி, இந்த முறை புத்திசாலிதனமாய் செய்வதாய் நினைத்து, கவுஹாத்தி எக்ஸ்பிரஸில் எனக்கு டிக்கட் புக் செய்து இருந்தபடியால் அடியேன் ராமானுஜ தாசன் (மன்னிக்கவும், தமிழ்மணத்துல நிறையா விமர்சனம் படிச்ச விளைவு) ரயில் நிலையத்துக்கு போய் சேர்ந்தேன். என் ரயில் தவிர எல்லா ரயிலும் எந்த பிளாட்பாரத்தில் வரும்?னு அறிவிப்பு வருகிறது. சரினு கவுண்டரிடம் (சாதி பெயர் இல்லீங்கண்ணா) கேட்டால் கவுஹாத்தி கேன்சலாகி விட்டதே!னு ரெம்ப சந்தோஷமா சொல்றார். வட மாநிலத்தில் பலத்த மழையால் ஒரு வாரமாகவே அந்த ரயில் எல்லாம் ரத்தாம். அப்புறம், ஒரு பேருந்தில் இடம் பிடித்து அருகில் அமர்ந்திருந்த ஒருவரிடம் என் சோக கதையை சொல்ல வேண்டியதா போச்சு.

நீங்க பேப்பர் எல்லாம் படிக்கறதில்லையா? பக்கத்தில் அமர்ந்த பாவத்துக்கு துக்கம் விசாரித்தார்.

இல்லீங்க, நான் பிளாக் தான் படிக்கறது.


அவர் ஒரு நொடி ஙேனு முழித்துவிட்டு, அதுல கூடவா இந்த செய்தியெல்லாம் வரதில்லை?


அதுல இதெல்லாம் வராதுங்க. ஒரு வேளை "ஒரு தன்மான தமிழனை ஊருக்கு போக விடாமல் வடைமொழி மாநிலத்தவர் செய்த சதி!"னு நான் பதிவு போட்டா தான் உண்டு.


என்னை ஒரு ரேஞ்சாக பாத்துவிட்டு, நீங்க மாவோயிஸ்ட்டா? இல்ல கம்யூனிஸ்ட்டா? ஒரு ரேஞ்சா பேசறீங்க. இப்படிதான் பிளாக்குல வருமா?

அய்யா சாமி, நான் ரிசப்ஷ்னிஸ்ட் கூட இல்லை. நான் சும்மா ஒரு சாம்பிளுக்கு சொன்னேன், இதவிட பலபல மேட்டர்கள் எல்லாம் வெளிவரும்.

உதாரணத்துக்கு சிலது சொல்லுங்களேன்! மனுசன் லேசுலுல விடுவதாயில்லை.


உலத்தரத்துல எப்படி படம் எடுக்கனும்?னு கமலுக்கு ஒரு மூடிய கடிதம் போடுவாங்க. ஜூராஸிக் பார்க்குக்கும் தசாவதாரத்துக்கும் பத்து வித்யாசங்கள் காட்டுவாங்க. ஜலஜாவின் ஜல்சா கதைகள்னு ஒரு தொடரை ரீலீஸ் பண்ணுவாங்க. முன்/பின்/ நடு இலக்கியமெல்லாம் படைப்பாங்க.

கொஞ்சம் இருங்க, அது என்னங்க பின்னிலக்கியம்? நான் கேள்விபட்டதேயில்லையே?

அடடா இது தெரியாதா? விசித்திரன் (இதுல பெயர் இப்படி தான் வைக்கனும்) வீட்டின் பின்கதவை திறந்து பார்த்தான் அப்படினு சொல்ல வரதையே, உடலுக்கு ஒன்பது வாசலில் கண், மூக்கு, காது வாய் துவாரங்களை போல சமூகத்தில் அங்கீகாரம் பெற்றவை தவிர்த்து, விளிம்பு நிலை மனிதர்களை போல அதிகம் கண்டுகொள்ளபடாமல், ஆனால் தவிர்க்கவே முடியாத மீதி துவாரங்கள் போல இருக்கும் வீட்டின் பின்கதவை, இந்தியா சமீபத்தில் 1990களில் உலகமயமாக்கலுக்காக தனது வெளி நாட்டு கொள்கைகளை அமெரிக்க/ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துக்கு திறந்து விட்டது போல விசித்திரன் திறந்து பார்த்தான். இது பின்னிலக்கியம். புரிஞ்சதோ?

பாவம்! கேட்டவருக்கு கொஞ்சம் கண்ண கட்டி இருக்கும் போல. ஒரு மடக்கு தண்ணிய குடித்து கொண்டார்.

இப்படி எழுதினா யாரு படிப்பாங்க? நம்ம எழுதினதை மத்தவங்க படிச்சாங்களா இல்லையா?னு எப்படி தெரிஞ்சுக்கறது?

என்ன இப்படி கேட்டுடீங்க? நாங்களும் பதிவை படிச்சோம்னு சொல்ற விதமா "அவ்வ்வ்வ்" "ரீப்பீட்டேய்ய்ய்" "நல்ல பதிவு", :))னு எல்லாம் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பாங்க.


அட, இது நல்லா இருக்கே! நீங்க சொல்றத கேட்டதும் எனக்கும் ஒரு பிளாக் ஆரம்பிக்கனும்னு ஆசையா இருக்கு.


அதுகென்ன? காசா பணமா? கூகிள்காரன் சும்மா தரான். ஊருக்கு போனதும் ஆரம்பிச்சுடுங்க, சரியா?

சரிங்க, சாரி, கேக்க மறந்துட்டேன், உங்க பேரு?


அடியேன் நம்பி! சாரி அம்பி, ஆமா உங்க பேரு?


லிங்கம், ஜம்புலிங்கம்...

Wednesday, June 25, 2008

தகப்பஞ்சாமி




When the student is ready, the master appears - Buddhist Proverb.


இன்றைய சூழலில் பிள்ளைகள் மட்டுமல்ல, பெற்றோரும் செல்பேசி, கணிணி, ஈமெயில் அறிவு பெற்றவர்களாக இருப்பது காலத்தின் கட்டாயமாகி உள்ளது. இப்பொழுது வரும் செல்போன்கள் எல்லாம் பாக்க அழகா பாவனா மாதிரி இருக்கு. ஆனா கீபேடுகள் அவ்ளோ சுலபமா இருப்பதில்லை. அதிலும் நேரு காலத்து ட்ரிங்க் ட்ரிங்கையே உபயோகித்து வந்தவர்களுக்கு தீடீர்னு இப்படி உள்ளங்கையில் உலகம் வந்தவுடன் சிறிது தயக்கம், நாம ஏதும் அமுக்கி, ஏதும் ரிப்பேர் ஆனா பையனுக்கு வேற தண்டச் செலவு என்ற பெற்றோருக்கே உரித்தான பயம். செல்போனுக்கே இப்படினா கணிணி இன்னும் மோசம்.



அம்மா! இங்க பாரு, இது தான் இன்டர் நெட் எக்ஸ்ப்ளோரர், இது வழியா தான் மெயில் அனுப்ப முடியும், என நம் வழக்கமான மேதாவிதனத்தை காண்பித்தால் பெற்றோர் முகத்தில் தயக்கம், மலைப்பு என எல்லாம் ஒன்று சேர்ந்து விடுகிறது.


அப்புறம் நாம் புரிந்து கொண்டு சுலபமான வார்த்தைகளை போட்டு சொல்லி குடுத்தால் கற்று கொள்ளும் ஆர்வம் கண்ணில் மின்னுகிறது. இருந்தும் இந்த வயதில் கத்துக்க முடியுமா? இதெல்லாம் சாத்தியமா? என நியாயமான கவலைகள். ஆனாலும் பிள்ளைகளின், பேரன்களின் ஓட்டத்துக்கு ஈடு குடுக்கனுமே? என்ற பரபரப்பு.



நினைத்து பார்க்கிறேன், நான் வார்த்தைகளை கூட்டி கூட்டி பேச ஆரம்பித்த புதிதில் இந்த 'க' எனக்கு வராது. எனவே தக்காளியெல்லாம் தத்தாளி தான். கத்ரிக்காய் எல்லாம் தத்தரிதாய் ஆனது. ஆங்கில எழுத்தில் 'சி' எனக்கு மட்டும் வலது பக்கமாக வரும் அரைவட்டம்(தாரே சமீன் பர்?). ஆனாலும் பொறுமையாக எனக்கு பயிற்சி அளித்து, திருத்திய அவர்களின் பொறுமையில் தசாம்சமாவது (அய்யோ! படம் இல்லீங்கணா! பத்தில் ஒரு பங்குனு சொல்ல வந்தேன்) எனக்கு வாய்க்காதா என்ன?



நம்மிடையே வலையில் உலா வரும் பல அம்மாக்களின்/பாட்டிகளின் முயற்சிகளை நினைத்து பிரமிக்கிறேன். செளகார் ஜானகி, காரைக்கால் அம்மையார் என எத்தனை காரண பெயர்களுடன்(பட்ட பெயர்களுடன்) வலையுலா வந்து, பின்னூட்டமிட்டு, சமையல் குறிப்பு எழுதி, ஊர் உலகமெல்லாம் நமக்கு சுத்தி காட்டி, கதை சொல்லி, படம் காட்டி, தாலேலோ பாடி, நம் இல்ல விழாக்களில் முடிந்தால் நேரிலோ, மெயில் மூலமாகவோ வந்து வாழ்த்தி, ஹிஹி, மொய்யெழுதி, கால ஓட்டத்தில் கரைந்து விடாமல் நாணலாய் வளைந்து, தம் மக்கள் நின்றால் குடையாக, அமர்ந்தால் சிம்மாசனமாக வலம் வரும் எல்லா பெற்றோருக்கும் இந்த பதிவு சமர்ப்பணம். :)

Friday, June 13, 2008

அம்பியின் பார்வையில் தசாவதாரம்

ரொம்ப நாளா, இல்ல இல்ல ரொம்ப மாசமா பாக்கனும்! பாக்கனும்னு தணியாத ஆவலுடன் இருந்தது வீண் போகலை. ஏற்கனவே மனதில் பலத்த எதிர்பார்ப்பு. அதுலயும் அடிக்கடி நம்ம பாசுர புயலின் மாதவி பந்தலில் ஒதுங்கி, சுப்ரபாதம் எல்லாம் கேட்டு, கொதிக்கிற கேசரியில் நெய்யை விட்ட மாதிரி ஆசை பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்து விட்டது.

சரி, வளவளனு பேசாம படத்துக்கு போகலாம். கதை என்னவோ குழந்தையிலிருந்தே கேட்டு வளர்ந்த கதை தான். கெட்டது செய்தா, உம்மாச்சி ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து நம் கண்ணை குத்துவார். ஆனா அதை படமாக்கிய விதம், அதான் திரைகதைனு சொல்லிக்கறாங்களே அங்க தான் நிக்கறார் டைரக்டர்.

மாயாஜால கதைகள், காட்சிகள்னா எனக்கு உசுரு. மாயா பஜார் படத்துல ரங்காராவ் வாயில லபக்குனு லட்டு போறதையே கண் கொட்டாம பாத்தவனாக்கும். விட்லாச்சாரியார்னு ஒருத்தர் (நம்ம கீதா பாட்டிக்கு சம காலத்தவர் தான்) இதுல கிங்க்னு கேள்வி. தந்திர காட்சிகள்னா கூப்டுடா விட்டலை!னு சொன்ன காலம் போய் நம்ம ஆட்களே சும்மா பின்னி பெடலெடுத்து இருக்காங்க. அதுலயும், அந்த கடலுக்கடியில் தண்ணிக்கு உள்ளே விஷ்ணு வர ஷாட் இருக்கே! அடடா! ரொம்ப ப்ரமாதம்.

படத்தின் கதை யுகங்கள் கடந்து சென்றாலும் திரைகதையில ஏகப்பட்ட நெளிவு சுளிவுகள் இருந்தாலும் ஒன்னு கூட சிக்கல் இல்லாம இருந்து இருக்கு. குறிப்பிட்டு சொல்லனும்னா, ஒரே காட்சியில் இரண்டு அவதாரங்கள் சந்தித்து கொள்கின்றன. ஆனாலும் நாம எப்படி ஜாங்கிரி வேற, ஜிலேபி வேறனு தெளிவா இருக்கோமோ, அதே மாதிரி, இவர் வேற, அவர் வேற!னு எந்த வித குழப்பங்களும் ஏற்படவில்லை.

கதையில் பல திடிக்கிடும் திருப்பங்கள் சுவையா இருக்கு. உயிருக்கே மிரட்டல் வருகிற நிலையில் கூட அவர் வாயிலிருந்து "ஓம் நமோ நாராயணாய!" என ஆரம்பிக்கற போது நம்மை சீட் நுனிக்கே வர செய்கிறது. படத்தில் ஆக்ரோஷமான சண்டை காட்சிகள் மெய் சிலிர்க்க வைத்து, கன்னத்தில் போட்டு கொள்ள வைக்கின்றன. அதிலும் தூணை பிளந்து கொண்டு கர்ஜித்து வருகிற காட்சி இருக்கே! கிளாசிக்.

கேமிரா எடுத்தவர் கைக்கு தங்கத் தோடா செஞ்சு போடலாம், தப்பேயில்லை. மேக்கப்மேன் சில இடங்களில் சொதப்பி விட்டாரோனு தோணுது. ஆனாலும் இந்த ராமருக்கும், கிருஷ்ணருக்கும் இப்படி அனியாயத்துக்கு பெயிண்டை வேஸ்ட் பண்ணி இருக்க வேண்டாம். அந்த செலவில் பாமாவுக்கும், சீதைக்கும் கொஞ்சம் டச்சப் செய்து இருக்கலாம். ஹிரண்யகசிபுவுக்கு வேறு நல்ல விக் குடுத்து இருக்கலாம். பழைய விக் போல, பேன் வேற இருந்து இருக்கும் போல. தலையை சொறிய முடியாத எரிச்சலோடு வசனங்களை பேசுகிறார்.

பாட்டெல்லாம் ரொம்பவே இனிமையா இருக்கு தான்.அதுக்காக உச்சா போறத்துக்கு கூட இடைவேளை விடாம, இந்த பிரகலாதன் ரொம்பவே பாடி இருக்க வேணாம். எழுந்து போனால் கதையின் கன்டினியுட்டி போயிடுமேனு அடக்கிண்டே இருக்க வேண்டியதா போச்சு.

சரி, நீங்க பல்ல கடிக்கறது எனக்கே கேக்கறது, இதோட நிறுத்திக்கறேன். பின்ன என்னங்க, நான் இல்லாம நீங்க மட்டும் தசாவதாரம் ரீலீஸ் அன்னிக்கு என்னைய விட்டுட்டு பாத்தா, ஜுனியர் போன உச்சாவை/கக்காவை உங்க வெள்ளை சட்டையால் தொடைப்பேன்னு மிரட்டல் விடுத்து இருக்காங்க தங்கமணி. அந்த கடுப்புல எழுதின பதிவு இது.

Wednesday, June 11, 2008

ஜுனியர் அம்பி

கங்கிராஜுலேஷன்ஸ்! நீங்க அப்பாவாயிட்டீங்க!னு கையை கழுவி கொண்டே, மூக்கு கண்ணாடியும், பன் கொண்டையும் போட்ட பெண் டாக்டர் வந்து மேலே சொன்ன வசனத்தை கேட்டு, "டாக்ட்ட்டர்ர்ர்ர், தேங்க் யூ! தேங்க் யூ! வெரி மச்!"னு நவ ரசத்தையும் முகத்தில் காட்டி, எப்படி சொல்லனும்?னு ஏகப்பட்ட சிவாஜி படங்கள் பார்த்து மனப்பாடம் பண்ணியதெல்லாம் போன வாரம் வேஸ்டா போச்சு.

ஜூன் மாதம் ஐந்தாம் தேதி காலை ஏழு மணிக்கு தங்கமணி, லேசா வலிக்குது, எதுக்கும் டாக்டர்கிட்ட போய் செக்கப் பண்ணிக்கவா?னு செல்பேசிய போது, சுந்தர காண்டம் அடுத்த ரவுண்டு படிக்க ஆரம்பிச்சுட்டியா? அதான் குழந்தையும் கடலை தாண்டற மாதிரி உதச்சு இருப்பான். போய்ட்டு வந்து போன் பண்ணு!னு கர்ம சிகாமணியா ஆபிஸ் போனது பெரிய தப்புனு பகல் பத்து மணிக்குதான் உரைத்தது.

12:32 க்கு நீங்க அப்பாவாகிட்டீங்க!னு செல்பேசியில் பன் கொண்டை போட்ட டாக்டர் ஒன்னும் சொல்லலை. என் மாமனார் தான் திருவாய் மலர்ந்தார். உடனே புடுங்கிய ஆணியெல்லாம் ஒப்படைத்து விட்டு, தெரிந்த பேருக்கு எல்லாம் கைக்கு வந்தபடி மெயிலனுப்பி விட்டு, டிராபிக்கில் சிக்கி, சென்னை பஸ்ஸை பிடித்தால் மணி மூணு. பெட்ரோல் சிக்கனம், தேவை இக்கனம்! என்பதை டிரைவர் தவறாக புரிந்து கொண்டு மணிக்கு முப்பது கிலோமீட்டர் வேகத்தில் ஒட்டு ஒட்டுனு ஒட்டி இரவு பன்னிரெண்டு மணிக்கு கத்திபாராவில் விடபட்ட நான், சுத்தி சுத்தி பாத்தும் ஆட்டோ தவிர ஏதும் இல்லை.

லிட்டருக்கு அஞ்சு ரூபா ஏறிடுச்சு சார்!னு சொல்லி என்னிடம் ஆட்டோ விலையை சொல்லிய அவரிடம், சிலிண்டருக்கு ஐம்பது ரூபா ஏறிடுச்சுண்ணே!னு பாவமாய் கேட்ட என்னை மனதுக்குள் @#$# என திட்டி கொண்டே ஏற்றி கொண்டார். விசிட்டர் நேரம் முடிந்து போய் மறு நாள் தான் தவபுதல்வனை பாக்க முடிந்தது.

எனக்கொரு மகன் பிறந்தான்! அவன் என்னை போலவே இருப்பான்!னு கையை வீசி பாடி காட்டினால், வேணாம்! குழந்தையை கெடுக்காதீங்கோ! அதாவது உருப்படியா வளரட்டும்! என பதில் வந்தது.

ம்ஹும், அடுத்த பிரசவத்துக்காவது கரக்ட் டைத்துக்கு வந்துடரேன் என்ன? சமாளிக்க பார்த்தேன்.
என்னது இன்னோன்னா? இனிமே பூரி கட்டை இல்லை, கர்லா கட்டை தான் என சொல்லாமல் சொல்லியது அந்த பார்வை. பேசாம நானும் எனது பிளாக் பெயரை இனி அம்பி அப்பா!ணு மாத்தி விடலாமா என தீவிரமாக யோசித்து வருகிறேன்.

மின்னலென போஸ்டர் அடித்து ஒட்டிய தாய்மாமன் கைப்பு அங்கிளுக்கு ஜுனியர் அம்பி ரெம்ப தேங்க்ஸ் சொல்ல சொன்னான்.

பி.கு: பிளாக்கர் இலவசம் ஆஸ்பிடல் பில்லை செட்டில் செய்வார் என நம்புகிறேன். பிரசவத்துக்கு இலவசம்னு சொன்னாங்களே! அது இது தானே? :)