Saturday, August 26, 2006

மாபெரும் வெற்றி பெற்ற நெல்லை பிளாக்கர்கள் மாநாடு!


நெல்லை பிளாக்கர்கள் மாநாட்டை மாபெரும் வெற்றியடைய
செய்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி!
நன்றி! நன்றி!  
.

நெல்லை பிளாகர்கள் மாநாட்டுக்கு பக்காவா பிளான் பண்ணி வைத்து இருந்த நேரத்தில், நம்ம ஆபிஸ்ல மேனேஜர், "அம்பி! லீவு இப்ப கிடையாது!"னு டமால்னு ஒரு குண்டை தூக்கி போட்டார். ஆஹா! இப்பவே எதிர் கட்சியின் சதி தொடங்கி விட்டதா?னு ஒரு நிமிடம் மலைத்து விட்டேன். அத தொடர்ந்து என் உடன்பிறப்புடன் அவசர ஆலோசனை நடத்தி, பயண திட்டத்தை மாற்றி விட்டேன். முந்தய நாளில் எனது அருமை அண்ணன் டுபுக்கு போனில் அழைத்து நான் வருவதை உறுதி செய்து கொண்டார்.

அப்புறம் என்ன? "எலெய்! எடுறா வண்டிய!"னு கிளம்பி விட்டேன். நெல்லைக்கு சரியாக 65 கிலோமீட்டர் தொலைவில் வரும் போது பஸ் டயர் பஞ்சர். சே! இப்படி ஒரு சோதனையா? "எத்தனை சதி வந்தாலும் முறியடிப்போம்! இப்படை தோற்பின் எப்படை வெல்லும்?"னு நமது தொண்டர்களின் உற்சாக குரல் கேட்டு சிலிர்த்து விட்டேன்.

பெங்க்ளுரில் இருந்து புறப்படும் போதே எனக்கு சிறிது உடல் நல குறைவு, ஜல தோஷம், இருமல் எல்லாம் இருந்தது. இருந்தாலும், கொள்கை பெரிதா? நமது உடல் நலம் பெரிதா? வீடு பெரிதா? நாடு பெரிதா? என்ற தன்மான உணர்ச்சி பொங்கி வழிந்திட, பிடரிகள் சிலிர்க்க, கர்ஜனை புரிந்து, தோள் தட்டி,அதோ தெரிகிறது பார் இமயம்! என்று கூறிக்கொண்டே வந்து சேர்ந்தேன் கல்லிடை.

வந்து விட்டான் எங்கள் யசோதை இளஞ்சிங்கம்! என்று அன்னையின் ஆனந்த கண்ணீர் ஒருபுறம், ஆபிஸ்ல ஒழுங்கா வேலை எல்லாம் செய்றியா?னு தந்தையின் அன்பான விசாரிப்புகள் ஒரு பக்கம் என்றால், "என்ன மாப்ளே! பெங்க்ளுரில் இருந்து தனியா தான் வந்தியா? சே! சப்புனு போச்சே!"னு நண்பர்களின் வழக்கமான வாரல்கள் மறுபுறம் என்று கச்சேரி ஆரம்பமே களை கட்ட தொடங்கியது.

2 வாரமாக துவைக்காத டிஷர்ட் நாலு, துவைத்து 2 மாதமே ஆன(ஹி,ஹி) 2 ஜீன்ஸ்களை என் பையில் இருந்து என் அம்மா கைப்பற்றினார்கள்.
உடல் நிலை சரி இல்லாததால் அம்மா தாமிர பரணி நதியில் குளிக்க 144 தடை உத்தரவு பிறப்பித்தார்கள். பின் நான் கொஞ்சம் அழுது அடம் பிடித்து, உருண்டு புரண்டதில், 30 நிமிடம் மட்டும் சென்று வர அனுமதி கிடைத்தது. ஆனால் நான் 1 மணி நேரம் ஜலக்ரீடை நடத்தி விட்டு தான் வந்தேன்! அதன் பலனாக நிமிட்டாம்பழம் ஒன்று கூட கிடைத்தது,அது வேறு விஷயம்.
பின் வழக்கம் போல தட்டில் மல்லிகை பூக்கள்(தமிழ்நாட்டில்,இட்லினு பொதுவாக சொல்வார்கள்) தக்காளி சட்னியுடன், சுட சுட பறிமாறப்பட்டன.

அதன் பின் அம்மாவுடன் துணைக்கு சமையல் செய்து கொண்டே(சும்மா வறுத்தல், கிண்டுதல் தான்) ஆபிஸ் கதை, சில மாஹானுபாவுலு பிளாக்கர்கள் பற்றி எல்லாம் கதையடித்து விட்டு மாலை மாநாடுக்கு செல்ல தயார் ஆனேன். எல்லா மாவட்டத்திலிருந்தும் கூட்டம் வந்திருப்பதால் கூட்டம் பெரிய திடலுக்கு மாற்றபட்டதாக என் அண்ணாச்சி தகவல் சொன்னார்.

மாவட்ட வாரியாக வண்டி கட்டிக் கொண்டு "உடல் மண்ணுக்கு! உயிர் பிளாக்குக்கு!
இதை உரக்க சொல்வோம் உலகுக்கு!"னு வந்திருக்கும் கூட்டதின் ஒரு பகுதி தான் இது!


மாலை ஆனதும், என் அண்ணாச்சியின் காரை பின் தொடர்ந்து ராமரை தொடரும் இளவலை போல நான் மக்கள் கூட்டதில் நீந்தி செல்லும் காட்சியை பாரீர்.


மாநாட்டின் முக்கிய ஹைலேட்டே அம்பி தலைமையில் நடந்த சைக்கிள் பேரணி தான்!
"சிங்கமொன்று புறப்பட்டதே!
அதுக்கு நல்ல காலம் பொறந்திருக்கு!"னு குழாய் மைக் செட்டில் பாடல் ஒலிபரப்ப பட்டது.


"முதல்வனே! எனை கண் பாராய்!....
ஆசை பூவை தவிக்க விட்டு அமைச்சரோடு நகர்வலமா?"னு பல நெல்லை ஜிகிடிகள் மாடியிலிருந்து பூ தூவிய படியே பாடியதை எல்லாம் இந்த அம்பி கேட்கவே இல்லை.

நமக்கு கொள்கை தானே முக்கியம்!

பின் இரவு சுமார் 9.30 க்கு மாநாட்டு மேடையில் கொள்கை சிங்கம், தாமிர பரணி தங்கம்! தமிழர் குலகொழுந்து! எனது அண்ணன் டுபுக்கு அவர்களை சந்தித்தேன். உணர்ச்சி பெருக்கில் இருவருக்கும் பேச்சே வர வில்லை. வெறும் காத்து தேங்க்(வாயிலிருந்து தான்) வந்தது.

"ஒரு மந்தையிலிருந்து இரண்டு ஆடுகள் தனி தனியே சென்றன. மீண்டும், அவையிரண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே?"
(ஆடு எங்கடா பேசும்?னு கமண்ட் போட கூடாது! சொல்லிட்டேன் ஆமா!)

3 வருடம் கழித்து இருவரும் சந்தித்து கொள்கிறோம். அந்த சந்திப்பு, வராலாற்று சிறப்பு வாய்ந்த ஒரு சந்திப்பு. நதி கடலை சேருவது போன்றது.
"நாம் இருவரும் சேரும் சமயம்! நம் கைகளில் வரும் இமயம்!"

தம்பி! எப்படி பா இருக்கே? என்று படையப்பா சிவாஜி மாதிரி உச்சி முகர்ந்தார்.(நல்ல வேளை தலைக்கு ஷாம்பு போட்டு குளித்திருந்தேன்).

இதயமும், இதயமும் அங்கு பேசி கொண்டன. எனவே வார்த்தைகளுக்கு அங்கு இடம் இல்லை. (செமத்தியா என்னை ஓட்டு ஓட்டுனு ஓட்டினார்!னு உண்மையை இங்கு சொல்லவா முடியும்?).

மாநாட்டிற்க்கு வந்திருந்த மழலை பிளாக்கர்கள் படை(என்னையும் சேர்த்து தான்)


சித்தப்பாவின் கன்னத்தில் முத்தமிட்டால்
இதற்கு தானே செல்லம் 600 கிலோமீட்டர் தாண்டி வந்தேன்!


பல முக்கிய தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
1) பதிவில் முதல் கமண்ட் போடுபவர்களுக்கு புளியோதரை, சர்க்கரை பொங்கல், ரவா லட்டு, பால் திரட்டி பால் என தாராளமாக குகிள்.காம் வழங்க வேண்டும்.

2)மொக்கை பதிவு போடுபவர்களுக்கு வயதில் மூத்த பிளாக்கர் கீதா மேடம், தனது சொந்த செலவில் தங்க கங்கணம் வழங்குவார்.

பிளாக் ஸ்பாட்டை தடை செய்ததற்க்கு கடும் கண்டனம் தெரிவித்து, தீர்மானம் இயற்றப் பட்டது.

1) ஆட்சியாளர்கள் 108 தோப்பு கரணம் போட வேண்டும். இல்லாவிட்டால், மாதம் ஒரு போஸ்ட் போடும் ஒரு குழந்தை, இனி வருடம் ஒரு போஸ்ட் போட ஆரம்பித்து விடும்.

2) "தினம் ஒரு போஸ்ட்" புகழ் சுபா இனி ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மொக்கை போஸ்ட் போட ஆரம்பித்து விடுவார்கள்.

3) பிளாக் புளியோதரை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழும் ஷ்யாம் இந்த தடையை எதிர்த்து ஆட்சியாளர்கள் வீட்டிலும் இனி புளியோதரை கேட்க ஆரம்பித்து விடுவார்.

வந்திருந்த அத்தனை பேருக்கும்(இதை படிப்பவர்களுக்கும் சேர்த்து தான்) நெல்லை அல்வா கிண்டி கொடுக்கப்பட்டது. இவ்வாறு நெல்லை மாநாடு இனிதே நிறைவுற்றது.

பி.கு: மேல சொன்ன மாதிரி எல்லாம் மாநாடு நடத்த எனக்கு மட்டும் ஆசை இல்லையா என்ன? ஆனால் நானும், என் அண்ணனும் அவர்கள் மாமியார் வீட்டு (சே! சே! லாக்கப் எல்லாம் இல்லை) ஹாலில் சுட சுட வாழைக்காய், உருளைகிழங்கு பஜ்ஜி, கெட்டி சட்னியுடன் பிளாக்கர்கள் மாநாட்டை கொண்டாடினோம். ஒரு சின்ன வருத்தம், வெறும் பஜ்ஜி தான் தந்தார்கள், கேசரியும் தரலை -(ஹி,ஹி) ஒரு பொண்ணையும் காட்ட வில்லை.

Saturday, August 19, 2006

தீராத விளையாட்டு பிள்ளை...!



இது கொஞ்சம் விவகாரமான பதிவு. எழுதலாமா? வேண்டாமா?னு ஒரே யோசனை. இப்ப நம்ம பிலாக்குக்கு TRC சார் நடேசன் சார் போன்ற மகானுபாவர்களும் கீதா மேடம் போன்ற வயசானவாளும்(ஹி,ஹி) வரா! இருந்தாலும் அம்பியின் குழந்தை மனசை எல்லாரும் புரிஞ்சுப்பா!னு நம்பி களம் இறங்கறேன்.

சரி இனி மேட்டருக்கு போவோம். 2 நாளா ஆபிச்ல ஒரு டிரைனிங்குக்கு என்னை அனுப்பி என் மேனேஜர் நன்னா பழி வாங்கிட்டா. சாதாரணமாவே தொடர்ந்து 2 மீட்டிங்க்ல கலந்துண்டாலே எனக்கு தூக்கம்,தூக்கமா வரும். அதுவும் மதிய வேளைனா கேக்கவே வேண்டாம்.
இந்த பிரோக்ராம் 2 நாளைக்கு நடந்தது.காலை 9 க்கு ஆரம்பிச்சு மாலை 6 மணி வரை. ஒரே பவர்பாய்ண்ட் பிரசேன்டேஷன்ஸ். என்னையும் சேர்த்து 50 பேர் கலந்து கொண்டோம். பேசின பாதி பேர் சும்மா கொத்து கொத்துனு கொத்தி எடுத்துட்டா. எல்லார் காதுலயும் ஒரே பிளட்.
"காலை சுத்தின பாம்பு கடிக்காம விடாது!"ங்கறது மாதிரி சில புண்ணியாவான்கள் கேள்வி எல்லாம் கேட்டா. எங்களுக்கு புரிஞ்சதா? இல்லையா?னு டெஸ்டிங்காம். அதனால வழக்கம் போல தூங்க கூட முடியலை. மானம் போயிடுமே!(எங்க இருக்கு? போறதுக்கு).

ஒரு நல்ல காரியம், என்னனா இந்த பிரோக்ராமை ஒரு நல்ல ஓட்டலில் ஹால் புக் பண்ணி ஏதோ பார்ட்டி மாதிரி ரவுண்ட், ரவுண்டா டேபிள் எல்லாம் போட்டு நடத்தினா. என் டேபிளில் ஒரு 5 பேர் வந்து உக்காச்சுண்டா. புதுசா ஒரு பஞ்சாபி குதிரை எங்க ஆபிஸ்ல வந்து இருக்கு. சொல்லி வெச்ச மாதிரி கரெக்ட்டா என் டேபிளில் தான் அதுக்கு சீட் போட பட்டிருந்தது. கரெக்ட்டா சீட்டு போட்ட புண்ணியவான் வாழ்க!னு நான் மனதுக்குள் வாழ்த்தவேயில்லை. ப்ளீஸ் நம்புங்கோ!

லக்னத்துக்கு பதினோறாம் இடதுல கால் மேல கால் போட்டு ஆட்சியில் அமர்ந்து இருக்கும் சுக்ரன் வேலையை காட்ட ஆரம்பித்தார். இதுல என்னை யாரும் குத்தம் சொல்லப் படாது!

"அங்கிள்! அங்கிள்!னு நன்னா மிங்கிள் ஆறாளே டா!"னு விவேக் எதோ ஒரு படத்தில் சொன்ன மாதிரி, குதிரை முதல் நாளில் இருந்தே நமது திறமை, புலமைய பார்த்து நன்னா மிங்கிள் ஆயிட்டா. என் டேபிளில் இருந்த மீதி பேரும் "குருவே! எப்படி இதெல்லாம்? உங்க கூட போட்டி போட முடியாது பா சாமி!"னு அடக்கி வாசிக்க ஆரம்பிச்சுட்டா.

ரெண்டவது நாள் தான் இந்த பதிவோட ஹைலேட்டே!
இந்த நிகழ்சியை நடத்தின ரசகுல்லாவை கூப்பிட்டு, "கொஞ்சம் போர் அடிக்குது! அப்பப்ப சில கேம்ஸ் எல்லாம் நடத்து!"னு பொறுப்பு சிகாமணியா நான் சொன்னது தான் எனக்கே வினையா போச்சு!

"அம்பி சொன்னா அப்பீலே கிடையாது!"னு அதுவும் முடிவு பண்ணி மதியம் நல்ல தூக்கம் வர 2.45 - 3.15 வேளையில ஒரு கேமை நடத்தியது.

எல்லா டீமுக்கும் ஒரு தினசரி பேப்பரை குடுத்து அதை தரையில் போட்டு டீமில் இருக்கும் எல்லோரும் தங்கள் ஒரு காலை மட்டும் அந்த பேப்பர் மேல வைத்து கொண்டு நிக்கனும். "இது என்ன ஜுஜுபி!"னு முதலில் எல்லாரும் நின்று விட்டோம். (எங்கள் டீமில் 6 பேர்). அதுக்கு அப்புறமா அதே பேப்பரை ரெண்டாக மடித்து அதன் மேல் டீமில் உள்ள எல்லாரும் நிக்கனும். சரி நின்னாச்சு!

நாலாக மடித்து நில்லு!னு சொன்னா. காலில் உள்ள ஷுவை கழற்றி எப்படியோ சமளிச்சு நின்னாச்சு!

எட்டாக மடித்து நில்லு!
ரொம்ப கஷ்ட்டப்பட்டு ஒரே விரலில் பேலன்ஸ் பண்ணி நின்னாச்சு!

பதினாறாக மடித்து நில்லு!
என் டீம்ல இருக்கற குதிரை அசரவேயில்லை. அழகா, என் கழுத்தை வளைத்து பிடிச்சுண்டு பேலன்ஸ் பண்ணி விட்டது. மூக்கில் மோப்பம் பிடித்து இந்த பிராண்ட் செண்ட் தான் யூஸ் பண்றியா? எனக்கு ரொம்ப பிடிச்ச பிராண்ட்!னு சர்டிபிகேட் வேற. "டாமி கேள் செண்ட் தான் நீ யூஸ் பண்றியா?னு பதிலுக்கு நான் அவளிடம் கேக்கவேயில்லை.

மத்த டீம்ல இருக்கற பசங்க எல்லாம் "எச்சூஸ்மி! அம்பி! எனி ஹெல்ப்?"னு நக்கல் விட ஆரம்பிச்சுட்டா. அடடா! அடடா! ஜேம்ஸ்பாண்ட் படம் பாக்ற மாதிரியே இருக்கே!னு ஒரு தடியன் கமண்ட் அடிக்கறான். என்னாடா இது வம்பா போச்சு? ஒரு குழந்தை மனம் கொண்ட நல்ல உள்ளத்துக்கு இப்படி ஒரு சோதனையா?

இதுக்கு நடுவுல 3 டீம் போட்டியில் அவுட் ஆகி விட்டது!

கடைசியாக அந்த பேப்பரை மேலும் ஒரு தடவை மடித்து நிக்கற டீமுக்கு தான் பரிசு!னு ரசகுல்லா அறிவிக்க, மேலும் 2 டீம்கள் தாமாகவே விலகி கொண்டன.

இப்ப தான், குதிரை ஒரு யோசனை சொன்னது! "பேசாம அலாக்கா என்னை தூக்கிக்கோ! நீ மட்டும் பேப்பர் மேல நில்லு!"
சரி தான்! நான் என்ன அன்பே வா! எம்.ஜி.ஆரா? "ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்!"னு பாடிண்டு அவளை தூக்கிகறத்துக்கு? சே! ஒரு ஹனுமார் பக்தனுக்கு இப்படியெல்லாமா சோதனை வரும்?

அட! நம்ம மனசு கள்ளம், கபடம் இல்லாத என் நண்பன் அர்ஜுனாவை போல வெள்ளை உள்ளம்.

விகல்பம் இல்லாம, ஒரு வேளை தூக்கிகலாம்!னு வெச்சுக்குவோம். ஆனா அந்த குதிரை, கர்ணம் மல்லேஸ்வரிக்கு ஒன்னு விட்ட ஓர்படி பொண்ணு மாதிரி ஆஜானுபாகுவா இருக்கு. பஞ்சாப் கோதுமையின் மகிமையை பற்றி கேள்விபட்டு இருக்கேன். இப்ப தான் பாக்கறேன். வீட்ல பொண்ணு வளர்க்க சொன்னா புளி மூட்டைய வளர்த்துருக்கா!

"சத்தியமா என்னால முடியாது தாயி!"னு சொல்லிட்டேன்.

"அப்ப நான் உன்னை தூக்கறேன்!"னு கையை பிடிச்சுண்டா. ஆள விடுமா தாயே!னு நான் எஸ்கேப் ஆகி விட்டேன். இதுக்காக, "கைய பிடிச்சு இழுத்தியா?"னு ஊர் நாட்டாமைய வெச்சா பஞ்சாயத்து பண்ண முடியும்?
போட்டிய நடத்தின அந்த புண்ணியவதியும் சரி, இதுவே போதும்!னு தீர்ப்பு சொல்லிட்டா. "உனக்கு தாண்டா பம்பர் பரிசு!"னு சில சத்ருக்கள் நக்கல் விட்டா! இப்படி எல்லாம் போட்டி நடத்தினா, யாருக்காவது தூக்கம் வருமா என்ன?

பி.கு: ஒழுங்கா நடந்த கதைய உள்ளது உள்ளபடி சொல்லு!னு யாரும் இந்த குழந்தைய (நான் தான்) டார்ச்சர் பண்ணப் படாது!
அடுத்த பதிவு நெல்லை மாநாட்டு செய்திகள். (இன்னும் போட்டோக்கள் லண்டனில் இருந்து வரவில்லை)

Monday, August 14, 2006

50) எந்தரோ மஹானுபாவுலு!.....



"எந்தரோ மஹானுபாவுலு!
அந்தரிக்கி வந்தனமு!!"

- இந்த லோகத்தில் வாழும் எத்தனையோ கோடானுகோடி புண்ணியவான்களை நான் நமஸ்கரிகிறேன்!
- நாதப் பிரம்மம் தியாராஜ ஸ்வாமிகள்.

தாமிர பரணி நதிக்கரையாம் ஆழ்வார்குறிச்சியை மையமாக வைத்து சத்தமில்லாமல் ஒரு பசுமைப் புரட்சி நடந்து வருகிறது. அங்கு உள்ள பரமகல்யாணி கல்லூரியில் பயோ டெக்னாலஜி துறையில் பணி புரியும் இளம் புரபஸர் திரு.விஷ்வநாதன் அவர்கள் The Tree என்று ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தை தொடங்கி ஓசைப் படாமல் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார். அதை பற்றி என் உடன்பிறப்பு மூலம் கேள்விப்பட்டு, சரி, நமது 50-வது பதிவாக போட்டு உலகுக்கு தெரியபடுத்தலாம்னு ஒரு சின்ன ஆசை.

"தனி மரம் தோப்பாகாது!" என்பது போல தனக்கு மட்டும் ஆர்வம் இருந்து பயன் இல்லை, ஒரு சொந்த லாபமற்ற நிறுவனமாக மாற்றினால் தான் முடியும் என உணர்ந்து கொண்ட நமது புரபஸர், அரும்பாடு பட்டு இதை தொடங்கினார்.

இந்த நிறுவனத்தின் சில நோக்கங்கள்:
1) மக்களிடையே மரங்களை பற்றியும், பசுமையாக நமது சுற்றுபுறத்தை வைக்க என்ன செய்ய வேண்டும்? என பல நல்ல விஷயஙளை எடுத்து கூறுவது.

2) சொன்னால் மட்டும் போதாது! காரியத்திலும் இறங்கி, மரக் கன்றுகளை தந்து உதவி அதை பரமாரிக்கவும் உதவி செய்வது.

இலவசமாக அட்வைஸ் சொல்ல ஆயிரம் பேர் வருவா! ஆர்வத்தை கெடுக்க பத்தாயிரம் பேர் வருவா! பர்ஸை திறந்து பத்து ரூபாய் தர பத்து பேர் கூட வர மாட்டா நம்ம ஊருல!

அது போல, "இந்தாப்பா, விச்சு! உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை எல்லாம்? லோகத்தை நம்மால மாத்த முடியாது! எல்லாம் விதி படி தான் நடக்கும்!னு சில Old Monks(அய்! இது என் பிராண்டு பேர் ஆச்சே!னு ஷ்யாம் குதிக்கறான் பாரு!) சொன்னதை எல்லாம் கேட்டு சோர்ந்து விடாமல், "உன்னால் முடியும் தம்பி!" சத்யமூர்த்தி மாதிரி உற்சாகத்துடனும், ரமணா விஜயகாந்த் ரேஞ்சுக்கு ஒரு மாணவர் படை அமைத்து உண்மையிலேயே களப்பணி ஆற்றி வருகிறார்.
சில பேர் வயசான காலத்துல ஊர், ஊரா சுத்திட்டு களப்பணி ஆற்றுகிறேன்!னு பீலா விடுகிறார்களே, அது மாதிரி எல்லாம் இல்லை, இவருடைய களப்பணி.

சில தனியார் தொண்டு நிறுவனங்கள், மற்றும் தமிழக அரசாங்கத்தின் குறிப்பிட்ட ஒரு பிரிவின் நிதி உதவி யானை பசிக்கு சோள பொரி மாதிரி வருகிறது.

மத்திய அரசின் நிதி கிடைக்க அளித்த பைல்கள், வழக்கம் போல கோடு வைத்து கோவிந்தா சட்டை போட்ட கொட்டாவி விடும் ஆபிஸர்கள் மேஜையில், அவர்கள் பிஸி! என காட்ட சாட்சியாக உள்ளது. இந்தியன் தாத்தா மாதிரி, நமது பிளாக் உலக அம்மையார்(பாட்டி!னு யாராவது வாசித்தால் அதுக்கு நான் பொறுப்பில்லை)
திருமதி கீதா அவர்கள் போய் குத்தினால் தான் வேலை நடக்குமோ என்னவோ?.(ஹி, ஹி, இது எப்படி இருக்கு மேடம்?)

கோவிலில் ஒரு டியூப் லைட் போட்டாலே "மாவு.வேவு.சேவு.முனா.பானா"னு தனது பாட்டன், மாமன், மச்சினி பேர்களை அந்த டியூப் லைட்டில் எழுதி விட்டு, "ஒரு விளம்பரந்தேங்க்"னு பல்லை காட்டும் இந்த காலத்தில் தனது பேர் வெளியே தெரியாமல் இவர் ஆற்றும் சேவைகள் ஏராளம்! ஏராளம்!

தினமும் ஒரு ரூபாய்! ஒரே ஒரு ரூபாய் வீதம் நீங்கள் ஒரு வருடம் சேமித்து தந்தால் உங்கள் பெயரில் அல்லது உங்கள் பெற்றோர் பெயரிலோ மரம் நட்டு அதை பராமரிக்கும் பொறுப்பையும் இந்த நிறுவனம் ஏற்று கொள்கிறது.

எத்தனை காலத்துக்கு தான் அசோகர் மரம் நட்டார்!னு படிப்பது?
உங்கள் பெயரும் வரலாற்றில் இடம் பெறட்டுமே!

"இந்த பாட்டை யாருக்கு டெடிகேட் பண்ண விரும்பறீங்க?"னு சன் மியூசிக்கில் ஒரு ஜீன்ஸ் அணிந்த சின்ன கிளி கேட்டால் நம்ம ஆளுங்க ஒரு பெரிய லிஸ்டே குடுப்பாங்க. இந்த மரத்தை அக்கா அசினுக்கு டெடிகேட் பண்றேன்! அண்ணன் சூர்யாவுக்கு டெடிகேட் பண்றேன்! ஹி,ஹி மச்சினி கோபிகாவுக்கு டெடிகேட் பண்றேன்!னு ஸ்டைலா சொல்லிக்கலாம் இல்ல? என்ன நான் சொல்றது?

"சோறு போட்ட கோவிந்தசாமிக்கு மொய் பணம் நூறு ரூபாய்ய்ய்ய்!"னு செந்தில் மாதிரி ஏலம் விடும் இந்த காலத்தில், தன் சொந்த அக்கா வீட்டு கிரகபிரேவேசத்துக்கு கூட ஆயிரம் ரூபாய்க்கு மர கன்றுகளாய் வாங்கி நட்டு விட்டார் இந்த புரபஸர்.

இவரது தளராத முயற்சிகளை பார்க்கும் போது
இந்த பாட்டில் வரும் வரிகளான "அந்த வாசுதேவன், இவன் தான்!" என பாட தோன்றுகிறது.

இந்த நிறுவனத்தை பற்றி மேலும் தகவல் அறியவோ அல்லது நாலு வார்தை பாரட்ட வேண்டும்! போல தோன்றினால் இந்த greenvishu@rediffmail.com ஈ.மெயில் முகவரிக்கு மெயில் அனுப்பலாமே! (இவரது புகைப்படம் எனக்கு வந்து சேர்ந்ததும் எனது பதிவில் போட்டு விடுகிறேன்!)

பி.கு: அடுத்த போஸ்ட் "மாபெரும் வெற்றி பெற்ற அம்பியின் நெல்லை மாநாடு!"(அம்பியின் அரிய புகைபடங்களுடன்)

Thursday, August 03, 2006

யார் அந்த கர்ம வீரன்?



எப்போழுதெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ
அப்பொழுதெல்லாம் நான் அவதரிப்பேன்!
- பகவத் கீதையில் கண்ணன்.

டிசம்பர் மாதம் ஒன்றாம் நாள்.
பாரத தேசத்தின் வரலாற்றில் அது ஒரு பொன்னாள். பாரதத்தை வல்லரசாக்குவதற்க்கு,
கார்த்திகை மாதம், தனுர் லக்னத்தில் ஒரு குழந்தை அவதாரம் எடுத்தது.

தேவர்கள் பூ மாரி பொழிந்தனர். யக்க்ஷர்கள் யாழ் மீட்டி தேவ கானம் இசைத்தனர். தேவ மங்கையர்கள் இன்னிசை நடனமாடினர். பூத கணங்கள் சங்க நாதம் செய்தனர்.

பூவுலகில், குயில்கள் கூவின, மயில்கள் தோகை விரித்தாடின. பசுக்கள் தாமாகவே பாலை சொரிந்தன. காட்டில் வாழும் புலி, சிங்கங்கள் எல்லாம் பயந்து கர்ஜனை செய்து, அடர்ந்த காட்டில் ஓடி ஒளிந்தன. கொடியவர்களுக்கு தம்மை அறியாமலேயே நடுக்கம் உண்டானது.

வங்காள விரிகுடா, அரபிக்கடல், இந்து மகா சமுத்திரம் எல்லாவற்றிலும், அலைகள் ஆர்பரித்தன. தேவ தாரு மரங்கள் பூக்களை வர்ஷித்தன. வழக்கத்துக்கு மாறாக அன்று பூக்கள் எல்லாம் மிகவும் மலர்ச்சியாக இருந்தது. அந்த தெய்வீக குழந்தையை பெற்றவர்கள் மகிழ்ச்சியில் பூரித்தனர்.
"உலகை வெல்ல வந்து விட்டான் எங்கள் இளஞ்சிங்கம்!" என்று கர்ம வீரர்கள் "வீரவேல்! வெற்றி வேல்!" என முழக்கம் இட்டனர்.

யார் அந்த கர்ம வீரன்?
இராஜ இராஜ சோழனா? இல்லை!

உங்கள் ஆர்வம் எனக்கு புரிகிறது.அந்த கர்ம வீரனை பற்றி அறிய
இங்கு கிளிக் செய்யுங்கள்.

பி.கு: அடுத்த போஸ்ட் ஐம்பதாவது பதிவு - சிறப்பு பதிவு.