Showing posts with label பக்தி ஆன்மீகம் பண்டிகைகள். Show all posts
Showing posts with label பக்தி ஆன்மீகம் பண்டிகைகள். Show all posts

Friday, April 27, 2007

நரசிம்ம ஜெயந்தி

எங்கேடா உன் ஹரி? ஹிரண்ய கசிபுவின் குரல் அந்த பரந்த மண்டபத்தில் இடி போல எதிரொலித்தது.

அந்த குரலில் தான் எத்தனை ஆணவம், இறுமாப்பு கோபம்!
பின்ன இருக்காதா? மூவுலகிலும் தேவரால், அசுரர்களால், மனிதர்களால், யக்ஷர்களால், கிங்கரர்களால், பஞ்ச பூதங்களால், எந்த வகை ஆயுதங்களால், அஸ்த்ர சஸ்த்ரங்களால், காலை-மதியம்-இரவு வேளைகளில் தனக்கு இறப்பு வர கூடாது! என வரம் வாங்கிய புத்திசாலி அரக்கன் அல்லவா?
அப்பா! என்னுடைய ஹரி எங்கும் இருக்கிறான். இந்த தூணிலும் உள்ளான், அந்த துரும்பிலும் உள்ளான். என் மனதிலும் உள்ளான், தேடுங்கள் உங்கள் மனதிலும் வந்து அமருவான்!
- ஆணவத்திற்க்கு அடக்கம் பதிலளித்தது பிரஹலாதன் என்று தன்னை சொல்லிக் கொண்டு.

இந்த தூணில் இருக்கானாடா உன் ஹரி? அரக்கனுக்கு சந்தேகம்!

இன்னுமா உங்களுக்கு சந்தேகம் தந்தையே?

இதோ தொலைத்து விடுகிறேன் உன் ஹரியை! - தனது கதாயுததால் ஓங்கி அடித்தான் அந்த தூணை.
பக்தருக்கு தன் மோஹன புன்னைகையாலே அருள் பாலிக்கும் அந்த ஹரி எங்கே?

"ஹே! ஆதிமூலமே! அனாதரக்க்ஷகா! ஆபத்பாந்தவா!" என கதறிய கஜேந்ர யானையின் குரலுக்கு பதறியடித்து கொண்டு கருடாழ்வார் மேல் வந்தால் நேரமாகும்! என மனோ வேகத்தில் வந்த அந்த ஹரி எங்கே?

அண்டம் கிடுகிடுக்க, அலைகள் ஆர்பரிக்க, அடித்த தூண் இரண்டாக பிளக்க, இடியோசையுடன், மின்னலென்ன கோடி சூரிய பிரகாசத்துடன், எரிமலையென சீறி, ஆஜானுபாகுவாய், சிங்க முகமும் மனித உடலுடன் கோர பற்களும் கூரிய நகங்களுமாய்,பயங்கரமாக கர்ஜனை புரிந்து கொண்டு ரெள்த்ரமாக வெளி வரும் இந்த நரசிம்ஹனா அந்த ஹரி?
என்ன செய்வது? அரக்கன் வாங்கிய வரத்தை உடைக்க வேண்டுமே? மிருகமும் இல்லை, மனிதனும் இல்லை, கையில் எந்த அஸ்த்ரமும் இல்லை, வந்த பொழுதும் காலையும் இரவும் கலக்கும் சந்தியா(நடிகை இல்லை) வேளை தான்.
அரக்கனுக்கு ஒரு நொடி நேரம் கூட குடுக்க வில்லை நரசிங்கம். காட்டாறு போல பாய்ந்து, அலேக்காக தலைக்கு மேல் தூக்கி விடுவிடுவென வீடும் இல்லை, வெளியிலும் இல்லாத மனையின் வாயிற்படியில் சாவகாசமாக அமர்ந்து, அந்த சுதர்சன சக்ரமே கூரிய நகங்களாய் வர, அரக்கனின் வயிற்றை கிழித்து குடலை உருவி மாலயாய் அணிந்து செங்குருதி முகத்தில் தெளிக்க அந்த தாயாரும் அருகில் வர அச்சப்பட்டு தள்ளி நிற்க பக்தனான பிரகலாதனுக்கு மட்டும் கருணை கடலாக காட்சி அளிக்கிறான் என் நரசிங்கம்! அவன் ஒரு உக்ர சிங்கம்.
ஏப்ரல் 30 - நரசிம்ம ஜெயந்தி!
ஹே சிம்ம பிரபு! இன்றும் இந்த கலியுகத்தில் பல ஹிரண்ய கசிபுக்கள் வலம் வருகிறார்களே. பிஞ்சு குழந்தைகளை படிக்கவிடாமல் கடின வேலைக்கு அனுப்புகிறவர்கள், மக்கள் உண்ணும் உணவில் கலப்படம் செய்பவர்கள், பெண்கள் மீது பாலின வன்முறை செய்பவர்கள், தன்னலத்திற்காக பஞ்சமா பாதகங்கள் செய்ய தயங்காத பதவி வெறி பிடித்த மிருகங்கள் என பட்டியல் நீள்கிறதே!
எங்களுக்கு நிதானமாக வரும் கல்கி வேண்டாம். கூவி அழைத்தவுடன் வரும் சிம்மமே! மீண்டும் வருவாயா? இந்த குழந்தையும் பக்தியுடன் அழைக்கிறேன். ஒரு முறை வந்து விடு, இந்த பூமியின் பாரத்தை குறைத்து விடு!"